Thursday, September 18, 2008

*சில்லென்ற கண்ணாமூச்சி காதல் -*

சில்லென்ற கண்ணாமூச்சி காதல் - பாகம் 4..

*போகாதே.....போகாதே....................*

வீட்டுக்கு சென்று டோனி குடுத்த பையை பிரித்துப்பார்த்தவளுக்கு அதிர்ச்சி....அதில் அவள் சின்ன வயதில் டோனியுடன் சண்டைபோட்டு விளையாடிய
கோலிக்குண்டு, சின்னச்சின்ன புகைப்படங்கள், கிறுஸ்மஸ் கார்டுகள், கதைப்புத்தகங்கள். அத்தோடுகூட அவளுக்கு எளிதாக புரியும்படிக்கு சில கணித, ஆங்கில
விளக்கங்களும், கையேடு, மற்றும் குறிப்புகளும்...


பிரபுவுக்கு கிரிக்கெட் மற்றும் நிறைய விளையாட்டுப்பொருளும்..எத்தனை பொறுப்போடு கூடிய அன்பு...

ஒருகணம் ஜெனி " டோனி நீ என் அண்ணாவாக இருந்திருக்கக்கூடாதா?.."

என்று எண்ணுகிறாள்... கடந்த 6 மாதமாக டோனியுடன் பேசாமல் , பழகாமல், வீணடித்ததை நினைத்து வருந்தினாள்...

இனி டோனி படிக்க சென்றால், பெரிய
மருத்தவரானபின் தான் அதிகமாய் ஊரில் தங்குவான்..

, எப்படி டோனி இல்லாமல்...? நினைக்கவே அழுகையாய் வருது ஜெனிக்கு.. சரி நேரமில்லை..

இத்தனைக்கும் டோனிக்கு முதலில் நன்றி செலுத்தியாகணும்.. அவன் சந்தோஷமாக புறப்பட்டு போகணும் படிப்பதற்கு... எப்படி பேசுவது, எங்கு பார்ப்பது?..

மாடியில் வெளியில் செடிக்கு தண்ணீர் ஊற்றுவதுபோல் சென்று பார்க்கலாம் என்று தண்ணீருடன் வெளியில் வருகிறாள்..

டோனி ஜெனி வந்ததை தன் ஜன்னலின் வழியே பார்த்துக்கொண்டுதானிருக்கிறான்... இருந்தாலும், நாமாகவே வலிய சென்று தொந்தரவு தர வேண்டாம்..

விருப்பமிருந்தால் அவளே கூப்பிட வேண்டியதுதானே என்று தன் நாற்காலியில் அமர்ந்து சாமான்களை அடுக்கிக்கொண்டிருக்கிறான்.., ஜன்னலை பார்த்தபடி..

ஜெனி அத்தனை செடிக்கும் தண்ணீர் ஊற்றிமுடிந்ததும், ஏமாற்றத்துடன், திரும்பி செல்லுமுன் ஒருமுறை டோனியின் அறை நோக்கி கண்கூச
பார்த்துவிட்டு உள்ளே செல்ல எத்தனிக்கிறாள்..அதை கவனித்த டோனி தன்னைத்தான் அவள் பார்க்க வந்தாள் என்பதை உறுதி செய்ததும், சட்டென்று
வெளியில் வந்து

" ஜெனீ...ஜெனீ"' என்றழைக்கவும்,

ஜெனி உடனே திரும்பி பார்த்து சந்தோஷமாக டோனி நோக்கி வருகிறாள்...

" ரொம்ப நன்றி டோனி.. எவ்வளவு பொருள்கள்.. " என்று அவள் கூறி முடிக்கவும்,

கீழேயிருந்து அம்மாவின் குரல்..

" ஜெனி யார் வந்திருக்கா பார்.. சீக்கிரம் வா இங்கு...."

" இதோ வந்துட்டேன் மா..."

" சரி நீ மேலேயே இரு.. நாங்கள் வருகிறோம்.."

" ஜெனி , நீ போய்ட்டு வா.. அப்புரம் பேசலாம்...."

" சாரி டோனி.... "

திரும்பவும், அத்தையும் , மாமாவும், கூட ஜோ அத்தானும்...ஊரிலிருந்து..

" மருமகளே எப்டிமா இருக்க..?"

" நல்லாயிருக்கேன் அத்தை..." என்று கைகூப்பி ஆசீர்வாதம் பெறுகிறாள்..மாமா அத்தை இருவரிடமும்..

" ஜெனி, ஜோ தம்பிக்கு இங்கு கல்லூரியில் இடம் கிடச்சுருக்கு , சேர்க்க வந்திருக்காங்க... இனி ஜோ இங்கதான் படிக்கப்போறான்.."

ஜோ அத்தான் ஜெனியிடம் பேசவே மாட்டான், அவளிடம் அவனுக்கு கூச்சம்..

சும்மா இருக்காமல், பாட்டி, ஜெனி பிறந்ததிலிருந்து,
அவள் ஜோவுக்குதான் என்றே சொல்லி சொல்லி இவளைப்பார்த்தாலே ஓடி ஒளிந்துகொள்ளுவான்...

மேலும் இவள் பட்டணத்தில் படித்து
ஆங்கிலத்தில் பேசுவதும் அவன் கூச்சத்துக்கு ஒரு காரணம்..ஆனால்
ஊருக்கு வந்தால் அவன்தான் பிரபுவையும் ஜெனியையும் எல்லா இடத்துக்கும் .
அழைத்துச்செல்லுவான் இதுவரையிலும்....

எல்லோரும் உணவருந்திவிட்டு கல்லூரி பார்க்க கிளம்பிவிட்டனர்... ஜெனிக்கு உள்ளூர மகிழ்ச்சிதான்.. சரி டோனிக்குப்பதிலாக, ஜோ இனி நமக்கு
நல்ல அண்ணாபோல் இருப்பான் என்று நினைத்தாள்..

ஜெனியின் அம்மாவுக்கும் ஜோவை ரொம்பப்பிடிக்கும், தன் அண்ணன் மகனென்றும், ரொம்ப நல்ல
மரியாதையான பையன் என்றும்.. தன் வீட்டிலிருந்தே கல்லூரிக்கு அனுப்பலாம் என்று நினைத்தார்... ஆனால் ஜெனியின் அப்பாவுக்கு அதில்
விருப்பமில்லை...மிக கவனமாக,
" ஜோ, அப்ப ஹாஸ்டல சேர்ந்தாலும் மாமா வீட்டை மறக்காமல், மாதம் ஒருமுறையாவது வந்து எட்டிப்பார்த்துக்கோ.. ஏதாவது உதவின்னா
தயங்காம போன் பண்ணு எனக்கு.. என் நம்பர் இருக்கில்ல...?''

" சரி மாமா... "

ஜெனிக்கும் அவள் அம்மாவுக்கும் வருத்தமாயிருந்தது... டோனிகிட்ட பேசும்போது , பாடம் படிக்கும்போது ஒண்ணுமே சொல்லாத அப்பா,
இப்ப ஜோவுக்கு தடை போடுறாப்ல பேசுறாரே?

குழம்பித்தான் போகிறாள், ஜெனி.. பெண் என்றால் எல்லா பக்கமும் பாதுகாப்பு...பயம்...இதுக்கு ஆணாகவே பிறந்திருக்கலாம்...

---------------------------------------------------------------------------­------------------------------------
டோனி, தன் நண்பர்களுக்கு மதிய விருந்து குடுத்து முடிந்ததும், மாடியில் சென்று விளையாடிக்கொண்டும் பேசிக்கொண்டும் இருக்கிறார்கள்..

டோனியின் கண்கள் மட்டும் ஜெனியின் மாடியை நோக்கியபடி...

அவன் நண்பன் விஷ்னு, டோனிக்கு அவர் அப்பா பரிசளித்த புது மொபைல் தொலைபேசியை வாங்கி பார்த்து விவரம் கேட்டுக்கொண்டிருந்தார்கள்..

" என்னடா வெல "

" "

" எங்கடா வாங்கின..?"

" "

" ப்ளூ டூத் இருக்குடா மச்சி.."

" 20,000 இருக்குமாடா"

" ஆமாடா"

" டேய் இல்ல... இது பழைய மாடல்தான் இப்பல்லாம் 15,000 க்கே கெடைக்குதுடா.."

" ஆமா "

" டேய் என்னடா இவன் , 20 கும் ஆமான்றான், 15 கும் ஆமாங்கிறான்..."

"ஆமாடா நானும் அப்பத்திலேருந்து கெவனிச்சுட்டுதானிருக்கேன்.. மாப்பிள்ளை இங்கேயே இல்லை..."

" ஹா ஹா ஆமா அவர் பார்வையெல்லாம் பக்கத்துவீட்டு ரோஜா செடிமேலதாண்டா இருக்கு..."

" ஹாஹாஹா . செடிமேல இல்லடா, ஜெனிமேல..."

" டேய் சும்மா இருங்கடா.. அவ என் தங்கை மாதிரிடா.."

" இப்ப நாங்க யாராவது இல்லன்னு சொன்னோம்?.."


" டேய்................."

டோனி சட்டென்று எழுந்து உள்ளே சென்றான்...மேற்கொண்டு தொடர விரும்பாமல்.....ஜெனிக்கும் கெட்ட பெயர் ஏற்படுத்தாமல்...

---------------------------------------------------------------------------­---------------------------------------------------------------------------
கடைசியாக வழியனுப்ப ஜெனி வீட்டுக்கு சென்ற டோனிக்கு ஆசீர்வாதம் பண்ணி ஸ்டெதஸ்கோப் செட் ஒன்றினை பரிசளிக்கிறார் ஜெனியின்
அப்பா..

எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு டோனி.. கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார்.. "

" அங்கிள் எதுக்கு இதெல்லாம் நீங்க இப்பவே வாங்கிட்டு...?"

முழங்காலிட்டு ஆசீர்வாதம் பெறுகிறான் டோனி.. சின்னதாக ஜெபம் ஒன்றை சொல்லுகிறார்...

" பரலோகத்திலிருக்கிற...எங்கள்....பிதாவே......................................­............................................." ஜெபத்தின் இடையில் கண்திறந்து பார்க்கிறாள்
ஜெனி, டோனியோ கண்கள் மூடி பக்தியுடன்...

இப்பவும் பேச முடியவில்லை அவளால்...

அவன் கிளம்பி கேட் வரை சென்றதும், ஜெனி பிரபுவின் காதில் ரகசியம் கூற, அவன் ஓடிச்சென்று, டோனியின் பின்முதுகில் அடித்துவிட, டோனி பிரபுவின்
கைகளை பற்றுகிறான்...

" ஜெனி தான் இந்த அடியை மறக்கக்கூடாதுன்னு உங்ககிட்ட குடுக்கச்சொன்னா..." பாவம்போல்...பிரபு..

டோனிக்கு பழைய நினைவுகள் மனதுள் வர, ஜெனி இன்னும் சின்னப்பிள்ளைதான் போலும் என்று சிரித்துக்கொண்டே,
பிரபுவின் இரு கைகளை எடுத்து முத்தம் கொடுத்துவிட்டு, செல்லமாய் அவன் கைகளுக்கு இரண்டு அடியும் தந்து

" இதை ஜெனியிடம் பலமா குடுத்துரு , நான் குடுத்தேன்னு சொல்லி...சரியா?..." என்று சொல்லிவிட்டுக்கிளம்புகிறான்...

****************************************தொடரும்

*சில்லென்ற கண்ணாமூச்சி காதல் -பாகம் 1*





*சில்லென்ற கண்ணாமூச்சி காதல் -பாகம் 1*


*ஒருமாலை இளவெயில் நேரம்,*


" நீ பண்ற ஒவ்வோர் சேட்டைக்கும் ஒன்பது முத்தம் தரட்டுமா?..." ஜென்னி என்ற 8ம் வகுப்பு படிக்கும் ஜெனிபர் நாய்க்குட்டியை துக்கி வைத்துக்கொஞ்சிக்கொண்டிருந்தாள்...தன் அழகான பெரிய தோட்டத்தில்


" அப்போ நானும் சேட்டை பண்ணவா ஜென்னி.?.என்னை மட்டும் அடிக்கிற..?."


5ம் வகுப்பு படிக்கும் பிரபு பக்கத்தில் இருந்து அக்காவின் மேல் பட்டும் படாமல் செடிக்கு தண்ணீர் பாய்ச்சுக்கொண்டிருந்தவனை பாய்ந்து அடிக்கச் சென்றாள்..


" சீ. போடா. என்னை முழுவதுமா நனைத்துவிட்டாயே?. இரு அப்பாகிட்ட சொல்லித்தாரேன்..."


" ஏய் அக்கா, என் செல்ல அக்கா, பிளீஸ் போட்டுக்குடுக்காதேக்கா.. உனக்கு இன்னிக்கு நூலகம் போய் புத்தகம் எடுத்து தருகிறேன்.."


" ...ம்.. அப்படி வா.. வழிக்கு..."


" ஏய் பிரபு, ஜென்னி எதாவது வம்பு பண்ணினால் என்கிட்ட சொல்லு சரியா, நான் கவனிச்சுக்கிறேன் ....அவள் ஜம்பம் என்கிட்ட பலிக்காது..ஹாஹாஹா.."


மழை நீர் தேக்கிவத்த மரத்தை ஜெனி மீது உலுக்கியபடி சண்டைபிடிக்க வருகிறான் டோனி என்ற அந்தோணி..



ஜெனி ஒன்றும் சொல்லாமல் புள்ளிமான் போல் மருதாணி கைபோல் சிவந்து உள்ளே ஓடுகிறாள்...


டோனிக்கு ஆச்சர்யமாக இருக்கிறது.. எப்பவும் நேரெதிராக மல்லுக்கு நின்று திண்டாட வைக்கும் ஜெனிக்கு என்னாச்சு இன்னிக்கு?..


அவள்கூட சண்டைபோடாவிட்டால் அன்றைய நாள் கழியாதே..


அவள்தான் பிரபுவுக்கும் ,டோனிக்கும் முக்கியமான பொழுதுபோக்கு..


டோனி பக்கத்துவீட்டு தேவராஜின் இரண்டு பிள்ளைகளில் கடைசி...12 ம் வகுப்பு படிக்கிறான்.மூத்தவள் பாப்பி.. இந்த வருடம்தான் திருமணம் ஆனது..ஜெனியின் அப்பா கல்லூரி பிரின்சிபால், தாமஸ்..


இரு குடும்பமும் அருகருகில் இருப்பதால் பல வருட நட்பு...
ஒன்றும் புரியாமல் விழிக்கிறான் டோனி..


" டேய் , பிரபு, என்னாச்சு, அண்டி ஏதாவது திட்டினாங்களா, ஜெனியை..?"


" இல்லை.."


" அப்ப நீ ஏதாவது.குசும்பு பண்ணினாயா.?."


" இல்லை.."


" பரிட்சை ஏதாவது...?. அந்த நல்ல பழக்கமெல்லாம் நம்ம ஜெனிகிட்ட கிடையாதே.. நான்தான் மண்டையில் குட்டி கணக்கு சொல்லிக்கொடுக்கணும் அவளுக்கு..." வாயில் ஒத்தை விரல் வைத்து துப்பறிகிறவன் போல் தலையை அங்கும் , இங்கும் ஆட்டி, யோசிப்பதுபோல் ...


" டேய் என்னடா ஆச்சு.."


" எனக்கொண்ணும் தெரியாதுண்ணா.. போங்க அவகிட்டயே கேளுங்க..."


" அன்டி, அன்டி, (aunty) ஜெனி எங்க..?.." நாலு கால் பாய்ச்சலில் வீட்டுக்குள் செல்கிறான்..


" வா டோனி, என்ன விஷயம்.. படிப்பெல்லாம் எப்படி இருக்கு?.."


" அது கிடக்கு அன்டி.. ஜெனி எங்க..?" மாடிப்படி ஏறுகிறான்...


" டோனி ஒரு நிமிஷம்... "
" ஏன் அண்டி.. அங்க இல்லயா ஜெனி?.."
" ..ம்.. இருக்கிறாள் ... அங்கு...தான்... ஆனால்..."
" ஆனால், என்ன அன்டி..?... "
"...ம்.. நீ. இங்கு இரு .. அவளே வருவா கீழே..கொஞ்சம் பொறு டோனி."
புரியாதவனாய் தடுமாறுகிறான் டோனி... முதன்முறையாக வித்தியாசமாய் உணருகிறான்..
காத்திருக்க விரும்பாதவனாய் வீடு சென்று அம்மாவிடம் சலிப்புடன் சொல்கிறான்..
" என்னாச்சுமா ஜென்னிக்கு?. இன்னிக்கு தான் என்கிட்ட அடிவாங்காம , என்னையும் அடிக்காம தப்பிச்சுருச்சு.."


அன்னை சிரிக்கிறார்... ஆனால் இந்த சிரிப்பில் வித்தியாசம் தெரிகிறது...
" என்னம்மா.. " வெகுளியாய் ...


மண்டையில் செல்லமாய் குட்டிவிட்டு சிரிப்புடன் போகிறார் அம்மா...தன் தலையை தடவிக்கொண்டே யோசித்தவனுக்கு
மெதுவாக சிரிப்பு வருது.. அசடு வழிகிறான், புருவத்தை தூக்கி..


************தொடரும் ( வெள்ளிதோறும் வாரம் ஒருமுறைதான் சொல்லிப்புட்டேன்..)*****************************
இது 5 வருடத்திற்கு முன்பு உள்ள சம்பவம்தான் .. கதை பின் தொடரும்..

சில்லென்ற கண்ணாமூச்சி காதல்

*சில்லென்ற கண்ணாமூச்சி காதல் -பாகம் 2*

அன்பென்ற மழையிலே -----.

டோனிக்கு இப்போது புரிந்தது.. ஜெனியின் ஓட்டத்தின் , வெட்கத்தின் காரணம்...ஆனாலும் குழப்பமாயிருந்தது.. நான் என்ன வேறு புது ஆளா என்ன?. சரி இன்னும் 2 நாளில் பழையபடி வலம் வருவாள், என்று மறந்து போயிருந்தவனுக்கு, ஒருவாரமாக ஜெனி தன் வீட்டுக்கும், பள்ளிக்கும் தன் கூட வராமல் இருப்பதும், வியப்பு எழுகிறது...

ஜெனியின் அம்மாவின் குடும்பம் இந்துக்கள் , ஆதலால், அவர்கள் முறைப்படியும், கிறுஸ்தவ வழக்கப்படியும் சொந்தத்திற்கு மட்டும் தெரியப்படுத்தி, வீட்டிலேயே ஜெபமும் விருந்தும் வைக்கிறார்கள்..
டோனி, குடும்பத்தினருடன் செல்ல, ஜெனி தன் பெற்றோரிடம் மட்டும் பேசிவிட்டு தன்னிடம் பேசாதது புதிராக இருந்தது.. ஆனால் அவள் தோழிகளுக்கு குசும்புக்கு குறைவில்லை.. என்னவோ சொல்லி சிரிக்கிறார்கள்.. சரி பள்ளியில் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டான்..


திங்களன்று பள்ளிக்குச்செல்ல ஜெனி வீட்டில் வாசலில் சைக்கிளுடன் நின்று,
" பிரபு, என்னாச்சு, வரீங்களா, நான் செல்லட்டுமா?.."அதிகாரமாக..


" இருங்க அண்ணா, வாறேன்..."
" பிரபு, டோனிய முன்னால் போகச்சொல்லு, நாம பின்னால் வருவோம்னு சொல்லு.."
குரல் வந்த திசையை பார்த்தால், பினோஃபோர்ம் உடையிலில்லாமல்,ஜெனி புதிதாக பாவாடை தாவணியில்...அதுவும் பொம்மையாட்டம்..சிரிப்பு வருது டோனிக்கு... வாயைப்பொத்தி சிரிக்கிறான்..


ஜெனிக்கு கோவமாய், வெட்கமாய் வருகிறது... அவள் அன்னையை அழைத்து வருகிறாள்...அம்மாவிடம் டோனியை போகச்சொல்கிறாள்..
" ஆன்டி, என் உதவி இல்லாமல் அவள் எப்படி மேட்டிலும் , சரிவிலும் ஓட்டுவாள்.. அதுவும் பிரபுவை வைத்துக்கொண்டு..பெ.............ரி.............ய மனுஷி ஆயிட்டாளோ?.."


" பிரபு, நீ என்னுடன் வந்திரு.. ஜெனி உன்னைக்கண்டிப்பா கீழே போட்டுடுவாள்.." விழுந்து விழுந்து சிரிக்க, உடனே வந்துட்டான் பிரபுவும்..
முறைத்துக்கொண்டே, சைக்கிள் மிதிக்கிறாள் ஜெனி...அவளுக்கு அவள் மாமா சொன்னது ஞாபகத்துக்கு வருது... இனி அதிகமா, பசங்ககூட பேசக்கூடாது என்று.. அமைதியாக கொஞ்சம் எரிச்சலுடன் மெதுவாக,ஓட்டுகிறாள்..


" ஏய், என்ன , நீ?. இப்படி போனா, நாளைக்குத்தான் போய் சேரமுடியும்.. " அவசரப்படுத்துகின்றான்...எப்பவும் போட்டிபோட்டு ஓட்டும் ஜெனியா இது...ஆணுக்கு சரிசமமா ஓட்டுவாளே..

" டோனி , உனக்கு அவசரம்னா , நீ போய்க்கோ..உன்கிட்டலாம்பேசக்கூடாதுன்னு மாமா சொல்லிருக்கார்..."
" எ.ன்.ன...து...........?.. பேசமாட்டியா?. ரொம்ப சந்தோஷம் .. தொல்லை விட்டது..."
" அப்ப, நான் விரசலா போறேன்.. நீ மெதுவாவே வா.. " கோவத்தோடு,
சைக்கிளை அழுத்தி மிதித்து வேகமாய்ச்செல்கிறான்...சிறிது தூரம் சென்றதும் திரும்பி பார்த்தால் ஜெனி வரவில்லை.. நிப்பாட்டி மறுபடியும் காத்துகிடக்கிறான்.. நேரமாக, வந்தவழியே சென்று, தேடிப்பார்க்கையில்,
தாவணி , சக்கரத்தில் மாட்டி, ஜெனி எடுக்க முடியாமல் அழுதுகொண்டிருக்கிறாள்...பாவமாயும், அதே சமயம் கோவமாயும் வருகிறது...பக்குவமாய் தாவணியை எடுத்துவிடுகிறான்...


" கொஞ்சமாவது அறிவிருக்கா உனக்கு?.. இன்னிக்குதானே தாவணி போடுற?. அதுக்குள்ள ஏன் சைக்கிள்?.. பழகியபின் ஓட்டியிருக்கலாமே?.."
அழுகிறாள்..
" அதுக்குதான் நான் கூட வாறேன்னு சொன்னேன்.. மாமா சொன்னாராம், இவ கேட்டாளாம்.. லூஸு.." ஏங்கி ஏங்கி அழ ஆரம்பிக்க, பரிதாபப்பட்டு, தன் சைக்கிளை பக்கத்து கடையில் நிறுத்திவிட்டு, அவளை பின்புறம் உட்கார வைத்து, பிரபுவை முன்னால் வைத்து, பள்ளிக்கு அழைத்துச்செல்கிறான்...வேறு ஒன்றும் பேசாமல்..


டோனியின் கரிசனம் , அன்பு கசக்குது ஜெனிக்கு...பயம்தான் வருகிறது..
---------------------------------------------------------------------------­-----------------------
+2 படிப்பென்பதால் அதிலேயே வாரம் முழுதும் ஓடினாலும், லீவு நாட்களில், தன் வீட்டு ரோஜா தோட்டத்தை ஒருவழி பண்ணகூட வராதது ஏமாற்றமாயிருந்தது.. தான் பண்ணுவதுதான் சரியென்று சண்டை பிடிப்பாளே?.. ஜெனி வீட்டு கொய்யா மரம் , தன் வீட்டு மொட்டைமாடியில் காய்ப்பதால் , அத்தனையையும் எண்ணிவைத்துவிட்டு, தன் தோழர்கள் யாராவது கைவைத்தால் ஊரைக்கூட்டுவாளே.. இதற்கே அப்பாவிடம் திட்டு வாங்கித்தருவாள் , அடிக்கடி..


இப்ப சண்டைபோடக்கூட வராமால் அப்படியென்ன, விரதமாம்?..
ஞாயிறு காலையிலேயே கொயர் ( பாட்டு) வகுப்புக்கு செல்ல அவளை அழைக்க அவள் வீட்டுமுன் சைக்கிளில் நின்று கொண்டு பிரபுவிடம் கூப்பிட்டனுப்ப,
" நான் இனி பாட்டு வகுப்புக்கு வரலைன்னு சொல்லு..பிரபு.." சத்தமாக...


" வரலன்னா காது திரும்பிரும்.. னு சொல்லு பிரபு.."

" எனக்கு நிறய வேலையிருக்கு னு சொல்லு..பிரபு.."

" ஃபாதர்கிட்ட போய், இந்த பொய்யை சொல்லச்சொல்லு..பிரபு.."


பிரபு மண்டையைப்பிடித்தபடி...

ஜெனியின் அம்மாவும் போகச்சொல்கிறார்கள், ஆனாலும் மறுக்கிறாள்..அப்பா வெளியில் சென்றுள்ளார்.அப்பா இருந்தாலாவது சப்போர்ட் பண்ணுவார்...

சைக்கிளை நிறுத்திவிட்டு வேகமாய் உள்ளே வருகிறான் டோனி..

" ஏய் என்ன , நீ பாட்டுக்கு பாதில வரமாட்டேன்னு சொல்லுவ, பண்டிகை வருது... வந்து ஒழுங்கா பாடு..."

" ஆன்டி , இவளை வரச்சொல்லுங்க.. கடைசி நேரத்தில் என்ன பிடிவாதம் இவளுக்கு..?"

" அங்க நிறய பசங்க இருப்பாங்க.. கிண்டல் பண்ணுவாங்க... நான் வரல.."
" ஆமா , நீ பெரிய ரதி.. வேறு பொண்ணுங்களே இல்ல பாரு..எனக்குத்தெரியாது இன்னிக்கு நீ வந்தாகணும்..."


முணுமுணுத்துக்கொண்டே கிளம்புகிறாள்...கோவிலுக்கான பூக்களை பரித்துக்கொண்டு செல்கிறார்கள்.. ஜெனி ஏன் இப்படி மாறிவிட்டாள்.. போகும் வழியெல்லாம் என்ன பேசினாலும் பதிலளிக்க விருப்பமில்லாமல், சோகமாய்....

நான்தான் அவளை அதிகம் தொந்தரவு செய்கிறேனோ?....ஏதோ நினைத்தவனாய் டோனி, வேறு மாதிரி முடிவெடுக்கிறான்.....

******************************************************தொடரும்..************­***************************

Wednesday, September 17, 2008

மடல் பார்த்ததும் அதிர்ச்சியும் கோபமும் வந்தாலும் அவனுடைய அதிகாரமான அன்பும், அக்கறையும் இதமாகவே இருக்குது வெறுத்துப்போன மனதுக்கு.
இருந்தாலும் அவனைப்பற்றி எனக்கு என்ன தெரியும்.. முன்பின் பார்த்ததில்லை..எப்படி நம்புவது?.குழம்பித்தான் போகிறாள்.
சரி முதலில் அவன் வருவதை தடுக்க வேண்டும்.. மடலுக்கு பதில் அனுப்ப முயல ,சரி சேட்டில் சொல்லிடலாம்..
" மது நீங்க ரொம்ப அவசரப்படுறீங்க..நல்ல நட்புன்னு நினைத்தேன் ஆனா இதென்ன புதுசா?.. காதலா?.. சே.."
" ஹஹ. எப்படி நீ பிணமானதும் , நிதானமா ஒரு பூமாலை வாங்கி வரவா?.ஹலோ ஒரு பெண்ணை காப்பாத்த காதலிக்கணும்னு அவசியமில்லை..
நான் உங்களை இப்பவும் காதலிக்கவில்லையே ஹி ஹி...."
" போதும் கிண்டல்.. சீரியஸா சொல்றேன்.. தலையிடவேண்டாம் என் விஷயத்தை நானே பார்த்துக்கொள்கிறேன்..இன்னும் பிரச்னையை அதிகமாக்காமல்
இருந்தால் சரிதான்... இதுவரை நீங்கள் செய்த உதவிகளுக்கு ரொம்ப நன்றி.. இனி நீங்க யாரோ.. நான் யாரோ.."
"....."
" பை.."
"....."
" என்ன பதிலேயில்லை?.."
" அதான் சொல்லிட்டீங்களே..நான் யாரோன்னு... ஆனா உங்களை விடுவிப்பதில் என் முடிவில் மாற்றமில்லை... பேசுவதை மட்டும் நானும் நிப்பாட்டிக்கொள்கிறேன்.."
" என்ன சொல்றீங்க?.. "
" தெரில .. இப்ப ஒண்ணும் சொல்வதற்கில்லை... பை..."
" மது.. இருக்கீங்களா?.. "
" மதூஊ.. ப்ச்.. என்னாச்சு.."
நாளை வந்துடுவானோ?.. ஒருவேளை நான் இத்தனை கண்டிப்போடு பேசியிருக்கக்கூடாதோ.. சே. என்ன பேச, எப்படி புரியவைக்கன்னு தெரியாம குழப்பிட்டேனோ?.
பயந்து பயந்து ஒன்றும் சாப்பிடாமல், காய்ச்சல் வந்துவிட்டது ..
இதற்கப்புரம் வழக்கம்போல் 2 முடிவுகள்..




--------------------------------------------------------------------------------------------------------------------------------------

முடிவு 1.: ( மதியே..!!!!)
காய்ச்சலில் ஒன்றுமே தோன்றாமல் அப்படியே ஸ்வெட்டரை , குல்லாவை போட்டுக்கொண்டு பால்கனியில் உட்கார்ந்து தூங்கிவிட்டாள்..
திடீரென்று 2 கார் ஹாரன் ஓசை கேட்டு சட்டென்று விழித்தாள்...
கீழே பார்த்தால்..
" யாரது .. விது கூட... ஒரு பெண்மணி.. ஓஹ் அந்த நடனக்காரி.. அடுத்த காரில் 2 ஆட்களுடன்...அ...து அ.....து...."
" கணினி சொல்லித்தரும் அலுவலகத்தின் இணையப்பக்கத்தில் பார்த்த மாதிரி... அப்போ.. இது மதுவா...????????????"
அப்படியே மயக்கம் வரும்போல் இருக்கிறது...
என்ன நடக்கப்போகுதோ அய்யோ கடவுளே.. நான் இன்னிக்கு காலி...எப்படி கொல்லப்போகிறானோ?.. அதுக்கு முன்னால் நான் பெற்றோரிடம் பேசணுமா..?."
இவள் படியிறங்க , இறங்க ஆயிரம் எண்ணங்கள், மண்டைக்குள் ஏறுது...
சரி முதலில் மன்னிப்பு கேட்டு பார்ப்போம்... அவன் வந்ததும்..
அதற்குள் காலிங் பெல் இம்சிக்க,
தூக்குக்கயிறுக்கு செல்வது போல், மெதுவாக அடிமேல் அடி எடுத்து நடக்கிறாள்...பாதி உயிர் பயத்திலேயே போய்விட்டது..
கண்கட்டிய பசி மயக்கத்தில் கண்களை மூடிக்கொண்டு கடவுளை மட்டும் எண்ணிக்கொண்டு, கதவைத் திறந்தவள்,
அப்படியே அந்த ஷூவின் காலில் விழுந்து கதற ஆரம்பித்தாள்... மன்னியுங்கள் என்று..
மெதுவாக இரு கரம் அவளது தோளைத்தொட,
அடுத்து எங்கு அடிக்கப்போகிறானோ, எங்கே அப்படி போய் விழுவோமோ என்று வலிமை இழந்தவளாய் எண்ணும்போதே, அவளை நிற்கவைத்து ஆதரவாய் அணைக்க முற்பட்டது... கரங்கள்..
அப்போதுதான் தடுமாறி விலகி, முகம் பார்த்து திடுக்கிடுகிறாள்...
" ஒன்றும் பயப்பட வேண்டாம் என கண்ணாலும் , சைகையாலும் அவளை அமைதிப்படுத்துகிறான் மது...
அவளையறியாமல் அவன் கைகளை இறுக பற்றிக்கொள்கிறாள் குழந்தையைப்போல்...
அதற்குள் வெளியே பார்க்க, விதுவின் பெண் உதவியாளர் விதுவின் கைபிடித்து ஏதோ பேசிக்கொண்டிருக்க, இந்தப்பக்கமே திரும்பாமல் விது தோல்வியில்.
அவமானமாய் வெறித்துப்பார்த்துக்கொண்டிருக்கிறான் எங்கேயோ..
" தேவையானதை எடுத்துக்கொள் .நாம் உடனே இந்தியா கிளம்புகிறோம், போலீஸ் பாதுகாப்போடு...எல்லாருக்கும் தெரியப்படுத்தியாச்சு.."
அடுத்த அரை மணிநேரத்தில் விமான நிலைய சாலையில் மது வண்டி ஓட்டிக்கொண்டே தொலைபேசியில் பேசிக்கொண்டே, தேவையான கடிதங்களை புரட்டிக்கொண்டே,
பின் இருக்கையில் இருக்கும் ரதியிடம்,
" இப்ப பரவாயில்லையா நீ...?.. பதட்டமில்லையே..."
" ம்.. நன்றாகவே இருக்கிறேன்.. மிக்க நன்றி..உதவிக்கு."
".நன்றில்லா.............ம் வேண்டாம்.. ஒரு உதவி செய்வீங்களா?."
" ஒஹ் கண்டிப்பா.. சொல்லுங்க செய்கிறேன்.."
" கண்டிப்பா?."
"ம்.ம். கண்டிப்பா.."
" இந்த காதல் னு சொல்றாங்களே.. அப்படீன்னா என்னதான்னு எனக்கு தெரியலை.. ஒரு பெண் தேவையாம்...நீங்க கொஞ்சம் உதவுங்களேன் அந்த புத்தகத்தை படிக்க.:-))."
"..."
" என்ன பதிலே காணோம்?.."
"இல்ல உங்களை எத வெச்சு எப்படி அடிக்கலாம் னு .யோசிக்கிறேன்......ஹஹ"
பனிபொழிய ஆரம்பித்த அந்த இடத்திலேயே வண்டியை நிப்பாட்டினான்.... புன்னகையோடு பின் இருக்கையின் கதவை திறந்து கைகளை நீட்ட........

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
முடிவு 2.: ( விதியே..!!)
இரவு வழக்கம்போல மனைவியை அணைக்க முற்பட்ட விது அவள் போர்வைக்குள் காய்ச்சலில் நடுங்குவது தெரிந்தது...
" ஏய் மாத்திரை ஏதாவது போட்டியா என்ன?.."
பதிலேயில்லை.. சரி தூங்கட்டும் என விட்டுவிட்டான்... சலிப்போடு..இருந்தவனை ரதியின் குரல் தூக்கிப்போட்டது..
" பிளீஸ் மது வராதீங்க வீட்டுக்கு.. அவர் என்னை கொன்னே போட்டுடுவார்.. மடலிலேயே பேசிக்கொள்ளலாம்.. பொறுங்க..பிளீஸ்..பிளீஸ்.."
தூக்கத்தில் காய்ச்சலில் உளறுகிறாள்..
முதலில் கோபப்பட்டவன், பின் நிதானமாக கவனிக்க ஆரம்பித்தான்.. கலக்கத்தோடு மடல் பார்க்க கணினியில் நுழைந்தான்...
தானாகாவே லாகின் போட்டு வைத்திருந்தாள் பேதைப்பெண்....
ஒவ்வொன்றாக அவளுடைய சாட் டினை கடந்த 6 மாத காலமாக பேசியதை வாசிக்க வாசிக்க, அவனுள் மிருக வெறி வந்தது..
ஆனால் கடைசியில் அவள் போக விரும்பாமல் தன்னுடனே இருக்க நினைத்ததை எண்ணிப்பார்த்து மிகுந்த ஆச்சர்யப்பட்டான்..
இத்தனை கொடுமை பண்ணியிருந்தும் இன்னும் நான் திருந்துவேன் என்ற நம்பிக்கையோடு இருக்கிறாளே.. இவளுக்குதான் என்ன துணிச்சல்..
சே நான் எவ்வளவு கேவலமானவன்.. கூண்டு திறந்தும் பறக்க விரும்பாத அன்னப்பறவை...
முதல்முறையாக அவள் அருகில் வந்து மென்மையாக அவள் நெற்றியில் முத்தமிட்டு, அவளுக்கு வேண்டிய மருந்தையும் நீரையும் எடுத்து வந்து
அருகில் அமர்ந்து அவளை கைத்தாங்கலாக எழுப்பி தோளில் சாய்த்து மருந்து கொடுத்தான்... சிறிது நேரத்தில் சுய நினைவு வந்தவளாய், தன் கண்ணை
கசக்கி கசக்கி கனவா, நினைவா என பார்த்துக்கொண்டாள்..
" ரதி.. பயப்படாதே மா. என்னை மன்னித்துக்கொள்.. உன்னிடம் எவ்வளவு கேவலாமாக நடந்துகொண்டேன்...இனி ஆயுசுக்கும் நாந்தான் உனக்கு கடமைப்பட்டுள்ள அடிமை.. என்னை குறித்து எனக்கே வெக்கமாயிருக்கு... "
" அய்யோ என்னாச்சு என்ன சொல்றீங்க.. நான் ஏதாவது தப்பா.."
அவள் வாயைப்பொத்தினான்...
" தப்பெல்லாம் என் மேலதான்.. இப்பவும் நீ விரும்பினால் மதுவிடம் நீ செல்லலாம்..எனக்கு தண்டனையாக..."
கண்ணீர் முட்டிக்கொண்டு வர அவன் வாயைப்பொத்தி விட்டு அவனை அணைத்துக்கொண்டு ஒரு குழந்தையாக அவன் மடியில் தஞ்சமடைந்தாள்...
வெளியே முதல் பனி மழை மென்மையாக பொழியத்தொடங்கியது...........
மெதுவாக போர்வை போத்தி பால்கனிக்கு அழைத்துச்சென்றான் மெளனத்தில் காட்சிகள் மட்டும் பேச..

*****************************************முற்றும்*******************************************************************

Wednesday, September 3, 2008




ரதியே விதியா? மதியா?



குளித்து முடித்து தலையில் ஈரம் சொட்ட சொட்ட வெளியில் வந்தவளை முரட்டுத்தனமாய்
இழுத்து அடுத்த காட்சிக்கு தயார்படுத்தினான்..


லண்டன் குளிரோடு சேர்ந்து போட்டிபோடுது பயத்தில் நடுக்கம்.
எரிச்சலும் கோபமுமாய் ரதி...


ஆனா ஒன்றுமே சொல்ல முடியாது அவனிடம்...திருமணம் முடிந்து 1 வருடம் ஆகப்போகிறது.. இந்த அடிமைத்தனத்தில் அவள் மூழ்கி..


ஜாதகம் சரியாக அமைந்துள்ள காரணத்திலும், ஏழ்மையாலும், அவள் அழகு இங்கு விலைபோனது..


விது அல்லது விதி என அழைக்கப்படும் வித்யாசேகரன் தோற்றத்தில் ஜெயம் ரவி போலிருந்தாலும் குணத்தில் பயங்கர வில்லன்.


வெளிநாட்டு படிப்பு, உயர்ந்த உத்யோகம் கொடுத்த தெம்பு...யாரையும் விலைக்கு வாங்கிடலாம் என்னும் மனப்பான்மை..


படோபகமாக சென்னையில் திருமணம் முடித்த கையோடு ரதியை லண்டனுக்கு அழைத்து வந்து 2 மாதம் மோகத்தில் நல்லபடியாகவே கவனித்ததென்னவோ உண்மைதான்...


அதன்பிறகுதான் அவளை அடிமைப்படுத்த தொடங்கினான்..
தனிமை, கொடுமை எல்லாமுமாய் சேர்ந்து அவளை பாடாய் படுத்தியது...


இத்தனைக்கும், எல்லா துறையிலும் சிறந்து விளங்கியவள் ..எப்போதும் கலகலப்புடன், ஏதாவது போட்டியில் பங்கேற்று பரிசு வாங்கிக்கொண்டு உற்சாகமாய் வலம் வந்தவள்..


ஏழ்மையைப்பற்றி ஒருபோதும் அலட்டிக்கொண்டதில்லை அவள் திருமணம் வரையிலும்..


தன் கீழே இரு தங்கை இருந்த காரணத்தினாலும், எந்த வரனுக்கும் அவள் சம்மதித்தாள்..பெற்றோருக்கு எந்த பாராமும் தரக்கூடாது என்று மட்டுமே எண்ணினாள்..


அதிலும் வலிய இப்படி ஒரு பணக்கார வரன் அமைந்தது எல்லோரும் பெருமை படும்படியாக திருமணம் நடந்தது, இவற்றைவிட, பெற்றோரின் பாரம் சிறிதாவது குறைந்ததே என்பதில்தான் அவளுக்கு முழு மகிழ்ச்சியும்..


லண்டன் வந்ததும் தான் தெரிந்தது எப்பேர்பட்ட காமக்கொடூரனிடம் சிக்கியுள்ளோம் என்று..சிகரெட் வைத்து சுடுவதும்.. சாப்பாடு பிடிக்காவிட்டால் அவள்மேல் தூக்கி எறிவதும்..


ஆனாலும் தன் வீட்டினர் யாருக்கும் தெரியப்படுத்தி பச்சாதாபமோ , ஆறுதலோ பெறவில்லை..எப்படியும் திருத்திடலாம் என்றே நாட்களை எண்ணி வந்தாள்..பொறுத்துக்கொண்டாள்..தன் தங்கைகளுக்கு திருமணம் முடியும் வரையாவது பொறுக்கணும் என.

ஆனால் தன் துக்கங்களை பகிர்ந்து கொள்ளக்கூட பக்கத்தில் யாரும் தோழி இல்லையே..எங்கு அழைத்துச்சென்றாலும் கழுகுக்கண்ணால் பயமுறுத்துகிறான்...யாரிடமும் பேச அனுமதியில்லை...


இந்த நேரத்தில்தான் அவளுக்கு இணையத்தின் துணை அவனிடம் மன்றாடியதில் படிப்பதற்காக அனுமதி கிடைத்தது...


சில குழுமங்களில் , கணினி சார்ந்த படிப்பு பற்றி விவரம் கேட்க அவள் தன் மடலின் ஐடி தர, மறுநாள் வந்து விழுந்தது ஒர் மடல்..


அப்படித்தான் அறிமுகமானான் மதி என்ற மதியழகன்..நடிகர் பிரசன்னா போல.. புத்திசாலியும், அதே சமயம்,குறும்பாயும்.


சிறிது சிறிதாக கணினி இணையம் மூலமே சொல்லித்தரும் பொறுப்பிலிருந்தான் அவன்..தமிழன் என தெரிந்ததும் இரட்டிப்பு சந்தோஷம்...


அப்படியே கணினியோடு நல்ல நட்பும் ஏற்பட கொஞ்சம் கொஞ்சமாய் தன் வருத்தங்களை பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தாள்...



மதியும் தந்தை இழந்தவன்.. தாய் கஷ்டப்பட்டு தன்னை படிக்க வைத்து லண்டன் அனுப்பியதாகவும் தன் தாய் மேல் உயிரே வைத்திருப்பதாக கூற அவன் மேல் ரதிக்கு மரியாதை பன்மடங்காயிற்று..


ஒருவாரமாக நல்ல காய்ச்சல் ரதிக்கு.. அதைப்பற்றி சிறிதும் அலட்டிக்கொள்ளவேயில்லை விது.


" மாத்திரை சாப்பிடு எல்லாம் சரியாபோயிரும்.. ரொம்ப பிலிம் காட்டாதே.." இதுவே அதிக கரிசனம் கணவனிடமிருந்து...
ஒருவாரமாக மடலோ எந்த பதிலோ வராமல் இருப்பது கண்டு மதி பயந்துதான் போகிறான்..மடல் மேல் மடல் அனுப்புகிறான்..


பதிலேயில்லை.


"ஒருவேளை அந்த கொடூரன் அவளை ஏதாவது செய்திருப்பானோ?.. சே நான் ஒரு மடையன்.. போன் நம்பராவது வாங்கி வைத்திருக்கலாம்.. "


யோசிக்கும்போதே சாட் அழைப்பு மதியிடமிருந்து... அப்படி ஒர் உற்சாகம் அவனுக்கு...


அவனுடைய பரிதவிப்புகளை, ஆறுதலை பார்த்து அதிசயித்துதான் போகிறாள் ரதி..ஆனாலும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை...மிக சாதாரணமாகவே பேசுகிறாள்


" ஏன் ஒரு மடல் கூட இல்லை.. நான் எவ்வளவு பயந்தேன் தெரியுமா?.."


" காய்ச்சல் நேரம் இணையம் பார்க்க விரும்பலை அதான்.. ஆமா நீங்க ஏன் பயப்படணும்..?"


" உன்னை நான் ரொம்பவே மிஸ் பண்றேன் ரதி..எனக்கும் ஒரே நல்ல தோழி நீதான்."


இப்போது எரிச்சலாய் வந்தது அவளுக்கு..


" யாரும் என்னை மிஸ் பண்ணுவதெல்லாம் எனக்கு பிடிக்காது...சரி அப்புரம் பேசுகிறேன்" என்று நாசுக்காக சேட் ஐ கட் பண்ணுகிறாள்..

ஆனாலும் தனக்கென ஒரு ஜீவன் பரிதாபப்பட, விசாரிக்க இருக்கே என உள்ளூர மகிழ்ந்தாலும்...


அவனுடைய அலுவலக பார்ட்டிக்கு வேண்டா விருப்பாய் அழைத்துச்சென்றான் விது.. அங்கும் அவனின் உதவியாளரான நடிகை போன்றிருந்த பெண்ணோடு நடனமாடுவதும், அவ்ளோடு குடித்து கும்மாளமிடுவதையும் சகித்துக்கொண்டாள்...எரிச்சலாயிருந்தாலும்..


மனச்சுமை நீங்க மதியிடமும் சொல்ல அவனுக்கோ கோபம் வருகிறது...


" நீ ஏன் இவ்வளவு கஷ்டப்படணும் ரதி.. பேசாம இந்தியா போய்விடு.. ஒரு வேலை பார்த்து கூட பிழைத்துகொள்ளலாம்..இப்படி கொடுமை அனுபவிப்பதைவிட.."


" எல்லாம் ஒரு குழந்தை வந்தால் சரியாகிவிடும் மதி...ஆனால் அதற்கும் 2 வருடம் பொறுக்கணுமாம். அதுதான் என் வேதனை.."அதையும் சிரித்துக்கொண்டே சொல்கிறாள்..


அவளைப்பார்க்க பாவமாய் இருக்குது மதிக்கு.. பெண்ணாய் பிறந்தால் இத்தனை வேதனை அனுபவிக்கணுமா என்ன?.. முதலில் தன் தாய் , இப்ப இவள்..


ஒரு முடிவுக்கு வருகிறான் மதி...ஆனால் ரொம்பவும் தயக்கம்.. மெதுவாக நடவடிக்கை எடுக்கணும். முதலில் அம்மாவிடம் சம்மதம் வாங்கணும்... அம்மாவுக்கு எடுத்துச்சொல்ல, அவரோ எல்லாத்துக்கும் பயப்படுகிறார்..


" அடப்பாவமே.. தம்பி, நல்லாயிருப்பே, அந்த பொண்ணை அவ வீட்டுல சேர்த்துடுப்பா எப்படியாவது..இவ்வளவு கொடுமை அனுபவிக்கிறது தெரிஞ்சு எந்த பெற்றோரும் சும்மா இருக்க மாட்டாங்க..."



" அய்யோ அம்மா, இந்த விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம் னு நினைக்கிறா...அதனால்தான் நானே அவளுக்கு விடுதலை தரலாமான்னு யோசிக்கிறேன்...ரொம்ப நல்ல பொண்ணும்மா.."


"என்ன சொல்லன்னே தெரில தம்பி.. நீ எதை செய்தாலும் நல்லதாய் செய்வாய்னு மட்டும் எனக்கு நம்பிக்கை இருக்கு.. ஆனாலும் உனக்கு எந்த பிரச்னையும் வரக்கூடாதே.."


ஒருவழியாய் அம்மாவின் சம்மதம் கிடைத்ததும், அவளிடம் தொலைபேசி எண் கேட்கிறான்..ஆயிரம் யோசனைக்குபின் கொடுக்கிறாள் பயந்துகொண்டே..

அடுத்த வாரம்....


" பிறந்த நாள் வாழ்த்துகள் ரதி..."


திடீரென அழைப்பு வந்ததும் அதிலும் தானே மறந்திருந்த பிறந்த நாள் வாழ்த்துடன்... அதிர்கிறாள்..


" ம். அங்.. எ..ன்.ன.. யாரு..நீங்..க..?"


"நான் மதி.. சரி வாழ்த்து சொன்னா நன்றி லாம் கிடையாதா.?"


" அய்யோ சாரி.. நானே மறந்துட்டேன் .. நீங்க எ..ப்ப..டி..?"


" ஓஹ்.. அந்த அளவு ஆயிபோச்சா நிலைமை..?"


"இல்ல அப்படி இல்ல.. சும்மாதான்...சரி வேலையிருக்கு அப்புரமா பேசுறேன்..."


" சரி உனக்கு விருப்பமிருந்தால் நான் உனக்கு ஒரு விருந்து தரலாம் னு நினைக்கிறேன்...உங்க அப்பா சார்பானு வெச்சுக்கோயேன்.."


" அய்யய்யோ அதெல்லாம் ரொம்ப அதிகம்.. அவருக்கு தெரிஞ்சா கொன்னே போட்டுடுவார்..."


" தெரிஞ்சாதானே?.. "


" இத பாருங்க நீங்க என் தோழர் என்பதால் ரொம்ப உரிமை எடுத்துக்காதீங்க..."


"சரி நேரடியாகவே கேட்கிறேன் ...எத்தனை நாள் இந்த சிறையிலேயே இருப்பதாய் உத்தேசம்.."


" என்ன சொல்றீங்க நீங்க .. எனக்கு விதிச்சது இதுதான்... இப்படியே வாழ்ந்துட்டு செத்து போறேன்.. "


" சரிதான்.. வாழ்ந்தா சரி.. அதுதான் தினம் தினம் செத்துகொண்டிருக்கிறாயே..??"


" ம். பரவாயில்லை எல்லாம் ஒரு குழந்தை வந்தால் சரியாயிடும்... வாழ்க்கையே ஒரு போராட்டம்தானே.. எல்லாருக்கும் ஏதாவது ஒரு விதத்தில் கஷ்டம் இருக்கத்தான் செய்கிறது.."


"ம். தத்துவமா. ஹஹ.. நல்லாருக்கு.. கேக்க..நீங்கெல்லாம் திருந்தவே மாட்டீங்களா??"


கொஞ்சம் கோபத்துடன் இப்போது..


"கணவனுக்கு பயம், பெற்றோருக்கு மரியாதை உடன்பிறந்தவருக்கு நன்றி, எல்லாம் இருக்க வேண்டியதுதான்.. ஆனால் எல்லாம் அளவோட... தன்னையே அழித்துக்கொண்டு பெரிய தியாகி ஆகி இதையெல்லாம் செய்யணும்னு கட்டாயமில்லை..."

" சரி எனக்கு வேலையிருக்கு.... நான் தொலைபேசியை வைக்கிறேன்....."

" கொஞ்சம் இருங்க... நான் இன்னிக்கு உங்ககிட்ட பேசியாகணும்..நீங்க ஒத்துழைக்காவிட்டால் உங்க வீட்டுக்கு தெரியப்படுத்த வேண்டி வரும்.."


அழ ஆரம்பித்துவிட்டாள்..


" என்ன மிரட்டலா?..இதுக்குதான் உங்ககிட்ட சொன்னேனா?."

" மிரட்டல் எல்லாம் இல்லை... ஆனா நீங்க ஒரு நல்ல முடிவு எடுக்கணும் இந்த கூண்டிலிருந்து விடுபடணும்...அதுதான் என் ஆசை..."


" விடுபட்டு அப்புரம் , வேலை கிடைத்து, அப்புரம் இரண்டாவது திருமணத்துக்கு பெற்றோர் இன்னும் வேதனை அனுபவிக்கணுமா?.. "


" ஏன் எப்பவுமே எதிர்மறையா நினைக்கிறீங்க..முதலில் வெளியே வாங்க... மற்றதை அப்புரம் யோசிக்கலாம்.."

" நீங்க நடைமுறை தெரியாமல் பேசுறீங்க.. மாப்பிள்ளை கிடைப்பது ஒன்றும் எளிதல்ல.. அப்படியே கிடைத்தாலும்..எனக்கு இன்னொரு வாழ்க்கக பற்றி நினைத்துக்கூட பார்க்கவில்லை.."


" இனி நினையுங்களேன்..சரி நேராகவே சொல்கிறேன்...நான் உங்களை திருமணம் செய்ய விரும்புகிறேன்.. சம்மதிப்பீங்களா?... "


அதிர்ச்சி அடைகிறாள்..


" கண்டிப்பா முடியாது... எவ்வளவு தைரியம் உங்களுக்கு.. இதுக்குத்தான் என்னிடம் பேசினீர்களா?.. " சட்டென்று வைத்துவிட்டாள் தொலைபேசியை...


மணிக்கணக்காய் அழுதாள் ஏன் என்று தெரியாமலே... அவனுடைய அக்கரை, தன்னுடைய கஷ்டம் பெற்றோர், தங்கையின் நிம்மதி , கணவனின் கொடுமை எல்லாம் மாறி மாறி திரைக்காட்சி போல வந்து குழப்புது அவளை.. ஆனாலும் தன் குடும்ப கெளரவத்திற்காக பிடிவாதமாய் இருக்கிறாள் தன் முடிவிலிருந்து...


அடுத்த ஒரு வாரம் அவனிடம் தொடர்பு கொள்ளாமல் பார்த்துகொண்டாள்... ஆனால் அவனிடமிருந்தோ மடலுக்கு மேல் மடல்...

இந்த ஒரு வாரம் அவனிடம் பேசாமல் இருப்பது பெரிய சோதனையாக இருக்குது..

ஏன் ஒரு நல்ல நண்பனாவே இருக்கலாமே .. ஏன் இப்படி கட்டாயப்படுத்தணும்.. நான் ஏதும் சொல்லி இருக்கக்கூடாதோ அவனிடம்... இப்ப அவனையும் இழந்து நிற்கிறேனே..


ஆசுவாசப்படுத்திக்கொண்டு மடல் திறந்தவளுக்கு அதிர்ச்சி...பயமும்...


" இந்த மடலுக்கும் பதில் இல்லாவிட்டால் நாளை நான் உன்னை நேரில்

சந்திக்கவேண்டி வரும்
"



**********உங்க முடிவு என்னன்னு சொல்லுங்க அப்புரமா முடிக்கிறேன்...***************