Monday, August 22, 2011

வலிமையை கற்பது?



மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை பெற்றவர் எனக்குத்தெரிந்து இரு குடும்பம் உண்டு.. ஒருவர் மிகப்பெரும் பணக்காரர். மற்றொருவர் நடுத்தர வர்க்கம்.

பணக்காரர் வீட்டில் அக்குழந்தையை கவனிக்க பல ஆட்கள் உண்டு.. இருந்தாலும், அந்த தாய்தான் விரும்பி எல்லா வேலையும் அக்குழந்தைக்கு செய்வார்.. அந்த குழந்தையைத்தான் அதிகம் நேசிக்கவும் செய்வார். உலக சுற்றுலா செல்லும்போதெல்லாம் அக்குழந்தையையும் கூடவே கூட்டிச்செல்வார்கள்.. அப்போது அந்த தாய்தான் முழு கவனிப்பும்..அந்த தாய் முன்னாள் Miss. **** College . ஆனால் வாழ்க்கை இந்த குழந்தை வந்தபின் முற்றிலுமாக மாறிப்போனது அவருக்கு..

அடுத்த குடும்பத்தில் முதல் பெண் குழந்தை பிறக்கும்போது நல்லபடியாக பிறந்து ஒரு சிகிச்சை மூலம் மனவளர்ச்சி குன்றியது.. தாய் பார்த்துக்கொண்டிருந்த ஆசிரியர் வேலையை விட்டுவிட்டு முழு நேரமும் குழந்தையோடு. செய்யதா செலவில்லை.. எல்லோரும் அக்குழந்தையை மனவளர்ச்சி குன்றியோர் இல்லத்தில் விட சொன்னார்கள்.. அவரோ கோபப்பட்டார்.. நான் உயிரோடு இருக்கும்வரை அப்படி செய்யவேமாட்டேன் என அருமையாக வளர்த்தார்.. ஒரு தம்பியும் பிறந்து அவனும் இன்று அப்பெண்ணுக்கு மிக உதவியாக..

இது ஏன் திடீரென?.. நேற்று மார்க்கெட்டுக்கு சென்ற போது ஒரு பெண் தன் 12 வயது குழந்தையை Pram ( குழந்தைகளை எடுத்து செல்லும் வண்டி ) லிருந்து எடுத்து மடியில் வைத்துக்கொண்டே வியாபாரத்தையும் கவனித்தார்.. அந்த குழந்தை உயரம்தான் இவரும்.. மெலிந்த உடல்.. அவர் உடல்வாகுக்கு அக்குழந்தையை தூக்கவே முடியாது.. ஆனால் அப்படியே அள்ளி எடுத்து மடியில் உட்காரவைத்ததை பார்த்து அசந்து போனேன்..எங்கிருந்து கிடைத்தது அந்த சக்தி?.. வெறித்தனமான பாசம் இருந்தால் மட்டுமே இப்படியெல்லாம் செய்ய முடியும்.. தான் ஏழ்மை நிலையிலிருந்தாலும் , தன் குழந்தையை தன்னோடு வைத்துக்கொண்டு கவனிப்பது?..என்ன ஒரு வலிமை இருக்கணும் ?..

சில நேரம் நாம் நினைப்போம் , எனக்கு வந்தால் தாங்க முடியாது என.. ஆனால் வரும்போது வேறு வழி இருப்பதில்லை.. தாங்கித்தான் ஆகிறோம்..தாங்க முடியா சிலர் மட்டுமே மரித்துப்போவதும்.. வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் எல்லாமே ஒரு புதிர்போலத்தான்.. எல்லாவற்றுக்கும் விடை தயாராக இருப்பதில்லை..அவரவர் சிலுவைகளை அவரவரே சுமக்கணும் இங்கே.. ஆனால் இதில் முக்கியமான விஷயம், நல்ல மனிதர்கள் , ஊக்குவிப்போர் அமைவது , அல்லது அமைத்துக்கொள்வது.. எந்த ஒரு பிரமாண்டமான பிரச்னையென்றாலும், ஆறுதலுக்கு ஒரேயொரு துணிவான நல்ல மனம் கிடைத்தால்கூட போதும், உலகை ஜெயித்திடலாம்.. வலிமை பெற்றிடலாம்..

நான் சொன்ன மேற்கூறிய பெண்களுக்கும் இதே போல யாராவது இருக்கக்கூடும்.. அந்த நல்லவர்கள் வாழ்க.. அப்படியான ஒரு மனிதராக எவருக்காவது நாம் இருக்கிறோமா, இருந்தோமா, என நம்மை சுயபரிசோதனை செய்துகொள்வோம்.. அப்படி நாம் இருந்திருந்தால் அது தரும் மன திருப்திக்கு ஈடு எதுவுமே இல்லை..அப்படியான ஒரு வாய்ப்பு கிடைத்தாலும் விட்டுவிடாதீர்கள்..

இப்படியான மனிதர்களை சந்திக்கும் சம்பவங்கள் நம்மை , நம் வாழ்வை ஆன்மீக பாதைக்கு திருப்பிவிடும்..நம்மைச்சுற்றி நடப்பவைகளை பார்த்து சிந்திப்பதும், கேள்வி கேட்பதும், என்ன செய்யலாம் என யோசிப்பதும்தான் என்னைப்பொறுத்தவரை ஆன்மீகம்.. அதுதான் திருப்தியும்.. நிஜமான ஆன்மீகவாதிகள் என நீங்கள் கருதுபவர்களை கொஞ்சம் மனக்கண் முன் கொண்டு வாருங்கள்.. அவர் எளிமையானவராய் , அங்கீகாரம் விரும்பாதவராய் , சக மனிதனுக்கு என்ன செய்யலாம் என்ற சிந்தனையுள்ளவராய் இருக்கக்கூடும்..

குழந்தை வயற்றில் இருக்கும்போது ஒரு தாய்க்கு என்னென்ன கற்பனைகள் இருக்கும்.?.. நாள் நெருங்க நெருங்க , குழந்தை எவ்வித ஊனமுமின்றி நல்லபடியாக பிறந்தால் போதும் என நினைக்காத தாயே இருக்க முடியாது..ஆனால் நாம் நல்லபடியாக பிறந்து வந்தாலும் , மனிதர்களை , எத்தனை விதமாக பிரித்துப்பார்த்து பழகுறோம்?.. சாதி , மதம் , ஆணா, பெண்ணா, என்ன இனம், மொழி, கருப்பா , சிவப்பா, ஏழையா பணக்காரனா என..

இப்படி செய்வதால் நிஜமாகவே மனம் மகிழ்வாக இருக்கிறதா என்றால் நிச்சயமாக இருக்க முடியாது.. ஆனாலும் ஆட்டு மந்தைக்கூட்டமாக ஏன் எதுக்கு என கேள்வி கேட்காமல் பின்பற்றித்தொலைக்கிறோம்.. சிந்தியுங்கள்.. எது உங்கள் ஆழ்மனதுக்கு சரி எனப்படுகிறதோ அதை கேள்வி கேளுங்கள்.. தனித்திருப்பதைப்பற்றி கவலைப்படவேண்டியதில்லை.. அப்படியானவர்களே மாற்றம் கொண்டுவந்தார்கள்.. மனிதநேயம் வளர்த்தார்கள்..

சாதி , மதம் , இனம் , எல்லாவற்றையும் கடந்து ஒரு குழந்தையின் மனநிலைக்கு வர முயலுவோம். வலிமை பெறுவோம்..இப்படியானவர்களை சந்திக்கும்போதெல்லாம் அவர்கள் வலிமை எனக்கும் தொற்றிக்கொள்கிறதுதான்..இப்படி விசேஷ குழந்தைகளை கவனித்துக்கொள்ளும் ஒவ்வொருவரையும் வணங்குகிறேன் . ஆதரித்து ஊக்குவிக்கும் ,பல ஆசிரியர்கள் , பல தொண்டு நிறுவனங்கள் , முக்கியமாக பெற்றோர், உடன்பிறந்தோர்க்கு , சொந்தங்களுக்கு எம் வணக்கங்கள்..





( என் இரண்டாவது குழந்தைக்கு Down syndrome பரிசோதனை செய்யணும் என மருத்துவர் சொன்னபோது மறுத்துவிட்டேன்..கருப்பையில் இருக்கும் குழந்தைக்கு ஊசி செலுத்தி சாம்பிள் எடுப்பார்களாம்.. அது தவறி வேறெங்கோ படக்கூடிய வாய்ப்புண்டாம். அதை கற்பனை செய்துகூட பார்க்கமுடியாமல் மறுத்தேன்.. அப்படி ஒரு குழந்தை பிறக்கணும்னா பிறக்கட்டும் என பிடிவாதமாக இருந்தேன்.. இது என் கருத்து மட்டுமே.. வளர்க்க முடியாதவர்கள் செய்வது நல்லதே )


டவுன் சின்ட்றோம் பற்றிய தகவலுக்கு கிளிக் செய்யவும்.


( அலுவல் நேரம் பின்னூட்டம் தவிர்க்கவும்..நன்றி. )

படங்கள் நன்றி கூகுள்