Thursday, September 18, 2008

*சில்லென்ற கண்ணாமூச்சி காதல் -*

சில்லென்ற கண்ணாமூச்சி காதல் - பாகம் 4..

*போகாதே.....போகாதே....................*

வீட்டுக்கு சென்று டோனி குடுத்த பையை பிரித்துப்பார்த்தவளுக்கு அதிர்ச்சி....அதில் அவள் சின்ன வயதில் டோனியுடன் சண்டைபோட்டு விளையாடிய
கோலிக்குண்டு, சின்னச்சின்ன புகைப்படங்கள், கிறுஸ்மஸ் கார்டுகள், கதைப்புத்தகங்கள். அத்தோடுகூட அவளுக்கு எளிதாக புரியும்படிக்கு சில கணித, ஆங்கில
விளக்கங்களும், கையேடு, மற்றும் குறிப்புகளும்...


பிரபுவுக்கு கிரிக்கெட் மற்றும் நிறைய விளையாட்டுப்பொருளும்..எத்தனை பொறுப்போடு கூடிய அன்பு...

ஒருகணம் ஜெனி " டோனி நீ என் அண்ணாவாக இருந்திருக்கக்கூடாதா?.."

என்று எண்ணுகிறாள்... கடந்த 6 மாதமாக டோனியுடன் பேசாமல் , பழகாமல், வீணடித்ததை நினைத்து வருந்தினாள்...

இனி டோனி படிக்க சென்றால், பெரிய
மருத்தவரானபின் தான் அதிகமாய் ஊரில் தங்குவான்..

, எப்படி டோனி இல்லாமல்...? நினைக்கவே அழுகையாய் வருது ஜெனிக்கு.. சரி நேரமில்லை..

இத்தனைக்கும் டோனிக்கு முதலில் நன்றி செலுத்தியாகணும்.. அவன் சந்தோஷமாக புறப்பட்டு போகணும் படிப்பதற்கு... எப்படி பேசுவது, எங்கு பார்ப்பது?..

மாடியில் வெளியில் செடிக்கு தண்ணீர் ஊற்றுவதுபோல் சென்று பார்க்கலாம் என்று தண்ணீருடன் வெளியில் வருகிறாள்..

டோனி ஜெனி வந்ததை தன் ஜன்னலின் வழியே பார்த்துக்கொண்டுதானிருக்கிறான்... இருந்தாலும், நாமாகவே வலிய சென்று தொந்தரவு தர வேண்டாம்..

விருப்பமிருந்தால் அவளே கூப்பிட வேண்டியதுதானே என்று தன் நாற்காலியில் அமர்ந்து சாமான்களை அடுக்கிக்கொண்டிருக்கிறான்.., ஜன்னலை பார்த்தபடி..

ஜெனி அத்தனை செடிக்கும் தண்ணீர் ஊற்றிமுடிந்ததும், ஏமாற்றத்துடன், திரும்பி செல்லுமுன் ஒருமுறை டோனியின் அறை நோக்கி கண்கூச
பார்த்துவிட்டு உள்ளே செல்ல எத்தனிக்கிறாள்..அதை கவனித்த டோனி தன்னைத்தான் அவள் பார்க்க வந்தாள் என்பதை உறுதி செய்ததும், சட்டென்று
வெளியில் வந்து

" ஜெனீ...ஜெனீ"' என்றழைக்கவும்,

ஜெனி உடனே திரும்பி பார்த்து சந்தோஷமாக டோனி நோக்கி வருகிறாள்...

" ரொம்ப நன்றி டோனி.. எவ்வளவு பொருள்கள்.. " என்று அவள் கூறி முடிக்கவும்,

கீழேயிருந்து அம்மாவின் குரல்..

" ஜெனி யார் வந்திருக்கா பார்.. சீக்கிரம் வா இங்கு...."

" இதோ வந்துட்டேன் மா..."

" சரி நீ மேலேயே இரு.. நாங்கள் வருகிறோம்.."

" ஜெனி , நீ போய்ட்டு வா.. அப்புரம் பேசலாம்...."

" சாரி டோனி.... "

திரும்பவும், அத்தையும் , மாமாவும், கூட ஜோ அத்தானும்...ஊரிலிருந்து..

" மருமகளே எப்டிமா இருக்க..?"

" நல்லாயிருக்கேன் அத்தை..." என்று கைகூப்பி ஆசீர்வாதம் பெறுகிறாள்..மாமா அத்தை இருவரிடமும்..

" ஜெனி, ஜோ தம்பிக்கு இங்கு கல்லூரியில் இடம் கிடச்சுருக்கு , சேர்க்க வந்திருக்காங்க... இனி ஜோ இங்கதான் படிக்கப்போறான்.."

ஜோ அத்தான் ஜெனியிடம் பேசவே மாட்டான், அவளிடம் அவனுக்கு கூச்சம்..

சும்மா இருக்காமல், பாட்டி, ஜெனி பிறந்ததிலிருந்து,
அவள் ஜோவுக்குதான் என்றே சொல்லி சொல்லி இவளைப்பார்த்தாலே ஓடி ஒளிந்துகொள்ளுவான்...

மேலும் இவள் பட்டணத்தில் படித்து
ஆங்கிலத்தில் பேசுவதும் அவன் கூச்சத்துக்கு ஒரு காரணம்..ஆனால்
ஊருக்கு வந்தால் அவன்தான் பிரபுவையும் ஜெனியையும் எல்லா இடத்துக்கும் .
அழைத்துச்செல்லுவான் இதுவரையிலும்....

எல்லோரும் உணவருந்திவிட்டு கல்லூரி பார்க்க கிளம்பிவிட்டனர்... ஜெனிக்கு உள்ளூர மகிழ்ச்சிதான்.. சரி டோனிக்குப்பதிலாக, ஜோ இனி நமக்கு
நல்ல அண்ணாபோல் இருப்பான் என்று நினைத்தாள்..

ஜெனியின் அம்மாவுக்கும் ஜோவை ரொம்பப்பிடிக்கும், தன் அண்ணன் மகனென்றும், ரொம்ப நல்ல
மரியாதையான பையன் என்றும்.. தன் வீட்டிலிருந்தே கல்லூரிக்கு அனுப்பலாம் என்று நினைத்தார்... ஆனால் ஜெனியின் அப்பாவுக்கு அதில்
விருப்பமில்லை...மிக கவனமாக,
" ஜோ, அப்ப ஹாஸ்டல சேர்ந்தாலும் மாமா வீட்டை மறக்காமல், மாதம் ஒருமுறையாவது வந்து எட்டிப்பார்த்துக்கோ.. ஏதாவது உதவின்னா
தயங்காம போன் பண்ணு எனக்கு.. என் நம்பர் இருக்கில்ல...?''

" சரி மாமா... "

ஜெனிக்கும் அவள் அம்மாவுக்கும் வருத்தமாயிருந்தது... டோனிகிட்ட பேசும்போது , பாடம் படிக்கும்போது ஒண்ணுமே சொல்லாத அப்பா,
இப்ப ஜோவுக்கு தடை போடுறாப்ல பேசுறாரே?

குழம்பித்தான் போகிறாள், ஜெனி.. பெண் என்றால் எல்லா பக்கமும் பாதுகாப்பு...பயம்...இதுக்கு ஆணாகவே பிறந்திருக்கலாம்...

---------------------------------------------------------------------------­------------------------------------
டோனி, தன் நண்பர்களுக்கு மதிய விருந்து குடுத்து முடிந்ததும், மாடியில் சென்று விளையாடிக்கொண்டும் பேசிக்கொண்டும் இருக்கிறார்கள்..

டோனியின் கண்கள் மட்டும் ஜெனியின் மாடியை நோக்கியபடி...

அவன் நண்பன் விஷ்னு, டோனிக்கு அவர் அப்பா பரிசளித்த புது மொபைல் தொலைபேசியை வாங்கி பார்த்து விவரம் கேட்டுக்கொண்டிருந்தார்கள்..

" என்னடா வெல "

" "

" எங்கடா வாங்கின..?"

" "

" ப்ளூ டூத் இருக்குடா மச்சி.."

" 20,000 இருக்குமாடா"

" ஆமாடா"

" டேய் இல்ல... இது பழைய மாடல்தான் இப்பல்லாம் 15,000 க்கே கெடைக்குதுடா.."

" ஆமா "

" டேய் என்னடா இவன் , 20 கும் ஆமான்றான், 15 கும் ஆமாங்கிறான்..."

"ஆமாடா நானும் அப்பத்திலேருந்து கெவனிச்சுட்டுதானிருக்கேன்.. மாப்பிள்ளை இங்கேயே இல்லை..."

" ஹா ஹா ஆமா அவர் பார்வையெல்லாம் பக்கத்துவீட்டு ரோஜா செடிமேலதாண்டா இருக்கு..."

" ஹாஹாஹா . செடிமேல இல்லடா, ஜெனிமேல..."

" டேய் சும்மா இருங்கடா.. அவ என் தங்கை மாதிரிடா.."

" இப்ப நாங்க யாராவது இல்லன்னு சொன்னோம்?.."


" டேய்................."

டோனி சட்டென்று எழுந்து உள்ளே சென்றான்...மேற்கொண்டு தொடர விரும்பாமல்.....ஜெனிக்கும் கெட்ட பெயர் ஏற்படுத்தாமல்...

---------------------------------------------------------------------------­---------------------------------------------------------------------------
கடைசியாக வழியனுப்ப ஜெனி வீட்டுக்கு சென்ற டோனிக்கு ஆசீர்வாதம் பண்ணி ஸ்டெதஸ்கோப் செட் ஒன்றினை பரிசளிக்கிறார் ஜெனியின்
அப்பா..

எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு டோனி.. கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார்.. "

" அங்கிள் எதுக்கு இதெல்லாம் நீங்க இப்பவே வாங்கிட்டு...?"

முழங்காலிட்டு ஆசீர்வாதம் பெறுகிறான் டோனி.. சின்னதாக ஜெபம் ஒன்றை சொல்லுகிறார்...

" பரலோகத்திலிருக்கிற...எங்கள்....பிதாவே......................................­............................................." ஜெபத்தின் இடையில் கண்திறந்து பார்க்கிறாள்
ஜெனி, டோனியோ கண்கள் மூடி பக்தியுடன்...

இப்பவும் பேச முடியவில்லை அவளால்...

அவன் கிளம்பி கேட் வரை சென்றதும், ஜெனி பிரபுவின் காதில் ரகசியம் கூற, அவன் ஓடிச்சென்று, டோனியின் பின்முதுகில் அடித்துவிட, டோனி பிரபுவின்
கைகளை பற்றுகிறான்...

" ஜெனி தான் இந்த அடியை மறக்கக்கூடாதுன்னு உங்ககிட்ட குடுக்கச்சொன்னா..." பாவம்போல்...பிரபு..

டோனிக்கு பழைய நினைவுகள் மனதுள் வர, ஜெனி இன்னும் சின்னப்பிள்ளைதான் போலும் என்று சிரித்துக்கொண்டே,
பிரபுவின் இரு கைகளை எடுத்து முத்தம் கொடுத்துவிட்டு, செல்லமாய் அவன் கைகளுக்கு இரண்டு அடியும் தந்து

" இதை ஜெனியிடம் பலமா குடுத்துரு , நான் குடுத்தேன்னு சொல்லி...சரியா?..." என்று சொல்லிவிட்டுக்கிளம்புகிறான்...

****************************************தொடரும்

*சில்லென்ற கண்ணாமூச்சி காதல் -பாகம் 1*





*சில்லென்ற கண்ணாமூச்சி காதல் -பாகம் 1*


*ஒருமாலை இளவெயில் நேரம்,*


" நீ பண்ற ஒவ்வோர் சேட்டைக்கும் ஒன்பது முத்தம் தரட்டுமா?..." ஜென்னி என்ற 8ம் வகுப்பு படிக்கும் ஜெனிபர் நாய்க்குட்டியை துக்கி வைத்துக்கொஞ்சிக்கொண்டிருந்தாள்...தன் அழகான பெரிய தோட்டத்தில்


" அப்போ நானும் சேட்டை பண்ணவா ஜென்னி.?.என்னை மட்டும் அடிக்கிற..?."


5ம் வகுப்பு படிக்கும் பிரபு பக்கத்தில் இருந்து அக்காவின் மேல் பட்டும் படாமல் செடிக்கு தண்ணீர் பாய்ச்சுக்கொண்டிருந்தவனை பாய்ந்து அடிக்கச் சென்றாள்..


" சீ. போடா. என்னை முழுவதுமா நனைத்துவிட்டாயே?. இரு அப்பாகிட்ட சொல்லித்தாரேன்..."


" ஏய் அக்கா, என் செல்ல அக்கா, பிளீஸ் போட்டுக்குடுக்காதேக்கா.. உனக்கு இன்னிக்கு நூலகம் போய் புத்தகம் எடுத்து தருகிறேன்.."


" ...ம்.. அப்படி வா.. வழிக்கு..."


" ஏய் பிரபு, ஜென்னி எதாவது வம்பு பண்ணினால் என்கிட்ட சொல்லு சரியா, நான் கவனிச்சுக்கிறேன் ....அவள் ஜம்பம் என்கிட்ட பலிக்காது..ஹாஹாஹா.."


மழை நீர் தேக்கிவத்த மரத்தை ஜெனி மீது உலுக்கியபடி சண்டைபிடிக்க வருகிறான் டோனி என்ற அந்தோணி..



ஜெனி ஒன்றும் சொல்லாமல் புள்ளிமான் போல் மருதாணி கைபோல் சிவந்து உள்ளே ஓடுகிறாள்...


டோனிக்கு ஆச்சர்யமாக இருக்கிறது.. எப்பவும் நேரெதிராக மல்லுக்கு நின்று திண்டாட வைக்கும் ஜெனிக்கு என்னாச்சு இன்னிக்கு?..


அவள்கூட சண்டைபோடாவிட்டால் அன்றைய நாள் கழியாதே..


அவள்தான் பிரபுவுக்கும் ,டோனிக்கும் முக்கியமான பொழுதுபோக்கு..


டோனி பக்கத்துவீட்டு தேவராஜின் இரண்டு பிள்ளைகளில் கடைசி...12 ம் வகுப்பு படிக்கிறான்.மூத்தவள் பாப்பி.. இந்த வருடம்தான் திருமணம் ஆனது..ஜெனியின் அப்பா கல்லூரி பிரின்சிபால், தாமஸ்..


இரு குடும்பமும் அருகருகில் இருப்பதால் பல வருட நட்பு...
ஒன்றும் புரியாமல் விழிக்கிறான் டோனி..


" டேய் , பிரபு, என்னாச்சு, அண்டி ஏதாவது திட்டினாங்களா, ஜெனியை..?"


" இல்லை.."


" அப்ப நீ ஏதாவது.குசும்பு பண்ணினாயா.?."


" இல்லை.."


" பரிட்சை ஏதாவது...?. அந்த நல்ல பழக்கமெல்லாம் நம்ம ஜெனிகிட்ட கிடையாதே.. நான்தான் மண்டையில் குட்டி கணக்கு சொல்லிக்கொடுக்கணும் அவளுக்கு..." வாயில் ஒத்தை விரல் வைத்து துப்பறிகிறவன் போல் தலையை அங்கும் , இங்கும் ஆட்டி, யோசிப்பதுபோல் ...


" டேய் என்னடா ஆச்சு.."


" எனக்கொண்ணும் தெரியாதுண்ணா.. போங்க அவகிட்டயே கேளுங்க..."


" அன்டி, அன்டி, (aunty) ஜெனி எங்க..?.." நாலு கால் பாய்ச்சலில் வீட்டுக்குள் செல்கிறான்..


" வா டோனி, என்ன விஷயம்.. படிப்பெல்லாம் எப்படி இருக்கு?.."


" அது கிடக்கு அன்டி.. ஜெனி எங்க..?" மாடிப்படி ஏறுகிறான்...


" டோனி ஒரு நிமிஷம்... "
" ஏன் அண்டி.. அங்க இல்லயா ஜெனி?.."
" ..ம்.. இருக்கிறாள் ... அங்கு...தான்... ஆனால்..."
" ஆனால், என்ன அன்டி..?... "
"...ம்.. நீ. இங்கு இரு .. அவளே வருவா கீழே..கொஞ்சம் பொறு டோனி."
புரியாதவனாய் தடுமாறுகிறான் டோனி... முதன்முறையாக வித்தியாசமாய் உணருகிறான்..
காத்திருக்க விரும்பாதவனாய் வீடு சென்று அம்மாவிடம் சலிப்புடன் சொல்கிறான்..
" என்னாச்சுமா ஜென்னிக்கு?. இன்னிக்கு தான் என்கிட்ட அடிவாங்காம , என்னையும் அடிக்காம தப்பிச்சுருச்சு.."


அன்னை சிரிக்கிறார்... ஆனால் இந்த சிரிப்பில் வித்தியாசம் தெரிகிறது...
" என்னம்மா.. " வெகுளியாய் ...


மண்டையில் செல்லமாய் குட்டிவிட்டு சிரிப்புடன் போகிறார் அம்மா...தன் தலையை தடவிக்கொண்டே யோசித்தவனுக்கு
மெதுவாக சிரிப்பு வருது.. அசடு வழிகிறான், புருவத்தை தூக்கி..


************தொடரும் ( வெள்ளிதோறும் வாரம் ஒருமுறைதான் சொல்லிப்புட்டேன்..)*****************************
இது 5 வருடத்திற்கு முன்பு உள்ள சம்பவம்தான் .. கதை பின் தொடரும்..

சில்லென்ற கண்ணாமூச்சி காதல்

*சில்லென்ற கண்ணாமூச்சி காதல் -பாகம் 2*

அன்பென்ற மழையிலே -----.

டோனிக்கு இப்போது புரிந்தது.. ஜெனியின் ஓட்டத்தின் , வெட்கத்தின் காரணம்...ஆனாலும் குழப்பமாயிருந்தது.. நான் என்ன வேறு புது ஆளா என்ன?. சரி இன்னும் 2 நாளில் பழையபடி வலம் வருவாள், என்று மறந்து போயிருந்தவனுக்கு, ஒருவாரமாக ஜெனி தன் வீட்டுக்கும், பள்ளிக்கும் தன் கூட வராமல் இருப்பதும், வியப்பு எழுகிறது...

ஜெனியின் அம்மாவின் குடும்பம் இந்துக்கள் , ஆதலால், அவர்கள் முறைப்படியும், கிறுஸ்தவ வழக்கப்படியும் சொந்தத்திற்கு மட்டும் தெரியப்படுத்தி, வீட்டிலேயே ஜெபமும் விருந்தும் வைக்கிறார்கள்..
டோனி, குடும்பத்தினருடன் செல்ல, ஜெனி தன் பெற்றோரிடம் மட்டும் பேசிவிட்டு தன்னிடம் பேசாதது புதிராக இருந்தது.. ஆனால் அவள் தோழிகளுக்கு குசும்புக்கு குறைவில்லை.. என்னவோ சொல்லி சிரிக்கிறார்கள்.. சரி பள்ளியில் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டான்..


திங்களன்று பள்ளிக்குச்செல்ல ஜெனி வீட்டில் வாசலில் சைக்கிளுடன் நின்று,
" பிரபு, என்னாச்சு, வரீங்களா, நான் செல்லட்டுமா?.."அதிகாரமாக..


" இருங்க அண்ணா, வாறேன்..."
" பிரபு, டோனிய முன்னால் போகச்சொல்லு, நாம பின்னால் வருவோம்னு சொல்லு.."
குரல் வந்த திசையை பார்த்தால், பினோஃபோர்ம் உடையிலில்லாமல்,ஜெனி புதிதாக பாவாடை தாவணியில்...அதுவும் பொம்மையாட்டம்..சிரிப்பு வருது டோனிக்கு... வாயைப்பொத்தி சிரிக்கிறான்..


ஜெனிக்கு கோவமாய், வெட்கமாய் வருகிறது... அவள் அன்னையை அழைத்து வருகிறாள்...அம்மாவிடம் டோனியை போகச்சொல்கிறாள்..
" ஆன்டி, என் உதவி இல்லாமல் அவள் எப்படி மேட்டிலும் , சரிவிலும் ஓட்டுவாள்.. அதுவும் பிரபுவை வைத்துக்கொண்டு..பெ.............ரி.............ய மனுஷி ஆயிட்டாளோ?.."


" பிரபு, நீ என்னுடன் வந்திரு.. ஜெனி உன்னைக்கண்டிப்பா கீழே போட்டுடுவாள்.." விழுந்து விழுந்து சிரிக்க, உடனே வந்துட்டான் பிரபுவும்..
முறைத்துக்கொண்டே, சைக்கிள் மிதிக்கிறாள் ஜெனி...அவளுக்கு அவள் மாமா சொன்னது ஞாபகத்துக்கு வருது... இனி அதிகமா, பசங்ககூட பேசக்கூடாது என்று.. அமைதியாக கொஞ்சம் எரிச்சலுடன் மெதுவாக,ஓட்டுகிறாள்..


" ஏய், என்ன , நீ?. இப்படி போனா, நாளைக்குத்தான் போய் சேரமுடியும்.. " அவசரப்படுத்துகின்றான்...எப்பவும் போட்டிபோட்டு ஓட்டும் ஜெனியா இது...ஆணுக்கு சரிசமமா ஓட்டுவாளே..

" டோனி , உனக்கு அவசரம்னா , நீ போய்க்கோ..உன்கிட்டலாம்பேசக்கூடாதுன்னு மாமா சொல்லிருக்கார்..."
" எ.ன்.ன...து...........?.. பேசமாட்டியா?. ரொம்ப சந்தோஷம் .. தொல்லை விட்டது..."
" அப்ப, நான் விரசலா போறேன்.. நீ மெதுவாவே வா.. " கோவத்தோடு,
சைக்கிளை அழுத்தி மிதித்து வேகமாய்ச்செல்கிறான்...சிறிது தூரம் சென்றதும் திரும்பி பார்த்தால் ஜெனி வரவில்லை.. நிப்பாட்டி மறுபடியும் காத்துகிடக்கிறான்.. நேரமாக, வந்தவழியே சென்று, தேடிப்பார்க்கையில்,
தாவணி , சக்கரத்தில் மாட்டி, ஜெனி எடுக்க முடியாமல் அழுதுகொண்டிருக்கிறாள்...பாவமாயும், அதே சமயம் கோவமாயும் வருகிறது...பக்குவமாய் தாவணியை எடுத்துவிடுகிறான்...


" கொஞ்சமாவது அறிவிருக்கா உனக்கு?.. இன்னிக்குதானே தாவணி போடுற?. அதுக்குள்ள ஏன் சைக்கிள்?.. பழகியபின் ஓட்டியிருக்கலாமே?.."
அழுகிறாள்..
" அதுக்குதான் நான் கூட வாறேன்னு சொன்னேன்.. மாமா சொன்னாராம், இவ கேட்டாளாம்.. லூஸு.." ஏங்கி ஏங்கி அழ ஆரம்பிக்க, பரிதாபப்பட்டு, தன் சைக்கிளை பக்கத்து கடையில் நிறுத்திவிட்டு, அவளை பின்புறம் உட்கார வைத்து, பிரபுவை முன்னால் வைத்து, பள்ளிக்கு அழைத்துச்செல்கிறான்...வேறு ஒன்றும் பேசாமல்..


டோனியின் கரிசனம் , அன்பு கசக்குது ஜெனிக்கு...பயம்தான் வருகிறது..
---------------------------------------------------------------------------­-----------------------
+2 படிப்பென்பதால் அதிலேயே வாரம் முழுதும் ஓடினாலும், லீவு நாட்களில், தன் வீட்டு ரோஜா தோட்டத்தை ஒருவழி பண்ணகூட வராதது ஏமாற்றமாயிருந்தது.. தான் பண்ணுவதுதான் சரியென்று சண்டை பிடிப்பாளே?.. ஜெனி வீட்டு கொய்யா மரம் , தன் வீட்டு மொட்டைமாடியில் காய்ப்பதால் , அத்தனையையும் எண்ணிவைத்துவிட்டு, தன் தோழர்கள் யாராவது கைவைத்தால் ஊரைக்கூட்டுவாளே.. இதற்கே அப்பாவிடம் திட்டு வாங்கித்தருவாள் , அடிக்கடி..


இப்ப சண்டைபோடக்கூட வராமால் அப்படியென்ன, விரதமாம்?..
ஞாயிறு காலையிலேயே கொயர் ( பாட்டு) வகுப்புக்கு செல்ல அவளை அழைக்க அவள் வீட்டுமுன் சைக்கிளில் நின்று கொண்டு பிரபுவிடம் கூப்பிட்டனுப்ப,
" நான் இனி பாட்டு வகுப்புக்கு வரலைன்னு சொல்லு..பிரபு.." சத்தமாக...


" வரலன்னா காது திரும்பிரும்.. னு சொல்லு பிரபு.."

" எனக்கு நிறய வேலையிருக்கு னு சொல்லு..பிரபு.."

" ஃபாதர்கிட்ட போய், இந்த பொய்யை சொல்லச்சொல்லு..பிரபு.."


பிரபு மண்டையைப்பிடித்தபடி...

ஜெனியின் அம்மாவும் போகச்சொல்கிறார்கள், ஆனாலும் மறுக்கிறாள்..அப்பா வெளியில் சென்றுள்ளார்.அப்பா இருந்தாலாவது சப்போர்ட் பண்ணுவார்...

சைக்கிளை நிறுத்திவிட்டு வேகமாய் உள்ளே வருகிறான் டோனி..

" ஏய் என்ன , நீ பாட்டுக்கு பாதில வரமாட்டேன்னு சொல்லுவ, பண்டிகை வருது... வந்து ஒழுங்கா பாடு..."

" ஆன்டி , இவளை வரச்சொல்லுங்க.. கடைசி நேரத்தில் என்ன பிடிவாதம் இவளுக்கு..?"

" அங்க நிறய பசங்க இருப்பாங்க.. கிண்டல் பண்ணுவாங்க... நான் வரல.."
" ஆமா , நீ பெரிய ரதி.. வேறு பொண்ணுங்களே இல்ல பாரு..எனக்குத்தெரியாது இன்னிக்கு நீ வந்தாகணும்..."


முணுமுணுத்துக்கொண்டே கிளம்புகிறாள்...கோவிலுக்கான பூக்களை பரித்துக்கொண்டு செல்கிறார்கள்.. ஜெனி ஏன் இப்படி மாறிவிட்டாள்.. போகும் வழியெல்லாம் என்ன பேசினாலும் பதிலளிக்க விருப்பமில்லாமல், சோகமாய்....

நான்தான் அவளை அதிகம் தொந்தரவு செய்கிறேனோ?....ஏதோ நினைத்தவனாய் டோனி, வேறு மாதிரி முடிவெடுக்கிறான்.....

******************************************************தொடரும்..************­***************************