Saturday, November 14, 2009

சந்தீப்பின் சந்திப்பு




சந்தீப்பின் சந்திப்பு

வாரக்கடைசி இரு நாட்கள் உங்களோடு செலவிட வருவான் சந்தீப் என ஒரு மாதம்
முன்பே காகிதம் அனுப்பிவிட்டார்கள் பள்ளியில்.

அவனோடு சனி, ஞாயிறு இரு தினங்கள் செலவழித்து அதை பற்றி புகைப்படத்தோடு
சில வரிகளும் எழுதி ஆல்பம் ஒன்றில் ஒட்டணும். பின் பள்ளியில் அவனோடு
கழித்த அந்த இரு நாட்களைப்பற்றி சுவாரஸ்யமாக சொல்லணுமாம்.


காத்திருந்த சந்தீப் நேற்று வந்துவிட்டான்.

வீட்டுக்குள் நுழையும்போதே, , " அம்மா உங்களுக்கு ஒரு அதிசயம்
காத்திருக்கின்றது கண்டுபிடியுங்கள் பார்ப்போம் " என மாலைப்பொழுதை
இனிமையான புதிரோடு வரவேற்ற குழந்தை.

நானும் ஐன்ஸ்டீன் அளவு யோசித்து ஒண்ணும் முடியாமல் உதட்டைப்பிதுக்கிய
பொழுது, சட்டென்று முதுகுக்கு பின்னாலிருந்து வந்தான் சந்தீப்..

வாவ், என மிகப்பெரிய ஆச்சர்யத்தோடு சந்தீப்பை தழுவி நலம் விசாரித்து
முடிப்பதற்குள் , சந்தீப்புடனான பிரயாணங்களுக்கு திட்டமும் கூடவே
சொல்லப்பட ஆச்சர்ய விழிகள் இப்போது பயத்தில்..

சந்தீப்பை உடனே நீச்சல் குளத்துக்கு அழைத்து சென்றனர்.

முடிந்து வந்ததுமே, வாராந்திர சாமான் வாங்க செல்லும் மாலுக்கு அழைத்து சென்றோம்.

சந்தீப்பை எங்கு உட்கார சொல்வது முன் சீட்டிலா பின் சீட்டிலா என்ற
கருத்தாய்வுகள் தொடர்ந்து முன் சீட்டிலேயே அமர்ந்தான்.

சந்தீப் வந்ததால் இன்று மட்டும் ஐஸ்கிர்ரிம் வாங்கிக்கொள்கிறேனே என
கெஞ்சும்போது என்ன சொல்ல ?. பெரியவன் எனக்கும் வாங்கிக்கவா என கேட்க,
க்ர்ர்ர்ர்ர்ர், வேண்டாம் நீ வாங்கினால் எனக்கும் ஆசை வந்திடும் , என
தடுப்பதை பார்த்து சந்தீப் யோசித்திருக்கலாம்.

வீடு வந்ததும் , கொஞ்சம் விளையாட்டு , பின் ,இப்ப சந்தீப்பை எங்கு தூங்க
சொல்வது?... யார்கூட?..

தன்கூடவே படுத்துக்கொள்ளணும் என குழந்தை சொல்ல சந்தீப்புக்காக இடம்
ஒதுக்கப்பட்டது..

காலை எழுந்ததுமே ஒவ்வொருவராக வந்து சந்தீப்புக்கு காலை வணக்கம்
சொல்லவும், சந்தீப்புக்கு வெட்கம் போல.

பெரியவர் , சந்தீப்ப்பிடம் வழியனுப்பிவிட்டு பள்ளிக்கு செல்ல நானும்
சின்னவரும் சந்தீப்புடன் மார்கெட் சென்று வந்தோம்.. சீட் பெல்ட்
போட்டதிலிருந்து திரும்ப வீடு வந்து சேரும் வரை சந்தீப்பின் கேள்விகளாய்
குழந்தை கேட்க, ஒரே கதாகலாட்சேபம் தான்.

சில பதில்களில் திருப்தியடையாதபோது நான் சிறிது எரிச்சல்பட்டுவிட,
சந்தீப் முன் எரிச்சல்பட்டதுக்கு ரொம்பவே அவமானப்பட்டார் குழந்தை.

பின் இருவரிடமும் மன்னிப்பு கேட்கவேண்டியதாயிற்று.

வந்து உணவருந்திவிட்டு, சிறிது நேரம் ஆங்கில வார்த்தை கொண்ட சீட்டுகள்
விளையாடிவிட்டு, தூங்கிவிட்டனர் இருவருமே சோபாவில்.

அப்பாடா ஒருவழியாய் போன மாத ஆ.வி படிக்க நேரம் கிடைத்ததென்று நான் படிக்க
உட்கார, தூக்கத்தினூடையே, " அம்மா, சாயங்காலம் தயாராக இருங்கள்,
சந்தீப்பை பூங்கா அழைத்து சென்று ஊஞ்சலில் விரைவா ஆட்டிவிடணும் " என
சொல்லிவிட்டு, மீண்டும் தூங்க....ஆச்சர்யத்தில் நான்..

கவனமாக சந்தீப்போடு எடுத்த படங்களை பெரியவர் வந்து பார்த்து கமெண்ட் அடிக்க ,

இதோ கிளம்பிக்கொண்டிருக்கிறேன் பூங்காவுக்கு சந்தீப்போடு..

சந்தீப் யாரென புரிந்தீர்கள்தானே..?


சிறுவர்தின பதிவு..

Wednesday, November 11, 2009

காவ் சாம் லாய் யாட் - 300 சிகர மலைகள்...












தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலிருந்து சுமார் 400 கிமீ தொலைவில் உள்ளது காவ் சாம் லாய் யோட் ( 300 சிகரம் கொண்ட மலை ) .கடற்கரையை ஒட்டி அமைந்திருப்பதே இந்த இயற்கை பூங்காவுக்கான விசேச அழகும்.

மலைகளில்
காணப்படும் சுண்ணாம்புகல் பாறைகளால் கடற்கரையே வெண்மையாக காட்சியளிக்குது.
குகைகளுக்குள்ளே இந்த சுண்ணாம்புக்கல் வடிந்து அழகிய சிற்பமாக வடிவெடுத்து பார்ப்பவரை கொள்ளைகொள்ளச்செய்கிறது.

இங்கேயே சதுப்பு நிலமும், அலையாத்திக்காடுகளும் இருந்தாலும் முக்கியமானது தம் ப்ரயா நக்கோன் ( Tham Phraya Nahon) என்கிற மலைக்குகைதான்.. சுமார் 1.5 கிமீ செங்குத்தான மலை மீது ஏறி இறங்கி மலையின் அடுத்த பக்கம் செல்லலாம் அல்லது நடக்க , ஏற விரும்பாதவர்கள் , படகில் அடுத்த கறைக்கு செல்லலாம்..

மலைமீது
ஏற்பவர்கள் மலை உச்சியில் கடல் சூழ்ந்த இடங்களையும் , குட்டி குட்டியாய் தெரியும் படகுகளையும் கண்டு
வியக்கலாம்..
ஆனாலும்
கொஞ்சம் ஆபத்தானது மலையேற்றம்..



கரணம்
தப்பினால் மரணம் என்பதுபோல , கொஞ்சம் பயத்தில் ஆடினாலும் விழ வாய்ப்புள்ளது.


இந்த
சதுப்பு நிலக்காடுகளை தேடி பல பறவைகள் குடிபெயர்ந்து சரணாலயம் போல் ஆனது..கிட்டத்தட்ட 100 சதுர கிமீ.அளவு கொண்டது இந்த பூங்கா..
மலையின் அந்தப்பக்கம் அடைந்ததும் மீண்டும் செங்குத்தான பயணம் சுமார் 500 மீட்டர்..

முதல்
மலையிலாவது சிமெண்டால் ஆன பாதையும் கம்பியும் போட்டு ஏற நடக்க வசதியாக இருக்கும்.
ஆனால் இந்தப்பாதை இய்றகையாகவே கற்களால் அமைக்கப்பட்டுள்ளது..

முதல்
சிலபடிகளில் கால் வைத்ததுமே மூலிகைகளின் வாசனை நாசியை துளைக்கின்றது..
கிட்டத்தட்ட நார்த்தாங்காய் இலையின் மணம் . அல்லது லெமன் கிராஸ் எனப்படும் செடியின் மணம்.. , வெகு சுகமாக இருக்குது..

தினம் பெய்த மழையில் படிகளில் உள்ள மண் ஈரம் பிடித்து பிசுபிசுப்பாக வழுக்காகவும் இருந்தது.
நல்ல காலணி அணிந்திருந்தால் நடப்பதும் ஏறுவதும் எளிது. அல்லது காலை பதம் பார்க்கும் கற்கள்..

கிட்டத்தட்ட டார்சான் வாழ்ந்த காடுகள் போல செடிகளும் கொடிகளும் சுர்றிலும் சூழ அதை விலக்கி நடக்கணும்.. சின சின்ன ஒளிக்கீற்றுகள் அம்மர இடுக்கிலிருந்து எட்டிப்பார்ப்பதும் ,, பறவை, பூச்சிகளின் சத்தங்களும் , நலம் விசாரிப்பது போன்றதொரு அழகு..

பாதி தூரம் ஏறியதுமே தாகம் எடுக்கிறது.. மேலே சென்றவர் கீழே இறங்கிவர நம் ஆயாசத்தை பார்த்து அவர்களாகவே தண்ணீர் வேணுமா என கேட்க , மறுக்கமுடியவில்லைதான். இறுதியாக உட்கார்ந்து உட்கார்ந்து ஒருவழியாக குகைகளை சென்றடைந்ததும் , பிரமிப்பூட்டும் அந்த குகையும் அதன் உச்சியில் இருந்து விழும் ஒளியும், நடந்து வந்த அலுப்பை மறக்க செய்கிறது. காவலர் ஒருவர் தண்ணீர் தருகிறார் அனைவருக்கும் சிறு தொகை பராமரிப்புக்காய் பெற்றுக்கொண்டு...

வெளிநாட்டினர் கைக்குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு சிறுஅவர் சிறுமிகளை நடத்திக்கொண்டு வெகு லாவகமாய், ஆர்வமாய் செல்வதை பார்த்தாலே நமக்கும் ஆர்வம் தொற்றிக்கொள்ளுது. குகையின் நடுவில் புத்தர் கோவில் உள்ளது.. அதனை சுற்றி வித்யாசமான பெரிய பெரிய பாறைகளும்..


தாய்லாந்து வந்தால் பார்க்க வேண்டிய குகைக்கோவில்.