Thursday, September 18, 2008

*சில்லென்ற கண்ணாமூச்சி காதல் -*

சில்லென்ற கண்ணாமூச்சி காதல் - பாகம் 4..

*போகாதே.....போகாதே....................*

வீட்டுக்கு சென்று டோனி குடுத்த பையை பிரித்துப்பார்த்தவளுக்கு அதிர்ச்சி....அதில் அவள் சின்ன வயதில் டோனியுடன் சண்டைபோட்டு விளையாடிய
கோலிக்குண்டு, சின்னச்சின்ன புகைப்படங்கள், கிறுஸ்மஸ் கார்டுகள், கதைப்புத்தகங்கள். அத்தோடுகூட அவளுக்கு எளிதாக புரியும்படிக்கு சில கணித, ஆங்கில
விளக்கங்களும், கையேடு, மற்றும் குறிப்புகளும்...


பிரபுவுக்கு கிரிக்கெட் மற்றும் நிறைய விளையாட்டுப்பொருளும்..எத்தனை பொறுப்போடு கூடிய அன்பு...

ஒருகணம் ஜெனி " டோனி நீ என் அண்ணாவாக இருந்திருக்கக்கூடாதா?.."

என்று எண்ணுகிறாள்... கடந்த 6 மாதமாக டோனியுடன் பேசாமல் , பழகாமல், வீணடித்ததை நினைத்து வருந்தினாள்...

இனி டோனி படிக்க சென்றால், பெரிய
மருத்தவரானபின் தான் அதிகமாய் ஊரில் தங்குவான்..

, எப்படி டோனி இல்லாமல்...? நினைக்கவே அழுகையாய் வருது ஜெனிக்கு.. சரி நேரமில்லை..

இத்தனைக்கும் டோனிக்கு முதலில் நன்றி செலுத்தியாகணும்.. அவன் சந்தோஷமாக புறப்பட்டு போகணும் படிப்பதற்கு... எப்படி பேசுவது, எங்கு பார்ப்பது?..

மாடியில் வெளியில் செடிக்கு தண்ணீர் ஊற்றுவதுபோல் சென்று பார்க்கலாம் என்று தண்ணீருடன் வெளியில் வருகிறாள்..

டோனி ஜெனி வந்ததை தன் ஜன்னலின் வழியே பார்த்துக்கொண்டுதானிருக்கிறான்... இருந்தாலும், நாமாகவே வலிய சென்று தொந்தரவு தர வேண்டாம்..

விருப்பமிருந்தால் அவளே கூப்பிட வேண்டியதுதானே என்று தன் நாற்காலியில் அமர்ந்து சாமான்களை அடுக்கிக்கொண்டிருக்கிறான்.., ஜன்னலை பார்த்தபடி..

ஜெனி அத்தனை செடிக்கும் தண்ணீர் ஊற்றிமுடிந்ததும், ஏமாற்றத்துடன், திரும்பி செல்லுமுன் ஒருமுறை டோனியின் அறை நோக்கி கண்கூச
பார்த்துவிட்டு உள்ளே செல்ல எத்தனிக்கிறாள்..அதை கவனித்த டோனி தன்னைத்தான் அவள் பார்க்க வந்தாள் என்பதை உறுதி செய்ததும், சட்டென்று
வெளியில் வந்து

" ஜெனீ...ஜெனீ"' என்றழைக்கவும்,

ஜெனி உடனே திரும்பி பார்த்து சந்தோஷமாக டோனி நோக்கி வருகிறாள்...

" ரொம்ப நன்றி டோனி.. எவ்வளவு பொருள்கள்.. " என்று அவள் கூறி முடிக்கவும்,

கீழேயிருந்து அம்மாவின் குரல்..

" ஜெனி யார் வந்திருக்கா பார்.. சீக்கிரம் வா இங்கு...."

" இதோ வந்துட்டேன் மா..."

" சரி நீ மேலேயே இரு.. நாங்கள் வருகிறோம்.."

" ஜெனி , நீ போய்ட்டு வா.. அப்புரம் பேசலாம்...."

" சாரி டோனி.... "

திரும்பவும், அத்தையும் , மாமாவும், கூட ஜோ அத்தானும்...ஊரிலிருந்து..

" மருமகளே எப்டிமா இருக்க..?"

" நல்லாயிருக்கேன் அத்தை..." என்று கைகூப்பி ஆசீர்வாதம் பெறுகிறாள்..மாமா அத்தை இருவரிடமும்..

" ஜெனி, ஜோ தம்பிக்கு இங்கு கல்லூரியில் இடம் கிடச்சுருக்கு , சேர்க்க வந்திருக்காங்க... இனி ஜோ இங்கதான் படிக்கப்போறான்.."

ஜோ அத்தான் ஜெனியிடம் பேசவே மாட்டான், அவளிடம் அவனுக்கு கூச்சம்..

சும்மா இருக்காமல், பாட்டி, ஜெனி பிறந்ததிலிருந்து,
அவள் ஜோவுக்குதான் என்றே சொல்லி சொல்லி இவளைப்பார்த்தாலே ஓடி ஒளிந்துகொள்ளுவான்...

மேலும் இவள் பட்டணத்தில் படித்து
ஆங்கிலத்தில் பேசுவதும் அவன் கூச்சத்துக்கு ஒரு காரணம்..ஆனால்
ஊருக்கு வந்தால் அவன்தான் பிரபுவையும் ஜெனியையும் எல்லா இடத்துக்கும் .
அழைத்துச்செல்லுவான் இதுவரையிலும்....

எல்லோரும் உணவருந்திவிட்டு கல்லூரி பார்க்க கிளம்பிவிட்டனர்... ஜெனிக்கு உள்ளூர மகிழ்ச்சிதான்.. சரி டோனிக்குப்பதிலாக, ஜோ இனி நமக்கு
நல்ல அண்ணாபோல் இருப்பான் என்று நினைத்தாள்..

ஜெனியின் அம்மாவுக்கும் ஜோவை ரொம்பப்பிடிக்கும், தன் அண்ணன் மகனென்றும், ரொம்ப நல்ல
மரியாதையான பையன் என்றும்.. தன் வீட்டிலிருந்தே கல்லூரிக்கு அனுப்பலாம் என்று நினைத்தார்... ஆனால் ஜெனியின் அப்பாவுக்கு அதில்
விருப்பமில்லை...மிக கவனமாக,
" ஜோ, அப்ப ஹாஸ்டல சேர்ந்தாலும் மாமா வீட்டை மறக்காமல், மாதம் ஒருமுறையாவது வந்து எட்டிப்பார்த்துக்கோ.. ஏதாவது உதவின்னா
தயங்காம போன் பண்ணு எனக்கு.. என் நம்பர் இருக்கில்ல...?''

" சரி மாமா... "

ஜெனிக்கும் அவள் அம்மாவுக்கும் வருத்தமாயிருந்தது... டோனிகிட்ட பேசும்போது , பாடம் படிக்கும்போது ஒண்ணுமே சொல்லாத அப்பா,
இப்ப ஜோவுக்கு தடை போடுறாப்ல பேசுறாரே?

குழம்பித்தான் போகிறாள், ஜெனி.. பெண் என்றால் எல்லா பக்கமும் பாதுகாப்பு...பயம்...இதுக்கு ஆணாகவே பிறந்திருக்கலாம்...

---------------------------------------------------------------------------­------------------------------------
டோனி, தன் நண்பர்களுக்கு மதிய விருந்து குடுத்து முடிந்ததும், மாடியில் சென்று விளையாடிக்கொண்டும் பேசிக்கொண்டும் இருக்கிறார்கள்..

டோனியின் கண்கள் மட்டும் ஜெனியின் மாடியை நோக்கியபடி...

அவன் நண்பன் விஷ்னு, டோனிக்கு அவர் அப்பா பரிசளித்த புது மொபைல் தொலைபேசியை வாங்கி பார்த்து விவரம் கேட்டுக்கொண்டிருந்தார்கள்..

" என்னடா வெல "

" "

" எங்கடா வாங்கின..?"

" "

" ப்ளூ டூத் இருக்குடா மச்சி.."

" 20,000 இருக்குமாடா"

" ஆமாடா"

" டேய் இல்ல... இது பழைய மாடல்தான் இப்பல்லாம் 15,000 க்கே கெடைக்குதுடா.."

" ஆமா "

" டேய் என்னடா இவன் , 20 கும் ஆமான்றான், 15 கும் ஆமாங்கிறான்..."

"ஆமாடா நானும் அப்பத்திலேருந்து கெவனிச்சுட்டுதானிருக்கேன்.. மாப்பிள்ளை இங்கேயே இல்லை..."

" ஹா ஹா ஆமா அவர் பார்வையெல்லாம் பக்கத்துவீட்டு ரோஜா செடிமேலதாண்டா இருக்கு..."

" ஹாஹாஹா . செடிமேல இல்லடா, ஜெனிமேல..."

" டேய் சும்மா இருங்கடா.. அவ என் தங்கை மாதிரிடா.."

" இப்ப நாங்க யாராவது இல்லன்னு சொன்னோம்?.."


" டேய்................."

டோனி சட்டென்று எழுந்து உள்ளே சென்றான்...மேற்கொண்டு தொடர விரும்பாமல்.....ஜெனிக்கும் கெட்ட பெயர் ஏற்படுத்தாமல்...

---------------------------------------------------------------------------­---------------------------------------------------------------------------
கடைசியாக வழியனுப்ப ஜெனி வீட்டுக்கு சென்ற டோனிக்கு ஆசீர்வாதம் பண்ணி ஸ்டெதஸ்கோப் செட் ஒன்றினை பரிசளிக்கிறார் ஜெனியின்
அப்பா..

எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு டோனி.. கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார்.. "

" அங்கிள் எதுக்கு இதெல்லாம் நீங்க இப்பவே வாங்கிட்டு...?"

முழங்காலிட்டு ஆசீர்வாதம் பெறுகிறான் டோனி.. சின்னதாக ஜெபம் ஒன்றை சொல்லுகிறார்...

" பரலோகத்திலிருக்கிற...எங்கள்....பிதாவே......................................­............................................." ஜெபத்தின் இடையில் கண்திறந்து பார்க்கிறாள்
ஜெனி, டோனியோ கண்கள் மூடி பக்தியுடன்...

இப்பவும் பேச முடியவில்லை அவளால்...

அவன் கிளம்பி கேட் வரை சென்றதும், ஜெனி பிரபுவின் காதில் ரகசியம் கூற, அவன் ஓடிச்சென்று, டோனியின் பின்முதுகில் அடித்துவிட, டோனி பிரபுவின்
கைகளை பற்றுகிறான்...

" ஜெனி தான் இந்த அடியை மறக்கக்கூடாதுன்னு உங்ககிட்ட குடுக்கச்சொன்னா..." பாவம்போல்...பிரபு..

டோனிக்கு பழைய நினைவுகள் மனதுள் வர, ஜெனி இன்னும் சின்னப்பிள்ளைதான் போலும் என்று சிரித்துக்கொண்டே,
பிரபுவின் இரு கைகளை எடுத்து முத்தம் கொடுத்துவிட்டு, செல்லமாய் அவன் கைகளுக்கு இரண்டு அடியும் தந்து

" இதை ஜெனியிடம் பலமா குடுத்துரு , நான் குடுத்தேன்னு சொல்லி...சரியா?..." என்று சொல்லிவிட்டுக்கிளம்புகிறான்...

****************************************தொடரும்

*சில்லென்ற கண்ணாமூச்சி காதல் -பாகம் 1*





*சில்லென்ற கண்ணாமூச்சி காதல் -பாகம் 1*


*ஒருமாலை இளவெயில் நேரம்,*


" நீ பண்ற ஒவ்வோர் சேட்டைக்கும் ஒன்பது முத்தம் தரட்டுமா?..." ஜென்னி என்ற 8ம் வகுப்பு படிக்கும் ஜெனிபர் நாய்க்குட்டியை துக்கி வைத்துக்கொஞ்சிக்கொண்டிருந்தாள்...தன் அழகான பெரிய தோட்டத்தில்


" அப்போ நானும் சேட்டை பண்ணவா ஜென்னி.?.என்னை மட்டும் அடிக்கிற..?."


5ம் வகுப்பு படிக்கும் பிரபு பக்கத்தில் இருந்து அக்காவின் மேல் பட்டும் படாமல் செடிக்கு தண்ணீர் பாய்ச்சுக்கொண்டிருந்தவனை பாய்ந்து அடிக்கச் சென்றாள்..


" சீ. போடா. என்னை முழுவதுமா நனைத்துவிட்டாயே?. இரு அப்பாகிட்ட சொல்லித்தாரேன்..."


" ஏய் அக்கா, என் செல்ல அக்கா, பிளீஸ் போட்டுக்குடுக்காதேக்கா.. உனக்கு இன்னிக்கு நூலகம் போய் புத்தகம் எடுத்து தருகிறேன்.."


" ...ம்.. அப்படி வா.. வழிக்கு..."


" ஏய் பிரபு, ஜென்னி எதாவது வம்பு பண்ணினால் என்கிட்ட சொல்லு சரியா, நான் கவனிச்சுக்கிறேன் ....அவள் ஜம்பம் என்கிட்ட பலிக்காது..ஹாஹாஹா.."


மழை நீர் தேக்கிவத்த மரத்தை ஜெனி மீது உலுக்கியபடி சண்டைபிடிக்க வருகிறான் டோனி என்ற அந்தோணி..



ஜெனி ஒன்றும் சொல்லாமல் புள்ளிமான் போல் மருதாணி கைபோல் சிவந்து உள்ளே ஓடுகிறாள்...


டோனிக்கு ஆச்சர்யமாக இருக்கிறது.. எப்பவும் நேரெதிராக மல்லுக்கு நின்று திண்டாட வைக்கும் ஜெனிக்கு என்னாச்சு இன்னிக்கு?..


அவள்கூட சண்டைபோடாவிட்டால் அன்றைய நாள் கழியாதே..


அவள்தான் பிரபுவுக்கும் ,டோனிக்கும் முக்கியமான பொழுதுபோக்கு..


டோனி பக்கத்துவீட்டு தேவராஜின் இரண்டு பிள்ளைகளில் கடைசி...12 ம் வகுப்பு படிக்கிறான்.மூத்தவள் பாப்பி.. இந்த வருடம்தான் திருமணம் ஆனது..ஜெனியின் அப்பா கல்லூரி பிரின்சிபால், தாமஸ்..


இரு குடும்பமும் அருகருகில் இருப்பதால் பல வருட நட்பு...
ஒன்றும் புரியாமல் விழிக்கிறான் டோனி..


" டேய் , பிரபு, என்னாச்சு, அண்டி ஏதாவது திட்டினாங்களா, ஜெனியை..?"


" இல்லை.."


" அப்ப நீ ஏதாவது.குசும்பு பண்ணினாயா.?."


" இல்லை.."


" பரிட்சை ஏதாவது...?. அந்த நல்ல பழக்கமெல்லாம் நம்ம ஜெனிகிட்ட கிடையாதே.. நான்தான் மண்டையில் குட்டி கணக்கு சொல்லிக்கொடுக்கணும் அவளுக்கு..." வாயில் ஒத்தை விரல் வைத்து துப்பறிகிறவன் போல் தலையை அங்கும் , இங்கும் ஆட்டி, யோசிப்பதுபோல் ...


" டேய் என்னடா ஆச்சு.."


" எனக்கொண்ணும் தெரியாதுண்ணா.. போங்க அவகிட்டயே கேளுங்க..."


" அன்டி, அன்டி, (aunty) ஜெனி எங்க..?.." நாலு கால் பாய்ச்சலில் வீட்டுக்குள் செல்கிறான்..


" வா டோனி, என்ன விஷயம்.. படிப்பெல்லாம் எப்படி இருக்கு?.."


" அது கிடக்கு அன்டி.. ஜெனி எங்க..?" மாடிப்படி ஏறுகிறான்...


" டோனி ஒரு நிமிஷம்... "
" ஏன் அண்டி.. அங்க இல்லயா ஜெனி?.."
" ..ம்.. இருக்கிறாள் ... அங்கு...தான்... ஆனால்..."
" ஆனால், என்ன அன்டி..?... "
"...ம்.. நீ. இங்கு இரு .. அவளே வருவா கீழே..கொஞ்சம் பொறு டோனி."
புரியாதவனாய் தடுமாறுகிறான் டோனி... முதன்முறையாக வித்தியாசமாய் உணருகிறான்..
காத்திருக்க விரும்பாதவனாய் வீடு சென்று அம்மாவிடம் சலிப்புடன் சொல்கிறான்..
" என்னாச்சுமா ஜென்னிக்கு?. இன்னிக்கு தான் என்கிட்ட அடிவாங்காம , என்னையும் அடிக்காம தப்பிச்சுருச்சு.."


அன்னை சிரிக்கிறார்... ஆனால் இந்த சிரிப்பில் வித்தியாசம் தெரிகிறது...
" என்னம்மா.. " வெகுளியாய் ...


மண்டையில் செல்லமாய் குட்டிவிட்டு சிரிப்புடன் போகிறார் அம்மா...தன் தலையை தடவிக்கொண்டே யோசித்தவனுக்கு
மெதுவாக சிரிப்பு வருது.. அசடு வழிகிறான், புருவத்தை தூக்கி..


************தொடரும் ( வெள்ளிதோறும் வாரம் ஒருமுறைதான் சொல்லிப்புட்டேன்..)*****************************
இது 5 வருடத்திற்கு முன்பு உள்ள சம்பவம்தான் .. கதை பின் தொடரும்..

சில்லென்ற கண்ணாமூச்சி காதல்

*சில்லென்ற கண்ணாமூச்சி காதல் -பாகம் 2*

அன்பென்ற மழையிலே -----.

டோனிக்கு இப்போது புரிந்தது.. ஜெனியின் ஓட்டத்தின் , வெட்கத்தின் காரணம்...ஆனாலும் குழப்பமாயிருந்தது.. நான் என்ன வேறு புது ஆளா என்ன?. சரி இன்னும் 2 நாளில் பழையபடி வலம் வருவாள், என்று மறந்து போயிருந்தவனுக்கு, ஒருவாரமாக ஜெனி தன் வீட்டுக்கும், பள்ளிக்கும் தன் கூட வராமல் இருப்பதும், வியப்பு எழுகிறது...

ஜெனியின் அம்மாவின் குடும்பம் இந்துக்கள் , ஆதலால், அவர்கள் முறைப்படியும், கிறுஸ்தவ வழக்கப்படியும் சொந்தத்திற்கு மட்டும் தெரியப்படுத்தி, வீட்டிலேயே ஜெபமும் விருந்தும் வைக்கிறார்கள்..
டோனி, குடும்பத்தினருடன் செல்ல, ஜெனி தன் பெற்றோரிடம் மட்டும் பேசிவிட்டு தன்னிடம் பேசாதது புதிராக இருந்தது.. ஆனால் அவள் தோழிகளுக்கு குசும்புக்கு குறைவில்லை.. என்னவோ சொல்லி சிரிக்கிறார்கள்.. சரி பள்ளியில் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டான்..


திங்களன்று பள்ளிக்குச்செல்ல ஜெனி வீட்டில் வாசலில் சைக்கிளுடன் நின்று,
" பிரபு, என்னாச்சு, வரீங்களா, நான் செல்லட்டுமா?.."அதிகாரமாக..


" இருங்க அண்ணா, வாறேன்..."
" பிரபு, டோனிய முன்னால் போகச்சொல்லு, நாம பின்னால் வருவோம்னு சொல்லு.."
குரல் வந்த திசையை பார்த்தால், பினோஃபோர்ம் உடையிலில்லாமல்,ஜெனி புதிதாக பாவாடை தாவணியில்...அதுவும் பொம்மையாட்டம்..சிரிப்பு வருது டோனிக்கு... வாயைப்பொத்தி சிரிக்கிறான்..


ஜெனிக்கு கோவமாய், வெட்கமாய் வருகிறது... அவள் அன்னையை அழைத்து வருகிறாள்...அம்மாவிடம் டோனியை போகச்சொல்கிறாள்..
" ஆன்டி, என் உதவி இல்லாமல் அவள் எப்படி மேட்டிலும் , சரிவிலும் ஓட்டுவாள்.. அதுவும் பிரபுவை வைத்துக்கொண்டு..பெ.............ரி.............ய மனுஷி ஆயிட்டாளோ?.."


" பிரபு, நீ என்னுடன் வந்திரு.. ஜெனி உன்னைக்கண்டிப்பா கீழே போட்டுடுவாள்.." விழுந்து விழுந்து சிரிக்க, உடனே வந்துட்டான் பிரபுவும்..
முறைத்துக்கொண்டே, சைக்கிள் மிதிக்கிறாள் ஜெனி...அவளுக்கு அவள் மாமா சொன்னது ஞாபகத்துக்கு வருது... இனி அதிகமா, பசங்ககூட பேசக்கூடாது என்று.. அமைதியாக கொஞ்சம் எரிச்சலுடன் மெதுவாக,ஓட்டுகிறாள்..


" ஏய், என்ன , நீ?. இப்படி போனா, நாளைக்குத்தான் போய் சேரமுடியும்.. " அவசரப்படுத்துகின்றான்...எப்பவும் போட்டிபோட்டு ஓட்டும் ஜெனியா இது...ஆணுக்கு சரிசமமா ஓட்டுவாளே..

" டோனி , உனக்கு அவசரம்னா , நீ போய்க்கோ..உன்கிட்டலாம்பேசக்கூடாதுன்னு மாமா சொல்லிருக்கார்..."
" எ.ன்.ன...து...........?.. பேசமாட்டியா?. ரொம்ப சந்தோஷம் .. தொல்லை விட்டது..."
" அப்ப, நான் விரசலா போறேன்.. நீ மெதுவாவே வா.. " கோவத்தோடு,
சைக்கிளை அழுத்தி மிதித்து வேகமாய்ச்செல்கிறான்...சிறிது தூரம் சென்றதும் திரும்பி பார்த்தால் ஜெனி வரவில்லை.. நிப்பாட்டி மறுபடியும் காத்துகிடக்கிறான்.. நேரமாக, வந்தவழியே சென்று, தேடிப்பார்க்கையில்,
தாவணி , சக்கரத்தில் மாட்டி, ஜெனி எடுக்க முடியாமல் அழுதுகொண்டிருக்கிறாள்...பாவமாயும், அதே சமயம் கோவமாயும் வருகிறது...பக்குவமாய் தாவணியை எடுத்துவிடுகிறான்...


" கொஞ்சமாவது அறிவிருக்கா உனக்கு?.. இன்னிக்குதானே தாவணி போடுற?. அதுக்குள்ள ஏன் சைக்கிள்?.. பழகியபின் ஓட்டியிருக்கலாமே?.."
அழுகிறாள்..
" அதுக்குதான் நான் கூட வாறேன்னு சொன்னேன்.. மாமா சொன்னாராம், இவ கேட்டாளாம்.. லூஸு.." ஏங்கி ஏங்கி அழ ஆரம்பிக்க, பரிதாபப்பட்டு, தன் சைக்கிளை பக்கத்து கடையில் நிறுத்திவிட்டு, அவளை பின்புறம் உட்கார வைத்து, பிரபுவை முன்னால் வைத்து, பள்ளிக்கு அழைத்துச்செல்கிறான்...வேறு ஒன்றும் பேசாமல்..


டோனியின் கரிசனம் , அன்பு கசக்குது ஜெனிக்கு...பயம்தான் வருகிறது..
---------------------------------------------------------------------------­-----------------------
+2 படிப்பென்பதால் அதிலேயே வாரம் முழுதும் ஓடினாலும், லீவு நாட்களில், தன் வீட்டு ரோஜா தோட்டத்தை ஒருவழி பண்ணகூட வராதது ஏமாற்றமாயிருந்தது.. தான் பண்ணுவதுதான் சரியென்று சண்டை பிடிப்பாளே?.. ஜெனி வீட்டு கொய்யா மரம் , தன் வீட்டு மொட்டைமாடியில் காய்ப்பதால் , அத்தனையையும் எண்ணிவைத்துவிட்டு, தன் தோழர்கள் யாராவது கைவைத்தால் ஊரைக்கூட்டுவாளே.. இதற்கே அப்பாவிடம் திட்டு வாங்கித்தருவாள் , அடிக்கடி..


இப்ப சண்டைபோடக்கூட வராமால் அப்படியென்ன, விரதமாம்?..
ஞாயிறு காலையிலேயே கொயர் ( பாட்டு) வகுப்புக்கு செல்ல அவளை அழைக்க அவள் வீட்டுமுன் சைக்கிளில் நின்று கொண்டு பிரபுவிடம் கூப்பிட்டனுப்ப,
" நான் இனி பாட்டு வகுப்புக்கு வரலைன்னு சொல்லு..பிரபு.." சத்தமாக...


" வரலன்னா காது திரும்பிரும்.. னு சொல்லு பிரபு.."

" எனக்கு நிறய வேலையிருக்கு னு சொல்லு..பிரபு.."

" ஃபாதர்கிட்ட போய், இந்த பொய்யை சொல்லச்சொல்லு..பிரபு.."


பிரபு மண்டையைப்பிடித்தபடி...

ஜெனியின் அம்மாவும் போகச்சொல்கிறார்கள், ஆனாலும் மறுக்கிறாள்..அப்பா வெளியில் சென்றுள்ளார்.அப்பா இருந்தாலாவது சப்போர்ட் பண்ணுவார்...

சைக்கிளை நிறுத்திவிட்டு வேகமாய் உள்ளே வருகிறான் டோனி..

" ஏய் என்ன , நீ பாட்டுக்கு பாதில வரமாட்டேன்னு சொல்லுவ, பண்டிகை வருது... வந்து ஒழுங்கா பாடு..."

" ஆன்டி , இவளை வரச்சொல்லுங்க.. கடைசி நேரத்தில் என்ன பிடிவாதம் இவளுக்கு..?"

" அங்க நிறய பசங்க இருப்பாங்க.. கிண்டல் பண்ணுவாங்க... நான் வரல.."
" ஆமா , நீ பெரிய ரதி.. வேறு பொண்ணுங்களே இல்ல பாரு..எனக்குத்தெரியாது இன்னிக்கு நீ வந்தாகணும்..."


முணுமுணுத்துக்கொண்டே கிளம்புகிறாள்...கோவிலுக்கான பூக்களை பரித்துக்கொண்டு செல்கிறார்கள்.. ஜெனி ஏன் இப்படி மாறிவிட்டாள்.. போகும் வழியெல்லாம் என்ன பேசினாலும் பதிலளிக்க விருப்பமில்லாமல், சோகமாய்....

நான்தான் அவளை அதிகம் தொந்தரவு செய்கிறேனோ?....ஏதோ நினைத்தவனாய் டோனி, வேறு மாதிரி முடிவெடுக்கிறான்.....

******************************************************தொடரும்..************­***************************

Wednesday, September 17, 2008

மடல் பார்த்ததும் அதிர்ச்சியும் கோபமும் வந்தாலும் அவனுடைய அதிகாரமான அன்பும், அக்கறையும் இதமாகவே இருக்குது வெறுத்துப்போன மனதுக்கு.
இருந்தாலும் அவனைப்பற்றி எனக்கு என்ன தெரியும்.. முன்பின் பார்த்ததில்லை..எப்படி நம்புவது?.குழம்பித்தான் போகிறாள்.
சரி முதலில் அவன் வருவதை தடுக்க வேண்டும்.. மடலுக்கு பதில் அனுப்ப முயல ,சரி சேட்டில் சொல்லிடலாம்..
" மது நீங்க ரொம்ப அவசரப்படுறீங்க..நல்ல நட்புன்னு நினைத்தேன் ஆனா இதென்ன புதுசா?.. காதலா?.. சே.."
" ஹஹ. எப்படி நீ பிணமானதும் , நிதானமா ஒரு பூமாலை வாங்கி வரவா?.ஹலோ ஒரு பெண்ணை காப்பாத்த காதலிக்கணும்னு அவசியமில்லை..
நான் உங்களை இப்பவும் காதலிக்கவில்லையே ஹி ஹி...."
" போதும் கிண்டல்.. சீரியஸா சொல்றேன்.. தலையிடவேண்டாம் என் விஷயத்தை நானே பார்த்துக்கொள்கிறேன்..இன்னும் பிரச்னையை அதிகமாக்காமல்
இருந்தால் சரிதான்... இதுவரை நீங்கள் செய்த உதவிகளுக்கு ரொம்ப நன்றி.. இனி நீங்க யாரோ.. நான் யாரோ.."
"....."
" பை.."
"....."
" என்ன பதிலேயில்லை?.."
" அதான் சொல்லிட்டீங்களே..நான் யாரோன்னு... ஆனா உங்களை விடுவிப்பதில் என் முடிவில் மாற்றமில்லை... பேசுவதை மட்டும் நானும் நிப்பாட்டிக்கொள்கிறேன்.."
" என்ன சொல்றீங்க?.. "
" தெரில .. இப்ப ஒண்ணும் சொல்வதற்கில்லை... பை..."
" மது.. இருக்கீங்களா?.. "
" மதூஊ.. ப்ச்.. என்னாச்சு.."
நாளை வந்துடுவானோ?.. ஒருவேளை நான் இத்தனை கண்டிப்போடு பேசியிருக்கக்கூடாதோ.. சே. என்ன பேச, எப்படி புரியவைக்கன்னு தெரியாம குழப்பிட்டேனோ?.
பயந்து பயந்து ஒன்றும் சாப்பிடாமல், காய்ச்சல் வந்துவிட்டது ..
இதற்கப்புரம் வழக்கம்போல் 2 முடிவுகள்..




--------------------------------------------------------------------------------------------------------------------------------------

முடிவு 1.: ( மதியே..!!!!)
காய்ச்சலில் ஒன்றுமே தோன்றாமல் அப்படியே ஸ்வெட்டரை , குல்லாவை போட்டுக்கொண்டு பால்கனியில் உட்கார்ந்து தூங்கிவிட்டாள்..
திடீரென்று 2 கார் ஹாரன் ஓசை கேட்டு சட்டென்று விழித்தாள்...
கீழே பார்த்தால்..
" யாரது .. விது கூட... ஒரு பெண்மணி.. ஓஹ் அந்த நடனக்காரி.. அடுத்த காரில் 2 ஆட்களுடன்...அ...து அ.....து...."
" கணினி சொல்லித்தரும் அலுவலகத்தின் இணையப்பக்கத்தில் பார்த்த மாதிரி... அப்போ.. இது மதுவா...????????????"
அப்படியே மயக்கம் வரும்போல் இருக்கிறது...
என்ன நடக்கப்போகுதோ அய்யோ கடவுளே.. நான் இன்னிக்கு காலி...எப்படி கொல்லப்போகிறானோ?.. அதுக்கு முன்னால் நான் பெற்றோரிடம் பேசணுமா..?."
இவள் படியிறங்க , இறங்க ஆயிரம் எண்ணங்கள், மண்டைக்குள் ஏறுது...
சரி முதலில் மன்னிப்பு கேட்டு பார்ப்போம்... அவன் வந்ததும்..
அதற்குள் காலிங் பெல் இம்சிக்க,
தூக்குக்கயிறுக்கு செல்வது போல், மெதுவாக அடிமேல் அடி எடுத்து நடக்கிறாள்...பாதி உயிர் பயத்திலேயே போய்விட்டது..
கண்கட்டிய பசி மயக்கத்தில் கண்களை மூடிக்கொண்டு கடவுளை மட்டும் எண்ணிக்கொண்டு, கதவைத் திறந்தவள்,
அப்படியே அந்த ஷூவின் காலில் விழுந்து கதற ஆரம்பித்தாள்... மன்னியுங்கள் என்று..
மெதுவாக இரு கரம் அவளது தோளைத்தொட,
அடுத்து எங்கு அடிக்கப்போகிறானோ, எங்கே அப்படி போய் விழுவோமோ என்று வலிமை இழந்தவளாய் எண்ணும்போதே, அவளை நிற்கவைத்து ஆதரவாய் அணைக்க முற்பட்டது... கரங்கள்..
அப்போதுதான் தடுமாறி விலகி, முகம் பார்த்து திடுக்கிடுகிறாள்...
" ஒன்றும் பயப்பட வேண்டாம் என கண்ணாலும் , சைகையாலும் அவளை அமைதிப்படுத்துகிறான் மது...
அவளையறியாமல் அவன் கைகளை இறுக பற்றிக்கொள்கிறாள் குழந்தையைப்போல்...
அதற்குள் வெளியே பார்க்க, விதுவின் பெண் உதவியாளர் விதுவின் கைபிடித்து ஏதோ பேசிக்கொண்டிருக்க, இந்தப்பக்கமே திரும்பாமல் விது தோல்வியில்.
அவமானமாய் வெறித்துப்பார்த்துக்கொண்டிருக்கிறான் எங்கேயோ..
" தேவையானதை எடுத்துக்கொள் .நாம் உடனே இந்தியா கிளம்புகிறோம், போலீஸ் பாதுகாப்போடு...எல்லாருக்கும் தெரியப்படுத்தியாச்சு.."
அடுத்த அரை மணிநேரத்தில் விமான நிலைய சாலையில் மது வண்டி ஓட்டிக்கொண்டே தொலைபேசியில் பேசிக்கொண்டே, தேவையான கடிதங்களை புரட்டிக்கொண்டே,
பின் இருக்கையில் இருக்கும் ரதியிடம்,
" இப்ப பரவாயில்லையா நீ...?.. பதட்டமில்லையே..."
" ம்.. நன்றாகவே இருக்கிறேன்.. மிக்க நன்றி..உதவிக்கு."
".நன்றில்லா.............ம் வேண்டாம்.. ஒரு உதவி செய்வீங்களா?."
" ஒஹ் கண்டிப்பா.. சொல்லுங்க செய்கிறேன்.."
" கண்டிப்பா?."
"ம்.ம். கண்டிப்பா.."
" இந்த காதல் னு சொல்றாங்களே.. அப்படீன்னா என்னதான்னு எனக்கு தெரியலை.. ஒரு பெண் தேவையாம்...நீங்க கொஞ்சம் உதவுங்களேன் அந்த புத்தகத்தை படிக்க.:-))."
"..."
" என்ன பதிலே காணோம்?.."
"இல்ல உங்களை எத வெச்சு எப்படி அடிக்கலாம் னு .யோசிக்கிறேன்......ஹஹ"
பனிபொழிய ஆரம்பித்த அந்த இடத்திலேயே வண்டியை நிப்பாட்டினான்.... புன்னகையோடு பின் இருக்கையின் கதவை திறந்து கைகளை நீட்ட........

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
முடிவு 2.: ( விதியே..!!)
இரவு வழக்கம்போல மனைவியை அணைக்க முற்பட்ட விது அவள் போர்வைக்குள் காய்ச்சலில் நடுங்குவது தெரிந்தது...
" ஏய் மாத்திரை ஏதாவது போட்டியா என்ன?.."
பதிலேயில்லை.. சரி தூங்கட்டும் என விட்டுவிட்டான்... சலிப்போடு..இருந்தவனை ரதியின் குரல் தூக்கிப்போட்டது..
" பிளீஸ் மது வராதீங்க வீட்டுக்கு.. அவர் என்னை கொன்னே போட்டுடுவார்.. மடலிலேயே பேசிக்கொள்ளலாம்.. பொறுங்க..பிளீஸ்..பிளீஸ்.."
தூக்கத்தில் காய்ச்சலில் உளறுகிறாள்..
முதலில் கோபப்பட்டவன், பின் நிதானமாக கவனிக்க ஆரம்பித்தான்.. கலக்கத்தோடு மடல் பார்க்க கணினியில் நுழைந்தான்...
தானாகாவே லாகின் போட்டு வைத்திருந்தாள் பேதைப்பெண்....
ஒவ்வொன்றாக அவளுடைய சாட் டினை கடந்த 6 மாத காலமாக பேசியதை வாசிக்க வாசிக்க, அவனுள் மிருக வெறி வந்தது..
ஆனால் கடைசியில் அவள் போக விரும்பாமல் தன்னுடனே இருக்க நினைத்ததை எண்ணிப்பார்த்து மிகுந்த ஆச்சர்யப்பட்டான்..
இத்தனை கொடுமை பண்ணியிருந்தும் இன்னும் நான் திருந்துவேன் என்ற நம்பிக்கையோடு இருக்கிறாளே.. இவளுக்குதான் என்ன துணிச்சல்..
சே நான் எவ்வளவு கேவலமானவன்.. கூண்டு திறந்தும் பறக்க விரும்பாத அன்னப்பறவை...
முதல்முறையாக அவள் அருகில் வந்து மென்மையாக அவள் நெற்றியில் முத்தமிட்டு, அவளுக்கு வேண்டிய மருந்தையும் நீரையும் எடுத்து வந்து
அருகில் அமர்ந்து அவளை கைத்தாங்கலாக எழுப்பி தோளில் சாய்த்து மருந்து கொடுத்தான்... சிறிது நேரத்தில் சுய நினைவு வந்தவளாய், தன் கண்ணை
கசக்கி கசக்கி கனவா, நினைவா என பார்த்துக்கொண்டாள்..
" ரதி.. பயப்படாதே மா. என்னை மன்னித்துக்கொள்.. உன்னிடம் எவ்வளவு கேவலாமாக நடந்துகொண்டேன்...இனி ஆயுசுக்கும் நாந்தான் உனக்கு கடமைப்பட்டுள்ள அடிமை.. என்னை குறித்து எனக்கே வெக்கமாயிருக்கு... "
" அய்யோ என்னாச்சு என்ன சொல்றீங்க.. நான் ஏதாவது தப்பா.."
அவள் வாயைப்பொத்தினான்...
" தப்பெல்லாம் என் மேலதான்.. இப்பவும் நீ விரும்பினால் மதுவிடம் நீ செல்லலாம்..எனக்கு தண்டனையாக..."
கண்ணீர் முட்டிக்கொண்டு வர அவன் வாயைப்பொத்தி விட்டு அவனை அணைத்துக்கொண்டு ஒரு குழந்தையாக அவன் மடியில் தஞ்சமடைந்தாள்...
வெளியே முதல் பனி மழை மென்மையாக பொழியத்தொடங்கியது...........
மெதுவாக போர்வை போத்தி பால்கனிக்கு அழைத்துச்சென்றான் மெளனத்தில் காட்சிகள் மட்டும் பேச..

*****************************************முற்றும்*******************************************************************

Wednesday, September 3, 2008




ரதியே விதியா? மதியா?



குளித்து முடித்து தலையில் ஈரம் சொட்ட சொட்ட வெளியில் வந்தவளை முரட்டுத்தனமாய்
இழுத்து அடுத்த காட்சிக்கு தயார்படுத்தினான்..


லண்டன் குளிரோடு சேர்ந்து போட்டிபோடுது பயத்தில் நடுக்கம்.
எரிச்சலும் கோபமுமாய் ரதி...


ஆனா ஒன்றுமே சொல்ல முடியாது அவனிடம்...திருமணம் முடிந்து 1 வருடம் ஆகப்போகிறது.. இந்த அடிமைத்தனத்தில் அவள் மூழ்கி..


ஜாதகம் சரியாக அமைந்துள்ள காரணத்திலும், ஏழ்மையாலும், அவள் அழகு இங்கு விலைபோனது..


விது அல்லது விதி என அழைக்கப்படும் வித்யாசேகரன் தோற்றத்தில் ஜெயம் ரவி போலிருந்தாலும் குணத்தில் பயங்கர வில்லன்.


வெளிநாட்டு படிப்பு, உயர்ந்த உத்யோகம் கொடுத்த தெம்பு...யாரையும் விலைக்கு வாங்கிடலாம் என்னும் மனப்பான்மை..


படோபகமாக சென்னையில் திருமணம் முடித்த கையோடு ரதியை லண்டனுக்கு அழைத்து வந்து 2 மாதம் மோகத்தில் நல்லபடியாகவே கவனித்ததென்னவோ உண்மைதான்...


அதன்பிறகுதான் அவளை அடிமைப்படுத்த தொடங்கினான்..
தனிமை, கொடுமை எல்லாமுமாய் சேர்ந்து அவளை பாடாய் படுத்தியது...


இத்தனைக்கும், எல்லா துறையிலும் சிறந்து விளங்கியவள் ..எப்போதும் கலகலப்புடன், ஏதாவது போட்டியில் பங்கேற்று பரிசு வாங்கிக்கொண்டு உற்சாகமாய் வலம் வந்தவள்..


ஏழ்மையைப்பற்றி ஒருபோதும் அலட்டிக்கொண்டதில்லை அவள் திருமணம் வரையிலும்..


தன் கீழே இரு தங்கை இருந்த காரணத்தினாலும், எந்த வரனுக்கும் அவள் சம்மதித்தாள்..பெற்றோருக்கு எந்த பாராமும் தரக்கூடாது என்று மட்டுமே எண்ணினாள்..


அதிலும் வலிய இப்படி ஒரு பணக்கார வரன் அமைந்தது எல்லோரும் பெருமை படும்படியாக திருமணம் நடந்தது, இவற்றைவிட, பெற்றோரின் பாரம் சிறிதாவது குறைந்ததே என்பதில்தான் அவளுக்கு முழு மகிழ்ச்சியும்..


லண்டன் வந்ததும் தான் தெரிந்தது எப்பேர்பட்ட காமக்கொடூரனிடம் சிக்கியுள்ளோம் என்று..சிகரெட் வைத்து சுடுவதும்.. சாப்பாடு பிடிக்காவிட்டால் அவள்மேல் தூக்கி எறிவதும்..


ஆனாலும் தன் வீட்டினர் யாருக்கும் தெரியப்படுத்தி பச்சாதாபமோ , ஆறுதலோ பெறவில்லை..எப்படியும் திருத்திடலாம் என்றே நாட்களை எண்ணி வந்தாள்..பொறுத்துக்கொண்டாள்..தன் தங்கைகளுக்கு திருமணம் முடியும் வரையாவது பொறுக்கணும் என.

ஆனால் தன் துக்கங்களை பகிர்ந்து கொள்ளக்கூட பக்கத்தில் யாரும் தோழி இல்லையே..எங்கு அழைத்துச்சென்றாலும் கழுகுக்கண்ணால் பயமுறுத்துகிறான்...யாரிடமும் பேச அனுமதியில்லை...


இந்த நேரத்தில்தான் அவளுக்கு இணையத்தின் துணை அவனிடம் மன்றாடியதில் படிப்பதற்காக அனுமதி கிடைத்தது...


சில குழுமங்களில் , கணினி சார்ந்த படிப்பு பற்றி விவரம் கேட்க அவள் தன் மடலின் ஐடி தர, மறுநாள் வந்து விழுந்தது ஒர் மடல்..


அப்படித்தான் அறிமுகமானான் மதி என்ற மதியழகன்..நடிகர் பிரசன்னா போல.. புத்திசாலியும், அதே சமயம்,குறும்பாயும்.


சிறிது சிறிதாக கணினி இணையம் மூலமே சொல்லித்தரும் பொறுப்பிலிருந்தான் அவன்..தமிழன் என தெரிந்ததும் இரட்டிப்பு சந்தோஷம்...


அப்படியே கணினியோடு நல்ல நட்பும் ஏற்பட கொஞ்சம் கொஞ்சமாய் தன் வருத்தங்களை பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தாள்...



மதியும் தந்தை இழந்தவன்.. தாய் கஷ்டப்பட்டு தன்னை படிக்க வைத்து லண்டன் அனுப்பியதாகவும் தன் தாய் மேல் உயிரே வைத்திருப்பதாக கூற அவன் மேல் ரதிக்கு மரியாதை பன்மடங்காயிற்று..


ஒருவாரமாக நல்ல காய்ச்சல் ரதிக்கு.. அதைப்பற்றி சிறிதும் அலட்டிக்கொள்ளவேயில்லை விது.


" மாத்திரை சாப்பிடு எல்லாம் சரியாபோயிரும்.. ரொம்ப பிலிம் காட்டாதே.." இதுவே அதிக கரிசனம் கணவனிடமிருந்து...
ஒருவாரமாக மடலோ எந்த பதிலோ வராமல் இருப்பது கண்டு மதி பயந்துதான் போகிறான்..மடல் மேல் மடல் அனுப்புகிறான்..


பதிலேயில்லை.


"ஒருவேளை அந்த கொடூரன் அவளை ஏதாவது செய்திருப்பானோ?.. சே நான் ஒரு மடையன்.. போன் நம்பராவது வாங்கி வைத்திருக்கலாம்.. "


யோசிக்கும்போதே சாட் அழைப்பு மதியிடமிருந்து... அப்படி ஒர் உற்சாகம் அவனுக்கு...


அவனுடைய பரிதவிப்புகளை, ஆறுதலை பார்த்து அதிசயித்துதான் போகிறாள் ரதி..ஆனாலும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை...மிக சாதாரணமாகவே பேசுகிறாள்


" ஏன் ஒரு மடல் கூட இல்லை.. நான் எவ்வளவு பயந்தேன் தெரியுமா?.."


" காய்ச்சல் நேரம் இணையம் பார்க்க விரும்பலை அதான்.. ஆமா நீங்க ஏன் பயப்படணும்..?"


" உன்னை நான் ரொம்பவே மிஸ் பண்றேன் ரதி..எனக்கும் ஒரே நல்ல தோழி நீதான்."


இப்போது எரிச்சலாய் வந்தது அவளுக்கு..


" யாரும் என்னை மிஸ் பண்ணுவதெல்லாம் எனக்கு பிடிக்காது...சரி அப்புரம் பேசுகிறேன்" என்று நாசுக்காக சேட் ஐ கட் பண்ணுகிறாள்..

ஆனாலும் தனக்கென ஒரு ஜீவன் பரிதாபப்பட, விசாரிக்க இருக்கே என உள்ளூர மகிழ்ந்தாலும்...


அவனுடைய அலுவலக பார்ட்டிக்கு வேண்டா விருப்பாய் அழைத்துச்சென்றான் விது.. அங்கும் அவனின் உதவியாளரான நடிகை போன்றிருந்த பெண்ணோடு நடனமாடுவதும், அவ்ளோடு குடித்து கும்மாளமிடுவதையும் சகித்துக்கொண்டாள்...எரிச்சலாயிருந்தாலும்..


மனச்சுமை நீங்க மதியிடமும் சொல்ல அவனுக்கோ கோபம் வருகிறது...


" நீ ஏன் இவ்வளவு கஷ்டப்படணும் ரதி.. பேசாம இந்தியா போய்விடு.. ஒரு வேலை பார்த்து கூட பிழைத்துகொள்ளலாம்..இப்படி கொடுமை அனுபவிப்பதைவிட.."


" எல்லாம் ஒரு குழந்தை வந்தால் சரியாகிவிடும் மதி...ஆனால் அதற்கும் 2 வருடம் பொறுக்கணுமாம். அதுதான் என் வேதனை.."அதையும் சிரித்துக்கொண்டே சொல்கிறாள்..


அவளைப்பார்க்க பாவமாய் இருக்குது மதிக்கு.. பெண்ணாய் பிறந்தால் இத்தனை வேதனை அனுபவிக்கணுமா என்ன?.. முதலில் தன் தாய் , இப்ப இவள்..


ஒரு முடிவுக்கு வருகிறான் மதி...ஆனால் ரொம்பவும் தயக்கம்.. மெதுவாக நடவடிக்கை எடுக்கணும். முதலில் அம்மாவிடம் சம்மதம் வாங்கணும்... அம்மாவுக்கு எடுத்துச்சொல்ல, அவரோ எல்லாத்துக்கும் பயப்படுகிறார்..


" அடப்பாவமே.. தம்பி, நல்லாயிருப்பே, அந்த பொண்ணை அவ வீட்டுல சேர்த்துடுப்பா எப்படியாவது..இவ்வளவு கொடுமை அனுபவிக்கிறது தெரிஞ்சு எந்த பெற்றோரும் சும்மா இருக்க மாட்டாங்க..."



" அய்யோ அம்மா, இந்த விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம் னு நினைக்கிறா...அதனால்தான் நானே அவளுக்கு விடுதலை தரலாமான்னு யோசிக்கிறேன்...ரொம்ப நல்ல பொண்ணும்மா.."


"என்ன சொல்லன்னே தெரில தம்பி.. நீ எதை செய்தாலும் நல்லதாய் செய்வாய்னு மட்டும் எனக்கு நம்பிக்கை இருக்கு.. ஆனாலும் உனக்கு எந்த பிரச்னையும் வரக்கூடாதே.."


ஒருவழியாய் அம்மாவின் சம்மதம் கிடைத்ததும், அவளிடம் தொலைபேசி எண் கேட்கிறான்..ஆயிரம் யோசனைக்குபின் கொடுக்கிறாள் பயந்துகொண்டே..

அடுத்த வாரம்....


" பிறந்த நாள் வாழ்த்துகள் ரதி..."


திடீரென அழைப்பு வந்ததும் அதிலும் தானே மறந்திருந்த பிறந்த நாள் வாழ்த்துடன்... அதிர்கிறாள்..


" ம். அங்.. எ..ன்.ன.. யாரு..நீங்..க..?"


"நான் மதி.. சரி வாழ்த்து சொன்னா நன்றி லாம் கிடையாதா.?"


" அய்யோ சாரி.. நானே மறந்துட்டேன் .. நீங்க எ..ப்ப..டி..?"


" ஓஹ்.. அந்த அளவு ஆயிபோச்சா நிலைமை..?"


"இல்ல அப்படி இல்ல.. சும்மாதான்...சரி வேலையிருக்கு அப்புரமா பேசுறேன்..."


" சரி உனக்கு விருப்பமிருந்தால் நான் உனக்கு ஒரு விருந்து தரலாம் னு நினைக்கிறேன்...உங்க அப்பா சார்பானு வெச்சுக்கோயேன்.."


" அய்யய்யோ அதெல்லாம் ரொம்ப அதிகம்.. அவருக்கு தெரிஞ்சா கொன்னே போட்டுடுவார்..."


" தெரிஞ்சாதானே?.. "


" இத பாருங்க நீங்க என் தோழர் என்பதால் ரொம்ப உரிமை எடுத்துக்காதீங்க..."


"சரி நேரடியாகவே கேட்கிறேன் ...எத்தனை நாள் இந்த சிறையிலேயே இருப்பதாய் உத்தேசம்.."


" என்ன சொல்றீங்க நீங்க .. எனக்கு விதிச்சது இதுதான்... இப்படியே வாழ்ந்துட்டு செத்து போறேன்.. "


" சரிதான்.. வாழ்ந்தா சரி.. அதுதான் தினம் தினம் செத்துகொண்டிருக்கிறாயே..??"


" ம். பரவாயில்லை எல்லாம் ஒரு குழந்தை வந்தால் சரியாயிடும்... வாழ்க்கையே ஒரு போராட்டம்தானே.. எல்லாருக்கும் ஏதாவது ஒரு விதத்தில் கஷ்டம் இருக்கத்தான் செய்கிறது.."


"ம். தத்துவமா. ஹஹ.. நல்லாருக்கு.. கேக்க..நீங்கெல்லாம் திருந்தவே மாட்டீங்களா??"


கொஞ்சம் கோபத்துடன் இப்போது..


"கணவனுக்கு பயம், பெற்றோருக்கு மரியாதை உடன்பிறந்தவருக்கு நன்றி, எல்லாம் இருக்க வேண்டியதுதான்.. ஆனால் எல்லாம் அளவோட... தன்னையே அழித்துக்கொண்டு பெரிய தியாகி ஆகி இதையெல்லாம் செய்யணும்னு கட்டாயமில்லை..."

" சரி எனக்கு வேலையிருக்கு.... நான் தொலைபேசியை வைக்கிறேன்....."

" கொஞ்சம் இருங்க... நான் இன்னிக்கு உங்ககிட்ட பேசியாகணும்..நீங்க ஒத்துழைக்காவிட்டால் உங்க வீட்டுக்கு தெரியப்படுத்த வேண்டி வரும்.."


அழ ஆரம்பித்துவிட்டாள்..


" என்ன மிரட்டலா?..இதுக்குதான் உங்ககிட்ட சொன்னேனா?."

" மிரட்டல் எல்லாம் இல்லை... ஆனா நீங்க ஒரு நல்ல முடிவு எடுக்கணும் இந்த கூண்டிலிருந்து விடுபடணும்...அதுதான் என் ஆசை..."


" விடுபட்டு அப்புரம் , வேலை கிடைத்து, அப்புரம் இரண்டாவது திருமணத்துக்கு பெற்றோர் இன்னும் வேதனை அனுபவிக்கணுமா?.. "


" ஏன் எப்பவுமே எதிர்மறையா நினைக்கிறீங்க..முதலில் வெளியே வாங்க... மற்றதை அப்புரம் யோசிக்கலாம்.."

" நீங்க நடைமுறை தெரியாமல் பேசுறீங்க.. மாப்பிள்ளை கிடைப்பது ஒன்றும் எளிதல்ல.. அப்படியே கிடைத்தாலும்..எனக்கு இன்னொரு வாழ்க்கக பற்றி நினைத்துக்கூட பார்க்கவில்லை.."


" இனி நினையுங்களேன்..சரி நேராகவே சொல்கிறேன்...நான் உங்களை திருமணம் செய்ய விரும்புகிறேன்.. சம்மதிப்பீங்களா?... "


அதிர்ச்சி அடைகிறாள்..


" கண்டிப்பா முடியாது... எவ்வளவு தைரியம் உங்களுக்கு.. இதுக்குத்தான் என்னிடம் பேசினீர்களா?.. " சட்டென்று வைத்துவிட்டாள் தொலைபேசியை...


மணிக்கணக்காய் அழுதாள் ஏன் என்று தெரியாமலே... அவனுடைய அக்கரை, தன்னுடைய கஷ்டம் பெற்றோர், தங்கையின் நிம்மதி , கணவனின் கொடுமை எல்லாம் மாறி மாறி திரைக்காட்சி போல வந்து குழப்புது அவளை.. ஆனாலும் தன் குடும்ப கெளரவத்திற்காக பிடிவாதமாய் இருக்கிறாள் தன் முடிவிலிருந்து...


அடுத்த ஒரு வாரம் அவனிடம் தொடர்பு கொள்ளாமல் பார்த்துகொண்டாள்... ஆனால் அவனிடமிருந்தோ மடலுக்கு மேல் மடல்...

இந்த ஒரு வாரம் அவனிடம் பேசாமல் இருப்பது பெரிய சோதனையாக இருக்குது..

ஏன் ஒரு நல்ல நண்பனாவே இருக்கலாமே .. ஏன் இப்படி கட்டாயப்படுத்தணும்.. நான் ஏதும் சொல்லி இருக்கக்கூடாதோ அவனிடம்... இப்ப அவனையும் இழந்து நிற்கிறேனே..


ஆசுவாசப்படுத்திக்கொண்டு மடல் திறந்தவளுக்கு அதிர்ச்சி...பயமும்...


" இந்த மடலுக்கும் பதில் இல்லாவிட்டால் நாளை நான் உன்னை நேரில்

சந்திக்கவேண்டி வரும்
"



**********உங்க முடிவு என்னன்னு சொல்லுங்க அப்புரமா முடிக்கிறேன்...***************

Friday, August 29, 2008

ஆண்மகனுக்கோர் கவிதை...

பெண் என்றால் எல்லா கலைகளும்
தெரிந்திருக்கணுமென எல்லாம் கற்றுகொள்ளச்செய்தாய்.

மணமானதும் கணவன் பேச்சை மட்டும் கேள்,
மணாளன் ரசிக்காததை விட்டுவிடு..

மாப்பிள்ளைக்கு பிடித்தமாதிரி நடந்துகொள் என்கிறாயே??
இதுதான் அதிமுக்கியமான கலையா அண்ணா?.

உன்மீது வருத்தமில்லை அண்ணா, ஆனால்
வரப்போகிற அண்ணியிடம் நீயாவது ரசிக்கக்கற்றுக்கொள்..

ஆண்மகனுக்கோர் கவிதை

ரிமோட் எடுக்கும் உன் பிஞ்சு கைகளை
பிடித்து இழுத்து முத்தமிடுகிறேன்..

குளித்து முடித்து உடை உடுத்த ஒடி
ஒளிகின்ற உன் பாதம் எடுத்து கிச்சுமூட்டுகிறேன்..

சமையலறையில் அழிச்சாட்டியம் பண்ணும் உன்னை
இருக அணைத்தே பல்லைக்கடித்து கொஞ்சுகிறேன்..

அலுக்காமல் சேட்டை பண்ணி சலிக்காமல்
தண்டனையும் அன்பாலே பெறுகிறான் குழந்தை..

நான் செய்தால் இத்தண்டனை எனக்குண்டா என்கிறாய்..
தண்டனையில்தானே வந்ததிந்த பெருஞ்சேட்டை என்றறிந்தும்..

ஆண்மகனுக்கோர் கவிதை...

இன்றைய கவி:


இரவு கண்டு பயப்பட்டேன்..
உறங்காதிருப்பேன் அருகில் என்றாய்.

சைக்கிள் கற்க மாட்டேன் என்றேன்,
உபயோகம் சொல்லி கற்றும்தந்தாய்

அறிவியல் பாடம் பிடிக்காதென்றேன்
அறிவாளி என்தங்கை என சொல்லிதந்தாய்..

தண்ணீரென்றாலே பயந்தோடுவேன்,
தள்ளியே விட்டு நீச்சல் பழக்கினாய்..

எல்லாம் கற்றுத் தந்தாய், தந்தையாய்,
கணவரை, குழந்தையை சமாளிக்க கற்கவில்லையே ணா????

ஆண்மகனுக்கோர் கவிதை...

அதிசயமாய் தானிருக்குது இப்போதெல்லாம்
நீ உன் பைக்கில் என்னை அழைத்துச்சென்று
கல்லூரியில் விடுவதும்,பின்பு காத்திருந்து அழைத்து வருவதும்..

பெட்ரோலுக்கு காசு தருகிறேன் என்றா?.. இருக்காதே...???

ஆனால் ஒன்றுதான் புரியவில்லை ,
அடுத்த தெரு முனைக்கு சென்றதும்
தினமும் மக்கர் பண்ணுதே உன் பைக்கும் உன் மனம் போல..???

பின்பு நடுரோட்டில் வீரன் போல சரி செய்வதும்,
முடித்ததும் கண்ணாடிக்கு முத்தம் கொடுப்பதும்...
நான் வரவில்லையடா அண்ணா நாளையிலிருந்து ...!!!

ஆண்மகனுக்கோர் கவிதை...

இனி அண்ணா என்ற கோணத்தில்....

அது ஏன் அண்ணா என் தோழிகள்

நம் வீட்டுக்கு வரும்போது மட்டும்
உன் சாமான்கள் தொலைவதும்,
அதை அவர்கள் அமர்ந்துள்ள
அறைகளில் மட்டும் தேடுவதும்.
எப்போதும் கைபேசிக்கு வரும் அழைப்புகள்
வீட்டு தொலைபேசிக்கு வருவதும்
தொலைக்காட்சி அலறுவதும்,
ஒழுங்காய் உடற்பயிற்சி செய்பவன் போல
அதற்கான உபகரணங்களை எடுத்து செல்வதும்
நீ என்னை என்னடா, என்னம்மா

என செல்லமாக அழைப்பதும்...????

தாங்கத்தான் முடிவதில்லை...:-))

ஆண்மகனுக்கோர் கவிதை...

இனி அண்ணா என்ற கோணத்தில்....

வருகிற மாப்பிள்ளையெல்லாம் பிடிக்கவில்லை
என் நீ தட்டிக்கழிக்கிறாயே அண்ணா..

சந்தேகமாயிருக்கு, உன் நண்பரான,
சோடாபுட்டியின் பார்வையும்,
நம் வீட்டு ஜன்னலை அரை மணிநேரம்
கடக்கும் யானைக்குட்டி அவனும்,
தெருவில் நின்றே உன்னை எட்டிப்பார்க்கும்
ஒட்டகச்சிவிங்கியும்
எனக்கு மாப்பிள்ளையாய் முடிவு செய்திட்டாயோ என.

தொடர்ச்சியாய் என்னால் கொடுமைப்படுத்த முடியாதென்றும்,
உன் தங்கை உன்னைப்போல் பொறுமைசாலி இல்லையெனவும்
சொல்லிவை அவர்களிடம்...

ஆண்மகனுக்கோர் கவிதை...

பல வேலை பல சுமைகளோடு
பள்ளி செல்லும் குழந்தை அனுப்பி
பகட்டாய் உடுத்தி அலுவல் வந்து
படபடப்புடன் வேலையும் பார்த்து
பத்திரமாய் வாகனம் ஓட்டி
பசியோடு போக்குவரத்தில் சிக்கி
பதில்பேச முடியாது தொலைபேசி செயலிழக்க‌‌,
பயத்தில் நேரமானதால் கற்பனை கொண்டு ,

பட்டம்பூச்சியின் பரிதவிப்புடன் திட்டுகிறாய் நீ.
பரபரப்பிலும் உன் பாசத்தைமட்டும் காண்கிறேன் நான்.

ஆண்மகனுக்கோர் கவிதை...

அதிக காரமாய் இருந்தாலும்
அதிராமல் சாப்பிட்டு
அளவோடு எடுத்துக்கொள்ள
அறிவுறைத்துவிட்டு
அருகேயே நின்ற பொழுதும் உரைக்கவில்லை

என் உறைப்புதாங்காமல்
தும்மும் போது
தலையில் தட்டி
தண்ணீர் கொடுக்கவே
நின்றாய் எனும்போது
கண்ணீர் வந்தது
உறைத்ததால் அல்ல, நீ உரைக்காத( காத)லால்

ஆண்மகனுக்கோர் கவிதை

எதைக்கேட்டாலும்
உனக்கொண்ணும் தெரியாது
என என்னிடம் சொல்லி
எல்லாமே நீயே செய்ய ஆசைப்பட்டாய்.:-)

ஆனால்
எல்லாம் தெரிந்த உன்னிடம்
உன் பிள்ளை வந்தால் மட்டும்
அம்மாவிடம் கேள் என்கிறாய்
புரியவேயில்லை இன்னும்..????

ஆண்மகனுக்கோர் கவிதை...

எனக்கான பொருளையும் நீயே சுமந்து வரும்போது பங்கு கேட்டால் தர மாட்டேன் என்கிறாய்.

காரணம் கேட்டால் என் பிள்ளையை மட்டும் நீ ஒத்தையில் சுமக்கிறாயே, எனக்கு பங்கில்லையா என்கிறாய்.




ஆண்மகனுக்கோர் கவிதை ...


அம்மா வீட்டிலிருந்து தொலைபேசி அழைப்பு
அருமையாய் பேசிவிட்டு என்னிடம் முக‌ம் சுழிப்பு.


அக்கா வீட்டு விசேஷ‌ம் கூட‌மாட‌ ஒத்தாசை.

எப்ப‌டியாவ‌து த‌டுத்துவிட‌ போடுகிறாய் பெரும் ஓசை.


ம‌ருத்துவ‌ம‌னையில் ப‌க்க‌த்து வீட்டுக்கு சாப்பாடு.

உன்னைத்த‌விர‌ ஊராரைக்க‌வ‌னிப்ப‌தாய் கூப்பாடு.


உன் அக்கா குழ‌ந்தைக்குதானே காதுகுத்து

அரைப்ப‌வுன் போதும் அதுக்கும் மேலென்றால் வீண் க‌த்து..


வேலைதேடும் கொழுந்த‌னுக்கு உப‌ச‌ரித்து க‌வ‌னிப்பு

வேண்டாத‌வ‌னாயிட்டேனா என‌ ஒரு வீராப்பு...


எல்லாமே ஆண்சிங்கம், தானே முக்கியம் என்ற‌ க‌ர்வ‌ம்..

இருந்தாலும் காரியம் சாதிக்கிறேனே நீதான் என் த‌ங்க‌ம்...

Tuesday, August 26, 2008




பிடிக்கும் உன்னை பிடிக்கும்..:-))

" அட அவளேதான் வந்துட்டா... அவ கார்தான் ,. அதே சிவப்பு நிற மாருதி..."
இன்னிக்கு எப்படியாவது முந்திட வேண்டியதுதான்... தினமும் சரியாக 7.45 க்கு வந்திடுறா...?.. கொஞ்சம் குண்டாயிருந்தாலும் ஆப்பிள் மாதிரி கன்னங்கள் அழகாத்தானிருக்கு...
ஆனா அந்த தலை அலங்காரமும் அதில் உள்ள பூவும் தான் பிடிக்கவில்லை... சே சே, என்ன ரசனையோ...??.

அடுத்த சிக்னலில் அவள் வண்டிக்கு முன்னால் வந்து கிரீச்சுட்டு வந்து நின்னாச்சு... ஆனாலும் அவளை பார்க்காத மாதிரியே பார்த்தும் விட்டான்...அது அவனுக்கு மட்டும் கைவந்த கலையோ??... அட ஆமா அவளும் என்னைத்தான் பார்க்கிறாள்... பார்க்காத மாதிரி..புன்னகைக்கிறாளா என்ன?. இலை அவள் வாயே அப்படித்தானா?..

" வ‌ந்துட்டானா?.. ஆளைப்பாரு, அவ‌னும் அவ‌ன் பொருத்த‌மில்லாத ஷுவும், சாக்ஸூம்...அதென்ன‌ எண்ணெய் க‌டை சொந்த‌க்கார‌னா?.. த‌லையில் இப்ப‌டி வ‌ழியுது முக‌த்தின் அச‌டுக்கு போட்டியாக‌...?????
" அடிக்க‌டி கைக்க‌டிகார‌த்தை ஸ்டைலாய் பார்த்துக்கொள்கிறான்.. ஹிஹி... ரொம்ப‌த்தான்..."

' பெரிய சூப்பர்மேன் னு நினைப்பு.. சட்டை பட்டனை ஒழுங்கா போட்டா என்னவாம்... கையில் என்ன வளையலா இல்லை வளையமா?.. பம்பிளிமாஸ் மாதிரி.. கன்னம்...ஹிஹி...அழகாய்தானிருக்கான்..."
சிக்ன‌ல் போட்ட‌தும் ஒரே சீராக‌ ப‌க்க‌த்தில் போகுது அவ‌ள‌து மாருதியும் , பைக்கும்...
ரோஸ் நிற‌ உத‌டுக‌ள்... லிப்ஸ்டிக்கா இல்லை இய‌ற்கையிலேயே அப்படித்தானா?..
யோசித்துக்கொண்டிருக்கும்போதே வ‌ண்டி ப‌ள்ள‌த்தில் ஏறி இற‌ங்கிய‌தில் உடையில் த‌ண்ணீர் தெறித்துவிட‌, உட‌னே அவ‌ளைத்தான் பார்க்க‌த்தோணுது...
வாயை மூடிக்கொண்டு க‌ண்க‌ளால் சிரித்தாலும் க‌ன்ன‌க்குழி காண்பித்து கொடுத்துவிடுகிற‌தே...
இப்ப‌ என்ன‌ சிரிப்பு வேண்டிகிட‌க்கு... ?.. கைகுட்டை எடுத்து துடைத்துக்கொள்கிறான், முக‌த்தில் வ‌ழிந்த‌ அச‌டை...

ச‌ரி அடுத்த‌ சிக்ன‌லில் திரும்பி விடுவாள்.. ஆமா அவள் பேர் என்ன‌வாயிருக்கும்?... ப‌த்மா, தேவி, திவ்யா?... என்ன‌ இது என்ன‌வா இருந்தா என்ன‌.. ராட்ச‌சி....
" அட‌ இன்னிக்கு என்ன‌ ஆச்ச‌ர்ய‌மா சிக்ன‌லில் திரும்பாம‌ல் நேரே வ‌ருகிறாள்?..அதுவும் இன்னிக்கு பார்த்தா?... ம் இருக்க‌ட்டும்.. என்னை ஃபாலோ ப‌ண்ணுகிறாயா?...
ச‌ரி நான் திரும்ப‌ப்போகிறேன்... என் இட‌ம் வ‌ந்துவிட்ட‌து... கைய‌சைத்து டாட்டா காண்பிக்க‌ணும் போல் ஒர் உண‌ர்வு...
என்ன‌ ஆச்ச‌ர்ய‌ம், அவ‌ள் கைய‌சைக்கிறாள்... என‌க்கா, இல்லை என் பின்னால் யாருக்காவ‌தா?.. இல்லை என‌க்குத்தான்.. இப்ப‌ ரொம்ப‌வே அழ‌காய் தெரிகிறாள்..
என்ன‌ இது நான் நுழையும் காம்ப‌வுண்டில் அவ‌ளும் நுழைகிறாள்....
ம்.ம்.. எ...எ...எ.ன்னைப்பார்த்து ம‌றுப‌டியும் சிரிக்கிறாள்.. நான் ஏன் இன்னும் முகத்தை க‌டுக‌டுன்னு வெச்சுக்க‌ணும்..... என் உடடயைப்பற்றி இப்ப கவலைப்பட வேண்டாம்...

இனி தினமும் உன்னை இங்கு சந்திக்கப்போகிறேன் .. எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்குது..?

நானும் சிரிக்க‌ப்போகிறேன் என் அப்பாவின் தோளில் சாய்ந்துகொண்டு...உன்னைப்போல‌வே...நீயும் எல்கேஜி யா..?

Monday, August 18, 2008




குழந்தையின் கும்மி... பாகம் 6


" சுபாஷ் சந்திர போஸ்.." இதுல வருகிற ஷ், ஸ், நாம் கடன் வாங்கிய வடநாட்டு எழுத்துகள்... பெரியவனுக்கு தமிழ் பாடம் நடக்குது...
" அம்மா அந்த கடனை எப்போ திருப்பி கொடுப்பாங்க..." சீரியஸா. பெரியவன்..
" க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... இப்படியெல்லாம் குண்டக்க மண்டக்கனு கேள்வி கேக்கக்கூடாது..."
சீரியஸா சொல்லிட்டு மறுபடியும் பாடம் நடத்த ஆரம்பிக்க... முடில.. சிரிப்பு பொத்துக்கொண்டு வருது எனக்கு...
" என்னாச்சு மா..?" பெரியவன்..
" மா. என்ன.. ஏன் சிரிக்கிற?.." டேனி...
" அம்மா சிரிக்காதீங்க டேனி பயப்படுவான்.."
அதற்குள் உள்ளேயிருந்து யோகர்ட் ( yogurt -ல‌ஸ்ஸி போல‌‌..) 4 பாக்கெட் எடுத்து வ‌ருகிறான் டேனி...
" ஒண்ணுதான் எடுக்க‌ணும் .. மீதி கொண்டு உள்ளே வைம்மா.."
" ம்ஹூம்.. மாத்தேன்... சிங்கு நீ போய் வை..."
" டேனி .. நீதான் வெக்க‌ணும்..."
" அப்பா, இங்க‌ வா.. நீ கொண்து போய் வை.. டேனிக்கு கால் வ‌லிக்குது.."
இந்த‌ வ‌ய‌சிலேயே ஈகோ.." டேனிதான் வெக்க‌ணும்...இல்ல‌ன்ன‌ டைம் அவுட் த‌ருவேன் அம்மா..."
" பாவ‌ம் அம்மா விடுங்க‌... "
அண்ணா ச‌ப்போர்ட் கிடைத்த‌தும் ரொம்ப‌ குஷி... ஒன்றை குடித்துவிட்டு அப்ப‌டியே கீழே போடுகிறான்.. எப்ப‌வும் அழ‌காய் குப்பையில் போடுப‌வ‌ன்...இப்ப‌ ம‌ட்டும் ஈகோ.
" டேனி என்ன‌ இது புது ப‌ழ‌க்க‌ம்... குப்பையில் போடு.."
அப்பாவையும் , அண்ணாவையும் ப‌ரிதாப‌மாக‌ பார்த்துவிட்டு, இருவ‌ரும் இப்ப‌ ச‌ப்போர்ட் ப‌ண்ணாத‌தால்,
" அத‌ சாஃப்டா சொல்லு. தித்தாத டேனிய.. .." க‌ண்ணில் நீர் எட்டிப்பார்க்க‌..
" ச‌ரி க‌ண்ணே, டேனி செல்ல‌ம், குப்பையில் போடுங்கம்மா.."
வேண்டா வெறுப்பாக‌ அதை காலில் த‌ள்ளிக்கொண்டே...பின் கையில் எடுத்து குப்பையில் போட்டுவிட்டு வ‌ந்து என் த‌லைமேல் உட்கார்ந்து கொள்கிறான்...
" அய்யோ கீழ‌ இற‌ங்கு... முடி வ‌லிக்குது.."
" மாத்தேன்.. நீ ரொம்ப‌ தித்தின‌ டேனிய‌.. டேனி ரொம்ப‌ சேட் ஆயிட்டேன்...நாக்கு கோப‌ம்.."
அடுத்து குளிக்க‌.கூப்பிட... ஓடிப்போய் சோப், ஷாம்பூவை எடுத்து ஒளித்து வைக்கிறான்...
என‌க்கு சோப் போடாத‌...னு அழுகை... ச‌மாதான‌ப்ப‌டுத்தி ஒரு வ‌ழியா வெளிவ‌ந்த‌தும், எல்லாரும் கைதட்டி ஆச்ச‌ர்ய‌ப்ப‌ட‌ணும்..
" ஐ... யார் இந்த‌ பியூட்டிஃபுல் பைய‌ன்... எப்ப‌டி இவ்ளோ அழ‌காயிட்டான்.. " என‌..
அவ‌ர் வெக்க‌ப்ப‌ட்டு நெளிந்து கிளிந்து எல்லாரும் த‌ன்னை பாராட்டுறாங்க‌ளானு க‌வ‌னிப்பான்... அப்பா எப்ப‌வும் போல் டிவியில்...
மெதுவா, அப்பா அப்பா, என‌ அழைப்பான்...வெட்கிக்கொண்டு..
அப்பாவும் பார்த்து " யாரிந்த‌ த‌ங்க‌ப்பைய‌ன், வாச‌மாயிருக்கான் " நு உச்சி முக‌ர்ந்து கொஞ்சிட‌ணும்..
எல்லாம் முடிந்து சாப்பிட்டு கொஞ்ச‌ம் ஓய்வெடுக்க‌லாம் நு நினைக்கும்போது அவ‌ன் கார் க‌ட்டிலுக்க‌டியில்.
பெரிய‌ உட‌ம்பை வைத்துக்கொண்டு க‌ட்டிலுக்க‌டியில் நுழைந்து அதை க‌ம்பால் தேடி எடுத்துக்கொடுக்கும் வ‌ரையில் நல்ல‌ ட்ரில்.வாங்குவான்..அவ‌னுக்கு முக‌மெல்லாம் வெற்றிச்சிரிப்பு..
இப்ப‌ தூங்க‌ப்ப‌ண்ண‌னும்... அறையை இருட்டாக்க‌ணும்.. பிடித்த‌ கார்டூன் போட‌ணும்... சோபாவில் அவ‌னுக்கு பிடித்த‌ த‌லைய‌ணை.. அம்மா முடியை கொத்தாக பிடித்துக்கொண்டே உற‌க்க‌ம்...நான் தலையை சாய்த்துக்கொண்டே அவன் தூங்கும் வரையிலும்..

எழுந்ததும் பந்து விளையாடணும், ..இவனை இடுப்பில் வைத்துக்கொண்டே அண்ணாவுடன்..
ம். ச‌னி ஞாயிறு இப்ப‌டி க‌ழியும்...



சந்தித்த அற்புதமானவர்கள் ‍பாகம் 4 - கண்ணா..

" பாட்டீ"
"" யாரு தம்பி நீங்க.. என்ன வேணும்?.. " "பாட்டி இல்லையா?.. சாவி கொடுத்தேன் .. அதான்.."
என் முகத்தை கூட பார்க்காமல், தயக்கத்துடன் எங்க அம்மா வீட்டு வாசலில்...
" யாரம்மா அந்த பையன்.. ஹஹ உங்களை பாட்டி என்று உரிமையாக கூப்பிடுகிறான்..?'"
தெரியாதா அவந்தான் கண்ணன்.. அவன் அப்பா அமெரிக்காவிலிருந்து வந்து 17 வரடம் பின்பு இப்போதுதான் சேர்ந்துள்ளார்கள் , அவனது பெற்றோர்...அவர்கள் திருமணம் இந்த வீட்டில்தான் நடந்தது...( ஆகாயப்பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா.. இன்னும் அந்த பாடல் ஒலிக்குது காதில்..)
கண்ணனின் அம்மா நடிகை அஸ்வினி யென்றால் அவன் அப்பா மேஜர் சுந்த்ரராஜன் போல.. அவர்களுக்கு அழகான குழந்தை கண்ணன்..
அவன் பிரசவத்துக்காக இந்தியா வந்த அவரது தாயார், சில குடும்ப பிரச்னையால் அதன்பின் பிரிந்தே வாழ , அது அவருக்கு மனநோயையும் தர, பாட்டி வீட்டிலேயே மாமா, சித்திகளோடு வாழ்ந்துள்ளான் கண்ணன்..
பல வருட ஞானோதயத்துக்குப்பின், அவர் அப்பா எங்கள் வீட்டுக்கு எதிர் வீட்டை( சொந்த வீடு)சீர்செய்து அவர்களை குடிவைத்துவிட்டு, பையனை நன்றாக படிக்க வைக்க ஏற்பாடு செய்கிறார்...
கண்ணனை எப்படியாவது அமெரிக்கா அனுப்ப முழு ஆதரவும் என் அன்னையிடமிருந்து...பின் அதற்கும் ஏற்பாடு செய்தார்..
யாரிடமும் பேச பழக மாட்டான் கண்ணன்.. அவர் அன்னைக்கோ கொஞ்சம் மன நிலை சரியில்லை.பார்த்தால் தெரியாது.. எல்லா வேலையும் செய்வார்... க‌ண்ண‌ன் மேல் உயிர்..
ராஜாவாட்ட‌ம் பிள்ளை இருப்ப‌து க‌ண்டு பெற்ற‌வ‌ளுக்கும், த‌ந்தைக்கும் பெருமை...ஆனால் அவ‌னால் ப‌டிக்க‌ முடிய‌வில்லை.. அப்போதுதான் நான் க‌ட்ட‌ட‌ பொறியாள‌ரிலிருந்து க‌ணினிக்கு போக‌லாம் என‌ முடிவு செய்து எம்சிஎஸ்சி படிக்க வந்தேன் தாய்லாந்திலிருந்து... நான் படிப்பதை பார்த்து அவனும் புத்தகத்தை எடுத்து வந்து சந்தேகம் கேட்பான்...முகம் கூட பார்க்க மாட்டான்.. ஆனால் என் பையனிடம் நன்றாய் விளையாடுவான்...
நானே நேரமில்லாமல், பையனை பள்ளியில் விடுவதும், வீடெல்லாம் சுத்தி சாப்பாடு கொடுப்பதும், பின் தூங்க வைத்துவிட்டு டவுணுக்கு சென்று படிப்பதுமாய் ஒய்வில்லாமல் இருப்பேன்... ஆனால் இவன் வந்து அமைதியாக உட்கார்ந்திருப்பான்..
எனக்கு அவனிடம் என்ன பேச என தெரியாது... ஏன் வந்துள்ளான் என்றும்.."உனக்கு நண்பர்கள் இல்லையா கண்ணா?.."
" இல்லக்கா எல்லாம் செலவு பண்ணதான் இருக்காங்க.. அப்பா அமெரிக்கா என்பதால்... ஆனால் நானே அதிகம் செலவு செய்ய மாட்டேன்.."
என் பையன் விளையாட அவன் வீட்டில் உள்ள பெரிய வேப்பமரத்தில் ஊஞ்சல் கட்டி தந்தான்... ( அந்த வேப்பமரம்தான் அனைவருகும் மருந்துக்கும் விசேஷங்களூக்கும்.. அது பெரிய கதை..புயல்வரும்போதெல்லாம் பயமாயிருக்கும் எப்ப விழுமோ என..ஆனால் கோடை காலத்தில் அதுதரும் நிழலும், சுகமான காற்றும்.. அற்புதம்..)
இப்படியாக என் சொந்த அக்கா பசங்க மாதிரி வீட்டோடு ஒன்றிவிட்டான் கண்ணன்.. என் பையனுக்கு என விசேஷமாக எது செய்தாலும் கண்ணனுக்கும் உண்டு... சின்ன் பிள்ளைபோல் என்ன நடந்தாலும் என்னிடம் வந்து சொன்னால்தான் திருப்தி அவனுக்கு..
நான் படித்து முடித்து மறுபடி தாய்லாந்துக்கு வந்துவிட்டேன்.. அவனும் அமெரிக்கா சென்றான்..ஆனால் இங்கு செல்லமாக வளர்ந்ததால், அவனால் அங்கு சமாளிக்க முடியவில்லை.. மேலும் ஆங்கிலமும்... இங்கு தமிழில் படித்தவன்..
அடுத்த முறை விடுமுறைக்கு வந்தபோது வருத்தப்பட்டேன் அவனிடம்.. நல்ல சந்தர்ப்பத்தை இழந்தாயே கண்ணா...ஆனால் அவனோ ஒரே சோகமாய் இருந்தான்..
அப்போது திடீரென்று ஓர்நாள் காலை என் வீட்டுக்கு வந்து,
" அக்கா வணக்கம் " என்று சல்யூட் அடிக்கிறான்... மீண்டும் மீண்டும்... நான் துணி காயப்போட்டுக்கொண்டிருந்தேன், அப்படியே அதிர்ச்சியில்..ஒண்ணுமே பேச வரவில்லை எனக்கு... நடிக்கிறானா, விளையாடுகிறானா, இல்லை , என்னாச்சு கண்ணனுக்கு,..?
அப்போதான் தெரிய வந்தது அவனுக்கும் மன நிலை சரியில்லாமல் ஆகா ஆரம்பித்துள்ளது... தீவீர டிப்ரஷனாம்... அப்படியே உலுக்கிவிட்டது ..
சிரிது நேரத்துக்கெல்லாம் மறுபடியும் வந்து மிக சாதாரணாமாய் பேசுகிறான்...
" அக்கா நான் ஏதாவது சொல்லியிருந்தால் தயவுசெய்து மனதில் ஒண்ணும் வெச்சுக்காதீங்க என்று.."
கண்ணீர்தான் வருகிறது அவன் நிலைமை கண்டு...
" அப்படீல்லாம் ஒண்ணும் இல்ல கண்ணா...நீ ஒண்ணும் சொல்லல.. அக்காவும் ஒண்ணும் நெனக்க மாட்டேன்.. சரி தீபாவளிக்கு என்ன பிளான் ?" என பேச்சை மாத்தினேன்...
மிகவும் சந்தோஷமாக தன் அத்தை, வீட்டுக்கு போவதாய் சொன்னான்...
நானும் என் அக்கா வீட்டுக்கு மகனை வெடி காண்பிக்க அழைத்துச்செல்வதாய் சொன்னேன்..
" சீக்கிரம் வாங்க அக்கா.. நானும் நிறய வெடி வெச்சிருக்கேன் என்றான்..
நான் கோவில்பட்டிக்கு சென்றேன்...
தீபாவளி மறுநாள் என் அண்ணாவிடமிருந்து தொலைபேசி.."செய்தி பார்த்தாயா?.." "இல்லையே ணா..."
"முதலில் பார்.."
" சொல்லுங்க என்னாச்சு ன்னு.."
" நீயே பார்.. நம் தெரு பற்றி செய்தியை.." வைத்துவிட்டார் ...
அரக்க பரக்க எடுத்து வாசித்தேன் புரியவில்லை...
மறுபடியும் தொலைபேசியில் அழைத்தேன் ..அப்படியே சிலையானேன் செய்தி கேட்டு...அழுகை கூட வரவில்லை அப்படி ஒரு அதிர்ச்சி...
தீபாவளி விருந்து முடிந்து வீட்டுக்கு வந்தவன் டிப்ரஷனுக்கான மாத்திரை எடுத்துக்கொண்டு, சிகரெட்டும் பிடித்துவிட்டு அணைக்காமலே மாடியில் கதவை பூட்டிக்கொண்டு தூங்கியுள்ளான்...
அது மெத்தையில் பற்றி , தீயாக எரியாமல் , புகை மண்டலத்தில் மூச்சு திணறி இறந்துள்ளான்...
பக்கத்து வீட்டினர் , புகை வருவதைப்பார்த்து தெரிவித்ததும் தான் கீழே அன்னைக்கு தெரிந்துள்ளது.. எப்பவும் மாமன் மார் யாராவது இருப்பார்கள்.. அன்று மட்டும் இல்லை.
அவன்மேல் ஒரு காயம் கூட இல்லையாம்... குளிப்பாட்டி அவனை எடுத்துச்செல்லும் போது தூங்குபவன்போல அவ்வளவு அழகாக இருந்தானாம்...
என் வீட்டில் யாருமில்லை இவையெல்லாம் காண.. எல்லாரும் ஊரில்...
கடைசிவரை அவனைப்பார்க்காமலே...நான் இருந்திருந்தால் நடந்திருக்காதோ என ஒரு நப்பாசை.. ஆறாத ரணம்.. மனதில்..
என்னை மிகவும் உலுக்கியது அவன் மரணம் வாழ்வில் முதன்முதலாக... வாழ்க்கையே வெறுத்துப்போனது இவன் மரணத்தில்.. அவன் அப்பா மொத்தமாக நொறுங்கிப்போனார்...அம்மா ஒரே புலம்பல் ... ஆறுதல் சொல்லவே முடியாதபடி..
சிலசமயம் ஆறுதல் படுத்திக்கொள்வேன் அவன் மனநிலை சரியில்லாததால் கடவுள் அவனை அழைத்துக்கொண்டாரோ, மேலும் கஷ்டம் தராமல்... என..
அதன்பிறகு எத்தனையோ கண்ணன்களை சந்தித்தாலும், அவன் நியாபகம்தான் வரும்...(இணையத்திலேயே 4 கண்ணன் இதுவரை...)
இன்னும் என் வீட்டுக்கு சென்றால், மொட்டை மாடியில், எதிர்வீட்டில் நின்று " அக்கா " என்று புன்னைகையோடு கண்ணா அழைப்பது போலிருக்கும்...அந்த பக்கமே பார்க்கக்கூடாது என்றாலும் மனம் கேட்குமா என்ன... ???
வாழ்க்கையில் பல செய்திகள் பாசத்தோடு சொல்லிவிட்டு சென்றவன் கண்ணன்...

Thursday, August 14, 2008



பாஸ்கர்: ம். அப்ப எப்ப வார விமானத்துல??கூட யார் வாரா?
அஞ்சலி: ம். கெளம்பியாச்சு.. நாளை காலை அங்கே இருப்பேன்.. எப்படா உன்னை பார்க்கப்போறோம்னு இருக்குடா..ம். பேபி வருவாங்க..அங்க எப்படி?
பாஸ்கர்.. : அதேதான் இங்கயும்... போட்டோ கூட பாக்கல... ரொம்ப ஆர்வமாயிருக்கு,..ம். கூட சின்னா வரலாம்.
அஞ்சு: ம்.. ஹிஹி.


********************************************************************************************************************************"தாத்தா


என்ன இது காலையிலேயே விமான நிலையம் போகணும்னு சொல்லிட்டு தண்டால் எடுத்துட்டு இருக்கீங்க... "
"படவா மெதுவா பேசு... தாத்தான்னு கூப்பிடாதன்னு எத்னி தடவை சொல்றது... கால் மி சின்னா..பாஸ்கி..ஐ வில் ஜாயின் யூ இன் 5 மின்."
" ச‌ரி அப்ப‌ நான் ஸ்லோக‌த்தை சொல்லிட்டு வர‌ட்டா?.."
" வ‌ராதே .. அப்ப‌டியே போய் உன் வேஷ்டி குர்தாவை க‌ழ‌ட்டிட்டு ஜீன்ஸ் போட்டுட்டு வா.."
" தாத்தா , சாரி, சின்னா. என்ன‌ இது... இந்த‌ சென்னை வெயிலுக்கு இதுதான் இத‌மா இருக்கு..."
" ந‌ல்லாத்தேன் வ‌ள‌ர்த்திருக்கா உன் அம்மா, அதான் என் ம‌க‌ள்... அதுவும் டெல்லியிலிருந்துகொண்டு.."
" ம். ந‌ல்ல‌வேளை த‌ப்பிச்சேன்... உங்க‌கிட்ட‌ வ‌ள‌ராம‌ல்..:-))) "
"..ம்.. என்ன‌ முன‌குற‌?... ச‌த்த‌மாத்தான் சொல்ற‌து... அதான் ஏழு க‌ழுத‌ வ‌ய‌சாகியும் க‌ல்யாண‌ம் வேண்டாங்கிற‌..."
" அய்யோ தாத்தா க‌ல்யாண‌த்த‌ ம‌ட்டும் ப‌த்தி பேசாதீங்கோ...ஆமா அதென்ன‌ இப்ப‌டி கொட்டுறேள் த‌ண்ணியை?"
" அட‌ அது சென்டுடா .. நீ இன்னும் ஜ‌வ்வாது போட்டுட்டு இரு... "
" தாத்தா இதென்ன‌ ஜீன்ஸ் இப்ப‌டி கிளிச‌லா?.. அய்யோ நான் வ‌ர‌மாட்டேன்பா உங்க‌ளோட‌.."
" டேய் க‌ரும‌ம் பிடிச்ச‌வ‌னே...லைஃப்ப‌ எஞ்சாய் ப‌ண்ண‌ க‌த்துக்கோடா... க‌ண்ணு வெக்காத‌..."
" அச‌த்துரீங்க‌ தாத்தா.. ஆனா அந்த‌ க‌ருப்பு க‌ண்ணாடிதான்.."
" டேய் கால் மீ சின்னா...டேய் அந்த செருப்பை போட்டுட்டு வந்து என் மானத்தை வாங்காத..."
" ஒகே..ஒகே.. சின்னா, இப்ப‌ உங்க‌ள‌பாத்தா என் த‌ம்பியாட்ட‌ம் தான் இருக்கு... ரிபோக் ஷோ என்ன‌, டிஷ‌ர்ட் என்ன‌, ...ஆனா பாத்து க‌ண்ணு ம‌ண்ணு தெரியாம‌ யார் மேலயாவ‌து மோதிராதீங்க‌...என‌க்கு அவ‌மான‌ம்..."
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍***************************************************************************************************************************************
தாத்தா சீக்கிர‌ம் உன் தோழ‌ர்க‌ளை அழைத்துக்கொண்டு வ‌ந்து சேருங்க‌.. நான் ம‌ஹாப‌லிபுர‌ம் போக‌ணும் , ஆராய்ச்சிக்கு..."

" அடேய் பாஸ்கி, தோழர் இல்லைடா, தோழி...ஹி ஹி ஹி.."

" அய்யே.. இது வேறயா?.."

" நீ இந்த அட்டையை வைத்துக்கொண்டு இங்கே நில்... நான் அந்தப்பக்கமா போய் பார்க்கிறேன்.."
அட்டையில் அஞ்சுவின் பேரைப்பார்த்த‌ப‌டி புன்சிரிப்புட‌ன் வ‌ருகிறார் பாட்டி ம‌ட்டும் த‌னியே.
" ஹ‌லோ என் பேர் பேபி.. நீங்க‌தான் பாஸ்க‌ரா?.."
" ஹ‌.. ஆமா ஆமா.. இருங்க‌ சின்னா வ‌ந்துடுவார் இப்ப‌..."
" வாங்க‌ த‌ம்பி , நாம் கொஞ்ச‌ம் பேசுவோம் ஓர‌மாய் போய்.."
யாருமில்லை என்ப‌தை உறுதி செய்துகொண்டு, சட்டை காலரை பிடித்து,
" ஏண்டா ர‌ஸ்க‌ல், என் பேத்திகூட‌வா சேட்டிங் ப‌ண்ற‌ .. நான் யார் தெரியுமா?.. அந்த‌ கால கராத்தே வீராங்க‌னையாக்கும்..."
க‌ராத்தேயை இல‌வ‌ச‌மா போட்டு காட்டுறாங்க‌ பாட்டிய‌ம்மா.அம்மா, அய்யோ னு அல‌ற‌ தான் முடியுது... பேச‌ விட்டாதானே???
அத‌ற்குள் தாத்தாவின் கைபிடித்து சிரித்து பேசிய‌படி ரொம்ப‌ பாச‌மாக‌ ம‌ஞ்சு வ‌ந்து பார்த்து, அதிர்கிறார்க‌ள் இருவ‌ரும்...
" அய்யோ பாட்டி என்ன‌ இது இங்க‌யுமா?" மெல்ல‌ கைபிடித்து தூக்கி ம‌ன்னிப்பு கேட்கிறாள்..
"அவனை ஏன் அடிக்கீங்க?.."கூலிங் கிளாஸை கூலா கழற்றிக்கொண்டே..சின்னா.
" ம். என் பேத்திகிட்ட சாட்டிங் பண்றான், திருமணம் பண்ணிப்பானாம்... சே சே.. "
" அய்யோ பாஸ்க‌ருக்கு எதுவும் தெரியாதுங்க‌.. நான்தான் அவ‌ன் பேரில் சேட் ப‌ண்ணிய‌து..அவ‌ன் திரும‌ண‌மே வேண்டாமென்றும் ப‌த்தாம்ப‌ச‌லித்த‌ன‌மாய் இருப்ப‌தாலும்...நான்தான் ல‌ண்ட‌ன் பெண் பார்த்தேன்..." கொஞ்சம் தள்ளியே நின்றுகொண்டார்.கவனமாய்.
" ஆமா.. இத‌ப்ப‌ற்றி ம‌ஞ்சு கூட‌ ஒண்ணும் சொல்ல‌லையே...?அவதான் என்கூட இஷ்டமா பேசினா??" சின்னா
" ஆமா .. அவ‌ளுக்கும் ஒண்ணும் தெரியாது .. அவ‌ள்பேரில் சேட் ப‌ண்ணிய‌து நான்தான்... அவ‌ளும் த‌மிழ்நாடு , கலாச்சாரம் , இந்தியா ,சுதந்திர தினம் னு திரியுர‌வ‌...க‌ல்யாண‌ம் வேண்டாம்னு.."
" அட‌.." என்று பாஸ்க‌ரும், ம‌ஞ்சுவும் ஒருவ‌ரை ஒருவ‌ர் பார்த்துக்கொள்ள‌, பார்வையை மீட்டெடுக்க முடியாமல்.
மாட்டிக்கொண்ட‌ பாட்டிக்கும் தாத்தாவுக்கும் வெட்க‌ம் க‌ல‌ந்த‌ சிரிப்பு...

" ச‌ரி இனியாவ‌து நீங்க‌ இர‌ண்டு பேரும் உங்க‌ ஒரிஜின‌ல் பேரில் சேட் ப‌ண்ணுங்க‌" ம‌ஞ்சு.
" அய்யோ அப்ப‌ நீங்க‌?.. " கோர‌ஸாக‌ வ‌ருத்த‌த்துட‌ன் பேபியும், சின்னாவும்...
" ம். இனி சேட்டிங் தேவையில்லைனு நினைக்கிறேன்...( மஞ்சுவை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே) தேங்ஸ்டா தாத்தா , சாரி சின்னா..." பாஸ்கி.




**********************************************************************************************************************************************

Sunday, August 10, 2008




நள்ளிரவு வே(தொல்) லை




அலுவலில் ஒருவர் மாற்றம் ஆகிப்போவதால் அவர் வேலையும் சேர்த்து இப்ப எனக்கு... ( வெச்சுட்டாங்க ஆப்பு..)
அதனால் இண்டர்னல் பயிற்சி இந்த வாரம்.. அதுவும் தாய் பாஷையில்.. சும்மாவே பயிற்சி அறையில் போட்டிருக்கும்
விளக்கு தூங்க ஏற்றாற்போல் இருக்கும்.. இதி அவர் தாலாட்டு பாட தூக்கம் கண்களிடம் கெஞ்சுது... நோ..நோ..
மரியாதையில்லை அவர் வருத்தப்படுவார் என்று சொன்னா கேட்குதா பிடிவாதமா கண் மூடுது... ஆனா இடையிடயே பதில் சொல்லிவிடுவோம்ல..
இப்படி மும்மரமா படைக்கும்போது என் தலைவர் வந்து என்னைமட்டும் அழைக்க ...ஆஹா.. ஈராக்கிலிருந்து தப்பிச்ச கதை...
சந்தோஷமா வந்தா அவர் என்னை கஸ்டமருக்கு ஏதோ பிரச்னையாம் , உடனே ஓடுங்கள் என்கிறார்...முதலில் தயக்கமாயிருந்தாலும்,
இப்படிப்பட்ட வேலைகள்தான் நம் மதிப்பை கூட்டும் என்பதால் மறுபேச்சு பேசாமல் ஓடினேன் க்ளையண்ட் சைட்டுக்கு...30கிமீ
அங்கு போனதும் தான் தெரிந்தது ஈராக்கிலிருந்து தப்பித்து அ·ப்கானிஸ்தான் வந்திருக்கேன் என்று...
3 மாதம் முன்பு புதிதாக வந்த புராடக்டை இன்ஸ்டால் பண்ணி பயிற்சியும் கொடுத்துவிட்டு வந்தேன்...
என்ன நடந்ததோ என்னவோ, டேட்டாபேஸையே காணும்.. ஹஹஹா.. சிரிக்கவா அழவா..?.. அதெப்படி காணாமப்போக இதென்ன
நகையா... அது சீன புராடகட் தன் வேலையை காண்பித்து உள்ளது... அதை கிளையண்டிடம் சொல்ல முடியுமா?..
சரி ஒண்ணும் கவலைவேண்டாம் .. இன்னொரு சர்வர் ரெடி பண்ணுங்க.. என்கிட்ட எல்ல சிடியும் இருக்கு இன்ஸ்டால் பண்ணிடலாம்...
என்று சொல்லிவிட்டு, வீட்டுக்கும் கணவருக்கும் பேசிவிட்டு...
மதியம் 1 மணிக்கு உட்கார்ந்தேன்... இன்ஸ்டாலேஷன் முடிய ஆன்லைன் அப்கிரேடு பண்ண னு 8 மணி யானது... நெட்வொர்க் அறையில் குளிர் தாங்க முடியவில்லை..
அதைவிட சாப்பிடாதது அப்பத்தான் நியாபகம் வருது.. கேண்டீன் எல்லாம் இங்கு 7 மணிக்கெல்லாம் மூடிவிடுவார்கள்..
சரி னு தண்ணி குடித்துவிட்டு வேலையை தொடர்ந்தேன்... கிளையண்ட் கேட்டார் சாப்பாடு , காபி ஏதாவது வேணூமா, வாங்கிவரச்சொல்கிறேன் என்று..
நம்ம பெருந்தன்மையை என்ன சொல்ல... சரி அது முக்கியமில்லை னு வேலையை முடித்து சீக்கிரம் வீட்டுக்கு போலாம்னு நினைத்தேன்..
இப்ப பரிசோதனை... நானும் கிளியண்டும் லாகின் பண்ணினால் தோல்வி.. அவர் ·பையர்வால் போய் பார்க்கிறேன் என்று சென்றார்..எல்லாம்

சரி செய்து விட்டு அவர் மட்டும் வெளியிலிருந்து லாகின் பண்ண, நான் குளிருக்குள் உள்ளே..
" கிளையண்ட் கணினி ல லாகின் வந்ததோ வந்ததோ...???""
" வரல்ல...வரல்ல..."
"லைசென்ஸ் போல ஏதோ ஒண்ணு புரோக்கிராம்ல சிக்கிக்கிட்டு மாட்டேன் மாட்டேன் என்று சொல்லுதே..."
சரின்னு பழைய மெஷின் ல உள்ள லைசென்ஸ் சாவி ( usb) எடுக்கணும்.. இப்பதான் இருக்கு சர்க்கஸ்..
எங்க சர்வரை ரேக்கின் (rack ) கீழே வைத்துள்ளார்கள் .. அதுல இத்துனூண்டு சாவி வெளியில் எடுக்க எல்லா வயர்களையும் நகர்த்தணும்..
குனிந்து பார்த்தால் முடியலை... சாஷ்டாங்கமா படுத்துக்கொண்டு தான் பண்ணியாகணும்...சரி செய்யும் தொழிலே தெய்வம் னு அதையும் செஞ்சு எடுத்துட்டு.
மறுபடியும் பரிசோதனை பண்ணினோம்.. இவர் வெளியிலிருந்து கைகாண்பிக்கிறார்.. இல்லை என்று..
நான் அப்போ சரி மறுபடியும் வேறுவிதமாக இன்ஸ்டால் பண்ணுவோம்னு சொல்லும்போதே அங்கே லாகின் சக்ஸஸ்...
ஆனா இங்கதான் விதின்னு ஒண்ணு இருக்கே.. அது விளையாடுமாமே.. அவர் வெளியிலிருந்து தலையசைக்க நான் ஒஹ்ஹொ இல்லை என்று நினைத்துக்கொண்டு,
அத்தனையும் டிலீட் பண்ணி முடித்து ரீன்ஸ்டால் பண்ண ஆரம்பிக்க, நிதானமா வந்து , லாகின் ஓகே ங்கிறார்...மறுபடியும் சிரிக்கவா அழவா..
இவர்கள் தலையசைப்பு ஆமாவுக்கும் , இல்லைக்கும் ஒரே மாதிரி.. சரி சந்தோஷமா வந்து சொல்லியிருக்கலாமே.. பாவம் தூக்ககலக்கமோ என்னவோ..
மறுபடி அதே வேலை இப்ப மணி 3.. அவருக்கு தூக்கம் வந்துவிட்டது போல.. மேடம் நாளை தொடரலாம்..என்றதும், வெளியில் வந்து
டாக்ஸிக்கு காத்திருந்தோம்.. கம்பெனி வண்டி எடுத்து வரவில்லை..இது நகரத்தை விட்டு 60 கிமீ இருப்பதால் டாக்ஸியும் குறைவு..
எப்ப்டியோ ஒன்று வந்தது.. ஏறி சிறிது தூரத்தில், இன்னொரு டாக்ஸிகாரனைப்பர்த்ததும் நிப்பாட்டினான்.... ஹிஹி பெற்றோல் இல்லை என்றான்..
எபவும் சங்கிலியை கழற்றி வைத்துவிட்டு வருவேன் இதுபோல் இரவு வேலைக்கு.. அன்று எதிர்பார்க்கவில்லை... அதுமட்டும்தான் பயம்..
(மற்றபடி என் அழகுக்கு??? என்னை பத்திரமாக வீட்டில் கொண்டு விட்டுடுவான் என்ற நம்பிக்கை 100% உண்டு.. )
வீடுவந்து சேர 4 மணி சாப்பிட கூட பிடிக்கலை..கிட்டத்தட்ட 20 மணி நேரம் தொடர் வேலை.. அப்போதே மண்டையார், தொண்டையார் எல்லாம் வேலையை காண்பிக்க ஆரம்பித்துவிட்டார்..

சரியாக 7 மணிக்கு குழந்தைகள் இருவரும் " ஹை. அம்மா வந்தாச்சு என்று வந்து தொப்பென்று விழ தூக்கம் போனது..
அப்பதான் தெரியுது காய்ச்சலும் வந்துவிட்டது...
9 மணிக்கு தலைவரின் போன்.. அன்போடு விசாரித்துவிட்டு 1 மணிக்கு மறுபடியும் போகச்சொன்னார்... சரியென்று மறுபடியும் கிளம்பிப்போய் 6 மணிக்கெல்லாம்
நல்லபடியாய் முடித்து கொடுத்தேன்.. அப்பா.. கிளையண்ட் முகத்தில் சிரிப்பு...
இதற்கிடையில் அவர் ·பையர்வால் செக்க பண்ண சென்ற போது நான் 1 மணி நேரம் காத்துக்கிடக்க, கொஞ்சம் குழுமம் பக்கம் போனால்,
அன்புத்தம்பிங்க வந்து " அக்கா என்ன உங்க கதையே காணோம்".. என் சோகக்கதய சொன்னதும் ஆறுதலடைந்து விட்டார்கள் ஜூட்..
இதுல புதுசா ஒரு தம்பி மலேஷியாவிலிருந்து, என்னை ஆண் என நினைத்து...
" jmms சார், டிஸ்பிளேல இருப்பது உங்க மனைவியா?.."
" ஆமாய்யா ஆமா.."
" சார், இன்னுமா வீட்டுக்கு போகலை, உங்க மனைவி , பிள்ளைகள் தேடுவாங்களே."
" ஆமாய்யா..ஆமா.."
சரி வேலை பாருங்க சார்.. "
" சரிய்யா சரி" கடி தாங்க முடியாமல் பாவம் ...ஓடிவிட்டார்..
கொஞ்சம் உற்சாகத்துடன் மீண்டும் தொடர்ந்தேன் என் வேலையை...
பி.கு..
யாருக்காவது வேலை கடினமா இருந்தால் என்னை நினைத்துக்கொள்ளுங்கள்.
இல்லை என் வேலையை விட கடினமாயிருந்தால் கண்டிப்பாக எழுதுங்கள் ..நான் பரவாயில்லை என நினைத்துக்கொள்கிறேன்..
( அப்பாடா கட்டுரை வரும் ) என்னைவிட நிறைய பேர் கஷ்டப்படுகிறார்கள் என்று எப்போதும் நினைத்துக்கொள்வேன்..
அதனால் ஜாலியாகவே எடுத்துக்கொள்வேன்..என்ன இப்ப அடுத்த 1 வாரம் ஒரே லொக்கு லொக்கு தான்.. ( அதாங்க இருமல்...)










பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுத் திருவிழா.. - ஒரு பார்வை...
2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் மக்கள் சீன குடியரசுத் தலைநகரான பெய்ஜிங்கில் ஆகஸ்ட் 8, 2008 தொடங்கி ஆகஸ்ட் 24, 2008 வரை நடைபெறவுள்ளன. சீனப் பண்பாட்டில் 8ஆம் இலக்கம் இராசியாக கருத்தப்படுவதால், ஆரம்ப நிகழ்வுகள் மாலை 08:08:08 மணிக்கு நடைப்பெறும்.
கால்பந்தாட்டப் போட்டிகள், படகோட்டம், நீச்சல்ப் போட்டிகள், மரதன் ஓட்டம் உட்பட சில போட்டி நிகழ்வுகள் சீனாவின் வேறு நகரங்களில் நடைப்பெறும். குதிரைப் பந்தயங்கள் ஹாங்காங்கில் நடைபெறும்.
விளையாட்டின் முக்கிய அடையாளமாக "நடனமாடும் பெய்ஜிங்" என்பது பெய்ஜிங் பெயரில் காணப்படும் இரண்டாவது சீன எழுத்தான "ஜிங்" என்பதன் அழகியல் வடிவமாகும். போட்டியின் குறிக்கோளாக "ஒரே க‌ன‌வு ஒரே உல‌க‌ம்" தேர்ந்தெடுத்துள்ளார்கள்.. இவ்விளையாட்டில் 10, 500 க்கும் அதிகமான வீரர்கள் பங்கேற்கலாம்..மொத்த நிகழ்ச்சிகளும் 300 கும் அதிகமே.



கடந்த மார்ச் 24ஆம் நாள் கிரீசு நாட்டில் ஏற்றப்பட்ட சுடர் 5 மாத காலத்தில் 19 நாடுகள் வழியாக சீனா வந்தடைந்தது.

மிகப் பெருமையுடைய ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியைத் தான் நடத்துவதில் பெருமிதம் கொண்டது சீனா.

சீனாவின் பிடிக்குள் சிக்கி, பெயரளவிலான தன்னாட்சிப் பகுதியாகக் கிடக்கும் திபெத், தனது உரிமைக் குரலை தொடர்ந்து எழுப்பியது. , சீனாவின் ஆக்கிரமிப்பை எதிர்க்கும் நோக்கில் சீனாவிற்குக் கொண்டு செல்லப்படும் ஒலிம்பிக் சுடரைத் திபெத்தின் விடுதலைச் சுடராக மாற்றிக் கொண்டது திபெத்.

ஒலிம்பிக் விளையாட்டு என்பது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்ட கிரேக்கர்களின் தேசியத் திருவிழா. கிரேக்கர்களின் தெய்வம் வாழ்ந்த ஒலிம்பியா மலையில், கிரேக்க தெய்வத்தை வழிபட கிரேக்கர்கள் ஒலிம்பிக் விழாவை விளையாட்டு போட்டிகளை நடத்திக் கொண்டாடினார்கள்.
பெய்ஜிங்கில் பண்பாட்டு மற்றும் விளையாட்டு மையம், ஆங்கில மொழியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவும் பொருட்டு ஆங்கிலம் விசேஷமாக கற்றுத்தருகிறது... ஆச்சர்யம் என்னவென்றால் ,மாணவர்களின் சராசரி வயது, 58 .
பெய்ஜிங் மாநகர அரசின் திட்டத்தின் படி, 2008ம் ஆண்டு பெய்ஜிங்கில் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி நடைபெறும் போது, 40முதல் 60 லட்சம் வரையான பெய்சிங் நகரவாசிகள் ஆங்கில மொழி பேச முடியும்.

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெறும் போது, பெய்ஜிங் காற்று தர பிரச்சினையில் , காற்று தரத்துக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், பெய்ஜிங் சுற்றுச்சூழல் துறை மிகவும் கவனம் செலுத்தி பல கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.


ஒலிம்பிக் குழுவின் உலக ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டாளி, தொலைக்காட்சி ,அஞ்சல் நிறுவனங்கள், பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்பு குழுவின் சந்தை வளர்ச்சி ஆகிய திட்டங்கள், பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்பு குழுவின் ஏற்பாடு மற்றும் அனைத்து பணிகளுக்கு, அதிக நிதி, வசதிகள், தொழில் நுட்பம், சேவை ஆகியவற்றை திரட்டியுள்ளன.


பெய்ஜிங் ஒலிம்பிக் பூங்காவின் மையப் பிரதேசத்திலுள்ள தென் பகுதியில் , போட்டிக்கான சிறப்பு வாய்ந்த அரங்குகளில் ஒன்றான 17 ஆயிரம் இருக்கைகள் கொண்ட, சுமார் 80 ஆயிரம் சதுரமீட்டருள்ள ,நீர் கன சதுர விளையாட்டரங்கு, அதிகாரப்பூர்வமாகக் கட்டி , பயன்படுத்தப்படத் துவங்கியது.

பெய்ஜிங், 31 விளையாட்டரங்குகளையும் பயிற்சியரங்குகளையும் ,இதர 30 விளையாட்டரங்குகள், 44 பயிற்சியரங்குகளுடன் , 29வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் தேவையை நிறைவு செய்யும் வகையில்,கட்டியமைத்துள்ளது

கிட்டத்தட்ட 63 தொழில் நிறுவனங்கள் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஒத்துழைப்பு நிறுவனங்களாக மாறியுள்ளன.நிதி, பொருட்கள், தொழில் நுட்பம் மற்றும் சேவை போன்று பல்வேறு வகையிலும் ஆதரவுகளை இந்தத் தொழில் நிறுவனங்கள் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு வழங்கும். இதனால் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி வெற்றிகரமாக நடைபெறுவதற்கு தலைசிறந்த பொருட்களின் அடிப்படை உருவாக்கப்பட்டுள்ளது.
சர்வதேச தொழில் நிறுவனங்களைப் பொறுத்து, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, சீனாவின் சந்தையை விரிவாக்குவதற்கு வலிமையான வாய்ப்பை வழங்கும்.
சீனாவின் மிகப்பரப்பிலான ஆழமான பண்பாட்டையும் "ஒரே உலகம், ஒரே கனவு" என்ற தலைப்பின் அடிப்படையில் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை நடத்திக்காட்ட விரும்பியுள்ளது..
பெய்ஜிங்கிற்கு வருகை தரும் வீரர்கள், பயிற்சியாளர்கள் பல்துறை அதிகாரிகள், வெளிநாட்டு பார்வையாளர்கள் ஆகியோரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 6 இலட்சம் இரூக்கலாம்.பண்பாட்டு நடவடிக்கைகள் ஒலிம்பிக் நடவடிக்கைகளின் முக்கிய பகுதியாகும். அனுமதிபெற்றுள்ள 20,000 மக்கள் தொடர்பு ஊடகங்கள் நேரடி ஒளிபரப்பு செய்யும்..
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி தொடக்க விழாவின் தீபத்தை ஏற்றும் வழிமுறை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், திட்டவட்டமான நுணுக்கங்கள், இரகசியமானது .தொடக்க விழா சடங்கு, கலைநிகழ்ச்சிகள், வீரர்கள் விளையாட்டரங்கில் நுழைவது, தீபத்தை ஏற்றுவது ஆகிய 4 பகுதிகளை இத்தொடக்க விழா உள்ளடக்கும்.

வண்ணமயமான வான வேடிக்கைகள் மூலம் ஒலிம்பிக் சின்னமான ஐந்து வளையங்களை முதன்முறையாக ஆகாசத்தில் காண்பிக்கப்படும்.. மேலும் கொடி ஏற்றத்தின்போது மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு செல்லும் அளவிற்கு கணினியின் துணையோடு வான வேடிக்கைகள் வெடிக்கப்படும்..

நிகழ்ச்சியின் இறுதியில் 2008 முகங்கள் உலகம் முழுவதிலிருந்தும் காண்பிக்கப்படுவது விசேஷமாக இருக்கும்..


மேலதிக விசேஷமான பாதுகாப்புகள், பார்வையாளருக்கும், வீரர்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..இதில் FBI யும் அடங்கும்..

மேலும் பெய்ஜிங்கில் வாகன , போக்குவரத்து வசதிகளும் , அதி வேக ரயில்கள் ஓவ்வொரு 5 நிமிடங்களுக்கு ஒன்றாக வசதியாகவே உள்ளது பெய்ஜிங்கில் மட்டும் 60 ஆயிரத்துக்கும் அதிகமான வாடகை மகிழ்வுந்துகள் இருக்கின்றது..

இதைத்தவிர உணவகங்கள், சர்க்கர நார்காலி வசதியுடன் கூடிய வண்டிகள், மது அருந்துமிடங்கள், தொலைபேசி வசதிகள், புகைப்பட வீடியோ வசதிகள்,மருத்துவ வசதிகள், இப்படி தேவையான அனைத்து வசதிகளும் அதிக அளவில் செய்யப்பட்டுள்ளன... பொது மக்களுக்கும் உதவி செய்திட விசேஷ பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது..
இந்த விளையாட்டை காண்பதற்காக விற்கப்பட்ட அனைத்து டிக்கெட்டுகளும் அதிரடியாக விற்றுத் தீர்ந்தன... இதற்காக 2 நாள்கள் கூட வரிசையில் காத்திருந்தார்கள் மக்கள்..

சீன கலாச்சாரத்தோடு இணைந்த சில நகைச்சுவை பாத்திரங்களாய் விளையாட்டுகளை சித்தரித்து மகிழ்கிறார்கள்..படத்தில் உள்ளது போல..மேலும் அழகான வேலைப்பாடுகள் நிறைந்த சிறபங்கள் பூங்காக்களை அலங்கரிக்கின்றன்..


பல பிரச்னைகளுக்கிடையிலும் இந்த விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதோடு தம் கலாச்சாரத்தையும் , பண்பாட்டையும் பேணும் சீனாவையும், இந்த விளையாட்டுக்கள் நல்ல முறையில் நடைபெறவும் நாமும் மன மகிழ்வுடன் வாழ்த்துவோம்...


பால் கெட்டியதோ தாய் பாசம் கெட்டியதோ?????


" அம்மா , அம்மா?.."
" அம்மா தூங்குறீங்க போல. பலகாரம் தர வந்தேன்.... சரி அப்புரமா வாரேன்.."
" யாரு விக்னேஷ் தம்பியா?.."
" இல்லம்மா நான் அருண்.."
" எப்பப்பா வந்த ஊர்ல இருந்து?. எல்லாரும் சொகந்தானே?"

" ஆமாம்மா.. இப்பத்தான், ஊர்ல எல்லோருக்கும் நிம்மதி உங்களைப்பற்றி சொன்னதிலிருந்து..இதோ அம்மா அனுப்பிய பலகாரம்"
" அட.. வெச்சிருந்து சாப்பிடுவியா.. சரி சரி. குளிச்சுட்டு வா.. ஆப்பம் தயார் பண்ணுறேன் .. சாப்பிடு.."
----------------------------------------------------------------------------
கடந்த 3 மாதமாக சுகந்தி அம்மா தன் வீட்டு மாடியில் குடியிருக்கும் பசங்களுக்கு சமைத்து கொடுப்பதும்
அவர்களும் தன் அன்னையைப்போலவே நினைப்பதும், தாங்க முடியா சந்தோஷம் சுகந்திக்கு..
ஆனால் இவை யாவும் இதுவரை ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் உயர் அதிகாரியாக இருக்கும் வேணுகோபாலுக்கு
தெரியாது... பாதி நாட்கள் வெளிநாட்டுப்பயணம்... மீதி நாட்களும் படுக்க மட்டுமே வீட்டுக்கு...
அந்தஸ்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்..மிக வெற்றிகரமாக 2 பிள்ளைகளை வளர்த்து வெளிநாட்டுக்கு அனுப்பியவர்..
சொந்த வீட்டை வாடகைக்கு கூட கொடுக்கமல் இருந்தவர், மனைவியின் கட்டாயத்தின்பேரில், துணைக்காக சரி என்றார்..
இன்று ஞாயிறு ,அதிசயமாக வீட்டில் , வாசலில் பேப்பருடன்...
"அம்மா..."
" யாருப்பா நீங்க?.. ஓ மாடியில் உள்ளவரா.. என்ன வேணும்"
" அம்மா இல்லியா.. இந்த பாத்திரத்தை கொடுக்க வந்தேன் அங்கிள்.."
-------------------------------------------------------------------------------------------------
" என்ன நடக்குது இங்க?..பாத்திரங்கள் எல்லாம் ?..."
" நானே சொல்லணும்னு இருந்தேன் .. மாடியில் உள்ள 5 பேருக்கும் நானே சமைத்து தருகிறேன்.. அவர்கள்
அதற்கு பணம் 10,000 மாதம் தருகிறார்கள்..."
" ஓஹோ.. உனக்கு தேவையான பணத்தை நானும் , உன் பிள்ளைகள் இருவர் தரவில்லையா?.. ஏன் இப்படி
என் மானத்தை வாங்குகின்றாய்..?.. ஒரு சமையல்காரியாய்..???"
" அதாங்க வித்யாசம்.. உங்களுக்கு தெரிவதெல்லாம் அந்த பணம். அதனால்தான் அப்படிச்சொன்னேன்...இப்பத்தான்
வாழ்க்கையில் முதல்முறையாக முழுவதும் வாழ்வதுபோல் உணர்கிறேன்.. பிள்ளை பிறந்ததுதான் தெரியும்.. நான் பட்டிக்காடு
என்று சொல்லி குழந்தைகளை படிக்க வைக்க ஊட்டி காண்வெண்ட் அனுப்பினீர்கள்.. அப்புரம் ஐஐடியாம், வெளிநாடாம்..."

" ஓ பணம் சம்பாதிக்கிறோம் என்ற திமிர் வந்துவிட்டதா?.. என்னிடம் அனுமதி கேட்காமல் செய்கிறாயென்றால் ,என்னை கூட விட்டு போகத்தயாரா ?"
".நான் ஏங்க போகணும்.. என்ன குறை வெச்சீங்க இதைத்தவிர.. எனக்கும் கடமை இருக்கு உங்களுக்கு ஆயுசுக்கும் சேவை செய்ய..ஆனா; எனக்காக முதல்முறையா
வாழ்க்கையை ஆரம்பித்துள்ளேன் , இதை நிப்பாட்ட மாட்டேன் என்றே தோன்றுகிறது...பேரப்பிள்ளையாவது கொஞ்சலாம் என்றால் பேசும் பாஷை புரியவில்லை..
பிரசவித்தவளுக்கு ஒரு வருடம்தான் பால் கெட்டி அவதிப்படுவாள்... ஆனால் நானோ 25 வருடமாக பாசத்தை கெட்டி வைத்து அவதிப்பட்டுள்ளேன், இந்த போலி
வாழ்க்கையில்... இப்பதான் 5 குழந்தைகளுக்கு தாயாகியிருக்கேன்.. என் மனத்தில் சுமையாக தேக்கி வைத்திருந்த பாசமெல்லாம், அவர்கள் " அம்மா" என்று அழைக்கும்போது
அப்படியே பீறிச்சு வெளிவருகிறது..... கடைசி காலத்தில் இதற்காக எதையும் இழக்க தயார்..
பயமுருத்தவில்லை... புரிந்து கொள்ளுங்கள்.." என்று கண்ணீருடன் சென்றுவிட்டாள் சுகந்தி..
பெருமிதம் கொண்டிருந்த தன் போலி வாழ்க்கையின் மறுபக்கத்தினை உணர்ந்தவராய் அதிர்ச்சியில் மாடிக்கு ஏறினார் வேணுகோபால்..
" அங்கிள் நீங்களா?.. கூப்பிட்டா நானே வந்திருப்பேனே?." பயத்துடன் சீனு..
" அங்கிள் இல்லப்பா, அப்பான்னு சொல்லுவியா?.."
*******************************************************************************************************************