Wednesday, November 24, 2010

அம்மா புராணம் - 2. ( முதம் மனைவி இருக்கும்போதே இரண்டாம் கல்யாணம் )



































" அக்கா நான் இந்த வாரம் கிளம்பி வருகிறேன்..திருமணம் நடக்குமா?..." பயத்தோடு கேட்டார் மாமா..

என் அம்மாவின் சொந்தக்கார தம்பி அவர்..பொறியாளர்.. கை நிறைய சம்பாத்யம்.. வசதியும்..

திருமணம் முடிந்து 10 வருடம் குழந்தையில்லை.. மனைவியிடம் கோளாறு..

அதுமட்டுமல்ல அந்த காலத்தில் பாருங்க பெண்ணுக்கு அதிக வயதிருந்தாலும் , தன் மத/ஜாதியில் மாப்பிள்ளை கிடைக்காவிட்டால் , மாப்பிள்ளை வயது குறைந்திருந்தாலும்

மணமுடித்துள்ளனர்.. இப்படி பல பேரை பார்த்துள்ளேன்..

அதே தான் இந்த மாமாவின் கதையும்..

அத்தையை பார்த்தால் மாமாவுக்கு அம்மா/அக்கா போல் வயதானவராய் தோன்றுவார்..வியாதியஸ்தரும் கூட..

ஆனால் இருவருமே அன்பான தம்பதிதான்.. சண்டை சச்சரவேதுமில்லை..

ஆனால் மாமாவுக்கு இல்வாழ்க்கை திருப்தியோ இல்லை , குழந்தையின்மை வருத்தமோ , ஏதோ ஒன்று இருந்துள்ளது பல வருடம்..

மனைவியை விவாகரத்து செய்ய பல காரணமிருந்தும் செய்ய மனமில்லை..

ஆனால் மறுமணம் செய்ய மட்டும் அனுமதி பெற்றார் ...

அம்மாவிடம் தன் குறையை சொல்ல , அம்மாவுக்கு தன் சொந்தத்தில் திருமணமாகாமல் இருக்கும் பெண் நியாபகத்துக்கு வந்தது..

அதை மாமாவிடம் சொல்ல , மாமா சம்மதிக்க , அம்மா அப்பெண்ணிடம் பேச , அவரும் விருப்பம் சொல்ல ...

ஆனால் அம்மாவின் சொந்தங்கள் அனைவருமே இதுக்கு எதிர்ப்பு...

மாமா வெளியூரிலிருந்து நெல்லைக்கு வருவதற்குள் அம்மா மற்ற விஷயங்களை ரகசியமாக கவனிக்கணும்...

என்ன அது.?..

அம்மாவின் அந்த அத்தை பெண் ஜாதக பலனால் திருமணம் ஆகாமலேயே இருந்தார் பல வருடம்..

அதற்கான முயற்சி எடுக்க பெற்றோரும் இல்லை..

சகோதர சகோதரிகளுக்கும் முடியவில்லை.. தட்டிக்கொண்டே போனது..

அந்நேரம் அம்மா இந்த மாமாவுக்கு அந்த பெண்ணை முடிக்க பேசியதும் பலத்த எதிர்ப்பு..

( உடனே என்ன சொல்வார்கள் தெரியுமா , அம்மாவிடம் . ? . உன்கிட்ட 4 பெண் இருக்கே.. அதை கட்டிக்கொடு.. )

10 வருட வித்யாசம்.. இரண்டாவது திருமணம் வேறு..ஆனால் அந்த அத்தைக்கு ( பெண்ணுக்கு ) மாமாவை கட்டிக்கொள்ள சம்மதம்..

மாமாவின் குணம் அப்படி. யாருக்குமே பிடிக்கும் ..பார்க்க கருப்பு சரத்குமார் போல இருப்பார்..

இப்ப அம்மாவை அந்த பெண்ணை பார்க்கவே அனுமதிக்க மாட்டேனென்கிறார்கள்..

அம்மாவோ அவ்வூரிலுள்ள இன்னோரு மாமா வீட்டுக்கு சென்று ரகசியமாக அப்பெண்ணை வரவழைத்து பேசுகிறார்..அவர்கள் வீட்டிலுள்ளவர் பாதி பேருக்கு கூடதெரியாமல் ரகசியமாக பேசணும்.. அங்கேயும் எதிர்ப்பு..

மாமா வந்தார்கள்.. நெல்லைக்கு..

அப்பெண்ணை ரகசியமாக சொந்தக்கார பெண்ணோடு எப்போதும் செல்லும் கோவிலுக்கு வர வழைத்தார்கள்..அம்மா...

நம்பிக்கைக்குறிய சிலரோடு சென்று கோவிலில் வைத்தே மாமா அத்தை திருமணம் நடந்தது..

திருமண செய்தி பரவியதும் அவ்வளவுதான்...

அம்மா மேல் காவல்துறையில் புகார் செய்துவிட்டனர்..அத்தையின் சகோதரர்..

கூடவே அம்மாவை பிடிக்காத சிலரும் கூட்டாளிகளாக.. :)

காவலர்கள் எங்கள் வீடு தேடி வந்தனர்.." உங்கம்மா பெண்ணை கடத்திக்கொண்டு போனதாக தகவல் வந்துள்ளது . விசாரிக்கணும் " என..

நாங்க பயந்துதான் போனோம்.. :)

ஆனால் சொந்தக்காரர் ஒருவர் இன்ஸ்பெக்டராக இருந்தார் அப்போது.. நெல்லையிலேயே

அம்மா தொலைபேசினார்.. தாங்கள் எல்லாரும் மிக பத்திரமாக காவல் நிலையத்துக்கு சென்று விளக்கமளித்துவிட்டு வந்தாச்சு

பயப்பட வேண்டாம் என..அப்புரம்தான் நிம்மதியானோம்..( முதல் அத்தையின் சம்மத கடிதம் இருந்தது.. அவரிடமும் தொலைபேசினர் காவலர் )

பின் மாமாவும் அத்தையும் எந்த உறவினர் வீட்டிலும் தங்காமல் விடுதியில் தங்கிவிட்டு அக்கம் பக்கம் ஊர்களுக்கு சென்றுவிட்டு

மாமா தான் வேலை பார்க்கும் இடத்துக்கு அழைத்து சென்றார்.

முதல் அத்தையும் இரண்டாவது அத்தையும் நட்பாக சில காலம் பிடித்தது..

ஆனால் இரண்டாவது அத்தை மிக நன்றாக சமைப்பதோடு வீட்டையும் நோயாளி அத்தையையும் பார்த்துக்கொண்டதும் குடும்பத்துக்கு திருப்பம் வந்தது..

அதோடு அத்தைக்கு இரண்டு குழந்தை பிறந்தது குடும்பமே மகிழ்ச்சியானது...குழந்தைகள் முதல் அத்தையை "மம்மி" என்றும் இரண்டாவது அத்தையை "அம்மா
" என்றும் அழைப்பார்கள்..

நெல்லைக்கு வந்தால் எங்க வீட்டுக்கு வருவதோடு சரி.. தன் சகோதரர் வீட்டுக்கு கூட அத்தை செல்லாமல் இருந்தார் சில காலம்..

முதல் அத்தை ஆசிரியராக இருந்ததால் படிப்பெல்லாம் அவர் கவனிப்பார்... பெருமையாக...

இரண்டாவது அத்தை கூட இப்ப ஸ்டைலா உடுத்த , மாற ஆரம்பித்தார்கள்..மாமாவின் பதவிக்கு பொருத்தமாக..

இன்று குழந்தை இருவரும் நன்று படித்து வேலையிலும்... பெற்றோர் மூவரையும் அருமையாக கவனித்துக்கொண்டு..

ஆனால் இன்று அந்த அத்தை மாமா நெல்லைக்கு வந்தால் அம்மாவை சந்திப்பதில்லை.. இடையில் பலரின் குசும்பு வேலைகளை சொல்லவும் வேண்டுமா என்ன?

இதுதானே உலகம்..?.. ஆனால் அம்மாவுக்கு அந்த மன திருப்தி போதுமே.. அவர்கள் இன்று மகிழ்ச்சியாக இருப்பதே இவரின் வெற்றி..

அதுதானே முக்கியமேயொழிய அவர்கள் கஷ்டப்பட்டுக்கொண்டு இருந்து தம்மோடு அவர்கள் நட்பாயிருப்பதை விட?..

அம்மாவுக்கு எத்தனை எத்தனை நல்ல நட்புகள் உண்டோ அத்தனைக்கு அத்தனை எதிராளிகளும்...உருவாகினர் ..:)

( சராசரி மனிதர் நட்பில்லாவிட்டாலும் , எதிரிகள் இருக்ககூடாது என்ற கவனத்திலேதானே நல்லது செய்யாமலும், தீமையை கண்டிக்காமலும் செல்கிறார்.? நமக்கெதுக்கு வம்பு என ?.. ) .

ஆக நட்புகள் எதிரியாவதும், எதிரிகள் நட்பாவதும் மாறி மாறி வந்தது அம்மாவுக்கு..

ஆக அவரது ஒவ்வொரு செயலும் ஒரு போராட்டமாகவே அமையும்..

அதே போல நன்மை செய்தவரெல்லாம் கூட பழி போட்ட காலமும்..

இது இயற்கையின் விதி என எடுத்துக்கொள்வாரேயொழிய அதனால் அவர் காரியம் எதுவும் தடை பட்டு நின்றதேயில்லை...

மிக மிக என்னை ஆச்சர்யப்படுத்தும் விஷயம் என்னவென்றால் , எதிரி எனப்படுபவர், சண்டையிட்டிருப்பார், அம்மாவை மோசமாக பேசியிருப்பார், ஆனால் அவர் பிள்ளைகளுக்கோ , அவருக்கோ ஒரு பிரச்னை என்றால் எவ்வித மனக்கச்சப்புமின்றி இவர் வலிய சென்று உதவுவார்...அவர்கள் வெட்கப்பட்டுக்கொண்டு தயங்கினாலும் கூட..

மனதில் வஞ்சம் வைத்து பார்த்ததில்லை.. ஏனெனில் அதை பற்றி நினைக்ககூட அவர் நேரம் செலவழித்திருக்க மாட்டார் என நினைக்கிறேன்..

She was always on the run to help someone .. She kept moving , occupied, busy always & a very active personality .... Never remained stagnant.. Never worried about comments or complaints..

அவர் எதைக்கண்டும் தன் ஓட்டத்தை உதவியை நிப்பாட்டியதில்லை.. உதவி செய்ய ஒரு சந்தர்ப்பம் மட்டுமே வேணும் அவருக்கு..

அம்மாவை யார் திட்டினாலும் எமக்கு கோபம் வரும்.. ஆனா அவர் கண்டுக்கிட்டதேயில்லை..

அதையே தன் வாழ்வின் வெற்றியாக , லட்சியமாக நினைத்திருக்கக்கூடுமோ?..


சொந்தமோ, நட்போ எப்போதும் ஒருபோதும் இருப்பதில்லை. அவரவர் சூழல் மாற , வட்டங்கள் மாற மனிதனும் மாறுவார்கள் என்பதை தெரிந்து வைத்து எமக்கும் கற்றுதந்தார்.. அதை ஏற்க பழக்கினார்...

படம் : நன்றி கூகுள்..

அம்மா புராணம் - 1 துணிவு படிக்க

அம்மா செய்துவைத்த மறுமணம் படிக்க





.