Wednesday, February 27, 2008

பாகம் - 15- நீ என் தோழியா இல்லை காதலியா?..

ஆஸ்திரேலியா பயணத்துக்குண்டான அனைத்து ஏற்பாடுகளுடன் 5 பேர் குழுமமாக ஏர்போர்ட்டில்.. மது பேண்ட் சட்டையில்.. முதல்முதலாக அவளை இந்த உடையில் பார்த்து, ரசிக்க, தன்னையே கட்டுப்படுத்துகிறார்..

அழகுக்காகவா விரும்புகிறேன்? இருந்தாலும் இடத்திற்கேற்ப ஆடை உடுத்தும் அழகு.. ரசிக்கிறார்தான் .

கடைசிவரை ரகுவுக்கு சொல்லிவிட்டு சொல்லலாம் என்றால் அவன் தொலைபேசியில் பதிலில்லை..

அன்று வேந்தனுடன் இந்த நிலைமையிலும் சிரித்து பேசியதை கூட தப்பாக எடுத்திருப்பானோ.. ??. பேசவே மாட்டேங்கிறார்..

கலக்கத்துடன் மது... அவள் கலக்கம் அறிந்து மிகவும் அனுசரணையாக வேந்தன், ஏர்போர்ட்டில் எல்லா வேலைகளையும் அவரே செய்கிறார், அவளை அமரச்செய்துவிட்டு...

-------------------------------------------------------------------------------------

ஆஸ்திரேலியாவில் பொருட்காட்சியில் இவர்கள் கம்பெனிக்கு ஒதுக்கப்பட்ட இடம் கிடைக்க ஒருவாரம் தள்ளிப்போடப்படுகிறது...

எல்லோரிடமும் போனிலேயே பேசி சரிசெய்கிறாள் மது..
அவள் வேகமும்,விடா முயற்சியும் கண்டு அதிசயிக்கிறார்...

ஒரு வாரம் இருப்பதால் ஊர் சுற்றிப்பார்க்கக்கட்டாயப்படுத்தி அவளையும் கூட்டிச்செல்கிறார்...அவளை சந்தோஷப்படுத்துவதிலேயே வேந்தன் குறியாயிருக்கிறார்..,,

ஆனாலும் அந்த சோகமான முகம் வேந்தனை வருத்துகின்றது....அவளைவிட்டு இனி ஒருநாள் கூட பிரிவது என்பது முடியாத காரியமாகிவிடுகின்றது வேந்தனுக்கு...

எல்லாம் நல்லபடியாக வெற்றிகரமாக முடிந்து ஏர்போர்ட்டில் விமானத்துக்காக காத்திருக்கையில் மது மெதுவாக அவரின் திருமணப்பேச்சை ஆரம்பிக்கின்றாள்.

" சரி மறுமணம் பற்றி என்ன முடிவு.. அய்யாவிடம் நான் என்ன சொல்லட்டும்..?"

" ம்.. ஹி... ஹி.." சிரிப்பை மட்டுமே பதிலாக ..

" சொல்லுங்கள். வேந்தன், என்ன உங்கள் பதில் " ஆம். " தானே..?"

" அப்படியே வைத்துக்கொள்ளுங்கள்..."

" உண்மையாகவா...???" மிகுந்த சந்தோஷத்துடன் மது துள்ளிக்குதிக்காத குறைதான்..

-----------------------------------------------------------

புகை படங்களை பார்க்கிறார்..கோவமாய் வருகிறது ..

" மது , என்ன இது..போட்டோக்கள்.."

" மன்னிக்கவும்..சொல்ல மறந்துட்டேன் வேந்தன்.. நான் பார்த்துள்ள பெண்ணின் படங்கள்.."

" நான்.. உங்ககிட்ட.. சரி சாயங்காலம் அலுவலகம் முடிந்ததும் வாருங்கள்.. பேசணும்..."கோபமாக வைத்தான் போனை..

மதுவோ சந்தோஷமாக அவன் அறைக்குள் நுழைய,புன்னகைகூட புரியாமல், வேந்தன் குழப்பத்தில்., எப்படி ஆரம்பிக்க என்று தெரியாமல்.

" கொஞ்சம் , உணவருந்துங்கள் மது ,அதிக நேரமாகலாம், பின்பு பேசலாம்.." ஏதோ குழப்பம் போல என்று மரியாதைக்காக சாப்பிடுகிறாள்..

அங்கும் இங்கும் நடக்கிறான் ..கொஞ்சநாள் தள்ளிப்போடலாம் என்றால் நீ அவசரப்படுகிறாயே..வேறு வழியில்லை.. சொல்லியாகணும் உன் பெண்பார்க்கும் வேகத்தைத் தடுக்க.

" மது , யாரை கேட்டுட்டு எனக்கு, பெண் பார்க்கிறாய்..?"

" ஏன் , உங்களுக்கு சம்மதம்தானே, மறுமணத்துக்கு..?"

" ஆமாம்.. ஆனா நான் ஏற்கனவே பெண் பார்த்தாச்சு.. அவள்தான் சம்மதிக்கணும்...அவளுக்கே தெரியாது."

" ஓ. என் வேலை சுலபம் இப்போது.. சொல்லுங்கள் யாரென்று, அவர்களை சம்மதிக்க வைப்பது என் பொறுப்பு.." சந்தோஷமாக..

அய்யோ, உனக்கு எப்படி நான் புரியவைப்பேன்.. நீ எப்படி எடுத்துக்கொள்வாயோ என்று நினைத்தாலே பயமாயிருக்கு..

"சொல்லுங்கள் , சீக்கிரம்..." நிதானமாக காபியை அருந்திக்கொண்டே மது..வேந்தன் ஜன்னல் புறமாக திரும்பிக்கொண்டு, அவளை, பார்க்க தைரியமற்று,

" மது, நான் சொல்லப்போற விஷயத்துக்கு நீ அதிர்ச்சி அடையவேண்டாம்.. அவசரமுமில்லை, கட்டாயமுமில்லை.. ஆனால் தயவுசெய்து கோபப்படாமல் நிதானமாக என்னை பேச மட்டும் விடு.."

காபி கிண்ணத்தை கையிலெடுத்து, நெற்றியை சுருக்கி ஒன்றுமே புரியாதவளாய், எழுந்து நிற்கிறாள்..கூர்மையாக அவன் சொல்வதை கேட்கும் ஆவலுடன்..

" சொல்லுங்கள், வேந்தன்...நிதானமாகவே இருக்கிறேன்..", வேந்தனோ ,ஜன்னல் திரைச்சீலைகளை விலக்கிக்கொண்டு,

"...ம்...ம்ம்.."..கைகளால் நெற்றியை அழுத்தி தேய்க்கிறான்...

" சொல்லுங்கள் , சீக்கிரம்.."சட்டென்று திரும்பி, அவள் கண்களைப்பார்த்து,

" நீதான் என் மனதில் இருக்கும் அந்த மகாராணி , மது...

"கையிலிருந்த கோப்பை நழுவி கீழேவிழுவதுகூட தெரியாதவளாய், அதிர்ச்சியும், கோபமும், வெறுப்புமாய், வேந்தனை நேருக்கு நேர் பார்க்க,

" நான் உன்னை கட்டாயப்படுத்தல , மது.. ஆனா மறுமணம் நடந்தா அது உன்கூடமட்டும்தான்.. இல்லாட்டி நான் இப்படியே இருந்துகொள்கிறேன்..எனக்கு பெண் பார்க்காதே..உன்னை நான் விரும்ப மட்டும் அனுமதிகொடு..உன் நிலைமை அனைத்தும் எனக்கு, அப்பாவுக்கு எல்லோருக்கும் நன்றாகத் தெரியும்..நம்ம கம்பெனிக்காக நீ செய்துள்ள தியாகம் மிகப்பெரிது..உனக்கு சேவை செய்ய, எங்களுக்கும் ஒரு சந்தர்ப்பம் கொடு...ஆனால் உன் விவாகரத்து ஆன பின்னே..மட்டும்தான்.."

" வேந்தன், என் நிலைமை ,புரியாமல் பேசுகின்றீர்கள்.. நான் திருமண வாழ்க்கைக்கே லாயக்கில்லாமல் தான் இந்த முடிவுக்கு வந்துள்ளேன்.."

" எனக்கும் . அதேதான் மது.. தாம்பத்யம் தான் முக்கியம் என்றால் பத்து வருடம் வீணாக்கியிருக்கமாட்டேன்..தாம்பத்யம் எனக்கு தேவையில்லை மது..எனக்கு ஆயுசுக்கும் ஒரு நல்ல தோழியாக என்னுடனே இருக்கணும் .நீ!. அவ்வளவே..நீ என் கம்பெனிக்கு சேவை செய்.. நான் உனக்கு சேவை செய்ய எனக்கு அனுமதி தா...உடனே அல்ல.. நான் காத்திருக்கிறேன்..நாம் இருவரும் இணைந்து இந்த வேலையை தொடர்வோம்.."

" அப்படி நான் சம்மதிக்கலை என்றால்..?" அழுத்தமாக...

"நான் கட்டாயப்படுத்தமாட்டேன், நான் மறுபடியும் அமெரிக்கா திரும்பிச்செல்வேன் ஆயுசுக்கும்.." புன்னகைக்கிறான்..

" என்ன , மிரட்டுறீங்களா?."


" நோ. நோ.. அது உன் விருப்பம்...என்னால் மனதில் ஆசை வளர்த்துகிட்டு, போலியா உன்னிடம் பழகமுடியாது, மது..நீ தனிமையில் கஷ்டப்படுவதை பார்க்கவும் முடியாது."

"அதுக்காக சொந்தத்தை , அப்பாவை , கம்பெனியை விட்டு செல்லும் அளவிற்கு, முடிவெடுப்பீர்களா?..உங்கள் மேலுள்ள மரியாதை குறைகிறது வேந்தன்.."

" பாத்தியா, மது, என்னைவிட என் அப்பாமேல் , கம்பெனிமேல் உனக்குதான் எவ்வளவு அக்கறை..இதுக்குத்தான் எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சுருக்கு.."

"பேச்சை மாத்தவேண்டாம்.. என் முடிவில் மாற்றமில்லை.. வயதான காலத்தில் பெரியவர்களுக்கு வேதனை தராதீங்க...நான் கிளம்புறேன்.."

"எல்லோருக்கும் சம்மதமே.. ஏன் உன் மாமியார், பிள்ளைகள், டாக்டர், சுந்தர், நிஷா, சீதாம்மா, எல்லோரும் வந்து இது குறித்து ஏற்கனவே பேசியாச்சு மது.. உன்னிடம் பேச தான் தயக்கம் ..."

"ஓ. எனக்கு தெரியாமல் இவ்வளவு நடந்துள்ளதா..சரி நான் உடனே போகணும்...இனி பேச விருப்பமில்லை.."

" சரி நான்தான் உன்னைக்கொண்டுவந்து விடணும்.. ஓட்டுனரை அனுப்பிவிட்டேன்"

இருவரும் காரில் ஒன்றுமே பேசவில்லை.. மெளனத்தை போக்க பாட்டு போடுகிறான்...

" லேசா லேசா, நீயில்லாமல் வாழ்வது லேசா " என்ற பாடல்.. மாத்துகிறான்

" ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுத்துகின்றதே.." மாத்துகிறான்..சிரிப்பாக வருகின்றது அவனுக்கு.. நேரம் காலம் தெரியாமல்.. ஒரே காதல் பாட்டு.. அவள் கோபத்தை அதிகரிக்கவேண்டாம் என்று சிரித்துக்கொண்டே குசும்பாக அணைக்கிறார் வேந்தன்..

வீட்டில் இறக்கி விடும்போது ஒரு பார்சல் தருகிறான்.. வீட்டிற்கு சென்று திறந்து பார்க்கும்படி...நல்லவேளை ரகு வெளியூர் சென்றுள்ளான்.

குளித்து, சாப்பிட்டு, அம்மாவிடம் பேசிவிட்டு மாடியில் சென்று பார்சலை பிரித்துபார்த்தால், ஆஸ்திரேலியாவில், ஒவ்வொரு பொழுதும் அவன் எழுதியகவிதைத்தொகுப்பும் போட்டோக்களும் மதுவையும் இயற்கையும் பற்றியே..எப்ப எழுதினார், எப்ப எடுத்தார்...

பெருமூச்சுடன் வாசிக்க ஆரம்பித்தாள்..யாருக்கோ எழுதியதாக நினைத்து எழுத்தை, திறமையை, ரசித்தாள்..
பாகம் -14

குழந்தைகளிடம் பக்குவமாய் தாத்தாவும் பாட்டி முன்னிலையில் ரகுவும் , மதுவும் எடுத்துச்சொல்கிறார்கள்.. 11 வயது மகள் புரிந்துகொள்கிறாள்.. அப்பாவின் மேல் அதிக பிரியமும், மரியாதையும் கொண்ட அவள் முதன்முறையாக அப்பாவை கொஞ்சம் வெறுக்கிறாள்..
கோபப்படுகிறாள்... அம்மாவை அதிகமாக நேசிக்கிறாள்..அதையும் மது சரி செய்கிறாள்..
தன் மேலும் தப்பு இருக்கு என்றும் , அப்பாவின் முடிவும் அவர்பொறுத்த மட்டில் சரியே என்று பெண்ணிடம் விளக்குகின்றாள்..


பெண் ஹாஸ்டலில் விரும்பி சேர்கிறாள், தன் படிப்பு மற்றும் டென்னிஸ் விளையாட்டின் நிமித்தம்..5 வயது பையனுக்குத்தான் ஒன்றுமே புரியவில்லை.....தாத்தா பாட்டியிடம் , வேலையாட்களிடம் வளர்ந்தவன்..

ரகுவிற்கு ,யாரும் தனக்கு சப்போர்ட் பண்ணவில்லை என்றிருந்தாலும் , தடுக்கவில்லை என்று திருப்தி.. தன் அருமை பெண் தன்னிடம் பேசவிரும்பவில்லையே என்பது மட்டும் வருத்தம்.. மறு கல்யாணத்திற்கு பெண்பார்க்க சொல்லிவைக்கிறான்..

-------------------------------------------------------------------------------------------------------------------

எல்லாரும் தன்மேல் பரிதாபப்படுவது மதுவுக்கு பிடிக்கவில்லை... சந்தோஷப்படுத்தவேண்டி, பையனின் பிறந்த நாளுக்கு , தன் வீட்டாரையும், நிஷா, சுந்தர், டாக்டர் சங்கர் ,சீதாம்மா , எல்லோரையும் அழைக்கிறாள்....
விழா முடியும் போது , எல்லோரும் முன்பு போல் ரகுவிடம் அன்பாக பேசவேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறாள்..

" நான் ஒரு அதிர்ஷ்டசாலி.. எதிர்பார்க்காத அழகான திருமண வாழ்க்கை, பரிசாக அருமையான குழந்தைகள், அன்பான மாமா, அத்தை, உறவுகள் கிடைத்தது...இந்த உறவுகள் எப்பவும் மாறாது...இதை தக்க வைக்காதது என் தவறே..முடிந்தால் நானே நல்ல பெண் பார்த்து வைப்பேன் ரகுவுக்கு " என்கிறாள்..

ரகுவை எல்லாரும் ஒருமாதிரியாக பார்க்க, அதற்கும் மது தான் காரணம் போல் எழுந்து உள்ளே சென்றுவிடுகிறான்...ரகுவிடம் அனைவரும் சமாதானம் பண்ண முயல, அவனோ மது வேலையை விடுவது ஒன்றே தீர்வு, மறுபேச்சுக்கே இடமில்லை என திட்டவட்டமாக கூறுகின்றான்.

" ரகுவும் பாவம்.. வருடத்தில் பாதி நாட்கள் நான் பயணத்தில்.. எல்லா அலுவலக பார்ட்டிகளுக்கும் தனியாக செல்கிறார்.. வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முன்னேறியவர்...அவரை கூட இருந்து கவனிக்க கண்டிப்பா ஒரு துணை தேவை.. அவர் முடிவு தவறில்லை...."ஒருபக்கம் மதுமேல் பாவமாக இருக்கிறது.. ஆனாலும் அவள் பிடிவாதத்தினால் கஷ்டப்படட்டும் என்றே தோன்றுகிறது , ரகுவுக்கு..

"நான் என்ன குறை வைத்தேன் அவளுக்கு.. வேலையை விட்டுவிட்டு என்னையும் வீட்டையும் கவனிக்கலாமே.. பார்க்கலாம் அவளா வருவாளா என்று.."தப்புக்கணக்கு போடுகிறான், இன்னும் அவளை முழுவதும் புரிந்துகொள்ளாமல் ...

விசாலம் அம்மாவுக்கு மது , ரகுவை விட்டுக்கொடுக்காமல் பேசியது ஆறுதலாயிருந்தது..
" எல்லாத்தையும் உன் தலையிலேயே போட்டுக்கொள்கிறாயே மா.?..என்னவோம்மா, ஊருக்கு உன் சேவை தேவையாயிருக்கு... என் சேவை உனக்கு எப்போதுமிருக்கும்...." கண்கலங்க,


" அம்மா இப்ப நான் தெளிவா இருக்கேன்.. இனி நாம் யாரும் கலங்கத் தேவையில்லை.. கடவுள் நல்ல வாழ்க்கை , வசதி , நல்ல மனிதர்கள்கொடுத்துள்ளார் என்று திருப்தியோடிருப்போம் மா.." நிதானமாக சொல்லிக்கொண்டிருக்க தொலைபேசி அழைக்கிறது...

" மது , உன் குழந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.. உன்னிடம் பேசலாமா?.."வேந்தன்.." நன்றி.. தாராளமா சொல்லுங்களேன்..."

" அடுத்த வாரம் ஆஸ்திரேலியா செல்ல உனக்கொண்ணும் தடையில்லையே.. முக்கியமான தொழில் பொருட்காட்சி.. நாமும் பங்கேற்கிறோம்.."

" சரி வேந்தன்.. உங்கள் விருப்பப்படியே செய்யுங்கள்..." நிம்மதியாக இருந்தது... கொஞ்சம் பிரச்சனைகளை மறக்கலாம்...

எனக்காக எவ்வளவு செய்த கம்பெனி.. ஆரம்பகாலத்தில் , பரமுவின் குடும்பத்துக்காக, ரகுவிற்குத் தெரியாமல் உதவ, பின்னர், பரமுவின் கணவருக்கு தன் கிளை கம்பெனியில் வேலை வாங்கியது, அப்பாவின் மருத்துவச்செலவுகள், இப்படி எத்தனையோ... அதற்கெல்லாம் நன்றியோடு இருக்க சந்தர்ப்பம் கிடைத்ததற்காக கடவுளுக்கு நன்றி சொல்லிக்கொண்டாள்..

-------------------------------------------------------------------------------------------------------------------------

ஆஸ்திரேலியா செல்லுமுன் பெரியவர் மதுவிடம்

"அம்மா மது, நம் கம்பெனிக்கு காண்டிராக்ட் வரும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.. ஏனெனில் போவது இரண்டு புலிகளாச்சே.."சிரித்தார்

" ஆனால் முக்கியமான வேலை, வரும்போது வேந்தன் மறுமணத்துக்கு ரெடியா இருக்கணும்.. அது உன்னால்தான் முடியும் மா.. உன்னிடம் மட்டும் தான் மனம் விட்டு பேசுகிறான்..."

" கண்டிப்பாக செய்கிறேன் அய்யா.. பெண் மட்டும் நீங்க பாருங்க.. மத்ததை நான் பார்த்துக்கொள்கிறேன்..." சந்தோஷமாக சொல்கிறாள்..
---------------------------------------------------------

மறுநாள் மது அலுவலகம் வரவில்லை.. துடித்துப்போகிறான் வேந்தன்...விசாரித்து டாக்டர் சங்கரைக் காணச் செல்கிறான்...இருவருக்கும் பிடித்துப் போகவே, மதுவின் பெண் ப்ரீத்தியை காண அவள் பள்ளிக்குச்செல்கிறார்கள்...அவள் சிறந்த டென்னிஸ் வீராங்கனை என்று வேந்தன் கேள்விப்பட்டதும்,

" உன்னை ஒரு சானியா போல் ஆக்க என்னால் முடியும் .. நீ தயாரா.. நானும் டென்னிஸ் வீரன் தான்.. விளையாட்டுன்னா எனக்கு ரொம்ப இஷ்டம்..."

' ரொம்ப மகிழ்ச்சி அங்கிள்...அம்மாவிடம் சொல்லணும்..." ப்ரீத்தி பின் சாயங்காலம் மதுவிடம் ப்ரீத்தி கூறியபோது ஆச்சர்ய பட்டு போகிறாள்..

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கம்பெனி மீட்டிங் நட்சத்திர ஹோட்டலில்..அதுகுறித்து விவாதித்து ,சிரித்து பேசிக்கொண்டே வேந்தனும் , மதுவும் ,சுற்றும் படிகளில்( escalators??) மேலே வர, அடுத்த படிகளில் ரகு கீழே இறங்கி வருகிறான்..நேருக்கு நேர்.. அவள் சிரித்து பேசி வருவது அவனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை .கண்டுகொள்ளாமல் செல்கிறான்..

' ரகு, ரகு..." என்று கூப்பிடுகிறாள்.. ஓடிச்சென்று வேந்தனிடம் அறிமுகப்படுத்த ரகுவின் கையை பிடிக்கிறாள்.. அவனோ கையை உதறிவிட்டு வேகமாக நடக்கிறான்...அதிக ஏமாற்றத்திலும், வேந்தன்முன் நடந்ததாலும் வெட்கி வேதனைப்படுகிறாள்...

புரிந்து கொண்டு அவளைத் தனியாக அழைத்துச்சென்று ஒன்றும் தெரியாதவர், பார்க்காதவர் போல் ,எதுவும் கேட்காமல்

' பரவாயில்லை , அவர் ரொம்ப பிஸியாயிருக்கலாம்..இன்னொருமுறை பார்த்துக்கொள்ளலாம்..." புன்னகையோடு பேச்சை மாத்துகிறார் அலுவலக விஷயத்தில்.

----------------------------------------------------------------------------------------------------------------

அன்றே டாக்டருடன் அவரது இல்லத்தில் ரகுவை சந்தித்து பேசுகிறர் வேந்தன்..

***********************************************************************************தொடரும்...
பாகம் - 13- எனதுயிரே, எனதுயிரே....

சுந்தருக்கு ரகுவே போன் செய்து விவரம் கூறி தான் இன்னொரு பெண் தேடுவதாகவும், அவள் வேலைக்கு செல்லவேண்டாம் தன்னையும் , குடும்பத்தையும் மட்டும் கவனிப்பவளாய் இருக்கட்டும் என்கிறான்...
சுந்தர் கோபப்பட்டு திட்டுகிறான்...தயவுசெய்து இன்மேல் என்னிடம் மது பற்றி எதுவும் பேசாதே என்கிறான்..ரகுவின் கோவம் அதிகமாகுது..

யாருமே என்னை புரிஞ்சுக்க மாட்டீங்க..எல்லோருமே மதுவுக்கு பரிஞ்சுகிட்டு வாங்க ....திட்டி போனை வைக்கிறான்.

-----------------------------------------------------------------------------------------------------
டாகடர் சங்கர் , சுந்தர், நிஷா மூவரும் ரகுவை அழைத்துப் பேசுகின்றனர்..


" புரியுது ரகு.. உங்க நிலைமை... வாழ்க்கையில ஒரு நிலைமையில் எல்லோருக்கும் இப்படித்தான் ரகு..
இப்ப பாருங்க.. நான் இங்கே தனிமையா மருத்துவமும், கோவிலும் என்று , என் மனைவியோ,மாறி மாறி அமெரிக்காவிலுள்ள மகள், மருமகளுக்கு, பேரக்குழந்தைக்கு ஆயாவா....நானும் உங்கள மாதிரி சிக்குன்னு ஒரு சின்னப்பெண்ணை கல்யாணம் பண்ணலாம்னு நினைக்கிறேன்...என்ன சொல்ரீ[றீ]ங்க....??.."" சிரிக்கிறார்...டாக்டர்..


" அண்ணா எப்பவுமே விளையாட்டுதானா?..." நிஷா, சுந்தர்...

" விளையாட்டா எடுத்தாதான் பிரச்சனை இல்லையே.. பாரு இந்த மதுவை, ஊருக்கு சேவை செய்யறாளாம்...எதுக்கு, சிறந்த பெண்மணி பரிசு வாங்கவா?.. பேசாமல் கணவனையும் குடும்பத்தையும் பார்த்துக்கொண்டு எல்லா பெண்களையும் போலவருடம் ஒருமுறை ஊர்சுற்றிவிட்டு ஜாலியா இருப்பதை விட்டுட்டு...பைத்தியக்கார பொண்ணு....."

ரகு குழம்புகிறான்.. என்ன சொல்றார் இவர்...?..நமக்கு பரிந்து பேசுற மாதிரி திட்டுகின்றாரா?..

" சரி முடிவா என்ன சொல்ரீ[றீ]ங்க..?.." டாக்டர்

" பிரிவுதான் முடிவு .. இப்போதைக்கு....." சொல்லிவிட்டு எழுந்து செல்கிறான்.. ரகு.,.. அவன் போக்கை வித்தியாசமாக பார்க்கிறார்கள்..

வருத்தமாக தோளை குலுக்கி கையை விரிக்கிறார் டாக்டர்..இருந்தாலும் பின்னர் யோசிப்பான் ரகு கவலைப்படாதீர்கள் என்கிறார்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

மலைப்பயணம் மிகவும் இனிமையாக அமைந்ததால் ஆஸ்திரேலியா பயணத்தை மதுவுடன் செல்ல திட்டமிடுகிறான் வேந்தன்.., மதுவின் விவாகரத்து உறுதி என்ற நிலையில்..மதுவோ அய்யாவிடம் எப்படியும் வேந்தனை கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கலாம் என்று பெரியவரிடம் சொல்ல அவர் சந்தோஷப்படுகிறார்...

" எல்லாம் உன் கையில்தான் இருக்கும்மா.."
" அது என் கடமையும் அய்யா..."


----------------------------------------------------------------------------------------------------------------------------

வீட்டில் ரகுவும் , மதுவும் பேசாமல் இருப்பது விசாலம் அம்மாவுக்கு கொஞ்சமாய் புரிகிறது....இன்று எப்படியும் கேட்கணும்..

" அம்மா சாப்பாடு எடுத்து வையுங்கள்...." ரகு

" மது என்னன்னு பாரம்மா... அதான் மது வந்தாச்சே..."மது வருகிறாள்..

" இல்ல நீங்க வாங்க.. இல்லாட்டி நான் போகிறேன்.." ரகு

" என்னம்மா நடக்குது இங்க...." கலக்கத்துடன் அம்மா

"அது வேற ஒண்ணுமில்லம்மா....வந்து.." பயத்துடன் மது

" நான் சொல்றேன்மா..." ரகு

கண்களால் கெஞ்சுகிறாள் மது அவனருகில் வந்து...

" அம்மா..." என்று ரகு ஆரம்பிக்க , ரகுவின் கையை அழுத்தமாக பிடித்து கெஞ்சுகிறாள்..

" ஒண்ணும் இல்லம்மா கொஞ்சம் மனஸ்தாபம்.. அவ்வளவே..." சமாளிக்கிறாள்...

" இல்.....லை...அம்மா, நானும் மதுவும் பிரியலாம்னு ..."

" என்னடா சொல்ற?.. மது என்னம்மா இதெல்லாம்.. என் வயத்துல நெருப்ப அள்ளிக்கொட்றாப்ல.."தலையில் கைவத்து அப்படியே உட்காருகிறார்...

மது அம்மாவைக் கட்டிப்பிடித்து அழுகிறாள்...ரகு வெளியேறுகிறான்..கோபமாய் வருகிறது ரகுமேல் மதுவுக்கு..

என்ன ஒரு கல்நெஞ்சம்.. வயதானவர்களிடம் பக்குவமாகச்சொல்லாமல்..

" அம்மா நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க..."

" போதும் மா உங்க நாடகம்.. எதுவானாலும் என்னை ஒரு மனுஷீன்னு நினைத்து என்னையும் கலந்துக்கோங்க மா.."

" ரகுவிற்கு அதிகாரம் கொடுத்து பாதி நான் கெடுத்தேன்.. நீ அவனுக்கு அன்பும் , பணிவும் கொடுத்து முழுவதுமா கெடுத்துட்டேம்மா.."

" எல்லாம் நல்ல படியாக நடக்கும் னு எனக்கு தைரியம் சொல்லுங்கம்மா.. எப்பவும் போல.. .இப்பல்லாம் நான் ரொம்ப கோழையாயிடுவேன் போல் இருக்கும்மா."அணைத்துக்கொள்கிறார் மதுவை.,..பரிதாபப்பட்டு..

" ஒண்ணும் கவலைப்படாதேம்மா.. உன் எண்ணத்துக்கும் நீ பண்ற சேவைக்கும் அவனுக்கு , பைத்தியக்காரனுக்கு கொடுத்து வைக்கலைன்னு நினைச்சுக்கோ.." ஆறுதலளிக்கிறார்...

இருந்தாலும் அழுது முடித்ததும் புது தெம்பு பெறுகிறாள்.. தான் இனி அழக்கூடாது என்றும் முடிவெடுக்கிறாள்..
பாகம் - 12

மறுநாள் அலுவலகம் வந்த வேந்தன் காதுக்கு மதுவின் விவாகரத்து விஷயம் மூத்த வக்கீலின் மூலம் எட்டுகிறது..
அதிர்ச்சியாயிருந்தாலும், அதுபற்றி தெரியாதவர்போல் காட்டிக்கொண்டார்... அவள் மேல் கரிசனம் கூடியது... இவ்வளவு பிரச்சனைக்கு
நடுவில் அலுவலக வேலைகளையும் கருத்தாக செய்கிறாளே...


அவளுக்கு முடிந்த அளவு உறுதுணையாக இருக்க நினைத்தான்..
அடுத்த வார பயணத்தை ஒத்திப்போட கூட வேண்டாமென்கிறாள்...
வேந்தன் பயணத்தில் மதுவும் கலந்து கொள்ள, சுகமாகவே இருக்கு ...அவளுக்காக, அவளுக்கு பிடித்த எழுத்தாளர் புத்தகம் ஒன்றினை பரிசாக அளிக்கிறார்.. அவளுக்கு சந்தோஷம்.. அதை வைத்து பேசுகிறார்கள் மலை பயணத்தின்போதே...திடீரென்று..கார் நின்றது...


" அய்யா எதோ வண்டியில் பிரச்சனை..கொஞ்சநேரம் இருங்கள் .என்னவென்று பார்க்கிறேன்.."

" மொதல்லே பார்க்கக்கூடாதா .." என்று சொல்லிவிட்டு கீழிறங்கினால் அழகிய வயல் சூழ்ந்த கால்வாயோடு பசுமையான இடம்..அள்ளிச்செல்கிறது மனதை அந்த இடத்தின் ரம்மியம்...

இருவரும் காலார நடக்கின்றார்கள்.. தன்னைப்பற்றியும் அமெரிக்க வாழ்க்கை பற்றியும் மது கேட்காமலே பகிர்கிறார் வேந்தன்..

"உங்களைப்பற்றி விருப்பமிருந்தால்......"

மதுவும் தன் ஆசைக்கணவரைப்பற்றி சொல்கிறார்...முடிவில் ஒரு பெருமூச்சு...கண்களில் கலக்கம்.. சமாளிக்கிறாள்..

மெளனம்... வேந்தனுக்கு அவளை தைரியப்படுத்தவும் , சமாதானப்படுத்தவும் ஆசை.. ஆனால் எப்படி சொல்வது தனக்குத் தெரியுமென்று..?

"நீங்கள் இனி எனக்கு ஒரு நல்ல தோழி... என்ன உதவியோ என்னிடம் தயங்காமல் கேளுங்கள்.. உங்களுக்குச் செய்வது என் கடமைபோல.."

" கண்டிப்பா சார்..."

" இன்னும் சார் தானா..?.. தயவுசெய்து வேந்தன் என்றே சொல்லுங்கள் மது.."

" சரி...நீங்களும் இனி என்னை ஒருமையில் அழைக்கலாம் அப்படியென்றால்..."
"சரி மது..."


" ஏன் இன்னொரு திருமணம் பண்ணக்கூடாது..."

" நீங்களுமா... என்னவோ தோணவில்லை.. என் மனதுக்கு பிடித்த அப்படி ஒரு பெண் இதுவரை கிடைக்கவில்லை..."

" அது என்ன "அப்படி ஒர் பெண்..?. எப்படியாம்...?" கிண்டலாக மது அவர் மனதை நோட்டம்விட்டு அப்படி ஓர் பெண் தேடலாம் என்ற நோக்கில்...
"எப்படின்னா................ம்...........ம்........ம்..........உங்களைப்போல....''


" விளையாட்டு வேண்டாம் .. உண்மையா சொல்லுங்கள்.. அமெரிக்காவில் படித்தவர்... அதுபோலவா..."

" உண்மையாகத்தான் சொல்கிறேன்..நான் பெண்களிடமே குறைவாக பேசுவேன்.. ஏனோ உங்களிடம்தான் இவ்வளவு பேசியுள்ளேன்...அதனால்தான் சொல்கிறேன், உங்களைப்போல் ஒரு பெண் என்று.."

" சரி பார்க்கிறேன்.. " என்று சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு காரில் மேற்கொண்டு பயணத்தை தொடர..

வேந்தனுக்கு சந்தோஷம் நம் விருப்பத்தை தெரிவித்துவிட்டோம் என்று...மதுவுக்கோ, அட எவ்வளவு எளிமையா தன் விருப்பத்தை சொல்கிறார்.. நல்ல பெண்ணாக பார்க்கணும் என்று மனதினுள்..

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வேந்தனும் மதுவும் மலையில் உள்ள தொழிலாளர்களுடன் அவர்களின் குடியிருப்பு தோட்டத்திலேயே கூட்டம் வைத்துள்ளனர்..


மது சாதாரணமாக ஒரு பாறையின் மீது அமர்ந்து அவர்களின் நலன் விசாரிப்பதும், அவர்களோடு வித்தியாசமில்லாது பழகுவதும், அவள் மீது மதிப்பும் , மரியாதையும் கூடுகிறது...

" ஏன் மது, இங்குள்ளவர்களுக்கு விளையாடுவதற்கு நல்ல முறையில் மைதானம் ஒன்று அமைத்துத் தரணும்." ஆச்சர்யத்துடன் மது..

" செய்யலாமே, வேந்தன்.. எனக்குத் தோணவில்லை பாருங்கள்..." சந்தோஷப்படுகிறாள், அவனின் முழுமையான பங்கேற்பு குறித்து...

ரகுவுடன் ஒரே வீட்டில் எதிரிகள் போல் பேசாமல் வாழும் நரகத்தை மறந்தாள் சிறிது.. தொழிலாளர்களுடன் உணவு உண்டபின் ரம்மியமான எஸ்டேட்டை சுற்றிப்பார்க்கின்றனர் இருவரும்..

அதிக குளிர்.. மதுவோ சாதாரண காட்டன் புடவையில்.. தன் மேல்கோட்டை தருகிறான் வேந்தன்..

" நீங்கள் குளிர் தாங்கமாட்டீர்கள்.. தயவுசெய்து..." அவன் கரிசனம் பெரியவர் போன்றே உள்ளது.. என்ன அவர் இவளை திட்டுவார் சம்மதிக்க வைக்க..பிடிவாதமும் அவருக்கு..

அழகாக மறுக்கிறாள்.., தனக்கு இந்த குளிர் பிடிக்குமென்று....சிரித்துகொள்கிறார் அவள் சமாளிப்பதை ..
இரவு தான் கொடுமையாக உள்ளது . விசாலம் அம்மா, குழந்தைகளுடன் பேசியதும் , தூங்கலாம் என்றால் நினைவுகள் வாட்டுது..

ஏன் ரகு இப்படி என்னிடம் பேசாமல்....??? நடந்துகொண்டே இருந்தவள் வெளியே வேந்தன் நடப்பதைப் பார்க்கிறாள்..

"என்ன தூங்கவில்லையா?... " " இல்லை.. தூக்கம் வரலை.. உங்களுக்கு?" " எனக்கும்தான்... "
" சரி பேசிக்கொண்டிருக்கலாமே... "அப்படியே மேஜை மேல் உற்சாக பானம் இருப்பதை கண்டு முகம் மாறுவதை பார்க்கிறார்..

" இது அமெரிக்கா இல்லையே. தவிர்க்கலாமே..உடல்நலத்துக்கு நல்லதில்லையே..."

" உங்களுக்கு பிடிக்கலைன்னா வேண்டாம்" என்று எடுத்துச்செல்ல சொல்கிறார், வேலையாளிடம்..அவளின் அக்கறை குறித்து மகிழ்கிறார்..

தன்னை யாரும் இதுவரை சொன்னதில்லை... மதுவுக்கோ அவர்மேல் மரியாதை கூடுகிறது, பானத்தை தான் சொன்னதும் தவிர்த்ததால்..

இருவரும் நேரம்போவது தெரியாமல் பேசிக்கொண்டிருக்க,,பின் தூங்க சென்றனர். தூங்கும்போது பழைய நினைவுகளில் மீண்டும் ரகுவுடன் முதன்முறையாக திருமணம் முடிந்து தேனிலவுக்கு வந்தது ,ஞாபகம் வந்து தூக்கத்தை தொலைத்தாள்.... அதேபோல் வேந்தனும் தூங்க மனமின்றி...........

*************************************************************************************************தொடரும்...

பாகம் - 11

நிஷா வேதனை தாங்கமுடியாமல், ரகுவின் தோழன், சுந்தருக்கும் டாக்டர் சங்கருக்கும், சொல்லிவிட்டாள்...அனைவருக்கும் அதிர்ச்சி.. ஆனால் இது குடும்ப விஷயம் ..
அவர்கள் விரும்பினாலன்றி நாம் தலையிடவேண்டாம் என்றும், சுந்தர் மட்டும் நயமாக பேசி பிரச்சனை என்ன என்று அறிவதாக ஏற்பாடு..மது இது அறிந்து முதலில் வருத்தப்பட்டாலும், பின்னர் ஒத்துக்கொண்டாள்..

ஆனால் அவன் போக்கில் விடுங்கள் சில நாள்கள் , எனக்காக மறந்தும் சப்போர்ட்டாக பேச வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டாள்.

கீதாம்மாவுக்கு கோபமும் வருத்தமும்.. , தன்னிடம் கூட சொல்லாமல் நம் பெண் மறைத்துவிட்டாளே.. ஏன் கணவன் சொன்னால் வேலையை விட வேண்டியதுதானே?.. ஆனால் மதுவின் தந்தைக்கோ, தன் மகள் எது செய்தாலும் சரியாக இருக்கும், அவளிடம் யாரும் எதுவும் அதுபற்றி பேசவோ , கேட்கவோ கூடாது என தடைபோட்டார்..

ஏனெனில் அவன் கோபம் இவளுக்குத்தானே தெரியும்...இப்படித்தான் பரமு விசயத்தில்..,

* * * * * * * * *

"என்ன தைரியம் இருந்தால் ஒரு வேலையில்லாதவனை , அடுத்த மதத்தவனை திருமணம் செய்வேன் என்று சொல்லுவாய்..?"

" அண்ணா அவரைத் தவிர யாரையும் என்னால் நினைத்துகூட பார்க்க முடியாது..நான்கு வருட காதல். நல்ல படிப்பு..நல்ல வேலை கிடடக்கும் சீக்கிரம். நீயும்தானே. அண்ணியை....?"

" அப்படியென்ன பெரிய காதல்.. நான் காதலித்தேன் என்றால் தகுதியோடு, முறைப்படி , எல்லோருடைய விருப்பத்தோடும்., பெருமைபடும்படியாக..."

" பரமுவுக்கும் நாமே நடத்திவைக்கலாமே.. சின்ன பிள்ளை தெரியாமல் நடந்துவிட்டது...இப்ப வேறு வழியில்லையே.." கெஞ்சுகிறாள் மது..

" நீ கொஞ்சம் பேசாமல் இருக்கிறாயா?. இது என் குடும்ப விஷயம்...நீதான் இதுக்கு முழு ஆதரவா..?.என் தங்கை நல்லா இருக்கணும்னு நினைக்கிறது தப்பா...?. மது இனி இதில் யார் தலையிட்டாலும் எனக்கும் அவர்களுக்கும் எந்த உறவுமில்லை..மது ,நீ உள்ளே போ"மது வெறுப்புடன் உள்ளே செல்கிறாள்..

" பரமு, நான் பார்க்கும் மாப்பிள்ளையை தான் நீ கல்யாணம் செய்யவேண்டும்.. மீறினால் எனக்கும் உனக்கும் இனி உறவில்லை.."

" என் மகன் சொல்வதே நானும் .. ஏன் இந்த தலைக்குனிவு எனக்கு... நல்லாதானே வளர்த்தோம் உன்னை..?.." அப்பா.

விசாலம் அம்மா, பரமுவும் அழ, தன் அறைக்கு , ரகு சென்றபின் அழைத்துச்செல்கிறாள்... பரமுவோ பிடிவாதமாக இருக்கிறாள்,செத்துவிடுவேனென்று.. அவளை நன்றாகத் திட்டிவிட்டு, சரி பைத்தியமாக ஏதும் செய்துவிடாதே, நான் முடித்துவைக்கிறேன் என்கிறாள்..

அதேபோல் அந்த வாரமே விசாலம் அம்மா, பரமுவை அழைத்துக்கொண்டு ,கோயிலில் வைத்து திருமணத்தையும் முடித்துவிட்டுவீட்டுக்கு திரும்புகிறாள், புயலை எதிர்பார்த்து...

" அங்கேயே நில்..உள்ள ஒரு அடி எடுத்து வைக்கக்கூடாது... எவ்வளவு சொல்லியும் என் பேச்சை மீறி..."

" சரி.. உள்ளே வந்து என்ன வேணாலும் பண்ணுங்க... வெளியில் நான்கு பேர் பார்ப்பாங்க..." அவள் சொல்லிக்கொண்டே உள்ளே செல்கிறாள், அம்மாவின் கையைப் பிடித்தபடி...அம்மா சமையலைறையில் புகுந்து கொண்டார்கள்..

" இப்ப என்ன அவள் செத்தாக்கூட பரவாயில்லை, ஆனால் உங்க மானம் தான் பெரிது இல்லையா மாமா?."

" அப்படித்தான் வெச்சுக்கோ.. எங்களைப்பொறுத்த வரையில் அவள் செத்துவிட்டாள்..... இனி நீயும் அவளுக்கு பரிந்துகிட்டு இந்த வீட்டில் இருக்க முடியாது.."அவளுக்கு உள்ளுக்குள் சிரிப்பாய் வந்தாலும், வெளியே காண்பிக்காமல்,

" அதுக்கெல்லாம் நானும் தயாராத்தான் இருக்கேன்... தங்கை , மகள் செத்தாலும் பரவாயில்லைன்னு நினைக்கிற மனுஷங்களோட இனி நான் இருக்க முடியாதுப்பா..." துணி மணிகளை எடுத்து வேகமாக பெட்டிக்குள் திணிக்கிறாள்...

"சரி. சரி.. நீ உள்ளே போம்மா.. அப்புறமா பேசிக்கொள்ளலாம்..." மாமா பயப்படுகிறார்...விசாலம் அம்மாவுக்கு இது நாடகம்தான் என்று தெரிந்ததால் அவர்,

" சரிம்மா, போகுமுன் ஒரு வாய் சாப்பிட்டு போகலாம்.. இரு இப்பவே சமைக்கிறேன் "என்கிறார்..

மது குழந்தையை கூப்பிட்டு, " கிளம்புடா, தாத்தா வீட்டுக்கு போகலாம்...இனி அங்குதான் நீ படிக்கப்போற.."சந்தடி சாக்கில் குழந்தையையும் இணைக்க,

" என் பெண்ணை எங்கே கூட்டிப்போற..?. அவள் என்கூடதான் இருப்பா..."பெண்மேல் அதிகம் பிரியம் ரகுவுக்கு..

" வேண்டாம்மா .. சொன்னா கேளு... ரகு நீ இப்போ உள்ளே போ.. " கொஞ்சம் அதட்டலாய் மாமா..இருபது நிமிடம் கழித்து பெட்டியுடன் மது வெளிவர, எல்லோரும் அதிர்ச்சியில்..
" எங்க போற..?"
"......" அழுகிற மாதிரி மது நல்லாவே நடிக்க.."
உள்ளே ..போ.."குழந்தை ஒரு கையில் , பெட்டி மறு கையில் எடுக்க,

" உள்ளே போ என்று சொன்னேன்..." பெட்டி எடுத்து அவளையும் இழுத்துக்கொண்டு உள்ளே சென்று சமாதானப்படுத்துகின்றான்...
" எனக்கு ஏதோ கோவம்.. அதுக்காக உடனே போய்விடுவாயா?...நீ பண்ணின காரியம் இருக்கே... சரி சரி... மறுபடியும் வேதாளம் ஏறிவிடும்..எல்லாரும் தப்பு பண்ணிட்டு என்னை தண்டியுங்க....ஆனா இனி பரமு பற்றி யாரும் பேசக்கூடாது .." சொல்லிவிட்டு வெளியே சென்றுவிட்டான்...

உள்ளே வந்த விசாலம் அம்மா, கதவை அடைத்துவிட்டு, மதுவை கட்டிப்பிடித்து அழுதார்... மது சிரிக்கிறாள்..

" அம்மா என் நடிப்பு எப்படி..இனி மாப்பிள்ளைக்கு நல்ல வேலை கிடைக்கும்வரை ரகுவுக்குத் தெரியாமல் நாம் உதவணும்..?"
" என்னமோ மா. ரகுவை, மாமாவை உன்னால்தான் சமாளிக்க முடியும்...நான் செய்த புண்ணியம் நீ கிடைத்தது.."

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆனால் 10 வருடம் முன் உள்ள கோபம் வேறு. இப்போது வேறு .. அப்போது ரகு மதுவின் பின்னால் பூனைகுட்டி போல , எப்போதும் அவளுடன்.. ஆனால் இப்போது பிரிவு சகஜமான ஒன்று.. இப்போது பேசுவதே அபூர்வம்..
*************************************************************************தொடரும்...******************************************************