Friday, January 23, 2009

அம்மா ஏன் இப்படி மாறினார்.?

அம்மா ஏன் இப்படி மாறினார்.?


" டேய் ஊருக்கு போறியா..?ஆனந்த்?.. ரொம்பத்தான் குஷி போல..?... "

" அதெல்லாம் இல்லைடா... கட்டாயத்துக்காகத்தான் போறேன்... விருப்பமேயில்லை.."

" அட.. ரொம்ப அலட்டல் ஓவராயிருக்கு... எப்பவும் துள்ளி குதிது கிளம்பும் நீயா இப்படி சொல்ற?.. அதுவும் பொங்கல் அதுவுமா..?"

" ஆமா டா. நான் ஊருக்கு போறதே அம்மாவுக்காகத்தான்..... ஆனா அம்மாவோட போக்கே இப்ப வித்யாசமா இருக்குடா

எப்பப்பார்த்தாலும்., எரிஞ்சு விழறாங்க.. அத ஒழுங்கா வெக்கல, இத செரியா செய்யலன்னு..ஒரே குறைதான்..."

" டேய் நம்ப முடியலைடா.. என்கிட்டயே பெத்த புள்ள மாதிரி பாசம் காட்டுவாங்களே..ஒரு வேளை வயசானதாலோ?.."

" தெரிலடா.. ஒரு வேளை கூடவே இருந்திருக்கணும் நான்.. இங்க பெங்களூருக்கு வந்த‌திலிருந்து இந்த மாற்றம்..
அதுவும் அவுங்க கட்டாயப்படுத்தி தானே வந்தேன்.."

" சரி கெளம்பு நானும் வாரேன் உன்கூட பொங்கலுக்கு.. பாண்டிச்சேரிக்கு.. அப்படியே எஞ்சாய் பண்ணினா மாதிரியும் இருக்கும்.."

" டேய்.. .......டே..........................ய்....இருடா...........பொறுடா..."

எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல் ஹரி பெட்டியை பேக் செய்வதிலேயே குறியாய் இருந்தான்..

‍‍‍‍‍‍‍‍‍‍ரிசர்வ் வேறு செய்யவில்லை.. இவனோட தொந்தரவு நு மனதில் நினைத்தாலும் அவன் உதவி பல நேரங்களில் தேவையாயுள்ளதே... சமையல் , துணி துவைக்க, கடை செல்ல, வீடு சுத்தம் செய்ய எல்லாவற்றையும் பகிர்ந்து செய்யும் நல்ல நண்பன்... பெரிய குடும்பத்திலுள்ளவன்...வேலை செய்ய கூச்சப்படாதவன்...
ஆனா தான் பிடிச்ச நாய்க்கு இரண்டு வால் என்பான்..( எத்தனை நாள்தான் முயல்?.. பாவம்...)


‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ஓவ்வொரு பேரூந்தாய் ஏறி இறங்கி ஊர் வந்து சேர்ந்தாச்சு...

அம்மா வாசலில் அழகாய் கோலம் போட்டுக்கொண்டிருந்த பனிக்காலைப்பொழுது...

பார்த்ததும் பேருக்கு " வா த‌ம்பி" நு மட்டும் சொல்லிவிட்டு உள்ளே நுழையும்போது மறுபடியும் கூட ஹரி வந்திருப்பதைப்பார்த்துவிட்டு,

" வாப்பா ஹரி.. நீ வருவாதாகக்கூட சொல்லலை பாரு அவன்.." நு சொல்லிட்டு கைபிடித்தே அழைத்து சென்றார்..

" பாத்தியா குறை சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க .." நு உதட்டை பிதுக்கி அதிருப்தியை முகத்தில் காட்டினான் ஆனந்த்..

" சும்ம பேசாம இரு.. அப்படில்லாம் தெரில " நு கண்ணாலே அதட்டினான் ஹரி..

" என்னங்க ஹரி வந்திருக்கான் " நு சொல்லியே அப்பாவையும் எழுப்ப சத்தம் கொடுத்தார்..

அம்மாவுக்காக வாங்கி வந்த இனிப்புகளை கையில் கொடுக்கும்போதும், வாங்கி பக்கத்தில் வைத்தாரே யொழிய,

வேலையை தொடர ஆரம்பித்துவிட்டார்...

இப்பதான் ஹரிக்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தது ஆனந்த் முகத்தை பார்க்கும்போது...

தினமும் 3, 4 முறை தொலைபேசியில் பேசிடுவான்.. அது இப்போது 2 நாளுக்கொருமுறை கடமைக்காக என ஆயிற்று..

என்னாதான் ஆச்சு அம்மாவுக்கு ?.

தனக்கு மட்டும் விழுந்து விழுந்து உபசரிப்பு... ஆனந்துக்கு வேலை செய்ய உத்த‌ரவிடும்போது மட்டுமே பேச்சு...

3 நாள்கள் மிக அருமையான வீட்டுச்சாப்பாட்டுடன் கழிந்தது...


ஊருக்கு கிளம்பும் நாள் வந்தது... எப்படியும் அம்மாவிடம் இது பற்றி கேட்க சந்தர்ப்பம் எதிர்பார்த்தான்.. ஆனந்துக்கும் தெரிய கூடாது...அவனை கடைத்தெருவுக்கு அம்மா அனுப்பியதும், மெதுவாக சமையலறைக்குள் நுழைந்தான்...

" என்னப்பா சூடா தேநீர் தரவா..?"

" தாங்கம்மா... ஆனா நான் கேக்கப்போறதுல நீங்க சூடாயிர கூடாது... சரியாம்மா..?"

" அட , அம்மாகிட்டயே கலய்ப்பா... அப்படி என்ன கேப்பேன்னு தெரியுமே..."புன்னகைக்கிறார்...


" நெஜம்மாவா மா... அதெப்படி ...?????"ஆச்சர்யத்தோடே..

" ம். புள்ளய பெத்தவங்களுக்கு புரியாதா என்ன..?.. புள்ளங்களுக்குத்தான் பெத்தவங்களை புரிவது கஷ்டம்..."
நுனு சர்வ சாதரணமாய் சொன்னாலும், அவர் குரலில் தடுமாற்றத்தை உணர்ந்தான்..

ஒன்றுமே கேட்டிருக்க கூடாதோ நுனு தோணுது அவனுக்கு... அம்மாவை சங்கடப்படுத்தி விட்டோமோ...?

அவர்களுக்கு பேச பிரியமில்லாத விஷயத்தை ஆரம்பித்துவிட்டோமோ என.

" நான் ஏன் ஆனந்த் கிட்ட இப்படி பாசமில்லாம நடந்துக்கிறேனு தான கேக்கப்போற..?" தேநீரை கையில் தருகிறார்..

அவர் கண்களை சந்திக்க முடியவில்லை ஹரியால்..மெளனமாய் அசட்டுப்புன்னகை மட்டும்...தேநீரை பார்த்துக்கொண்டே


" என் மேல உயிரே வெச்சுருக்கான்பா... அதனாலேயே கல்யாணம் பண்ணிக்காம ஒத்திபோடுறான்...நான் தும்மினா போதும் , ஊர கூட்டிடுவான்...என் புள்ள...எல்லா வேலையும் நாந்தான் செய்யணும் அவனுக்கு...அதுக்காகத்தான் பெங்களூர் அனுப்பினேன்.... அங்க போயும் தினமும் 10 வாட்டி போன்... அம்மா , நல்லாருக்கீங்களான்னு...அப்புரம்தான் யோசிச்சேன்.. இவன் இப்படியே இருந்தா முன்னேறிக்கிட மாட்டான்... அம்மா முந்தானையே பிடிச்சு வளர்ந்தவன்...நாளைக்கு அவனுக்குன்னு ஒருத்தி வந்தா கூட இவன் இப்படி நடந்துகிட்டான்னா , அவ என்ன நினைப்பா..?

அதனால்தான்ப்பா, அவன்மேல உள்ள பாசத்தை கட்டுப்படுத்திகிட்டு அவனை கொஞ்சம் விலகி தனித்திருக்க பழக்குறேன்..

எனக்கு மட்டும் வலி இல்லையா.. ஆனா வரப்போறவா கிட்ட இவன் அதிக பாசமா இருக்கணுமேப்பா... அதுதான ஒரு தாய்க்கு சந்தோஷம்...சொல்லு..?...

ஒவ்வொரு நாளும் என் பிள்ளை போன் செய்யும்போதெல்லாம் உணர்ச்சியை அடக்கிக்கொண்டு, ஏனோ தானோன்னு பேசி முடித்துவிட்டு நான் அழுவேன் இங்கே...சில நல்லதுக்காக சில நாடகம் தேவையாயிருக்கே..."

விழிகளில் கண்ணீருடன்...தேநீர் கோப்பையை வாங்க கை நீட்டுகிறார்.

அம்மாவின் கையை பிடித்த ஹரிக்கு பேச வார்த்தைதான் வரவில்லை..

" நான் இருக்கேன்மா.. அவனை பார்த்துக்கொள்ள" என்று தலையை மட்டும் அசைத்தான் ஹரி..

வெளியில் இதை தற்செயலாய் கேட்ட ஆனந்த், மாடிக்கு சென்றே யாருக்கும் தெரியாமல் ஆனந்த கண்ணீரை துடைத்தான் ...ஆனந்த்..

" பொண்ணு பார்த்துட வேண்டியதுதான்.." என எண்ணிக்கொண்டே..

பாற்கடல் பாங்காக் விமான நிலையத்தில்.

ஏன் படைத்தான் இறைவன்..?

ஏன் படைத்தான் இறைவன்..?

கிறுஸ்மஸ் தினமன்று கார் அந்த ஊரில் நுழையும்போதே சில்லென்ற காற்றும் போட்டிபோட்டுக்கொண்டு வரவேற்குது...

அண்ணாவான ( சித்தப்பா மகன் )அவனை சந்திக்கப்போகிறோம் என்றதுமே மனதில் இனம்புரியாத ஒரு மகிழ்ச்சி . அதே சமயம் கவலையும்...

ஆனால் அந்த கவலையை கண்டிப்பாக ஒளித்துவைத்திட வேண்டும் சந்திக்குமுன்.. என கட்டுப்பாடு போட்டேன் மனதுக்கு..

‌" ஏய் ராஜ். எப்ப கல்யாணம் . உனக்கு... "

" உனக்குத்தெரியாதா சாந்தி.. நம்ம அத்தை பொண்ணு அவனுக்குத்தான் கொடுக்கணும்னு சொல்லிருக்காங்க..."

இப்படி அப்பாவின் குடும்ப விசேஷங்களில் ஒன்று சேரும் 20க்கும் மேற்பட்ட அக்கா , அண்ணா, அத்தான் , அண்ணியின் விளையாட்டுப்பேச்சுகளும் பதிலுக்கு ஏச்சுகளுமாய் நிறைந்த பழைய நினைவுகள் மனதுள்..


எல்லோருக்கும் பிடித்தவன் ராஜ்...பெரியவரிடம் மரியாதையா....?.. ராஜைப்பார்த்து கத்துக்கணும்..

படிப்பா?...( திருச்சி ஜோசப் காலேஜில் எம் .எஸ்.ஸி..)..... விளையாட்டா... ?...( தேசிய சாம்பியன் )

எப்போதும் புன்னகையுடனே இருக்கும் அந்த முகம்...

கடவுள் பக்தியோ அளவிடவே முடியாது... ( அதுமட்டும் அப்பா குடும்பத்தாரின் வளர்ப்பு)

எல்லாம் சிறப்பாகத்தான் இருந்தது அவனிடம் அவன் டாக்டரேட் முடிந்து அசாம் ஷில்லாங்கிலிருந்து திரும்பும் வரை...

எம்.எஸ்ஸி, முடித்து நியுக்ளியர் அறிவியலில் டாக்டரேட் பண்ணும் விதமாக அசாம் ஐஐடியில் படிக்க சென்றான் மிக ஆனந்தமாக... கடைசி வருடம் புராஜக்ட் கைடுடனான அவன் வாழ்க்கை நரகத்தில் தொடங்கியது...

மிக கொடூரமாக நடந்துகொண்டாராம் கைடு... இயற்கையிலேயே மிக மென்மையான சுபாவம் கொண்ட அவன் மனது,

அதைக்கூட தவறாக எண்ணாது, எல்லாம் தன் நல்லதுக்கென்றே எடுத்துக்கொண்டானாம்.. புதிய இடம், ஹாஸ்டல் வாழ்க்கை, புதிய உணவுப்பழக்கம் இவையெல்லாம் தராத வலியை கைடு மொத்தமாகத் தந்துள்ளார்...

ஆனால் அதையும் குடும்பத்தாரிடம் சொன்னால் வருத்தப்படுவார்கள் என மறைத்து மனதினுள்ளே புழுங்கித்தவித்துள்ளான்..

எல்லா வேலையும் செய்து தரணுமாம் கைடுக்கு...

அதுவே அவன் மனநிலையில் மாற்றம் கொண்டுவந்துள்ளது...

யாரைக்கண்டாலும் அந்த கைடு போல தன்னை அடிக்க வருகிறார்கள் போல போபியா ஏற்பட்டுள்ளது....


எப்பாடு பட்டாவது புராஜக்டை முடிக்கணும் என பல்லைக்கடித்து பொறுத்ததன் விளைவு, டாக்டரேட் கிடைத்தது..ஆனால் வாழ்க்கையே தடம்புரண்டது...இதற்கிடையில் அமெரிக்காவிலிருந்து அவனுக்கு அழைப்புகள் போஸ்ட் டாக்டரேட்டுக்கு... அவன் செய்துள்ள ரிசர்ச் மிக அவசியமானதாம் ...

ஊருக்கு வந்தால், ராணுவத்தில் இள வயதிலேயே மேஜரான தம்பிக்கு திருமணம் நெருக்குவதாகவும், அதனால் அண்ணாவான இவனும் சீக்கிரம் திருமணம் பண்ண வேண்டிய கட்டாயம்...

தனக்கு திருமணம் வேண்டாம் என மறுத்துள்ளான், தன் நிலைமை அறிந்தே.. மருத்துவரோ திருமணம் நடந்தால் சரியாகிவிடும் என சொல்ல, திருமணமும் தோல்வியில் கடைசியில்;.

ஓவ்வொரு வருடமும் நான் லீவில் செல்லும்போதெல்லாம் அவன் மன நிலை சரியில்லாதவன் என்றே சொல்ல முடியாத அளவுக்கு மிக அன்பாய் என்னிடம் உட்கார்ந்து பேசுவான்... பலத்த நியாபக சக்தியும் கூட...

ஆனால் இடையிடையேஅவனுக்கு அதிகமாகிடுவதாக என் அண்ணன் சொல்வார்...

இடையில் சித்தப்பா தவறிவிட, சித்தியோடு இருந்தான் .. மத்த சகோதர சகோதிரி வெளியூர் மற்றும் வெளிநாட்டில்...

ஒருமுறை ஏதோ பயத்தில் , சித்தியையும் தாக்கியுள்ளான்... உடனே மற்ற சித்தப்பா, அண்ணா எல்லோரும் அவனை இந்த மனவளர்ச்சி குன்றியவர்கள் இல்லத்தில் சேர்த்துள்ளார்கள்... மிக மிக அழுதானாம்.. போக மாட்டேனென்று...

இந்த வருடம் சித்தியும் மரணித்துவிட, அவனுக்கு இருந்த ஒரே தொடர்பும் போனது போல்..

மற்றவர்களெல்லாம் அவனை சென்று அடிக்கடி சந்தித்தாலும், அவனுக்கென்று உயிராய் நேசித்தது அவன் தாய்தான்..

நான் சென்று அவனை சந்தித்ததும் மனம் கொள்ளா மகிழ்ச்சி ... மிக நிதானமாக பேசினான் 1 மணி நேரம்...

பைபிள் வசனம் கூட மனப்பாடமாய்....

அங்கிருந்த முழு நேரமும் அவன் பேச நான் கேட்டுக்கொண்டிருந்தேன்...

பேசி முடிக்கும் தருவாயில், இன்னும் அவனை அந்த பயம் ஆட்கொண்டிருப்பதை, அறிய முடிந்தது...

எதிலும் நம்பிக்கை வர தயங்குது அவன் மனது... அந்த அளவுக்கு அவன் காயப்பட்டுள்ளான் என்பது புரிந்து இறைவன் மீதே கோபம் வருகிறது ....


மாதம் 5000 ரூபாய் பணம் கட்டுவதால் கவனிப்பெல்லாம் குறைவில்லைதான்...

ஆனால் சிறைக்கைதியாய் இருப்பதில் அவனுக்கு இஷ்டமில்லை... வெளியே சாதாரணமாய் வர , வேலை பார்க்க ஆசை...

ஆனால் யார் பார்த்துக்கொள்வது... ?..

அவனும் மற்ற எல்லோர் போலும் படித்த படிப்பிற்கு வேலை, குடும்பம் என நல்லபடியாக நிகழ்ந்திருக்கலாம்...

ஏன் அவனுக்கு மட்டும் இப்படி?..

இப்படியான பல கேள்விகளோடு விடை தெரியாமல், விடைபெற முடியாமல் அவனிடம் விடைபெற்றேன்...


என் குழந்தைகளுக்கும் மாமாவை காண்பித்த திருப்தி மட்டுமே...வாழ்க்கையை குறித்தான எதிர்பாராத திருப்பங்களையும் மகனுக்கு எடுத்துறைத்தேன்...


என்னுடைய சுமைகள் எதுவும் பெரிதாயில்லை அதன்பின்பு.......பெரிய மகனுக்கும்...

( பேர் மாற்றப்பட்டுள்ளது)

தேவை ஒரு தேவதையின் வதை...

(குழந்தையோடு விளையாடிக்கொண்டிருக்கையில், ஹாக்கி மட்டையை வைத்து தெரியாமல் என் காலில் அடித்துவிட,

நான் வலியில் சிறிது கத்த, துடித்துவிட்டது பிஞ்சிக்குழந்தையின் மனசு...

உடனே ஓடிவந்து என் பாதத்தை தூக்கி தன் மேல் வைத்துக்கொண்டு பிஞ்சு விரல்களால் வருடிவிட்டதோடு, முத்தி செய்து,
சாரி சாரி என பலமுறை சொல்லிவிட்டு என் மன வலியை அதிகரித்தது...


என்னுடைய வெள்ளை உடுப்பை போட்டுக்கொண்டு ஒரு பெண் தேவதை போல செய்யும் அட்டகாசம் தாங்க முடியாது...)

இந்த தேவதைகள் வைத்து ஒரு கவிதை முயற்சி...


தேவையுந்தன் வதை தேவதையே......


தீவீரவாதியின் வீட்டில் புகுந்து
தீர்க்கமான உன் பார்வையால்
தீர்த்துகட்டிவிடு மனதின் வன்மத்தை
தீபமாய் வளரட்டும் உன்மேல் பாசத்தை
தீயவை தீண்டாமல் தேவதையே அருள்கொடு ..!!!


அரசியல்வாதிக்கொரு அருமருந்தாய்
அன்பைப்பொழிந்திட, லஞ்சம் வாங்கும் கையிலுன்
அழகிய பிஞ்சுப்பாதங்களை கொஞ்சிடக்கொடுத்திடு
அடுத்தவனுக்கு தீமை நினைக்குமுன், உன்பால்முகம்
அறிவுறுத்தி முளையிலேயே அழித்துவிடு...

கலப்படம் செய்பவனுக்கோ உன் கள்ளமில்லா புன்னகை
கலங்கடித்து , கருணை பிறந்திட ஆணையிடு....

வெறிபிடித்தலையும் மனிதம் தோற்றவரிடமும்
வெருப்பு நீக்கிடவே சிரிப்போடு நீ விளையாடிடு ..

ஏற்றத்தாழ்வு பாராட்டி, அடிமைத்தனம் பண்ணுவோரையும்
ஏங்கவைக்க உன் மழலை மொழியில் கவிபாடு...

உயிர்க்குலைக்கும் போருக்கு காரணமானவரை உன்
உமிழ்நீரால் முழுவதுமாய் மனஅழுக்கை கழுவிவிடு...

இடிஅமீன் பரம்பரை என பறைசாற்றுபவரையும் நீ
இருக கட்டியே இன்முகத்தோடு அணைத்துவிடு...

கோபம், காமம் காட்டும் தொலைக்காட்சியை பார்க்கும்போது
குசும்புகளை அதிகமாக்கி கவனத்தை திருப்பிவிடு...

சோர்வாய், பாரமாய் நகரும் நாள்களில், சுறுசுறுப்பாய், பூஞ்
சோலையாய் , கண்சுடரொளியால் நம்பிக்கையை ஊன்றிவிடு...


யாரும் மறுத்திடுவாரோ உன் அன்பை தேவதையே
யாவரும் கேளிராகிட தேவை உந்தன் வதையே...

விதவை ஒரு ஊனமா?...

விதவை ஒரு ஊனமா?...

சிஃபியில் பொங்கல் பதிப்பில் வெளிவந்த கதை

http://sify.com/tamil/pongal/

அர்விந்த் தொந்தரவு கொடுத்துக்கொண்டிருந்தான் பாலுவிடம்...

" நீ கேட்டு சொல்லுடா.. உனக்குத்தான் அதைப்பற்றி பேச நெளிவு சுளிவுகள் தெரியும்."

"ஏய். வெளையாடாதேடா... இதென்ன பலசரக்கா பிடிக்குதா பிடிக்கலையான்னு கேட்டு சொல்ல... ?.. எனக்கு தயக்கமா இருக்குடா.."

" டேய் ..பிளீஸ்டா..உன் மனைவிக்கும் பவித்ராவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டுதானே?.."

" இருக்கலாம்.. ஆனா பவித்ரா நம்மகூட வேலை பார்த்த விமலின் மனைவி.. இப்ப நம்கூட வேலை செய்யும் தோழி...நான்

ஏதாவது கேட்கப்போய் என்னை தப்ப நினைக்க கூடாது... ஏன் நீயே கேளேன் தவறென்ன...உனக்குத்தான் அவர்கள்மேல் அதிக அக்கறையுண்டே.."

" என் காதல் தோல்விக்குப்பின், எந்த பெண்ணையும் ஏறெடுத்துகூட பார்ப்பதில்லைன்னுதான் உனக்கே தெரியுமே...நான் போய் ... எப்படிடா..முகத்தில் அடித்தாற்போல் ஏதாவது சொல்லிட்டா , நாளைமுதல் ஒரே அலுவலில்... யோசிச்சியா நீ?.."


"அப்ப நான் கொஞ்சம் முன்னோட்டமாய் சில விஷயங்கள் அவ கிட்ட சொல்லிடுறேன் இல்லையில்லை கேட்டுக்கிறேன்..
அப்புரமா நீ பேசு..."

அதேபோல் பாலு, தன் மனைவியின் மூலம் பவித்ரா இரண்டாவது திருமணத்துக்கு தயாரா என தெரிந்துகொண்டான்...

பவித்ராவுக்கு அந்த எண்ணமே இல்லை...சொன்னால் அர்விந்த் நம்புவதாயில்லை..தான் எப்படியும் அவளை சம்மதிக்க வைக்கணும்னு நினைக்கிறான்... ஆனால் அவள் மனதில் என்ன இருக்கு என தெரிந்துகொள்ள முடியவில்லை..

எதுவானாலும் பேசிடணும்னு நினைத்து பவித்ராவுக்கு ஒரு தனிமடல் மிகுந்த மரியாதையோடு அனுப்புகிறான்.

அதில் தான் அவளிடம் சில விஷயங்கள் குறித்து தனியாக பேசவிரும்புவதாக குறிப்பிடுகிறான்..

பவித்ராவும், எந்தவித தயக்கமுமின்றி பேச சம்மதிக்கின்றாள்...

தயக்கமெல்லாம் இப்ப அர்விந்துக்கு மட்டும்தான்.. எப்படி ஆரம்பிப்பது என்ன பேசுவது என்றே தெரியவில்லை.
.

முதலில் தன் காதல் தோல்விக்கான காரணத்தை கூறிவிட்டு, தனக்கு திருமணம் என்கிற எண்ணமே இல்லாமல் இருந்ததாகவும், பவித்ராவின் நிலைமையை முழுதும் அறிந்துபின் மண முடிக்க எண்ணமிருப்பதாகவும் சொல்கிறான்..


எந்த வித உணர்ச்சியும் காட்டாமல் தீர்க்கமாய் புன்னகையோடே பேச ஆரம்பித்தாள் பவித்ரா..

" மிக்க நன்றிதான் சொல்லணும், அர்விந்த் உங்களுக்கு....ஒரு விதவைக்கு வாழ்வு தர முன்வந்தமைக்கு...

ஆனா என்னைபொறுத்தவரைக்கும், அருமையா ஒரு குழந்தை இருக்கு வளர்க்க.. போதிய அளவு வசதியும் இருக்கு...
முன்பெல்லாம் தான் பெண்களுக்கு வேலி என்கிற பேரில் கண்டிப்பாக ஒரு தாலி தேவையாயிருந்தது...

இப்பல்லாம் நல்ல நட்புகள், புரிதலோடு கிடைக்கின்றன.. யாரும் இவள் விதவை, என்கிற கண்ணோட்டத்தில் பார்ப்பதில்லை...

என்னை எப்படி காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என தெரிந்தே நான் வளர்க்கப்பட்டேன்... அதேபோல் என் கணவ்ர் விமலும் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தே என்னை நடத்தினார்... எப்பவும் அவரை நம்பியிருக்கும்படிக்கு செய்யவில்லை.... சில நேரங்களில் அவரின் இழப்பு எனக்கு வருத்தத்தை தரத்தான் செய்கிறது மறுப்பதற்கில்லை...ஆனால் அடுத்த நொடியே அவர் நான் வருத்தப்படுவதை விரும்பமாட்டார் என நினைத்து உற்சாகமாய் எழுந்து என் நேரங்களை வீணடிக்காமல் உபயோகமான ஏதாவது ஒரு வேலையில் ஈடுபடுவேன்...

அவரை இழந்தது விபத்து... ஆனால் எனக்கும் சாமர்த்தியம் இருப்பதால் நான் முழுமனதோடு ஏற்றுக்கொள்கிறேன்...

சாமர்த்தியம் இல்லாத பெண்மணிகளுக்கு உங்களைப்போன்றோர் உதவி கிடைத்தால் மிகவும் மகிழ்வேன்..

என் குழந்தைக்கு தந்தையில்லை என்கிற ஒரே ஒரு குறைபாடு மட்டுமே... அதுவும் வளர்ந்ததும் புரிந்துகொள்வாள்..
இதுவரை என் முழு கவனமும் அவள் மேல் இருப்பதால் அவளுக்கு அது பெரிதாகத்தெரிவதுமில்லை..."

" சரி பவித்ரா, ஆனா நான் உங்களுக்குத்துணையாக இருப்பதில் என்ன நஷ்டம்..உங்களுக்கு உஅத்வுவது என் பாக்கியமாய் நினைக்கிறேன்..?"

" முடிந்தால் அதை நீங்கள் வெளியிலிருந்தே செய்யலாமே அர்விந்த் நல்ல நட்போடு....

திருமணம் என்கிற பந்தம் விளையாட்டல்ல... கொடுக்கல் வாங்கல் நிறய உண்டு...திருமணமே வேண்டாமென்றிருந்த என்னையும் காதல் கொள்ள செய்தவன் விமல்..மகிழ்வான எங்கள் வாழ்க்கையிலும், சண்டை, ஈகோ இருந்தது...

ஆனாலும் சமமான அன்பு இருந்ததால் விட்டுக்கொடுத்து வெற்றிகண்டோம்....அப்படியிருக்கும்போது ஒரு பக்க காதலென்பது கதைக்கு மட்டுமே பொருந்தும்... இனி என் வாழ்க்கையில் குழந்தை , வேலை, நேரமிருந்தால் சேவை இவைதான் என் காதல்.. யாரும் எனக்காக பரிதாபப்படுவதுகூட என்னை ஊக்கமிழக்க செய்யும்... கணவனை இழப்பது என்பது என் போன்ற பெண்ணுக்கு ஊனமில்லை , தோல்வியுமில்லை அர்விந்த்... நான் ஒரு முன்னுதாரணமாய் இருக்கவே விரும்புகிறேன்..

ஒரு காதல் தோற்றால் என்ன..? உங்களுக்குள் காதல் இருக்கும்வரை யாரையும் நீங்கள் காதலிக்கலாம்... உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துகள்..."

அப்படியே சிலையாய் இருந்தான்... யாருக்கு தாழ்வு மனப்பான்மை... எவ்வளவு அழகாய் தெளிவு படுத்திவிட்டாள்..

என்னுடைய பார்வைதான் அர்பமாய் இருந்துள்ளது...

இனி நான் அவள் தோழன் என பெருமைபடுவேன்....எதுவும் ஊனமில்லை... நம் மனதில் ஊன்றியிருக்கும் தேவையற்ற
பழமையான சிந்தனை தவிர என எண்ணி, உற்சாகமாய் வாழ்த்தி விடைபெற்றான் புதியவனாய்...

சந்தித்த அற்புதமானவர்கள் ‍ திரு .‍‍ ஜி அவர்கள்..

சந்தித்த அற்புதமானவர்கள் ‍ திரு .‍‍ ஜி அவர்கள்..

சந்தித்த அற்புதமானவர்கள் ‍ திரு .‍‍ஜி அவர்கள்..



2 மணி அன்புடன் சந்திப்புக்கு வேக வேகமாய் கிளம்பியும் 5 மணிக்குத்தான் சேர முடிந்தது...

இதற்கிடையில் காந்தி அக்கா, சுரேஷ் அண்ணாவிடமிருந்து தொலைபேசி அழைப்புகள்...

ஜி அவர்கள் காத்திருப்பதாக..


அவர்கள் சந்திப்புக்கு வருவார்கள் என்றே எனக்குத்தெரியாது...

மிக சங்கடமாய் போயிற்று... எவ்வளவு பெரிய மனிதர்..

காக்க வைத்துவிட்டோமே என்று...

அரக்க பரக்க ஓடி போய் கீதாஞ்சலி சேர்ந்தால், இங்கு அப்படி ஏதும் பார்ட்டி நடக்கவில்லை என சொல்லிவிட்டார்கள்..

கார் எங்கு பார்க் செய்யப்பட்டுள்ளது என தெரியவில்லை... ஓட்டுனர் தொலைபேசியும் பதிலில்லை...

குழந்தைகளையும் இழுத்துக்கொண்டு ஆட்டோ பிடிக்கலாம் என எண்ணும் நேரத்தில், நிலா வந்தார் பைக்கில்... இதே இடம்தான் மாடியில் என்றார்...பாவம் மீண்டும் மீண்டும் கேட்டு குழப்பினேன்...தேகி மாடியில்தான் இருக்கிறார் என்றதும் திருப்தி.....


கீதாஞ்சலி ஹோட்டலில் வேலை பார்ப்பவருக்கே விவரம் தெரியவில்லை... ஆச்சர்யம்தான்..

உள்ளே புகுந்து , பெட்டியையும் குழந்தைகளையும் இழுத்துக்கொண்டு படி ஏறினால்......

தெய்வீக களையோடு ஒருவர்,,. அருகில் சேகர் அண்ணாவும், விசாலம் அம்மாவும்...

விசாலம் அம்மாவை புகைப்படத்தில் பார்த்துள்ளதால் உடனே கண்டுபிடித்துவிட்டேன்...

ஆனால் சேகர் அண்ணா புதிது...

என் திணறலை புரிந்து கொண்டவர்களாய், புன்னகையோடு அறிமுகம் செய்துகொண்டார்கள்..

அந்த முகத்தில் அப்படி ஒரு தேஜஸ், ஒரு ஒளி...

பதின் வயது பாலகனின் உடம்பும், கள்ளமில்லாத முகமும்....தீர்க்கமான அறிவு பெற்றுள்ள நிறைகுடமான பேச்சும்.பார்வையுமாய்...

என் மகனை ஆசீர்வாதம் வாங்கச்சொன்னேன்... அவன் குனிந்து எழுந்ததும்தான் தாமதம், அந்த முதல் அதிர்ச்சியைத்தந்தார்..

உடனே அவரும் என் மகன் கால் தொட்டு நமஸ்கரித்தார்... ஒரு நிமிடம் என்ன நடக்கிறதென்றே புரியாமல் , பின் அதிர்ந்தேன்... அவரோ நிதானமாய்...


எனக்குள் படபடப்பு... .ஏற்கனவே காக்க வைத்த குற்ற உணர்ச்சியோடு இப்ப என் அகங்காரம் எல்லாம் தவிடுபொடியாக்கும் சம்பவமாய்.......

உடனே சேகர் அண்ணா,ஜி அவர்கள் கையில் எதையோ தர, அவர் எனக்கு அதை அளிக்க,


" ஏன் எனக்கு மிகவும் கனம் கொடுக்கிறீர்கள்.. இதெல்லாம் எதற்கு ஐயா " என நான் பதட்டமாய் கேட்க,

" திறந்து பாருங்கள். உங்களுக்கு பிடிக்கும் ." என்றார்கள் புன்னகையோடு..

நானும் திறந்து பார்த்தேன் .அடுத்த இரண்டாவது அதிர்ச்சி காத்திருந்தது...

உள்ளே வெள்ளியிலான மிக அழகான சிலுவை ஒன்று...

என்னால் நம்பவே முடியவில்லை ...

நான் கிறுஸ்தவள் என்று அவருக்கு தெரிந்துள்ளது...

அவர்கள் என்னை சந்திப்பார்கள் என்று கனவிலும் நான் எதிர்பார்க்கவில்லை...

நான் ஏதும் மறுமொழி கூற இயலாது என் வாயை அடைத்துவிட்டார்கள்..

ஒரு நிமிடம் என்ன செய்யணும்னு தோணாது நான் தாய்லாந்திலிருந்து கொண்டு வந்த கையடக்க சுவாமி சிலைகள்

எடுத்து தந்தேன்... மறுக்காது பெற்றுக்கொண்டு என்னை கெளரவித்தார்கள்...

சின்னவன் டேனி சீக்கிரம் காலில் விழ மாட்டான்.. அவனையும் ஆசீர்வதிக்க சொன்னேன்..

" அவன் என்னைவிட அழகாய் இருக்கிறான்.." என அந்த நேரத்திலும் நகைச்சுவையோடு சொல்லிவிட்டு

அவன் தலைமேல் கைவத்து தடவிவிட்டு புன்னகையோடு வெளியேறினார்கள்..

அப்படியே இன்னும் அந்த அதிசய காட்சிகள் கண்முன்னே பிரம்மிப்பாய்...

பின்னர்தான் அவர்களைப்பற்றி பல விஷயம் தெரிந்துகொண்டேன்... அவர்கள் இமயமலையில்தான் அதிக நாள்

இருப்பார்களாம்... சென்னையில் இருப்பது மிக குறைவாம்..

கடவுளுக்கு நன்றி.. இப்படி ஓர் அற்புத மனிதரை சந்தித்தமைக்கு...அந்த பாக்கியம் பெற்றமைக்கு...:)

தேவதைகளும் தேவதூதர்களும்

தேவதைகளும் தேவதூதர்களும்

"எல்லோரும் இப்ப தேவலோகத்தில் இருப்பதாக நினைத்துக்கொள்ளுங்கள் " என ஆரம்பமாகிறது 2-6 வயது பிள்ளைகளின் கிறுஸ்மஸ் திருநாள் கொண்டாட்டம்..மகன் படிக்கும் பள்ளியில்..மொத்தம் மேடையில் 100 குழந்தைகள்


எல்லா குழந்தைகளுக்கும் தேவதை போல் இறக்கை கட்டி, தலையில் கிரீடம் , வட்டம் வைத்து சிமிக்கிகள் ஜொலிக்க வெண்ணிற ஆடையில் வெண்பஞ்சு மேகங்கள் சூழ திரை விலகியதும் .......சொல்ல வார்த்தைகள் இல்லை... அந்தப்பிஞ்சுகளின் சிரிப்பும், கண்களில் ஒளிவிடும் நட்சத்திரங்களும், அவர்களின் சின்ன சின்ன குசும்புச்சேட்டைகளும்,

தங்கள் உடுப்புகளை புதிதாக பார்த்துக்கொள்வதும், தலையில் உள்ள கிரீடத்தை, ஏதோ பாரமாக இருப்பதாக கண்ணை உருட்டி பார்ப்பதும்....


விடுமுறை எடுத்து எல்ல பெற்றோரும் தம் மழலையினை காண வந்தார்கள் அனேகமாக...
அதுவரை ஆசிரியர் கைபிடித்து ஒழுங்கா இருந்த சில குழந்தைகள் பெற்றோரை பார்த்ததும், மேடையிலிருந்து " அம்மா, , அப்பா" என கத்துவதும், " ஐ. லவ் யூ " சொல்லுவதும், சில சின்ன குழந்தைகள் மட்டும் "ஓ " வென அழுவதும், நம் கண்ணில் ஆனந்த கண்ணீர் வரவழைக்கும் காட்சி...


குழந்தை ஏசுவின் தகப்பனாக நடித்த பையன் தலையில் கைவைத்து மிக சாவகாசமாக கொட்டாவி விட்டுக்கொண்டது பார்ப்பவர்களுக்கு சிரிப்பை வரவழைத்தது..அதேபோல் ராஜா தன் கையிலுள்ள பரிசு பொருளை அப்படியும் இப்படியும் பார்த்துகொண்டதும்...:))



என் மகனும் வந்தார், ஒரு சின்ன அங்கியை போட்டுக்கொண்டு கையில்

ஆட்டுகுட்டி பொம்மையோடு குழந்தை ஏசுவை பார்க்க... அவன் வகுப்பு பசங்களெல்லாம் ஆட்டுமேயர்களாய்...


என்னையும் பார்த்துவிட்டான்... இப்ப பாட்டு சத்தமாய் , தனி குரலில் தொண்டை கிழிய கத்தி பாடுகிறான் உற்சாகமாய்... ஆட்டத்தோடு....பாடல் முடிந்ததும் அங்கிருந்தே அறிவிப்பும் செய்கிறான்.." அம்மா ..போகாதே.. நானும் வாரேன் உங்கூட..."
சொல்லியபடியே கிளம்பவும் தயாரானான்..

(எல்லாம் முடிந்ததும் அவனை பள்ளியில் விட்டுவிட்டு நான் அலுவல் செல்லலாம் என்றால் ஒரே அழுகை..தானும் வருவதாக... ஆளுக்கு முந்தி காரில் ஏறியாச்சு...

அப்புரம் வீட்டுக்கு கூட்டி வந்தாச்சு..)
யாருக்கும் தமிழ் தெரியலை... கிட்டத்தட்ட 19 நாட்டு மொழி பேசுபவர்கள்...

புன்னகையும் ஆங்கிலமும் பொதுமொழி...


எல்லா தேவைதைகளும் அவரவர் பெற்றோர் இடுப்பிலும் தோளிலும் அமர்ந்துகொண்டு, வாய்நிறய சாக்லேட் வடித்துகொண்டு .....அந்த சாக்லேட் வாயோடு ஆசிரியருக்கு முத்தம் கொடுத்து விடைபெற்று.... கையில் நிறய கைகொள்ளாத பரிசோடு, வாய்நிறய சிரிப்போடு...கண்கொள்ளா காட்சி...

ஆசிரியர்களையும் அவர்கள் பொறுமையையும் கண்டிப்பா போற்றியாகணும்...

மேடையில் ஒழுங்குபடுத்தி நிற்கவைத்துவிட்டு திரும்புவதற்குள் மாறி மாறி நின்று இஷ்டப்படி விளையாடிக்கொண்டிருந்தார்கள்.. அவர்களும் குழந்தைகள் போலவே தேவதையாக வெள்ளை உடுப்பில்...சில குழந்தைகள் சேட்டை தாங்காமல் தூக்கி வைத்திருந்தார்கள்.. பாவம்...


கேமராக்கள் வெளிச்ச வெள்ளத்தை பாய்த்துகொண்டிருக்க, பாட்டுகள் பலருக்கு நடனத்தை வரவழைக்க..,


உண்மையிலேயே தேவலோகத்தை விட்டு வெளிவர மனசில்லை..அவர்களோடு நாமும் ஒரு குழந்தையானது மிக நல்ல அனுபவம்...
+++++++++++++++++++++++++

மறுபடியும் மணக்கட்டும் மறுமணம்..

மறுபடியும் மணக்கட்டும் மறுமணம்..


"ஹஹ.. என்ன ஓய் ஒரு வாரமா ஆளயே காணல...மொத ஆளா வந்துடுவீரே நடைக்கு.."

" ம்."

" என்னவோய் கேட்டுகிட்டே இருக்கேன் பதிலையே காணோம்.. மொகம் வாட்டமா வேற இருக்கு.. பொண்ணு நல்லபடியா வந்துட்டாளா ஊரிலிருந்து..?"

" ஆமா.. ஆனா நல்லபடியா எங்க .. முறிவோடுதான் வந்திருக்கா...."

" அதுக்கேன் ஓய் பயப்படுரீறு?... நான் அப்பவே சொன்னேன் .. ஒரே பொண்ணுன்னு பொத்தி பொத்தி வளர்க்காம , கொஞ்சம் அங்கிட்டும் இங்கிட்டுமா நாலும் தெரிஞ்சு தெய்ரியமா வளக்கணும்னு.... படிப்பில கெட்டியா இருந்தா மட்டும் போதாதுவோய்..."

"ம்."

" சரி இப்ப ஒண்ணும் குடி முழுகிப்போனாப்புல மொகத்த தொங்கப்போட்டுக்காதேயும்... புள்ள வருத்தப்படுவா... தெய்ரியம் சொல்லும்... இல்லாட்டி நான் சொல்றேன் அவளுக்கு.."

" அதுக்கில்லை.. இனி பேரப்பிள்ளை படிப்புமிருக்கே.... வெளிநாட்டில படிச்சவன்..."

" ஓய் . எனக்கொரு யோசனை.....அவ படிப்புக்குதான் அங்கு வேலை ரெடியா இருக்கே... மறுபடியும் அங்கே போய் வேலை பாக்கட்டுமே..."

" தனியா போகிற தைரியமில்லை பா... "

" அட, என் வீட்டிலும் அதே விவாகரத்து பிரச்னை..தான்... பேசாம நாம சம்பந்தியாயிடலாம்...விடும் கவலையை..."

" இது நடக்குமா?.. "

" ஏன் ஓய் நடக்காது...எது நடந்ததோ அது நன்றாய் நடக்கவில்லை.. அதுக்காக இனி நடக்கப்போவது எல்லாமேவா தப்பா நடக்கணும்...இதிலிருந்து வெளிவரணுமோய்..உம்ம மககிட்ட நான் பேசுறேன் ஓய்...நீர் என்கிட்ட விட்டுரும் ..என் பேத்தியும் உம் பேரனுக்கு துணை, ஆச்சு பாரும் ஓய்..."

என சந்தோஷமாக சிரித்தார்...

" சரி மககிட்ட சொல்லி மாமாவுக்கு பட்சணம் எல்லாம் ரெடி பண்ணச்சொல்லும்... இன்னிக்கு சாயங்காலமே நானும் ஆத்துக்காரியும் வந்து பேசி முடிச்சுடலாம்...ஹிஹி.."
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍சாயங்காலம்

" என்னம்மா இந்த சம்பந்தத்துல ஒனக்கு சம்மதம்தானே?.."

" போங்க மாமா.. என் வாழ்க்கையில் இப்படி ஒரு முடிவு எடுத்துருக்கீங்க... நான் மாட்டேன் என்பேனா?.. எனக்கு முழு சம்மதம்..."

" அப்படி சொல்லு என் மகராசி...ஆயுசுக்கும் நீங்க இருவரும் சேர்ந்து நல்லபடியா பிள்ளைகளை வளர்த்து மகிழ்ச்சியா இருக்கணும் .. அதுதான் எங்க மகிழ்ச்சியும்...."

" கண்டிப்பா, மாமா... இப்படி ஒரு மறுமணம் அமையும்னு நான் கனவிலும் எதிர்பக்கலே மாமா . வரதட்சணை கொடுமைகளில் எங்களைப்போன்றோருக்கு இதுதான் நல்ல வழி.. உங்களை மாதிரி தைரியமா எல்லா பெண்ணை பெத்தவங்களும் முடிவெடுக்கணும்...."

" ஹஹ.. என் கடமை மா. அது...சரி இரு என் பொண்ணுகிட்ட இந்த சந்தோஷத்தை சொல்லிடுறேன், அவள் வாழ்க்கைத்துணை பற்றி... நல்லவேளை தைரியமா வளர்த்தேன்....

இரு பெண்கள் சேர்ந்து மறுமணம் என்று மனம் மட்டும் இணைந்து வாழப்போகிறீர்கள், ஒருவருக்கொருவர் துணையாக...."


சாதனை செய்த வெற்றியில் பெருமிதம் கொள்ளுகிறார் வரதட்சணையில் அடிபட்ட அந்த தந்தையும்...

ஊருக்கு போகலாமா மகனே?...

ஊருக்கு போகலாமா மகனே?...

ஒறவுகள பாத்து கண்குளிற‌
ஒருவருச விடுமுறையில்
ஒன்னையயும் அழைச்சுக்கிட்டு
ஒய்யாரமா போகப்போறேன் !

மாமன் மடி காத்திருக்க..
மறைஞ்சு ஒளிச்சு வெளயாட,
அத்தை சமையல் வாசனையும்,
அதுக்குள்ளே என்ன‌ இழுத்துடுச்சே!..

மச்சான்காரன் நீயும் ஊர்சுத்த
மறுபடியும் வண்டிய சரிசெஞ்சான்
மதினியும் நீ ஊஞ்சலாட,க‌யிற‌
மரத்தில பலகைபோட்டு காத்திருக்கா..!

பட்டணத்து வாழ்க்கையில‌
பாசத்ததான் தொலைச்சுபுட்டே!
பட்டிக்காட்டு சனங்ககிட்ட‌ பாடமும்...
படிச்சுபோட்டு மறு பிறவியெடு..

ஒத்தகுடிசை ஓட்டுவீடு
ஒத்துமையா இருக்காக ‍ ஆனா
ஒப்பனையா வீடிருந்தாலும்
ஒருத்தொருக்கொருத்தர் பேச்சில்ல..

கிழ‌க்கே குற்றாலம் ,பாப‌னாச‌ம்
தெற்கே க‌ன்னியா கும‌ரிகட‌ல்
மேற்கே திருச்செந்தூர், தூத்துகுடி‌
வ‌ட‌க்கே வ‌கைக்கொரு கோவிலென,

மாதமொரு சுற்றுலாவாம்
மாவிலை திருவிழாக்க‌‌ளாம்,
வ‌கைவ‌கையாய் ப‌ல‌கார‌ங்க‌ள்
வ‌ண்டிபோட்டு வரும் கிண்ட‌ல்க‌ள்..

வசதியான வாழ்விருந்தும்
வருத்தம்தான் மிச்சமிங்கு
வயக்காட்டு வசந்தமிங்கு
வந்திடுமா மனம் குளிர்ந்திடுமா?

வீட்டைவிட்டு வெளியிறங்க‌
விசாரிப்புகள் நூறாகும‌ங்கு..
வியாதிவந்து சொன்னாத்தேன்
விபரீதமும் விளங்குமிங்கு...

வாசல்விட்டு இறங்கியதும் குளிர்
வசதியோடு பள்ளி வாகனப்பயணம்...
வலிக்கலையே நெடுந்தூரம் நடந்தபோதும்
வடிவாக உடம்புதனில் உறுதிபெற்றோம்.

படிச்ச பள்ளி,ஆடிய தோட்டம்
ப‌ழ‌கிய‌ ந‌ட்பு, ஓட்டிய‌ சைக்கிள்
நீந்திய ஆறு, ப‌சிதீர்த்த‌ தோப்பு
நிச்ச‌ய‌மா நீயும் பாக்கோணும்.

சுத்த‌மான‌ ம‌னசோட‌ அன்பாய்
சுக‌ம்பேணும் ச‌ன‌ங்க‌விட்டு
போலியாய் இருக்கிற நாட்டுக்கு‍
போக‌ணுமாம்மா னு நீயும் கேக்கோணும்...
எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்


கனக்காம்புரம் பூ வெச்சு
கலகலன்னு பூவா நானும்
கலாய்ப்பு கலாட்டான்னு
கவுண்டரு அவரும்....

கொட்டாயி போகறச்ச
கொசுவம் வெச்சு சேலைகட்டி
கொய்யா, கடலை வாங்கியாயி
கொரிக்கத்தான் கொடுத்தாரே!..

பவுனு பவுன்னுன்னு
பாசத்த பொழிஞ்சாரே
பவுனெல்லாம் கழத்துவாருன்னா
பாவிமக கனவுகண்டேன்

சம்பளத்த வாங்கியாந்து
சக்களத்திக்கு தந்தாரே
சரக்குக்கே பாதிபோனா
சம்சாரம் வெளங்கிடுமா?

சாதகம் நாள் பாத்து
சமஞ்ச புள்ள அழகப்பாத்து
சாதிசனம் கூடி நீங்க
சகதியிலா தள்ளுனீக?


வெவரமில்லா வயசுப்புள்ள
வெட்கத்த வெலபேசி
வெறகுகட்ட வாழ்க்கைக்கு
வெற்றி வாக சூடுனீக?

வேதனைய ஒதுக்கிபுட்டேன்
வேற வேலை பாத்துகிட்டேன்
சோம்பேறிபய வீட்டுவாச
சோலிபாக்க போகமாட்டேன்

எப்படி இருந்த நான்
இப்படி ஆயிட்டேன்னு வருத்தமில்ல
படிப்படியா படிச்சுகிட்டேன்
அடுப்படினாலும் ருசிப்பேனுல்ல...:)))


‍‍‍‍‍‍‍‍ ஆப்பக்கார ஆயா...

தயக்கமா?..ம‌ன‌திலே குழ‌ப்ப‌மா?- குட்டிக்கதை.

இன்னிக்கு எப்படியாவது கேட்டுடணும் சதாவை...நானும் பார்க்கிறேன் ஒரு மாதமாய், அதற்கான சந்தர்ப்பமே கிடைப்பதாயில்லை.. இனியும் விடக்கூடாது.. அவன் அண்ணன் ,எனக்கு வில்லன் வேறு வெளிநாட்டிலிருந்து வந்துவிட்டான்..

அதென்னவோ அவனுக்கும் எனக்கும் ஆரம்பத்திலிருந்தே ஆவதில்லை... பின்ன என்னங்க , எங்க வீட்டு பேரழகியான ரதியை கண்ணு வெச்சா சும்மா விடுவேனா நான்...அப்ப சும்மா ஊரை சுத்திக்கொண்டிருந்தான், இப்ப அதிர்ஷ்டம் அமெரிக்கா பறந்துவிட்டான்..ரதியோ லண்டனில்.. இருக்கட்டும் அந்த கோபம்தான் அவனுக்கு...


அதுக்காக இப்போது நான் இழப்பதாயில்லை இந்த சந்தர்ப்பத்தை..

அதோ வருகிறாள் தேவதை.. என்ன அழகு.. ஆஹா இன்னிக்கு வெள்ளிக்கிழமையா?

அம்மணி தாவணி போட்டு நீண்ட கூந்தலில் பூ வைத்து... ம். நல்லாத்தான் வளர்க்கிறாங்கப்பா இந்த நாகரீக யுகத்திலும்... மத்த நாட்களில் ஜீன்ஸும் சுடிதாரிலும் வண்டியில் போகிறவள் , இன்று மட்டும் காரிலாமா, அதுவும் அண்ணனுடனா?..

அடப்பாவமே.. எப்படி போய் அவளிடம் பேச..?ச‌ம்ம‌திப்பாளா ?..திட்டுவாளா?..

அவன் அண்ணன் காரை எடுத்து வெளி வரும்வரை வெளி கதவினருகில் நிற்கப்போகிறாள்போல... இதோ ஓடிபோய் சொல்லிட வேண்டியதுதான்...
காலில் ஷூவையும் சாக்ஸையும் மாட்டிக்கொண்டிருக்கும்போது தொலைபேசி அழைக்கிற‌து...


யாராவது எடுங்க‌ளேன்... நான்தான் கிடைத்தேனா?.. அருகில் யாருமில்லையே... ட‌க்கென்று அல‌றும் தொலைபேசியை எடுத்து கீழே வைத்துவிட்டு க‌ள்ள‌ப்பார்வை பார்த்துவிட்டு வேக‌மாய் வாச‌ல்நோக்கி ந‌க‌ர‌,


" யார‌து போன்ல‌.." அதிகார‌மாய் குர‌ல் உள்ளேயிருந்து..


" யாருமில்லை.. ராங் ந‌ம்ப‌ர்தான்" ஹிஹி..ஹி..


அப்பாடா மூச்சிறைக்குது... விய‌ற்வையை துடைக்கும்போது ச‌தா என்னைப்பார்த்துவிட்டாள்..வெட்கத்தோடு புன்ன‌கைக்கிறாள்...தாவணி போட்டாலே நம்மூர் பெண்களுக்கு இலவசமா வெட்கமும் வந்துடுது...அட‌.. ந‌ல்ல‌நேர‌ம்தான்..ந‌ல்ல‌ மூடில் இருக்கிறாள் போல‌..

மெல்ல‌ அவ‌ளை நோக்கி ந‌ட‌க்கிறேன்... அவ‌ள் வீட்டு நாய் என்னைக்க‌ண்டு கொண்டு இப்ப‌வா கெஞ்ச‌ணும்... த‌ர்ம‌ச‌ங்க‌ட‌மான‌ சூழ்நிலை...என‌க்கோ பேயைக்க‌ண்ட‌மாதிரி உள்ளுக்குள் உத‌ற‌ல்...


" டாமி உள்ளே போ.." கீழ்ப‌டிந்து , பின் திரும்பி என்னை அப்புர‌மா க‌வ‌னித்துக்கொள்வ‌தாக‌ சேதி சொல்லிவிட்டு சென்ற‌து..


என் த‌ய‌க்க‌த்தை புரிந்த‌வ‌ளாய்...,

" என்ன‌வோ சொல்ல‌ வ‌ந்தீங்க‌ போல‌..."

" இல்ல‌..வ‌ந்து...."


" வ‌ந்து ..."


" வ‌ந்து..."


" அதான் வ‌ந்துட்டீங்க‌ளே, சொல்லுங்க‌...சும்மா.."



" வ‌ந்து ... என் பேர‌னை க‌ல்யாண‌ம் செய்துக்குவியா?..."என்று சொல்லிவிட்டு த‌லையை குனிந்துகொண்டேன்....

இல்லத்தரசனின் தீபாவளி

சாந்தி அக்காவின் கதை ஒன்று சிஃபி.காமில் மலர்ந்துள்ளது.
http://tamil.sify.com/fullstory.php?id=14781545

பாராட்டுகள் & வாழ்த்துகள்
*
இல்லத்தரசனின் தீபாவளி

"என்ன இவன் இன்னும் கிளம்பலையா..? என்ன சொல்றான்..? பெண் வீட்டுக்காரங்க எல்லாரும் காத்துக்கொண்டிருக்கிறார்களே..?" - அம்மா அறைக்குள் வந்து சத்தம் காட்டிவிட்டுச் சென்றார்..

"இங்க பாருப்பா.. செல்லமா வளர்ந்துட்ட.. இனி அப்படியில்லை.. போகிற இடத்தில் நல்லபடியா நடந்துகிட்டு நம்ம குடும்பத்தைப் புகழும்படி நடந்துக்கணும்.. ஏன் இப்ப கண்ண கசக்கிற?" அப்பா.

"நான் கூட உங்க வீட்டுக்கு திருமணம் ஆகி வந்தப்ப ரொம்ப பயந்துட்டேன்.. ஆனா இப்ப பாரு, மாமனாரே மெச்சும் மருமகனாய், மனைவிக்கேத்த மணாளனாய் , குடும்பத்துக்கேத்த இல்லத்தரசனாய் மாறிட்டேனே.." அத்தான்..

"சரி சரி மசமசன்னு நிக்காம மறுவீட்டு பலகாரத்த எடுத்து வையுங்கோ" அக்கா அதட்டலுடன் உள்ளே நுழைய, பதறிக்கொண்டு எழுந்து உட்கார்ந்தான் தண்டராமன்.. பாவம்.. கோதண்டராமனை அப்படித்தான் அழைப்பார் அவர் அக்கா.

"இத பார்டா, தண்டம், என்னை நம்பியும், 3 தலைமுறையா, சிறந்த இல்லத்தரசர் பரிசு வருடம் தவறாம, தீபாவளிக்கு நம் குடும்பத்துக்குப் பரிசு கிடைப்பதாலும்தான் நம் வீட்டில் மாப்பிள்ளை எடுத்துள்ளார்கள்.. என், மற்றும் நம் குடும்பப் பெயரை நீயும் கட்டாயம் காப்பாத்தணும்.. அதை விட்டுட்டு, அழுது வடிஞ்சுண்டு வந்து நிக்கப்டாது புரியுதா..?"

"என்னம்மா நீ, அவனே அரண்டு போய் இருக்கான், அந்த பெண்ணைப் பார்த்து..."

"இல்லப்பா, ஐ.நா சபை வரைக்கும் போயிருக்கு அந்தப் பொண்ணு... அவ மனசு நோகாம நடந்துக்கணுமே.. அவா சம்பந்தம் கிடைத்ததே ரொம்ப பெருமையா நினைச்சுண்டிருக்கேன் நான்.. நாழியாச்சு கிளம்பு, கிளம்பு..."

"அப்பா, எனக்கு இன்னும் சமைக்கக்கூடத் தெரியாதே.."

"அதெல்லாம் பயமா..? தொலைபேசியில் சொல்லிட்டாப் போச்சு... துணி துவைக்க, மடிக்க, சிறப்பு வகுப்புகள், நம்ம நாராயணன் ஆரம்பிச்சுருக்கான்.. அவன்கிட்ட சேர்த்துவிடுறேன்.. என்ன அந்தாத்து மாமனார் கிட்ட கொஞ்சம் பவ்யமா நடந்துக்கோ... மாமனார், மருமகன் சண்டைங்கிற பேச்சுக்கே இடம் கொடுக்காதே.. அவா வீட்டுல அந்தாளு வெச்சதுதான் சட்டமாம்..."

"மச்சினங்காரன் உன்னை மாதிரியே ஒருத்தன் கடைக் கண்ணிக்கு போக வர இருக்கான்.. அவனையும் அனுசரிச்சுக்கோ.. மத்தபடி பொண்ணு தங்கம். அலுவலிருந்து வந்ததும், சாமர்த்தியமா நடந்துக்கோ.. அவளோட ஓட்டுநர் பெண்ணிடம் மறுநாள் என்ன, எங்கு வேலை என்பதைக் கேட்டுத் தெரிந்துகொண்டு அதற்கேத்தாற்போல் தயார் செய்.."

"காலாகாலத்துல புள்ள குட்டின்னு வந்தா நீதான் மகராசன்.. பிள்ளை வளர்ப்பது எப்படின்னு அண்ணா சாலையில் கோர்ஸ் இருக்கு படிச்சுக்கோ.."

"என்ன, பிரசவத்துக்குன்னு அவளுக்கு 6 மாதம் விடுமுறை.. அப்பத்தான் உனக்கு கொஞ்சம் கஷ்ட காலம்... ஹிஹி..." அத்திம்பேர்..

"எனக்கு பயமாயிருக்கு... நான் போமாட்டேன்.."

"அட. இதென்ன பிடிவாதம்....? உனக்காவது பரவாயில்லை தம்பி, ஒரே பெண், என் மாமனார் வீட்டில் நாந்தான் மூத்த மருமகன்.. கீழே வதவதன்னு 8 பிள்ளைகள்.. ம். ஒழுங்கா படிச்சு நானும் பெரிய வேலைக்குப் போய் தனிக்குடித்தனம் போயிருக்கலாம்.." அண்ணன்.

"சரி சரி, அம்மா, அக்கா, அண்ணி எல்லாரும் மாடிக்கு வருவதற்குள், நாம சீக்கிரம் கீழே போகணும்.. இல்லாட்டி காதுல ரத்தம் வருமளவு பேசிடுவாங்க.." அண்ணன்.

"அப்பா இனி மறுபடியும் எப்ப நான் இங்கு திரும்பி வருவேன்?" அழுகையோடு..

"ஒண்ணும் கவலை வேண்டாம்.. தாலி பிரிச்சு கட்டுதல், 3ஆம் மறுவீடு, எண்ணெய்க் குளியல், குலதெய்வ வழிபாடு, ஆடி அமாவாசைன்னு மாதத்துக்கொண்ணு இருக்கு. சும்மா விடுவோமா...?"

"அப்படியே இல்லாட்டியும் மாமாவுக்கு நெஞ்சு வலின்னு சொல்லி வரவழைச்சுட மாட்டோமா, இல்ல மாமா?.." அசடு வழிகிறார் மருமகன்..

"இப்ப கேட்டோமா..? இல்ல... கேட்டோமா?.. மாமா எப்ப காலியாவான், மன்னர் எப்ப ஆகலாம்னு கனவு காணுறியா?.."மாமா.

"கோவில் குளம்னு சந்திக்காமலா போய்டுவோம்?.. அந்த ரகசியத்த நான் சொல்லித் தாரேன்டா தம்பி..."

"ஆமா, நீயும் கெட்டது போதாதுன்னு இவனையும் கெடுத்துரு.."

அலங்கரித்து கீழே அழைத்து வருகிறார்கள்.. பட்டுவேட்டி சரசரக்க, குனிந்த தலை நிமிரக்கூட தைரியமில்லாமல், அடிமேல் அடிவைத்து நடக்கிறார் மாப்பிள்ளை.. தெருவாசலில் சென்று காரில் ஏறும் சமயம் ஒரே சிரிப்பொலி... பக்கத்து வீட்டு வயசுப் பெண்கள், பல்சரிலும், யமஹாவிலும் உட்கார்ந்து கொண்டு கலாட்டா பண்ணுகிறார்கள்..

"பாருங்க இந்தக் காலத்துப் பெண்களை... அப்பப்பா, தெருவில் ஒரு பையனை நடக்க விடுறதில்லை... இதுங்க கிட்ட இருந்து பையனைக் காப்பாத்திக் கரை சேர்க்கும் வரையிலும் போதும் போதும் என்றாகிவிடுகிறது.." அம்மா பெண்ணின் தாயாரிடம் அலுத்துக்கொண்டார்..

"நீங்க நல்லா வளர்த்துருக்கீங்கன்னு கேள்விப்பட்டுத்தானே பையனே எடுத்தோம்.." பயப்படும்படி, பூமி அதிரும்படி சிரிக்கிறார் மாமியார். பயந்தே போய்விட்டான் கோதண்டராமன்.. ஒட்டுகிறான் வீட்டுக்குள், கைகளை விலக்கிக்கொண்டு.. எல்லோரும் பின்னாலே ஓடுகிறார்கள்..

"வேண்டாம், என்னை விட்டுருங்க," கத்துகிறான்..

தீபாவளிக்காக பட்சணம், அலங்காரம் செய்துகொண்டிருந்த எல்லாரும் கீழேயிருந்து மாடிக்கு விரைகிறார்கள்.. அங்கே கோதண்டராமன் கட்டிலிலிருந்து கீழே விழுந்து பேந்த பேந்த முழித்துக்கொண்டிருந்தான்..

"என்னாச்சுடா? என்ன வேண்டாம்...?" பரிவோடு அக்கா.

"கனவு எதாச்சும் கண்டியாப்பா?" கரிசனத்துடன் அண்ணி..

"இதுக்குத்தான் இரவு கண்ட கண்ட புத்தகம் படிக்காதேன்னு சொன்னேன்பா.." அன்போடு அம்மா.

அங்கும் இங்கும் சுற்றும் முற்றும் பார்க்கிறான்.. 'ஒண்ணுமே மாறலையா?.. ஹைய்யா, நான் இன்னும் மரியாதையான ஆண்பிள்ளைதானா?'

"சரி சரி.. சீக்கிரம் குளிச்சுட்டு விமான நிலையம் சென்று அவன் வருங்கால பெண்ணையும் அவள் குடும்பத்தாரையும் வரவேற்று வரச் சொல்.." அத்தான்.

"அய்யோ அத்தான் வெளிநாட்டுப் பெண்ணா?.. வேண்டவே வேண்டாம் எனக்கு.. நம்மூர் கிராமத்துல நம் குடும்பத்துக்கு அடங்கின பெண்ணா பாருங்க போதும்"

"நீதானடா சொன்னே, ரொம்ப படிச்ச பெண்ணா, வெளிநாட்டில் வேலை பார்ப்பவளா இருக்கணும்னு.."

"அக்கா, அப்ப அப்படி சொன்னேன்.. இப்ப இப்படி சொல்றேன்... இல்லாட்டி எனக்கு கல்யாணமே வேண்டாம்"னு சொல்லிட்டு இன்னும் ஆண்மகனாய், கம்பீரத்தோடு அதட்டிவிட்ட சந்தோஷத்தோடு குளியலறைக்குள் புகுந்தான் கோதண்டராமன்.

நான் நேசித்த இலங்கை தமிழர்கள்.

நான் நேசித்த இலங்கை தமிழர்கள்.

பாங்காக்கில் அகதிகளாக வந்திறங்கும் அனேக தமிழர்கள் எங்கள் வீட்டருகில் தங்கிய போது அவர்களின் அருமையான , மரியாதையான் பேச்சுகள் என்னை மிக கவர்ந்தது...

யாராவது வீட்டில் ஒரு ஆள் மட்டும் வெளிநாட்டில் இருந்துகொண்டு இவர்களை எப்படியாவது வெளிநாட்டுக்கு அழைத்துக்கொள்ளும் பொருட்டு, பாஸ்போர்ட் . , விசா இல்லாமல் மறைமுக வாழ்க்கை வாழ்ந்து கொண்டும், போலீஸுக்கு அப்பப்ப அழுதுகொண்டும் வாழவேண்டிய சூழ்நிலை..2 வேளை மட்டுமே சாப்பாடு...அதையும் அருமையாக செய்து பகிர்ந்து சாப்பிடுவார்கள்...

இதில் ஒரு குடும்பம் ரொம்பவே எனக்கு பழக்கம்.. சின்னபெண் 18 வயது இருக்கும் , அம்மா, அண்ணா, தங்கையோடு...இரு பெண்க‌ளுக்கும் நான் க‌ட்டாய‌ப்ப‌டுத்தி க‌ணித‌மும், ஆங்கில‌மும் பாட‌ம் எடுத்தேன்..

அருகிலிருந்த இன்னொரு வாலிபன் ஒருமுறை இந்த வாலிப பெண்ணை போலீஸ் பிடித்து செல்ல அவன் பணம் குடுத்து காப்பாற்ற, நன்றியோடு அங்கு பிறந்தது காதல்... 14 வயதில் பிறந்த காதல் பின் 4 வருடம் கழித்து அவன் பெற்றோர் விருப்பமின்றி திருமணம் நடந்தது...பாங்காக்கில்..

அவனுக்கு தொழில் திருட்டு பாஸ்போர்ட் செய்து ஆட்களை வெளிநாட்டுக்கு அனுப்புவது.. பலநாட்கள் எனக்கு தெரியாது .. பின் தெரிந்ததும் அதிர்ச்சியடைந்தேன்..


ஆனால் நன்றாக யோசித்துப்பார்த்தால் அவனுக்கு வேறு வழியில்லை..அப்பா இல்லை.. 3 சகோதிரி , திருமண வயதில்.. ஒவ்வொன்றாய் கட்டி குடுத்தான் இந்த வருமானத்தில்..கடவுள் பக்தி அதிகம்..

பின் அன்னையை அழைத்து வந்தான் பாங்காக்குக்கு.. அவன் மனைவி என்னை ஆன்டி, என்பதுபோல் அவள் மாமி என்னைவிட 20 வயது மூத்தவரும் என்னை ஆன்டி என்றே அழைப்பார்.. ஏதாவது வருத்தம் என்றால் சிறு குழந்தை போல் என்னிடம் அழ ஆரம்பித்துவிடுவார்..அவர்களது வேதனை சொல்லி மாளாது..
அதேபோல் 10 வாலிப பசங்கள் அருகில் தங்கியிருந்தார்கள்.. நான் பேசுவதில்லை. ஆனால் என் அன்னை என் பேறுகாலத்துக்கு வந்த போது நட்பாகி விட்டார்... என் அன்னைக்காக தேநீர் போட்டு குடுப்பதும் பழக்கம் பேசுவதுமாக அன்னைக்கு பொழுது போயிற்று.. அவர்கள் வெளியில் செல்ல முடியாது வீட்டில்;ஏயே அடைஞ்சு கிடப்பதால் அன்னியார்தான் தோழி...அப்போது அவர்களின் ஒளிசித்திரம் என்ற கொடுமையான போர் வீடியோ கேசட்டுகள் பார்த்து கண்ணீர் வடித்துள்ளோம்...

ஒருமுறை தடுப்பூசி போட்டு குழ‌ந்தை தொட‌ர்ந்து அழுதுகொண்டே இருக்கிறான். அவர்க‌ள் அனைவ‌ரும் மாறி மாறி தூக்கி வைத்துக்கொண்டு, " அக்கா, நீங்க‌ ஓய்வெடுங்கோ, பிள்ளையை நாங்க‌ள் பாத்துக்கொள்வோம்..." என‌ சொல்லிவிட்டு என‌க்கு சூடாக‌ தேநீர் போட்டு எடுத்து வந்த‌‌தும் ரொட்டிக்கு ச‌ம்ப‌ல் செய்து த‌ந்த‌தும் இன்றும் ம‌ற‌க்க‌ முடியாத‌வை...


வெளியில் செல்வ‌தானால் என் கைகுழந்தையை தூக்கி செல்வார்க‌ள், போலீஸ் பிடிக்காதென்ப‌தால்... மாற்றி மாற்றி என் குழ‌ந்தை வெளியில் செல்வான் அவ‌ர்க‌ளோடு.. அவ‌ர்க‌ளுக்கும் அவ‌ன்தான் பொழுதுபோக்கு..நான் குழ‌ந்தையை சாப்பாடு குடுக்கும்போது திட்டினால்கூட‌ பொறுக்க‌மாட்டார்க‌ள் அன்பு த‌ம்பிக‌ள். க‌ண்ணீர் வ‌ந்துவிடும், பாச‌க்கார‌ர்க‌ள்..அத‌ற்காக‌வே அவ‌ர்க‌ள்முன் திட்ட‌ முடியாது...என்ன‌ செய்தாலும் என‌க்கு ஒரு ப‌ங்குண்டு அவர்க‌ள் உண‌வில்..ம‌திய‌ம் ஆன‌தும் எங்க‌ள் வீட்டு தொலைகாட்சியில் ப‌ட‌ம் பார்ப்பார்க‌ள்.. கிட்ட‌த்த‌ட்ட‌ ஒரு சினிமா தியேட்ட‌ரில் ப‌ட‌ம் பார்க்கும் ச‌ந்தோஷ‌ம் இருக்கும்..ஆனால் என் க‌ண‌வ‌ர் வ‌ந்த‌தும் எல்லாம் க‌ப்சிப்...

அடுத்து இன்னொரு குடும்ப‌ம்.. அடில் ஒரு பெண்குழ‌ந்தை, 3 ப‌ச‌ங்க‌ளும்...அந்த‌ பெண் குழ‌ந்தை என் ம‌க‌னை குளிப்பாட்டுவ‌திலிருந்து அவ‌னுட‌ன் விளையாடுவ‌து எல்லாமே அவ்ர்க‌ள் வீட்டில்தான்.. சில‌ச‌ம‌ய‌ம் ச‌ப்பாடு கொடுக்க‌ குழ‌ந்தையை அழைக்க‌ சென்றால்,

" நாங்க‌ளே தீட்டிட்டோம். அவ‌ர் ந‌ல்லா ச‌ப்பு கொட்டி சாப்பிட்டார்.. எங்க‌ சாப்பாடு அவ‌ருக்கு ரொம்ப‌ இஷ்ட‌ம்..." என்பார்க‌ள்..


இன்னொரு குடும்ப‌ம் 2 பெண் பிள்ளையோடு அன்னை.. அண்ணாவும் அப்பாவும் ல‌ண்ட‌னில்..6 மாத‌ கால‌ம் இருந்தார்க‌ள்..என் பிள்ளையை அப்போது காப்ப‌க‌த்தில் விட்டுவிட்டு வேலைக்கு செல்வேன் காலை 6 ம‌ணிக்கு..ஆனால் இவ‌ர்க‌ள் வ‌ந்த‌பின், காலையில் வ‌ந்து குழ‌ந்தையை எடுத்து சென்றுவிடுவார்க‌ள்.. அவ‌ன் எழும்பிய‌தும் சாவ‌காச‌மாக‌, குளிப்பாட்டி, சாப்பாடு குட்த்து சும்மா ஒரு ம‌ணிநேர‌ம் ம‌ட்டும் அம‌ர்த்திவிட்டு, பின் சாய‌ங்கால‌ம் வ‌ரை த‌ம்முட‌னே வைத்து தூங்க‌ப்ப‌ண்ணி..அய்யோ ரொம்ப‌வே ஆசையாய் செய்தார்க‌ள்...


இதில் ப‌ல‌ர் வெளிநாடு எளிதாக‌ சென்றார்க‌ள், சில‌ர் மீண்டும் போலீஸில் மாட்டி டிடென்ஷ‌ன் சென்ட‌ரில்...நிலையில்லாத‌ ஒரு வாழ்க்கை.. சொல்ல‌விய‌லாத‌ துய‌ர‌ங்க‌ள், பிரிவுக‌ள், ப‌ண‌க்க‌ஷ்ட‌ங்க‌ள்... வாழ்க்கையே வெறுத்துவிடும் இவ‌ர்க‌ள் க‌தையை கேட்டால்...ஆனாலும் எப்போதும் க‌ட‌வுள் ந‌ம்பிக்கையோடும் , ல‌ட்சிய‌த்தோடும் , வாழ்க்கையில் போராடி வெற்றி பெற‌ க‌ன‌வுக‌ளோடுமான‌ ப‌ய‌ண‌ங்க‌ள் இவ‌ர்க‌ளுடைய‌து...


திடீரென்று தொலைபேசி அழைப்பு வ‌ரும்..

" அக்கா நியாப‌க‌மிருக்குதா நான் ர‌வி பேசுற‌ன்...ஆஸ்திரேலியாவில் இருக்க‌ன்.. சுக‌மெப்ப‌டி..பொடிய‌ன் என்ன‌ செய்றார்..அங்கிள கேட்டதா சொல்லுங்கோ.."


இப்ப‌டி டென்மார்க்கிலிருந்து, க‌ன‌டாவிலிருந்து , லண்டனிலிருந்து என அழைப்புக‌ள் எப்போவாவது வ‌ரும்...யாரார் எங்கெங்கு இருக்கிறார்க‌ளோ... ஆன‌ல் அவ‌ர்க‌ள் விட்டுச்சென்ற‌ சோக‌மும் அன்பும், என்றும் நெஞ்சிலிருப்ப‌தோட‌ன்றி, இல‌ங்கை த‌மிழ‌ர் மீதான‌ ம‌ரியாதையை அதிக‌ரித்துச்சென்றுவிட்டார்க‌ள்..

நேற்று காணாமால் போன கைப்பை..

நேற்று காணாமால் போன கைப்பை..

வெள்ளிக்கிழமையே வேலை முடிந்து வீடு வந்ததும் அனைவரும் சாப்பிட்டு , வார பொருள்கள் வாங்க கடைகளுக்கு

செல்லலாம் என சென்றோம்.. 8.00 மணிக்கு... எல்லா சாமான்களும் வாங்கிவிட்டு, கொஞ்சம் இலவசமாக நோட்டமும் விட்டு

ஒருவழியா பணம் கட்ட கணவரும் பெரியவனையும் பொறுப்போடு விட்டுவிட்டு, சின்னவன் சேட்டையை கவனிக்க நான்

பொறுப்பெடுத்துக்கொள்ள, என் கைப்பை, சாமான்கள் வண்டியில்...எப்போதும் என் கையில் இருக்கும் அல்லது வண்டியில் என்னுடனே..

இன்று பொறுப்பை அவர்களிடம் கொடுத்துவிட்டு நான் அருகிலேயே நின்றிருந்தேன்..


பின்பு முடிந்ததும் சின்னவரை நான் தூக்கிக்கொள்ள , வண்டியில் என் கைப்பை..

பார்க்கிங் வந்ததும் சின்னவரை காரில் உள்ளே தள்ளி பெல்ட் போட்டு கட்டி வைத்துவிட, பெரியவனும் அப்பாவும் சாமான் எடுத்து வைக்க

நான் பின் காரை ஸ்டார்ட் செய்ய, கிளம்பிவிட்டோம்... நல்ல இருட்டு, மழை வேறு.. அந்த கவனம் தான் மனதில் இருந்தது...

இதுல தமிழ் பாட்டு போடு, ஆங்கிலம்தான் என அப்பாவுக்கும் , பிள்ளைக்கும் விவாதம் வேறு,..

சிறுவனோ பெல்டை அவுத்துவிட்டு என் தலைமுடியை பிடித்துக்கொள்ள நான் கிட்டத்தட்ட 40 அடி உயரத்திலிருந்து சரேலென

காரை கீழே சருக்கில் இறக்க, பிள்ளைகளுக்கு குதூகலம்... கணவரோ கண்டிக்கிறார்..

எப்படியோ பாதி வழியில் வந்ததும் எனக்கான தைராய்ட் மாத்திரை வாங்கினோமே பேக்கில் வைத்தேனா என பார்க்க பையை தேடினால்..

அய்யோ அம்மா, அப்பா, என ஆளாளுக்கு உதறல்..

" என்னது என் கைப்பையை யாரும் எடுத்து வைக்கலையா?.."

கேட்டுக்கொண்டே சடாரென காரை பக்கவாட்டில் ஒடித்து படாரென நிப்பாட்டினேன்..

பையன் பின்னால் திறந்து பார்த்து ஊர்ஜிதம் செய்தான் பை இல்லையென.. சந்தோஷம்...
" சரி நீ டென்ஷனாகாதே .. காரை பத்திராமா ஓட்டு.."

இரு காரை நிப்பாட்டு நான் எதுக்கு பார்க்கிறேன் என் மீண்டும் பார்த்து இல்லை என முடிவு செய்தோம்.

இப்ப திரும்பணும்... எங்க , எப்படி காரை ஒடிப்பது... சாரை சாரை யாய் கார்கள்..

மழை வேறு கொட்டுது...பெரியவன் கண்ணிலிருந்தும்..

" நீ ஏம்மா அழுற?.. போக வேண்டியது போகும்.. என்னுடைய தப்பும்தான்.. நல்ல பாடம்.. விடு.."

கொஞ்சம் வேகமாக போனால் ,

" 60 லேயே போ... 100ல போகாத.."

" 80 தான் அதுக்கு குறைந்து போனால் பின்னால் வருபவர் திட்டிருவார்..."

எப்படியோ ஒருவழியா திரும்பி அந்த பார்க்கிங் செங்குத்து மலைமேல் ஏறி ( நேர்த்திக்கடனோ என்னவோ)

உள்ளே சென்றால் ஒரு வேலையாள் சாமான் வண்டிகளை ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்தார்...

வேகமாக மகன் அவரிடம் சென்று விசாரிப்பதுக்குள்ளேயே அவர் பச்சைக்கொடி காண்பித்தார்.. மகன் முகத்தில் சிரிப்பு..

அவர் கூட சென்று அந்த கைப்பையை வாங்கி வந்தான்..

அவ்ர்கள் பையை திறந்து சாமான் சரிபார்க்கச்சொன்னார்கள்.. எனக்கு அவர்கள் முன்னால் பார்ப்பது அவர்களை

சந்தேகிப்பது போலிருக்கலாம்.. இது மீண்டும் கிடைத்த அதிர்ஷ்டம்தானே அதனால் பரவாயில்லை, மிக்க நன்றி என சொன்னேன்.

அதற்குள் மகனுக்கு அவசரம்.. அம்மா பணம் குடுங்க என .. நானே குடுப்பேன் கண்ணே, என சொல்லி பணம் எடுத்து மகனிடம் கொடுத்து

குடுத்ததும் , இருவரும் விழுந்து விழுந்து வணக்கங்களை கூறி விடைபெற்றுக்கொண்டார்கள்..

கைப்பையில் உள்ள பர்ஸில்தான் என்னுடைய, வரிச்சீட்டு, எடிஎம் கார்டுகள். , லைசென்ஸ், மருத்துவ அட்டைகள் வீட்டின் அட்டைகள்

இப்படி பலவும்...

தொலைந்தால் போலிஸ், எப் ஐ ஆர், அங்கிங்கு என செம அலைச்சல்.அனுபவித்துள்ளேன்..

( ஏற்கனவே 1 முறை நிறைமாத கர்ப்பினியாக இருக்கும்போது என் கண்முன்னாலே பர்ஸை சுட்டுட்டார்...:-( )

கைப்பை மீண்டும் கிடைத்தது அதிர்ஷ்டமே..

கடவுளுக்கும் அந்த நல்ல மனிதருக்கும் என் நன்றி.

டயல் செய்த எண்ணை சரிபார்க்கவும்.:-)) குட்டிக்கதை...

பாஸ்கர்: ம். அப்ப எப்ப வார விமானத்துல??கூட யார் வாரா?

அஞ்சலி: ம். கெளம்பியாச்சு.. நாளை காலை அங்கே இருப்பேன்.. எப்படா உன்னை பார்க்கப்போறோம்னு இருக்குடா..ம். பேபி வருவாங்க..அங்க எப்படி?

பாஸ்கர்.. : அதேதான் இங்கயும்... போட்டோ கூட பாக்கல... ரொம்ப ஆர்வமாயிருக்கு,..ம். கூட சின்னா வரலாம்.

அஞ்சு: ம்.. ஹிஹி.

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍********************************************************************************************************************************
"தாத்தா என்ன இது காலையிலேயே விமான நிலையம் போகணும்னு சொல்லிட்டு தண்டால் எடுத்துட்டு இருக்கீங்க... "


"படவா மெதுவா பேசு... தாத்தான்னு கூப்பிடாதன்னு எத்னி தடவை சொல்றது... கால் மி சின்னா..பாஸ்கி..ஐ வில் ஜாயின் யூ இன் 5 மின்."

" ச‌ரி அப்ப‌ நான் ஸ்லோக‌த்தை சொல்லிட்டு வர‌ட்டா?.."

" வ‌ராதே .. அப்ப‌டியே போய் உன் வேஷ்டி குர்தாவை க‌ழ‌ட்டிட்டு ஜீன்ஸ் போட்டுட்டு வா.."

" தாத்தா , சாரி, சின்னா. என்ன‌ இது... இந்த‌ சென்னை வெயிலுக்கு இதுதான் இத‌மா இருக்கு..."


" ந‌ல்லாத்தேன் வ‌ள‌ர்த்திருக்கா உன் அம்மா, அதான் என் ம‌க‌ள்... அதுவும் டெல்லியிலிருந்துகொண்டு.."

" ம். ந‌ல்ல‌வேளை த‌ப்பிச்சேன்... உங்க‌கிட்ட‌ வ‌ள‌ராம‌ல்..:-))) "

"..ம்.. என்ன‌ முன‌குற‌?... ச‌த்த‌மாத்தான் சொல்ற‌து... அதான் ஏழு க‌ழுத‌ வ‌ய‌சாகியும் க‌ல்யாண‌ம் வேண்டாங்கிற‌..."

" அய்யோ தாத்தா க‌ல்யாண‌த்த‌ ம‌ட்டும் ப‌த்தி பேசாதீங்கோ...ஆமா அதென்ன‌ இப்ப‌டி கொட்டுறேள் த‌ண்ணியை?"

" அட‌ அது சென்டுடா .. நீ இன்னும் ஜ‌வ்வாது போட்டுட்டு இரு... "

" தாத்தா இதென்ன‌ ஜீன்ஸ் இப்ப‌டி கிளிச‌லா?.. அய்யோ நான் வ‌ர‌மாட்டேன்பா உங்க‌ளோட‌.."


" டேய் க‌ரும‌ம் பிடிச்ச‌வ‌னே...லைஃப்ப‌ எஞ்சாய் ப‌ண்ண‌ க‌த்துக்கோடா... க‌ண்ணு வெக்காத‌..."

" அச‌த்துரீங்க‌ தாத்தா.. ஆனா அந்த‌ க‌ருப்பு க‌ண்ணாடிதான்.."

" டேய் கால் மீ சின்னா...டேய் அந்த செருப்பை போட்டுட்டு வந்து என் மானத்தை வாங்காத..."

" ஒகே..ஒகே.. சின்னா, இப்ப‌ உங்க‌ள‌பாத்தா என் த‌ம்பியாட்ட‌ம் தான் இருக்கு... ரிபோக் ஷோ என்ன‌, டிஷ‌ர்ட் என்ன‌, ...ஆனா பாத்து க‌ண்ணு ம‌ண்ணு தெரியாம‌ யார் மேலயாவ‌து மோதிராதீங்க‌...என‌க்கு அவ‌மான‌ம்..."


‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍***************************************************************************************************************************************

தாத்தா சீக்கிர‌ம் உன் தோழ‌ர்க‌ளை அழைத்துக்கொண்டு வ‌ந்து சேருங்க‌.. நான் ம‌ஹாப‌லிபுர‌ம் போக‌ணும் , ஆராய்ச்சிக்கு..."

" அடேய் பாஸ்கி, தோழர் இல்லைடா, தோழி...ஹி ஹி ஹி.."

" அய்யே.. இது வேறயா?.."

" நீ இந்த அட்டையை வைத்துக்கொண்டு இங்கே நில்... நான் அந்தப்பக்கமா போய் பார்க்கிறேன்.."

அட்டையில் அஞ்சுவின் பேரைப்பார்த்த‌ப‌டி புன்சிரிப்புட‌ன் வ‌ருகிறார் பாட்டி ம‌ட்டும் த‌னியே.


" ஹ‌லோ என் பேர் பேபி.. நீங்க‌தான் பாஸ்க‌ரா?.."

" ஹ‌.. ஆமா ஆமா.. இருங்க‌ சின்னா வ‌ந்துடுவார் இப்ப‌..."

" வாங்க‌ த‌ம்பி , நாம் கொஞ்ச‌ம் பேசுவோம் ஓர‌மாய் போய்.."

யாருமில்லை என்ப‌தை உறுதி செய்துகொண்டு, சட்டை காலரை பிடித்து,


" ஏண்டா ர‌ஸ்க‌ல், என் பேத்திகூட‌வா சேட்டிங் ப‌ண்ற‌ .. நான் யார் தெரியுமா?.. அந்த‌ கால கராத்தே வீராங்க‌னையாக்கும்..."


க‌ராத்தேயை இல‌வ‌ச‌மா போட்டு காட்டுறாங்க‌ பாட்டிய‌ம்மா.அம்மா, அய்யோ னு அல‌ற‌ தான் முடியுது... பேச‌ விட்டாதானே???

அத‌ற்குள் தாத்தாவின் கைபிடித்து சிரித்து பேசிய‌படி ரொம்ப‌ பாச‌மாக‌ ம‌ஞ்சு வ‌ந்து பார்த்து, அதிர்கிறார்க‌ள் இருவ‌ரும்...


" அய்யோ பாட்டி என்ன‌ இது இங்க‌யுமா?" மெல்ல‌ கைபிடித்து தூக்கி ம‌ன்னிப்பு கேட்கிறாள்..
"அவனை ஏன் அடிக்கீங்க?.."கூலிங் கிளாஸை கூலா கழற்றிக்கொண்டே..சின்னா.

" ம். என் பேத்திகிட்ட சாட்டிங் பண்றான், திருமணம் பண்ணிப்பானாம்... சே சே.. "

" அய்யோ பாஸ்க‌ருக்கு எதுவும் தெரியாதுங்க‌.. நான்தான் அவ‌ன் பேரில் சேட் ப‌ண்ணிய‌து..அவ‌ன் திரும‌ண‌மே வேண்டாமென்றும் ப‌த்தாம்ப‌ச‌லித்த‌ன‌மாய் இருப்ப‌தாலும்...நான்தான் ல‌ண்ட‌ன் பெண் பார்த்தேன்..." கொஞ்சம் தள்ளியே நின்றுகொண்டார்.கவனமாய்.


" ஆமா.. இத‌ப்ப‌ற்றி ம‌ஞ்சு கூட‌ ஒண்ணும் சொல்ல‌லையே...?அவதான் என்கூட இஷ்டமா பேசினா??" சின்னா


" ஆமா .. அவ‌ளுக்கும் ஒண்ணும் தெரியாது .. அவ‌ள்பேரில் சேட் ப‌ண்ணிய‌து நான்தான்... அவ‌ளும் த‌மிழ்நாடு , கலாச்சாரம் , இந்தியா ,சுதந்திர தினம் னு திரியுர‌வ‌...க‌ல்யாண‌ம் வேண்டாம்னு.."

" அட‌.." என்று பாஸ்க‌ரும், ம‌ஞ்சுவும் ஒருவ‌ரை ஒருவ‌ர் பார்த்துக்கொள்ள‌, பார்வையை மீட்டெடுக்க முடியாமல்.

மாட்டிக்கொண்ட‌ பாட்டிக்கும் தாத்தாவுக்கும் வெட்க‌ம் க‌ல‌ந்த‌ சிரிப்பு...



" ச‌ரி இனியாவ‌து நீங்க‌ இர‌ண்டு பேரும் உங்க‌ ஒரிஜின‌ல் பேரில் சேட் ப‌ண்ணுங்க‌" ம‌ஞ்சு.


" அய்யோ அப்ப‌ நீங்க‌?.. " கோர‌ஸாக‌ வ‌ருத்த‌த்துட‌ன் பேபியும், சின்னாவும்...

" ம். இனி சேட்டிங் தேவையில்லைனு நினைக்கிறேன்...( மஞ்சுவை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே) தேங்ஸ்டா தாத்தா , சாரி சின்னா..." பாஸ்கி.




**********************************************************************************************************************************************