Friday, March 21, 2008

*வேலாயி- பாகம் 12 - ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில்...*
====================================================
வேலாயியின் கடிதத்தை பார்த்து தீபாவுக்கு அதிர்ச்சி..
" அன்பும் பாசமும் உள்ள தீபாம்மா, எப்படி சொல்றதுன்னே தெரிலம்மா..
நானும் என் கணவரும், சொந்த ஊருக்கு போறோம், சொந்தங்களோட மீதி நாட்கள் வாழ...விவசாயம் மற்றும் தொழில் தொடங்க..
அம்மா, நீங்க எனக்கு குடுத்த தொகை மிக அதிகம்.. அன்புக்காகத்தானே செய்தேன்.. அது என் பாக்கியம்.. ஆனாலும் உங்கள் விருப்பத்துக்காக 4 லட்சம் எடுத்துக்கொண்டு மீதி 6 லட்சம் அய்யாவுக்கு அனுப்பியுள்ளோம்...
முத்துவை நிறைய படிக்க வைக்கணும் மா. அது கிராமத்துல முடியாதும்மா.. தயவுசெய்து இந்த ஒரு ஒதவியும் செய்யுங்கம்மா..காலமெல்லாம் மறக்கமாட்டேன்மா.. வருசத்துக்கு ஒருவாட்டி வந்து பாக்கிறேன் எல்லாரையும்..நன்றிம்மா.."
படித்துவிட்டு அதிர்ச்சியில் தீபா...தூங்கும் முத்துவை நெற்றியில் முத்தமிட்டு அழுகிறாள்..
" கரும்பு தின்ன கூலியா.. முத்துவை நான் பிரிய மாட்டேன்னு, அவனையும் எனக்கு பரிசா குடுத்துட்டு, நீ எப்படி வாழப்போற...?.. ஏன் என் வாழ்க்கையில் கடவுள் மாதிரி வந்து இப்படி பரவசப்படுத்திட்டு என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிட்டு நன்றி செலுத்தமுடியாத கடனாளியாக்கிட்டு போய்ட்ட..?.."
கண்ணைத்துடைத்துக்கொண்டு ஒரு முடிவுடன் முத்துவைத்தூக்கிக்கொண்டு வீட்டுக்குள் சென்றாள்..
மாமியாருக்கும் குற்ற உணர்ச்சி.. சிவாவுக்கு வேலாயியின் பெருந்தன்மை ஆச்சர்யம் தருகிறது...இப்படியும் மனிதர்களா?.. முதன்முறையாக முத்துவை வருடுகிறான்.. இனி இவன் என் மூத்த மகன்...
---------------------------------------------------------------------------­-----
ஊரில் திருவிழா களைகட்டுகிறது... தீபா சந்தோஷமாக அனைத்து நகைகளையும் போட்டுக்கொண்டு, பட்டுப்புடவை கட்டிக்கொண்டு, குழந்தைகளையும் அலங்கரித்து கோவிலுக்கு கூட்டிச் செல்கிறார்கள்...
பொங்கல் வைத்து சாமிக்கு அபிஷேகம் எல்லாம் முடிந்ததும், குழந்தைக்கு பேர் சூட்டும் விழா..
அர்ச்சகர் பையனை தூக்கி நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை முடிந்ததும் பையனுக்கு என்ன பேர் அம்மா என்று கேட்க
" ராஜா என்ற மணிகண்டன் " மூன்று முறை சொல்கிறார்... சிவாவின் தந்தையின் பெயர்..
அடுத்த குழந்தையை தூக்கி பெயர் கேட்க,
" *வெயிலா( veila) எனற வேலாயி* ." என்று தன்னைமீறி கத்துகிறாள் தீபா...
எல்லாரும் ஆச்சர்யத்துடன், சந்தோஷத்துடன் பார்க்கிறார்கள்...
---------------------------------------------------------------------------­----- ஊரிலிருந்து வந்ததும் மாமியார் 20 லட்சத்துக்கான காசோலையை தீபாவிடம் தருகிறார்கள்... நீ குழந்தைகளுக்காகவும் வயோதிகருக்காக ஆரம்பிக்கும் அறக்கட்டளைக்கு என் பங்கும்மா. எனக்கு சொத்து எல்லாம் இனி என் 3 பேரக்குழந்தைகளும்...
"உன்னோட அன்புக்கு வேலாயியே தன் பங்குக்கு 6 லட்சம் தந்திருக்கும் போது , என்னை வெட்கப்பட வெச்சுட்டா வேலாயி....."
*வேலாயி அறக்கட்டளை ஆரம்பமாகிறது*...
---------------------------------------------------------------------------­-----------
*13 வருடம் கழித்து,*
" மம் , பிளீஸ் கெட் ரெடி குயிக்..." முத்து..
" கொஞ்சம் பொருடா தம்பி.. வேலாயி டிரெயின் லேட்டாம், இப்ப வந்துருவா..."
" அம்மா, அவங்க வந்ததும் நம்ம டிரைவர் அழைத்து வருவார்மா.. என்னோட விருது வாங்குகிற விழாவுக்கு நானே லேட்டா போனா எப்படிம்மா."
" முத்து, அந்த விருதுக்கு காரணமானவங்களே அவங்கதானேப்பா..?..நீங்க எல்லாரும் போங்க .. நான் பின்னால் அவளுடன் வருகிறேன்..."
" மம் நீங்க இல்லாமா, நான் எப்படி.. சரி நானும் வெயிட் பண்றேன்.."
வேலாயியின் ஆசைப்படி தங்க மெடல் வாங்கும் அளவிற்கு முத்துவை வளர்த்துவிட்ட நன்றிக்கடனை சொல்லி வேலாயியை பூரிக்க வைக்க துடித்துக்கொண்டிருக்குது ஒரு அன்னையின் உள்ளம்...
****************************************மு ற் று ம்..***********************
*பி.கு..:*
இந்த கதையின் மூலம் நான் தொட முயன்ற சில விஷயங்கள்,தாழ்வு மனப்பான்மை, அன்புக்கு ஜாதி மதம் இல்லை, வாடகைத்தாய், தடங்கல் வந்தாலும் நல்ல விஷயங்களை தைரியமாக தொடரணும் போன்றவை...
வேலாயி-பாகம் 11 - ஆரி ராரிராரி ராரி ராராரோ!*
*=============================================*
தீபா மருத்துவமனைக்குள் நுழைவதற்குள் வேலாயிக்கு அறுவை சிகிச்சைக்குண்டான அனைத்தும் தயாராக.
அவளை ஓடிச்சென்று அணைத்துக்கொள்கிறாள்...தைரியம் தருகிறாள்..
" அம்மா முத்துவை நல்லா படிக்க வைக்கணும் .. பெரியா ஆளா வரணும் மா.."
" கண்டிப்பா வேலாயி.. நாம் இருவரும் சேர்ந்து நடத்துவோம்..அட என்ன இது இன்னும் 2 மணிநேரத்துல
மறுபடியும் வந்து முத்துவையும் , குழந்தைகளையும் பார்த்து கொஞ்சப்போற..தைரியமா இரு சரியா.. நான் உன்கூடவே இருப்பேன்.."
தன் கையிலிருந்த பிரசாதத்தை வேலாயிடம் தந்து தைரியம் தந்தாள்..விபூதி, குங்குமம் இட்டாள்.
மருத்துவர்களிடம் விசேஷ அனுமதிபெற்று தீபாவும் மருத்துவரின் உடை அணிந்து வேலாயிகூட உள்ளே..தைரியமாக இப்போது..
டாக்டர் சங்கர் தலலமையில் மருத்துவக்குழு ...மயக்கமருந்து குடுத்ததும் வேலாயியின் கைபற்றிக்கொண்டே தீபா..தலையைத்தடவி கொடுத்தாள்..
ஆனால் திரை போட்டிருந்ததால் சிகிச்சை ஒன்றும் இந்தப்பக்கம் தெரியாது..
சிறிது நேரத்திற்கெல்லாம் முதல் குழந்தை அழுகையுடன்..... பெண்குழந்தை... தீபாவிடம் காண்பிக்க கண்கள் பனிக்க
முத்தமிட்டாள்.. பின் அடுத்து சில நிமிடத்தில் ஆண் குழந்தை.... கண்கள் பொங்குது தீபாவுக்கு... கனவெல்லாம் நனவாயிற்றே..
வேலாயியை முத்தமிடுகிறாள்... கடவுளுக்கு நன்றி சொல்கிறாள் உடனே. வேலாயிகூடவே சிகிச்சை முடிந்தும் கண்விழிக்க அடுத்த அறையில் காத்திருக்கிறாள்..
குழந்தையைப் போய் பார்க்க கூட தோணவில்லை.. வேலாயி நல்லபடியாக எழுந்திருக்க வேண்டிக்கொண்டே இருந்தாள்..
கண்விழித்து அவளிடம் தகவல் சொன்னதும் பூரித்து போனாள் வேலாயி...
தீபா டாக்டர் சங்கருக்கு தன் மனமார்ந்த நன்றியை கண்ணீரோடு தெரிவிக்கிறாள்.. இதற்காகவே விசேஷமாக
அமெரிக்காவிலிருந்து வந்தவராயிற்றே..:-))
---------------------------------------------------------------------------­---------------------------------
வெளியில் சிவாவும் , மாமியாரும் மற்றவரும் பதட்டத்துடன் இருந்தார்கள்.. முத்து கார் வைத்து விளையாடிக்கொண்டிருந்தான்..
கதவைத்திறந்து செவிலியர் குழந்தை இரண்டையும் காண்பித்ததும் அனைவர் கண்களிலும் கண்ணீர்...
பையன் அம்மாவைப்போல், பெண்ணோ அப்பாவைப்போல்... மாமியாருக்கு அதிக சந்தோஷம்...பெருமையும்..
மருத்துவமனியில் அனைவருக்கும் இனிப்பு வழங்குகிறார்கள்.. செவிலியருக்கு பரிசுப்பொருள்களும்..
---------------------------------------------------------------------------­---------------------------
குழந்தைகளும் , வேலாயியும் வீட்டுக்கு வந்ததும் ஆரத்தி எடுத்து வரவேற்றார்கள்...மாமியாரும் , தீபாவும்...
குழந்தைகளுக்கு வேலாயி தாய்ப்பால் கொடுப்பதில் கொஞ்சம் மனக்கஷ்டம் மாமியாருக்கு,,..
" தாய்ப்பால் குடுப்பது குழந்தைக்கு மட்டுமல்ல அத்தை தாய்க்கும் கர்ப்பப்பை எளிதில் சுருங்குமாம்...ஆதலால், நாம்
அதை தடுக்கக்கூடாது.. முடிந்தவரை தரட்டும்"
வேலாயிக்கு தாய்ப்பால் குடுக்கும் சுகமான அனுபவத்தை பெற்றுத்தருகிறாள், வேலாயி மறுத்தும்..
வேலாயி, தாய்மையை முழுவதுமாக அனுபவிக்கிறாள்...
" அம்மா, 30 நாள் தாய்ப்பால் தருவேன், அதுக்குமேல வேண்டாம்மா.. மொகம் பார்க்க ஆரம்பிச்சா என்கிட்ட பாசம் வரும் கொழந்தைக்கு"
" அதனாலென்ன, எல்லாரும் சேர்ந்து தானே வளர்க்கப்போகிறோம் குழந்தையை..பாசம் வளரட்டுமே..நீ சும்மா இரு வேலாயி.."
மாமியாருக்குதான் உடன்பாடில்லை, வேலாயிமீது பாசம் வருமோ என்று பயப்படுகிறார்..
அனைவருக்கும் வீட்டில் சுறுசுறுப்பும் மகிழ்ச்சியும் அதிகமாகுது..குழந்தையை குளிப்பாடுவது, தூங்க வைப்பது, அழுகை சத்தம்,
என்று வீடே அல்லோகலப்படுகிறது.. இதில் வேலாயிக்கு பத்திய உணவையும் மறக்காது அன்போடு ,கண்டிப்போடு தருகிறாள்..
விருந்தினர்கள், ஊரிலிருந்து வருவதும் , குழந்தையைப்பார்ப்பதும் மாமியாருக்கு மட்டற்ற மகிழ்ச்சி....
ஆனால் வேலாயியிடம் தாய்ப்பால் குடுப்பதை நிப்பாட்டமுடியலை.. 3 மாதம் ஆகிறது... 5 மாதம் முடிந்ததும் குலதெய்வம் கோவிலுக்கு சென்று
முடியெடுத்து பேர்வைக்கணும்... இதை சாக்காக வைத்து வேலாயியிடமிருந்து குழந்தைகளை பிரிக்க திட்டமிடுகிறார்..பயத்தில்..
வேலாயியிடம் மறைமுகமாக சொல்லவும் செய்கிறார்., தாங்கள் ஊருக்கு போவது பற்றி..வேலாயியும் சந்தோஷப்படுகிறார்..
வேலாயிக்கும் தன் சொந்த ஊருக்கு திரும்பி கடை போட்டு விவசாயம் பண்ணவே ஆசைப்படுகிறாள், கணவனுடன்..
இதையெல்லாம் கேள்விபட்ட தீபா அனுமதி தர மறுக்கிறாள்..
குழந்தைகள் இருவரும் கொழு கொழு என்று வளருகின்றாகள்.. தீபா எப்பவும் குழந்தையும் கையுமாக..அதேபோல் மாமியாரும்..
தன் மகன் ஜாடையில் குழந்தை இருப்பது கண்டு ரொம்பவே பெருமைப்படுகிறார் மாமியார்..
---------------------------------------------------------------------------­----------------------------
அடுத்த வாரம் கோவிலுக்கு போகணும், பல வேலைகள் பார்க்கணும்.. காலையிலேயே சென்று வேலாயியை
பார்க்க சென்றவளுக்கு காத்திருந்தது அதிர்ச்சி... முத்து கட்டிலில் தூங்கிக்கொண்டிருந்தான்....வேலாயியையும், அவள் கணவரையும் காணவில்லை..
பதருகிறாள் தீபா...அருகில் ஒர் கடிதம்..
**************************************அடுத்த பாகத்தில் முடியும்*
வேலாயி- பாகம் 10 - அன்பே சுகமா?..* *===================================*
டாக்டர் அறையிலிருந்து வெளியில் வந்த தீபாவை பார்த்ததும் சிவாவுக்கு அதிர்ச்சி..அவள் கண்ணிலிருந்து கண்ணீர் வழியுது.. ஆனால் வாயை இரு கைகளாலும் மூடியுள்ளாள்.
அவள் அருகில் வந்து கையை எடுத்துவிட்டதும் தான் தெரிகிறது அவள் புன்னகை.. ஆனந்தக்கண்ணீரா?..
" என்னம்மா , என்னாச்சு, சொல்லு சீக்கிரம்..." அத்தை
"அத்.. தை...... சி..........வா.... வேலாயிக்கு....."
" வேலாயிக்கு..?.. என்னாச்சு?.."
" அத்தை இரட்டைக்குழந்தையாம் .. சிவா.. கடவுள்........ அத்தை...." சொல்ல வார்த்தைகளின்றி, தடுமாறுகிறாள்.... என்ன சொல்வதென்று தெரியவில்லை யாருக்கும்... மகிழ்ச்சி கடலில் அனைவரும்....அதே சமயம் வேலாயிமேல் பரிதாபம் வருகிறது...
" பயமாயிருக்கு சிவா...."
" ஒண்ணும் கவலப்படாத.. இந்த வருச திருவிழா நாம தான் நடத்துறோம் னு வேண்டிக்கிட்டேன்... எல்லாம் ஆத்தா பாத்துக்குவா... சரி டாக்டரம்மா என்ன சொல்றாக..?"
" 32 வாரம் கடந்துள்ளதால் குழந்தைக்கு பிரச்சனையிருக்காது... ஆனால் வேலாயி இந்த பிரசவத்தை எதிர்கொள்ளணும்... அறுவை சிகிச்சைக்கு அவள் உடம்பு தாங்குமான்னு சந்தேகமாம்... அதுதான் என் பயமும்..."
தீபா வேலாயியிடம் செல்கிறாள்..கைகளை எடுத்து கன்னங்களில் மெதுவாக வைத்துக்கொள்கிறாள்.. அழக்கூடாது என்று கட்டுப்படுத்த கண்ணீருக்கு அடக்கமில்லை,.. பிடிவாதமாய் ஊற்றெடுக்கிறது...அதை மறைக்க புன்னகைக்கிறாள்..
" வேலாயி.. எப்படி சொல்றதுன்னே தெரியலைமா... எல்லாருக்கும் பலவிதமான சந்தோஷம்.. குழந்தைகளும் நல்லபடியாக இருக்குமா...உன் உடம்பை பத்தி தான் எங்களுக்கு கவலை..."
" அட என்னம்மா என்னைப்பத்தி யோசிக்கிறீங்க... முத்துவப்பார்த்து நானே அசந்துட்டேன்.. என் புள்ளயான்னு... அம்மா ஒரு விசயம்மா.. என் வீட்டுக்காரரை வரச்சொல்ல முடியுமாம்மா?.."
" கண்டிப்பா வேலாயி... ஆமா.. ஏதாவது முக்கியமான விஷயமா என்ன?..?"
" அப்படி ஓண்ணுமில்லைமா.. சும்மாதான்..."
அவள் வாடிப்போவது புரிந்து மேலே தொடர விரும்பாமல்.,
" உடனே விமானத்திலே வர ஏற்பாடு செய்கிறேன் வேலாயி... இனி ஓவ்வொரு நாளும் கவனமா இருக்கணும்.. ஒரு வேலையும் செய்யக்கூடாது நீ சரியா?.."
" வேலாயி, நானும் சிவாவும் உனக்கு 5 லட்சம் போடுவதாக நினைத்திருந்தோம்..... இப்ப 5 , பத்து லட்சமா ஆகுது... உன் கணவர் பட்டாளத்திலிருந்து வந்ததும் இங்கேயே மெஸ் ஆரம்பிங்க... ஐடி காரங்களுக்கு தேவையாயிருக்கு.. நான் ஏற்பாடு செய்கிறேன் சரியா?.."
" அம்மா, தயவுசெய்து பணத்தைகொண்டு, என்னைப்பிரிச்சுராதீங்கம்மா...வேண்டாம்மா.. உங்க அன்பு ஒன்று இருந்தால் போதும்மா ஆயுசுக்கும்..."
கைகளை மறுபடியும் பிடித்து ஒன்றும் பேசாதே என்று கண்களால்சொல்லிவிட்டு வந்தாள்..
---------------------------------------------------------------------------­-----------------------------------------------------------------
சிவாவிடம் சொல்லி வேலாயியின் கணவர் வர ஏற்பாடு செய்யப்படுகிறது...
ஒவ்வோரு நாளும் மெதுவாக எதிர்பார்ப்புகளை அதிகரித்து நகர்கிறது...
அருமையான புத்தகங்களையும் , சுலோகங்களையும் வேலாயி அருகில் இருந்து தினமும் வாசிக்கிறாள்... 36 வாரம் கடந்ததும் வந்து அட்மிட் செய்ய சொல்கிறார்கள்.. படபடப்பாயிருக்கு... நார்மல் டெலிவரி ஆகணும் என்று வேண்டிக்கொள்கிறாள்..
" கடவுளே, எல்லா கோவிலுக்கும் வந்து அபிஷேகம் பண்ணுகிறேன்.. குழந்தைகள் நல்லபடியாக பிறக்கணும்.., ஒரு குழந்தையாவது, .. இல்லாவிட்டாலும், பரவாயில்லை, வேலாயிக்கு ஒண்ணும் ஆகக்கூடாது..."
மனம் குழம்பித்தான் போகுது... தீபாவின் பதட்டம்தான் வீட்டிலுள்ளவருக்கு பயம் தருகிறது...
---------------------------------------------------------------------------­---------------------------------------------------------------------------­-----------------
வேலாயியின் கணவர் நேரே மருத்துவமனைக்கு செல்கிறார் வேலாயியை பார்க்க.. ஒரு அழகான சிறுவன் அறை எண் 402, முன் விளையாடிக்கொண்டிருக்கிறான்.. அவனிடம்,
" தம்பி , இங்க, வேலாயின்னு ஒரு பேஷண்ட்.. இந்த அறை தானே?.."
" ஆமா.. நீங்க... ய...ப்பாஆஆஆஆஆ..நீயா...?"
தன் மகனை தனக்கே அடையாளம் தெரியாதவாறு மாறியுள்ளானே?..என்று ஆச்சர்யத்தில் வேலாயியிடம் சென்று சந்தோஷப்படுகிறார்...
---------------------------------------------------------------------------­---------------------
வேலாயிக்கு எந்த நேரமும் பிரசவம் ஆகலாம் என்று எதிர்பார்க்கிறார்கள் விசேஷ மருத்துவர்கள், ஆனால் கர்ப்பவாசல் இன்னும் தயாரில்லை..( மன்னிக்க)
சீக்கிரம் நடந்தால்,. குழந்தைக்கு நல்லது..என்று பேசிக்கொள்கிறார்கள்.., இல்லாவிட்டல் குழந்தைக்கு போதுமான நீர் இருக்காது , என்றும், அறுவை சிகிச்சை நலம் என்றும் யோசிக்கிறார்கள்...ஆனாலும் இன்னும் ஒரு வாரம் காத்திருக்கலாம் என்று நினைக்கிறார்கள்..முக்கியமாக அறுவை சிகிச்சை அவள் தாங்குவாளா என்று சந்தேகப்படுகிறார்கள்..
_______________________________________________
மருத்துவமனைக்கு செல்லுமுன் கோவிலுக்கு செல்லலாம் என்று தீபா கோவிலுக்கு சென்றுவிட, வேலாயியை வழக்கம் போல் காலையில் பரிசோதனை செய்த மருத்துவர், குழந்தைக்கு இருதய துடிப்பு கம்மியாக இருப்பதுபோல் சந்தேகப்பட,
வேலாயி அறுவை சிகிச்சைக்கு சம்மதிக்கிறாள்.. சிவாவுக்கு போன் வர, அவன் தீபாவை தொடர்பு கொண்டால்,
" சிறிது நேரத்துக்குபின் டயல் செய்யவும்..." மீண்டும் மீண்டும்...
என்ன செய்வதென்றே தெரியவில்லை... நேரமாகிக்கொண்டிருக்கிறது...
தொடர்ந்து போன் வர சிவாவும் சரியென்று சொல்லிவிட்டான்..
கோவிலிருந்து வந்த தீபா கேள்விப்பட்டதும் ஆத்திரமும் அதிர்ச்சியுமடைகிறாள்...
" ஏன் என்னைக்கேட்காமல் சரி என்றீர்கள்?..அவள் தாங்க மாட்டளே.. ஏன் அவசரம்..." அழுகிறாள்..
" உங்களுக்கெல்லாம் குழந்தைதான் முக்கியம்... எனக்கு வேலாயி வேண்டும்... "
" அவளுக்கேதாவது என்றால், ....................." விம்முகின்றாள்..
மாமியார் வந்து திட்டுகிறார்..
" ஏன் இப்ப என்ன நடந்துச்சுன்னு பயப்படுற.. எல்லாம் நல்லபடியா நடக்கும்.. கடவுள் கைவிடமாட்டார்னு நம்பு.."
திட்டினாலும் ஆறுதலாயிருக்கு...
" அய்யோ, என்னை புரிஞ்சுக்கோங்க.. வேலாயிக்கு ஒண்ணுன்னா நான் தாங்கமாட்டேன்..சிவா நீங்க ஏன் சம்மதிச்சீங்க... " பைத்தியம் மாதிரி பயந்து நிலைகுலைகிறாள்..சிவாவும் பயப்படுகிறான்..
அவளை உடனே அப்படியே அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்குள் நுழைவதற்குள்..................................
***********************************************தொடரும்...******************
வேலாயி -பாகம் 9 - கனா கண்டேனடி தோழி.. ===========================================*
போன் மருத்துவமனையிலிருந்து வந்தது.. சிவா பேசிவிட்டு தீபாவிடம் தருகிறான்.. உடனே வருவதாகக்கூறுகிறாள்..
வேலாயி மிகவும் தளர்ந்து போயிருப்பதாகவும், மேலும் இன்னும் 1 மாதம் தங்கி ஓய்வு தேவை என்றும் சொல்ல சம்மதிக்கிறாள்..
தீபா பகலில் கூட இருந்து கவனித்துக்கொள்கிறாள்.. மாலை வீடு திரும்பியதும் முத்துவை .. ஆளே மாறிவிட்டான் முத்து..
---------------------------------------------------------------------------­---------------
மாமியார் ஊரில், அலுவலுக்காக ஆண்கள் வெளியே சென்றுவிட, வீட்டில் 3 தம்பி மனைவியருடன்...அவர்கள் மருமகள்களுடன்..
தம்பி மனைவிமார் பயத்தில் , மரியாதை குடுத்தாலும், மருமகளில் ஒருத்திக்கு மட்டும் வாய் அதிகம்.. பட்பட் என்று எதையும்
பேசிவிடும் பழக்கமுள்ளவள்.. அவளுடன் ஒத்துப்போக கஷ்டமாக இருக்கிறது... மேலும் குழந்தைகளையும், அவர்கள் சேட்டைகளும்,
மாமியாருக்கு எரிச்சலூட்டுகின்றது...தன் வீட்டில் ராஜ்ஜியம் பண்ணியதுபோல் இங்கு பண்ண முடியவில்லையே.. தான் செல்லமாக வளர்ந்த வீடு.
ஒரே பெண் குழந்தை என்று செல்லமாக வளர்ந்ததென்ன , தம்பிமார், குடுத்த மரியாதை என்ன.. இப்ப யாருக்கு நேரம் இருக்கிறது என் பேச்சை உட்கார்ந்து கேட்க..
யாரிடம் புலம்ப.. இதற்கு தன் மருமகள் தீபாவே மேல் , 10 வருடத்தில் எதிர்த்து பேசியது இதுதான் முதல் தடவை... எப்படியும் இன்னும் 4 மாதத்தில் குழந்தை
பிறந்து விடுமாமே.. அட , நம் வீட்டுக்கும் ஒரு குழந்தை வரப்போகிறதே.. யாரை மாதிரி இருக்கும்.. சிவா மாதிரியா?.. இல்லை சிவா அப்பா போலவா?. இல்லை என்னை மாதிரியா?..
மனதுக்குள் சிரித்துக்கொள்கிறார்.. வேலாயியும் நல்லவள்தானே.. அதிக சுத்தம். , கடவுள் பக்தி...வெகுளி.. நம்மைத்தவிர யாரைத்தெரியும் அவளுக்கு..
சே, புள்ளத்தாச்சிகிட்ட கொஞ்சம் கரிசனமா இருக்கணுமே.. சாமி குத்தமாயிடுமே...என் குடும்ப வாரிசை சுமக்கிறாளே..
அன்றே தன் தம்பி வந்ததும் தன்னை ஊருக்கு அனுப்ப சொல்கிறார்..
---------------------------------------------------------------------------­-----------------------------------------------
வேலாயி அவுட் ஹவுஸில் பெட் ரெஸ்டில் வைத்து கவனமாகப்பார்த்துக்கொள்கிறாள் தீபா... முத்துவுக்கு அழகான சட்டை வாங்குவதும், அவனுடன்
விளையாடுவதும், வேலாயிக்காக விசேஷமாக சமைப்பதும், வரப்போகிற குழந்தைக்காக ஸ்வெட்டர் பின்னுவதும்.., தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக்கொண்டு
முழுமையாக வாழ்கிறாள்.. அவளுடைய மலர்ச்சியும், புத்துணர்ச்சியும் கண்டு சிவாவும் மகிழ்ச்சியடைகிறான்...ஓவ்வொரு முறை ஷாப்பிங் செல்லும்போதும், அரைமணிநேரம்
குழந்தைகள் பகுதியில் நின்று ஒவ்வொன்றையும் ஆவலுடன் எடுத்து பார்க்கிறாள்.. மறுபடியும் வைத்துவிடுவாள்.. வாங்கி வைத்துக்கொள்ள சின்ன பயம்..
இணையத்தில் குழந்தைக்கான பெயர் தேடுகிறாள்.. 1000 பேர் எடுத்து சிவாவிடம் தேர்ந்தெடுக்க சொல்கிறாள்... தினமும் ஒரு கனவு காண்பதும் அதை சிவாவிடம் சொல்வதும்,சிவாவுக்கு சில
சமயம் எரிச்சலாக வந்தாலும், தீபாவின் குழந்தைதனத்தை பொறுத்துக்கொள்கிறான்...வேலாயிக்கு இப்ப 8 மாசம்.. சின்ன உடம்புக்காரி.. வயறு மட்டும் பெரிதாக
இருக்கிறது..சாப்பிட முடியவில்லை..தீபாவுக்கு மசக்கை வருகிறது அவளைப்பார்த்து..கெஞ்சுகிறாள், கொஞ்சுகிறாள், சாப்பிடச்சொல்லி..
" அம்மா, நீங்க சொன்னாலும் சொல்லாட்டியும் நம்ம சின்னம்மாவோ, சின்னாய்யாவோ, அவுகளுக்காக நான் சாப்பிடுவேன்மா.. பசி திடீரென்று வரும், திடீரென்று
ஒண்ணுமே சாப்பிட பிடிக்காது,.. நீங்கள் கவலைப்படாதீங்கம்மா. இன்னும் 2 மாதம் பொறுத்துக்கோங்க.. " சிரிக்கிறாள்..
---------------------------------------------------------------------------­-----------------------------------------
இன்று கோவிலுக்கு சென்று அர்ச்சனை பண்ணிவிட்டு வரலாம் என்று கிளம்பியவள், கார் வந்து நிற்பதைப்பார்த்து , அதிலிருந்து அத்தை
இறங்குவதைபார்த்து அதிசயிக்கிறாள். ஆனால் இந்த முறை பலாப்பழம், தேங்காய், கடலை, என்று ஏகப்பட்ட சாமான்கள்..
புரிந்துகொண்டாள்.. நல்லபடியாக தான் வந்துள்ளார்கள் என்று...
" தீபா வேலையாளை கூப்பிடம்மா, இத எடுத்துப்போகச்சொல்லு..."
" சரி அத்தை இதோ.."
பெரிய மாற்றம் தெரிகிறது அத்தையிடம், இந்த 6 மாத காலத்தில...
" அவ எப்படிம்மா இருக்கா?.."
" யார் அத்தை?."
" அதான் வேலாயி மா.."
" அத்....................தை..." விழிகள் பனிக்கிறது தீபாவுக்கு.. கடவுளே என் பிரார்த்தனை வீண்போகலை..
" இன்னும் 2 மாதம்தான் அத்தை... உங்கள் பேரக்குழந்தை வந்திடுவான்(ள்)..."
" இன்னிக்கு பத்தியக்குழம்பு நான் சமைக்கிறேன் நீ கவனி.. சரியா..?" அத்தையை அணைத்துகொள்ளத் தோன்றுகிறது..
" சரி அத்தை.. இதோ கோவிலுக்கு போய்விட்டு சீக்கிரமா வந்துவிடுகிறேன்.." சந்தோஷமாக துள்ளிக்குதித்து ஓடுகிறாள்..
சிவாவுக்கு என்ன நடக்குது, கனவா, நினைவா, ஒன்றுமே புரியவில்லை..
---------------------------------------------------------------------------­--------------------------------------
வேலாயிக்கு அதிகமாக வயிறு வலிக்குது அடக்கி அடக்கி பார்க்கிறாள் முடியவில்லை.. இதுவரை ஸ்கேன் பண்ணவே விடவில்லை..தீபா
குழந்தைக்கு ஏதும் ஆகிவிடும் என்ற பயம்..ஆரம்பத்தில் ஒருமுறை பண்ணியதோடு சரி...
மாமியாரே சென்று முதன்முறையாக, வயிற்றுவலிக்கு கைப்பக்குவமாக மருந்து தருகிறார், சூட்டினால் வலியோ என்று..
ஆனால் மீண்டும் வரவே மருத்துவமனைக்கு செல்கிறார்கள்.. தீபாவோ கோவிலில்...வீட்டுக்கு வந்தவளுக்கு ஆச்சர்யம்.. செல்போனை எடுத்துச்செல்லாதது
குறித்து வருந்துகிறாள்.. சிவாவை தொடர்பு கொள்கிறாள்..ஸ்கேன் செய்து கொண்டிருப்பதாக சொல்கிறான்..உடனே செல்கிறாள் மருத்துவமனைக்கு..
பின் மருத்துவர் அவளைத்தனியாக அழைத்து விஷயத்தை சொல்கிறார்..
வெளியே வந்தவள் கண்ணில் கண்ணீர் வழியுது....அப்படியே முகத்தை பொத்திக்கொண்டு கண்களை மட்டும் திறந்து சிவாவை பார்க்கிறாள்..
அழவா, சிரிக்கவா என்று தெரியவில்லை...தீபாவுக்கு.. சிவாவுக்கும் , மாமியாருக்கும் இப்ப அதிர்ச்சி...
*******************************************தொடரும்..***********************
வேலாயி - பாகம் 8 இடியும் , புயலும்..* *===================================*
அம்மா மறுபடியும் வருவதாக கேள்விபட்டதும் சிவாவும் தீபாவும் செய்வதறியாது திகைத்தனர்...ஆனாலும் தீபாவை சமாதனப்படுத்தும் விதமாக,
" ஒன்றும் கவலைப்படாதேம்மா.. சமாளிப்போம்.. எப்பவானாலும் தெரியத்தானே போகுது...?..தைரியமா இருப்பா..."
" என்னைப்பற்றி பயமிலைங்க.. வேலாயிக்கு ஏதாவது தொந்தரவு குடுப்பாங்களோன்னு தான் பயமாயிருக்கு..."
" இல்லை அவங்க இங்க ஒரு கல்யாணத்துக்குதான் வருகிறார்கள்...அனேகமாக 2 நாள் தங்கிவிட்டு மறுபடியும் ஊருக்கு சென்று விடுவார்களாம்..அறுவடை காலம் மாமாவுக்கு உதவி தேவை போல, கணக்கு வழக்குகளில்..."
இரண்டு நாள் எப்படி சமாளிக்க என்று பலவிதமான யோசனை போட்டு வைத்திருந்தார்கள்...சரி முத்துவை என்ன பண்ணுவது?.. யார் வீட்டுக்கு அனுப்புவது?...
ஆயிரம் குழப்பங்கள்.. வந்தும்விட்டார் மாமியார்.. வந்ததும் வராததுமாய் உள்ளே கூட நுழையாமல், தோட்டத்தை சுற்றிப்பார்க்கிறார்...அவுட் ஹவுஸில் மாற்றம்..முகம் சுழிக்கிறார்.. யோசிக்கிறார்..சரி பரவாயில்லை, அழகாத்தானே இருக்கு.. பிரச்சனையில்லை என்று கால் அலம்பிக்கொண்டு, நுழைகிறார்....
மாலை சாப்பாடு வரைக்கும் ஒன்றும் வித்தியாசம் தெரியவில்லை.. திடீரென்று முத்து புத்தகப்பையுடன் வருகிறான்...
" ஆஸ்பத்திரியில ஆத்தாகூட தங்கமுடியாடியாதாம்..அதேன் வந்துட்டேன்..."
" தனியாவா வந்த..?.." பதருகிறாள் தீபா... சிவா கண்காமிக்கிறான் , சீக்கிரமாக உள்ளே கூட்டிச்செல்லும்படி..
தீபாவும் உள்ளே முத்துவை அழைத்துச்செல்கிறாள்.. பின்னாலேயே மாமியார்..
" இவன் எதுக்கு இங்க வந்தான்..?"
" வேலாயிக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை அத்தை..அதான்.."
" அதனால, அவ சொந்தத்துல யாராவது பாத்துக்க வேண்டியதுதானே?..."
" ஆமா.. நான் தான் அவனுக்கு படிப்பு சொல்லிக்குடுக்க இங்கவரச்சொன்னேன்..."மெதுவாக மென்னு விழுங்கி ...தீபா..
சாப்பாடு எடுத்து வைக்கிறாள் முத்துவுக்கு.. ஆச்சரியத்துடன் மாமியார், மேலும் சந்தேகத்துடன், சிவாவிடம் செல்கிறார்..
" என்னடா தம்பி, சிவா... முத்து பய இங்க வந்திருக்கான்.. கேக்க மாட்டியா?.. என்னமோ போங்க.. ரொம்ப இடம் கொடுக்காதீங்க...எனக்கு இது சுத்தமா பிடிக்கலை.."
" சும்மா இரண்டு நாளுக்குத்தான் மா.."
முத்துவை மாடிக்கு அழைத்துச்சென்று கட்டிலில் உட்கார வைத்து பாடம் நடத்துவது குறித்து மறுபடியும் பொறுமுகிறார் மாமியார்...
வீட்டின் வெளியே கதவு தட்டும் சத்தம் கேட்குது...
சிவா சென்று திறக்கிறான்..மாமியாரும் கூடவே.
வெளியில் ரஞ்கிதம்...சிவா தடுமாறுகிறான்..
" அய்யா அவுட் ஹவுஸ் சாவி தர முடியுங்களா?.. வேலாயிக்கு கொஞ்சம் சாமான் எடுத்துப்போவணும்...?." வெகுளியாக கேட்கிறாள்.. மாமியார் பத்தி தெரியாதவள்..
நிலை குலைகிறான் சிவா......மாமியார் அதற்குள் துளைத்தெடுக்கிறார்கள்..
" இருங்கம்மா.. தீபாவை கேட்கணும்.." யோசிக்க பதிலை தள்ளிப்போடுகிறான்...மாடிக்குச்செல்கிறான்...
அதற்குள் மாமியார் ரஞ்சிதமிடம் பேச ஆரம்பிக்கிறார்கள்.. விவரமாய் தெரிய வருகிறது...ரத்தக்கொதிப்பு அதிகமாகிறது...
தீபா சாவியுடன் வந்து ரஞ்சிதத்தை அனுப்பி வைக்கிறாள்....
உள்ளே நுழைந்தவளுக்கு மாமியாரின் தோற்றமே பயம் கொடுக்கிறது...
" என்ன நடக்குது இங்கே?.." சத்தமாக..
" ..." மாடிக்கு தப்பலாம் என்று படியில் பதில் சொல்லாமல் கால் வைத்தவளை பிடித்து நிறுத்தி மறுபடியும்,
" என்ன நடக்குது எனக்குத்தெரியாமல்னு கேட்டேன்.. உன்னைத்தான்.. .." முன்னால் வந்து நிற்கிறார்...
" சிவாகிட்ட கேட்டுக்கோங்கம்மா..." விரைவாக மாடிப்படி ஏறி உள்ளே நுழைந்து பயத்தில் சிவாவின் மேல் சாய்ந்து கொள்கிறாள் ஒரு நிமிடம்...
" சிவா.. வேற வழியில்லை.. நேரம் வந்தாச்சு.. எதிர்கொள்ளணும்... தயவுசெய்து நிதானமாக..." பெருமூச்சு விடுகிறாள்...அதற்குள்" சிவா ,சிவா"
என்று அலறல் சத்தம் கேட்குது...கீழே ஓடுகிறான் சிவா..
" என்னடா நாடகம் நடத்துரீங்க இரண்டு பேரும்... எனக்குத்தெரியாமல்... அதுக்குதான் என்னை மவராசன் ஊருக்கு அனுப்பிச்சயா?..@#$%^&@#$%^&" அசிங்கமாக திட்டிதீர்க்கிறார்...30 நிமிடங்கள்...
சிவா அப்படியே சோபாவில் சாய்ந்தவன்...மனதுக்குள் சீக்கிரம் சத்தம் ஓயட்டும், பக்கத்து வீடுகளுக்கு கேட்கக்கூடாதே என்று மட்டும் நினைக்கிறான்...
இப்போது மாமியார் ஒப்பாரி வைக்க ஆரம்பித்துவிட்டார்.. பித்து பிடித்தவர் போல்.., தன் குடும்ப கெளரவம், தன் பரம்பரை வசதி பற்றி வில்லுப்பாட்டே ஆரம்பித்துவிட்டார்... கல்லு மாதிரி சிவா வாய் பேசாமல் இருப்பது மேலும் ஆத்திரம் வருகிறது..
மாடிக்கே போகாதவர் கஷ்டப்பட்டு மாடி ஏறுகிறார், தீபாவிடம் சண்டை போட..பதறுகிறான் சிவா.. பின்னால் ஓடுகிறான்...
முத்துவை பார்த்ததும் கோவம் உச்சிக்கு போகிறது..நன்றாக திட்டுகிறார் தீபாவை.. தீபாவும் ஒன்றும் பேசவில்லை...தலையைக்குனிந்து கொள்கிறாள்.
"எல்லாம் இந்த சனியனால் வந்தது..." கை ஓங்குகிறார் முத்து மேல்...
தீபாவுக்கு முதன்முதலாக கோபம் வருகிறது..மாமியாரின் கையை தடுக்கிறார்,..
" அவன் என்ன சாதின்னு தெரியுமா உனக்கு.அவ எப்படி என் குடும்ப வாரிசை சே. சே..."
" தெரியும் அத்தை மனித ஜாதி.. என்னைப்பற்றி என்ன வேணுமானால் பேசுங்கள் .. உங்களுக்கு உரிமை இருக்குது...இனிமேல் முத்துவையும், வேலாயி பற்றியும் பேசவேண்டாம்..."
" என்ன பண்ணுவ.. ஒரு பைசா என் சொத்தை தர மாட்டேன் தெரிஞ்சுக்க... எவ்வளவு தைரியமா இப்படி ஒரு சின்னத்தனமான காரியத்தை என் குடும்பத்துக்கு செஞ்சிருக்க..?.. "
" வேலாயி கடவுள் மாதிரி அத்தை .. பிரியத்தினால் மட்டுமே இதை எனக்கு செய்கிறாள்.. அதுவும் உங்களுக்காகதான்.. உங்க பையன் வாரிசுதான் வளருது அவளிடம்.. நான் நினைத்திருந்தால் ஒரு குழந்தையை தத்தெடுத்திருக்க முடியும்.. உங்களுக்காக தான் இப்படி ஒரு முடிவும், காத்திருப்பும்.."
" எனக்கு வேண்டாம் அவள் மூலம் பெற்ற குழந்தை... " அனைவரையும் திட்டி சாபம் விட்டுக்கொண்டே, சிவாவிடம், தான் இனி வரமாட்டேனென்றும், அவனையும் பார்க்க பிடிக்கவில்லையென்றும், சொல்லி உடனே தன் தம்பி மகன் வீட்டுக்கு இரவே பிடிவாதமாக போகிறார்..
ஒருபக்கம் , பிரச்சனை முடிவுக்கு வந்தது நிம்மதியாக இருந்தாலும், அம்மாவுக்கு புரிய வைக்க முடியாமல் தோற்றதும், வயதான காலத்தில் அழ வைத்துவிட்டோமே என்று வருத்தப்பட்டான்...
தீபா அவனைப்புரிந்து கொண்டு அவனுக்கு தனிமையை குடுத்தாள்...தனித்தனியாக ஆளுக்கொருபக்கம் வருத்தம் ..சுனாமிக்குப்பின் அமைதிபோல்.... முத்துவோ தீபாவின் மடியில் ஒன்றும் அறியாமல் தூங்குகிறான்...
மேகமும் இருட்டிக்கொண்டே இடியுடன் , விடிந்தது மறுநாள்.. மழை பிச்சுகிட்டு வரும்போல..
முத்துவை ரெடி பண்ணி பள்ளிக்கு அனுப்பிவிட்டு சிவாவுக்கு தோசை வார்த்து எடுத்து வந்தவளிடம்.
" எனக்கு பசிக்கவில்லை தீபா..இப்ப வேண்டாமே."
" என்மேல் எதுவும் கோபமா, சிவா?.. நான் அத்தையை எதிர்த்து பேசினது வருத்தமா சிவா?. மன்னியுங்கள் பா.." கையை ஆதரவாக பிடித்தபடி..
" அட அப்படியெல்லாம் இல்லம்மா. உன்மேல் என்ன வருத்தம் .. கொஞ்சம் குழப்பமாயிருக்கு, மனதுக்கு.. அம்மா சப்பிட்டாங்களோ இல்லையோ.. உடம்பு சரியில்லாதவங்க.. மாமா மகனுக்கு போன செய்து கேட்டுவிட்டு பின்பு சாப்பிடுகிறேன்..."
போன் செய்யப்போகிறான்.. அதற்குள் போன் ரிங் ஆகிறது..
எடுத்துப்பேசியவன் முகம் மாறுவதைக்கண்டு, தோசைக்கரண்டியுடன் நிற்கும் தீபாவுக்கு , வியர்க்கிறது..
**************************************************************தொடரும்.****
வேலாயி-பாகம் 7 -தவமின்றி கிடைத்த வரமே....இனி வாழ்வில் எல்லாம் சுகமே...!.. ================================================== *
*எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு ஓட்டுனரை அழைத்துக்கொண்டு கோவிலுக்கு சென்றனர் தீபாவும், வேலாயியும்...அத்தையிடம் மார்க்கெட்டுக்கும் *
*செல்வதாக சொன்னதால் வேலாயி கூட போக சம்மதித்தார்...*
*கோவிலுக்குள் சென்று பூசாரியிடம் விசேஷ அர்ச்சனை செய்யும்போது, தீபா, முத்துவின் நட்சத்திரம் சொல்லி அவனுக்காகவும் விசேஷ அர்ச்சனை*
*பண்ணுகிறாள்.. அதிசயித்து மகிழ்கிறாள் வேலாயி... பின் பிரசாதம் எல்லாம் வாங்கிக்கொண்டு திரும்பி வந்து மரநிழலில் நிற்கும்போது,*
*" என்ன வேலாயி, ஒரே படபடப்பாய் இருக்கிறாய்... பூசாரிகிட்ட பூ போட்டு பார்த்தாய்..உங்க வீட்டில் ஏதும் பிரச்சனையா?. நான் ஏதும் உதவணுமா?.."*
*" இல்லம்மா எல்லாம் நல்ல விசயம்தான்மா...ஆனா நீங்க எப்படி எடுத்துக்குவீங்களோன்னுதான்..."*
*" சொல்லு. எதுவானாலும்..பரவால்ல.."*
*" நேத்து பூரா, ஒரே ரோசனை மா.. ரஞ்சிதம் மாதிரியே நானும் ஏன் உங்களுக்கு உதவலாமேனுதான்...."*
*"என்ன சொல்ற வேலாயி?.. " நெற்றியை சுருக்கிக்கொண்டு.. *
*"அய்யாவுக்கும் உங்களுக்கும் சம்மதம்னா நானே ஏன் உங்களுக்கு குழந்தையை பெற்றுத்தரக்கூடாது?.." தயக்கமாக..*
*"என்ன சொல்ற வேலாயி.. நீயா, முடியுமா உன்னால?. எனக்கு ஒண்ணுமே புரியலையே?." கலக்கமாக தீபா..*
*" அதான்மா கருவை நான் சுமந்து நல்ல படியாக பிள்ளைபெற்றுத்தரலாம்னு...எனக்கு ஒரு பைசா நீங்கள் தரவேண்டாம்மா.. எனக்கு உங்களுக்கு*
*உதவும் பாக்கியமும், உங்கள் அன்பும் கிடைத்தால் போதும்..முத்துவை உங்க பிள்ளை மாதிரி பார்த்துக்கிறீங்க... அந்த அன்புக்கு ஏதோ என்னால*
*முடிந்த சின்ன வொதவிம்மா.." கண்களில் முத்துக்களுடன், உதட்டில் புன்னகையுமாய்...வேலாயி..*
*" அதுக்கில்லை வேலாயி, உன்னால் எப்படி ?. நீயே எவ்வளவு பலவீனமா இருக்கிறாய்..உன் கணவன் வேறு பட்டாளத்தில்..எப்படி உன்னால் முடியும்..?.."*
*" அவர் பட்டாளத்துக்கு போனதே நீங்க அல்லாரும் என் மேல், முத்துகிட்ட , வெச்சுருக்கிற பிரியத்த பாத்துதான்..அவருக்கு கண்டிப்பா சம்மதம்தான்மா.."*
*"அய்யோ உனக்கு எப்படி நான் நன்றி சொல்லன்னே தெரியலை வேலாயி... சந்தோஷமாக இருந்தாலும் எனக்கு மனசு கேக்கலை...."*
*" நீங்க ஒண்ணும் கவலைப்பாடாதீங்கம்மா.. நான் பூ போட்டு பத்துட்டுதான் உங்ககிட்ட சொல்லுதேன்...எல்லாம், அந்த ஆண்டவன் பாத்துக்குவான்...*
*நீங்க வெரசா மருத்துவர பாருங்க.. அய்யாகிட்ட பேசுங்க..நாள் ஓடிடும்மா.. .அடுத்த வருசம் வேண்தடுதல நெறவேத்த வாறேன்னு சாமிகிட்ட*
*சொல்லிருக்கேன்... தெகிரியமா காரியத்த ஆரம்பிங்கம்மா.."*
*கோவிலில் வைத்து இப்படி ஒரு செய்தி கேள்விபட்டது அந்த அம்மனே வந்து அருள்வாக்கு தந்தது போலிருந்தது தீபாவுக்கு...நெகிழ்ச்சியுடன் *
*வேலாயியை அணைத்துக்கொண்டாள்...என் உடன்பிறந்தவளாயிட்ட வேலாயி...வேறென்ன சொல்ல..." கலங்கிய கண்களுடன்...*
* ---------------------------------------------------------------------------­------------------------------------------------------- *
*அன்றிரவு சிவாவிடம் மெதுவாக மறுபடியும் தயக்கத்துடன் ஆரம்பித்தாள்..எல்லாவற்றையும் பொறுமையுடன் தீபா மனம் நோகாமல் கேட்டுக்கொண்டான்..*
*ஆனால் பதில்சொல்ல தெரியவில்லை.. குழப்பம்...அவளையும் வருத்தப்படுத்திரக்கூடாது...*
*" என்னங்க நான் பாட்டுக்கு சொல்லிகொண்டே இருக்கிறேன் பதிலில்லையே?.."*
*"....ம்...."*
*" சொல்லுங்க.. விருப்பமா , இல்லையான்னு?.."*
*"...ம்..."*
*" ஏதாவது சொல்லுங்களேன்..."*
*"...ம்..."*
*" நான் உங்களை கட்டாயப்படுத்தலை... இல்லை என்றாவது சொல்லுங்கள்.. தொந்தரவு செய்யமாட்டேன்..."*
*"....ம்.... உனக்கு விருப்பமென்றால் செய்யலாம் தீபா.."*
*" அப்படியென்றால் உங்களுக்கு விருப்பமில்லையா?..."*
*" அப்படியில்லை... அம்மாவை எப்படி சமாளிப்பதென்றுதான்...மேலும் பணவிவரம் பற்றி , எதிலும் மனவருத்தம் வந்துவிடக்கூடாது...*
*லாயரிடம் பேசணும்...."சிக்கலாகி விடக்கூடாது..."*
*இப்போது உண்மையிலேயே எரிச்சல் வந்தது தீபாவுக்கு..." ஏங்க இப்படியெல்லாம் சந்தேகப்படுறீங்க?..ஆண்களே இப்படித்தான்...வேலாயி என்கூடப்பிறந்தவ மாதிரி"*
*" அதுக்கில்லை தீபா, நாலையும் யோசிக்கணும்.. வேலாயி நல்லவள்தான்.. ஆனால் கடைசி நிமிடத்தில் சொந்தக்காரங்கன்னு யாரவது வந்து...பிரச்சனை.."*
*" போதும் நிறுத்துங்கப்ப... அப்படி பார்த்தா யாரையும் நம்பமுடியாது... "*
*" சரி சரி... உன்னை நான் குழப்பவில்லை.. லீகல் விஷயங்களை நான் பார்த்துக்கொள்கிறேன்...முதலில் அம்மாவை ஊருக்கு அனுப்பணும். *
*" எல்லாம் சரிசெய்து நாம் ஒரு முடிவுக்கு வந்தபின் தெரியப்படுத்திக்கொள்ளலாம்.. அதுவரை, மாமாவிடம் சொல்லி அழைத்துச்செல்ல சொல்லணும்.."*
*தீபாவுக்கு சந்தோஷமாக இருந்தது... தெளிவாக அதே சமயம், தன் விருப்பத்துக்கும் மதிப்பளித்து சம்மதித்தானே என்று..*
* ---------------------------------------------------------------------------­------------------------------------------- *
*மாமியாருக்கு ஆச்சரியம்.. ஏன் தன்னை மகன் ஊருக்கு அனுப்புகிறான்... இருந்தாலும் மகிழ்ச்சி.. ஊருக்கு போய் கொஞ்சம் அதிகாரமாய், ஆசையாய் *
*இருந்துவிட்டு வரலாமே என்று..அவர் ஊருக்கு சென்றதும் இங்கு வேலைகள் மும்மரமாக நடக்குது.. எல்லாவிதமான பரிசோதனைகளும்*
*நடந்தாலும், வேலாயி குறித்துதான் கொஞ்சம் கவலை, அவள் நோஞ்சான் உடம்பு தாங்குமா இன்னொரு பிரசவம்... ஆனால் அவள்*
*மனோதிடம் , ஒத்துழைப்பு கண்டு ஆச்சரியப்படுகிறார் மருத்துவர்.. எல்லவாற்றையும் தெளிவாக ஆசையுடன் கேட்டுக்கொள்கிறாள்...*
*ஒரே மாதத்தில் சோதனைக்குழாய் மூலம் சிவா, தீபாவின் கருவும் தயாராகி, வேலாயியின் கற்பப்பையினுள் வைக்கப்பட்டு , வெற்றிகரமாகிறது..*
*வேலாயி மருத்துவமனையிலேயெ ரஞ்சிதம் துணையுடன் 10 நாள் இருக்க, முத்துவை அருமையாக , கவனித்துக்கொள்கிறாள் தீபா... *
*வேலாயியிடம் கண்டிப்பாக சொல்லிவிட்டாள், தங்கள் வீட்டின் அவுட்வுஸிலேயே ,பிரசவம் வரையிலாவது தங்கவேண்டுமென்று...*
*அவளுக்கான வீடு தயாராகிறது... வீட்டையே அலங்கரிக்கிறாள் தீபா.. கல்லூரி வேலையையும் விட முடிவு செய்கிறாள்... தோட்டத்தில் பலவிதமான *
*பூச்செடிகள் கொண்டு சோலையாக்குகிறாள்.. சிவா இவளின் மாற்றத்தை பார்த்து அதிசயிக்கிறான்.. இவ்வளவு நாள் எங்கே இருந்தது அனைத்தும்...*
*குழந்தை போலல்லவா குதூகலிக்கிறாள்.. நாம்தான் தப்புபண்ணிவிட்டோமோ? *
*எல்லாம் சரியாக நடந்துகொண்டிருக்கும் வேளையில் வந்த செய்தி சிவாவையும் , தீபாவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது...*
* ******************************தொடரு­ம்..********************************
வேலாயி-பாகம் 6 ---ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே!..*
*======================================================*
சிவா தீபாவுக்கு தைரியம் சொல்லுகின்றான்.." நீதானே, எனக்கு தாழ்வு மனப்பான்மை கூடாது என்றும் , என் வாழ்நாள் முழுதும் அது பற்றி
பேசவே கூடாது என்றாய்.. இப்போது நீயே தாழ்வு மனப்பான்மையில், உன் உரிமையை கூட விட்டுக்கொடுக்கும் அளவிற்கு, சோர்ந்து போகிறாய்..
என் திருமணத்திலிருந்து நீதான் என் முகம் பார்க்கும் கண்ணாடி..உன் சூரிய முகம் பார்த்துதான் நானே மலர்ச்சியடைகிறேன்.. ஆனால் என்னால்
உனக்கு அப்படி ஒரு மலர்ச்சியை தர முடியாமல் தோல்விகாண்கிறேன்.."
"சரி .விடுங்கள்.. இனிமேல் அப்படி எதுவும் பேசமாட்டேன்... எப்பவும்போல மகிழ்ச்சியாயிருப்பேன்..இப்ப சந்தோஷம்தானே?..
---------------------------------------------------------------------------­-----------------------------------
தீபாவளி ,பொங்கல் வந்தால் மாமியார் தவறாமல் தீபாவுக்கு நான்கு விதமான பட்டுசேலைகளும், புது டிசைன் நகைகளும் வாங்கிடுவார்...
ஊரார் பாராட்ட.. குலதெய்வம் கோவிலுக்கு ,விசேஷ பூஜைக்கு, அவளை அலங்கரித்து அழைத்துச்சென்று எல்லார் மத்தியிலும் நல்ல பெயர்
வாங்குவதிலும் குறைவில்லாமல் பார்த்துக்கொள்வார்.. தீபாவும் மாமியார் மனமறிந்து வெளியில் விட்டுக்கொடுக்காமல் குடும்ப
கெளரவத்தை காப்பாற்றுவாள்..அதேபோல் சொந்தத்தில் ஒரு திருமணத்திற்கு அழைப்பு வந்துள்ளது.. குடும்பமாக
செல்லவேண்டும்..இதுமட்டும்தான் அவளுக்கு பிடிக்காத
விஷயம்... தெரிந்தவர் தெரியாதவர் என்று எல்லோரும் விசாரிப்பார்கள், குழந்தை பற்றியும் , குளித்தது பற்றியும், நகரின் பிரபல குழந்தை
மருத்தவரிலிருந்து, சிறந்த தெய்வங்கள் வரை இலவச அறிவுறைகள், வழிமுறைகள், உண்மையான கரிசனங்கள், பொய்யான வருத்தங்கள்
எல்லாமாய் அவளைக் குழப்பி கைதிக்கூண்டில் ஊமையாய் ,வேடிக்கைபார்க்கும் பொருளாய், வேதனையைத்தரும்..சில சமயம் சிவாவுடன்
சென்றுவிட்டு விரைவில் திரும்பிவிடுவாள்.. ஆனால் மாமியாருடன் சென்றாலோ அதிக நேரமாகும்..இப்போதும் அப்படியே ஆனது...
எல்லோரிடமும் மாமியார் வருத்தப்படுகிறார்.. எவ்வளவுதான் நடிப்பது, அடக்குவது,, பலரின் பரிதாபப்பார்வையை.... தாங்க முடியாமல்,
சிவாவிடம் தொலைபேசியில் அழைத்து,
" தலையை வலிப்பதுபோலுள்ளது, வீட்டுக்கு போகலாமா?.."
" சாப்பிடாமலா தீபா?.. தவறாக நினைப்பார்களே?.. சரி கொஞ்சம் பொறு வருகிறேன்.."
சிறிது நேரத்தில் பெண்கள் பகுதிக்கு வந்து அம்மாவை கண்ஜாடையில் கூப்பிட்டு விஷயத்தை சொல்லிவிட்டு அழைத்துவந்தான்.. அம்மாவை திரும்பி வந்து
அழைத்துச்செலவதாகக்கூறிவிட்டு.. .. வீட்டிற்கு வந்ததும் தீபா சிவாவை உடனே அனுப்பிவிட்டு தன் அறைக்கு சென்று கட்டிலில் விழுந்தவள்
மறுபடியும் அழ ஆரம்பித்தாள்... மனநோய் வந்துவிட்டது அவளுக்கு.. எந்த கடவுளும் அவளுக்கு இப்ப துணையில்லாததுபோல் தவித்தாள்...
சின்னம்மா வந்தாங்களே, என்னாச்சோ , என்று வேலாயி, கொஞ்சம் பழச்சாரு எடுத்துக்கொண்டு மாடிக்குச்சென்றாள்.. அங்கு தீபா அழுது
கொண்டிருப்பதை பார்த்ததும் புரிந்துகொண்டாள்.. மெதுவாக அருகில் வந்து கட்டில் பக்கத்தில் தறையில் அமர்ந்து அவள் தலையை மெதுவாக
கோதிவிட்டாள்.. அவள் கவலையை முழுவதுமாகப் புரிந்தவளாய்...இப்போது கொஞ்சம் தீபா தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டாள்.. " ஏம்மா எத்தினி நாள்தான் இப்படி வருத்தப்படபோறீங்க?..ஏதாவது முயற்சி எடுக்கலாமே?.."
" இல்ல வேலாயி, எல்லா பரிசோதனையும் பண்ணியாச்சு.. என் கற்பப்பைக்கு ஒரு குழந்தையை சுமக்க வழியில்லையாம்.."
" அப்படீன்னா, எனக்கொரு யோசனை வருதும்மா.. என் உறவுக்காரி ரஞ்சிதம் இல்ல, ரஞ்சி, அவ போனவருசம் அந்த சிங்கப்பூர் சோடிக்கு,
ஒரு அழகான புள்ளயா பெத்து கொடுத்தாம்மா.. அவுகளுக்கு அங்கிட்டு அத செய்யமுடியாதாம்ல.. இவளும் கஷ்டப்பட்டளா, இரண்டு லட்சம்
வாங்கிட்டு, பெரிய ஆஸ்பத்திரில புள்ள பொறந்துச்சும்மா.. ஏம்மா நீங்களும் ஏன் அப்படி பண்ணக்கூடாது?. பெரியம்மா அவிக மகன் மூலம் தான் வாரிசு வேணும்னு
நினைச்சா..?..ஏதாவது தப்பா சொல்லிருந்தேன்னா மன்னிச்சுக்கோங்கம்மா..எனக்கும் சீக்கிரம் நம்ம வீட்டுல ஒரு குட்டி சேட்டைபண்ணணும், நான் அதை தொரத்திக்கிட்டு
திரியணும்னு ஆசைமா.." சிரிக்கிறாள் தீபா..
" வேலாயி, நானும் அறிந்திருக்கிறேன் வாடகை தாய் பற்றி.. ஆனால் இவங்க எல்லாரும் சம்மதிக்கணுமே.. அப்புறம் அதுக்கு நல்ல ஆளா
பார்க்கணும்.. அவங்க குழந்தையை நம்மிடம் பத்து மாதம் சுமந்து தரணும்.. எவ்வளவு கஷ்டம் இருக்கு தெரியுமா?..அய்யோ நெனச்சாலே..."
" நீங்க மட்டும் ஒரு வார்த்தை சரி னு சொல்லுங்கம்மா, மத்த விவரத்தை நான் வாங்கியாறேன்... ஓண்ணும் பெரிய விஷயமில்லை.. டக்குனு ஓடிறும்
நாளும் பொழுதும்...லேட் பண்ணாதீங்கம்மா.. இன்னிக்கே அய்யாகிட்ட பேசுங்கம்மா.."
" உனக்குதான் எவ்வளவு ஆசையும் , அவசரமும்..." அன்பாக வேலாயியின் கைகளை பிடித்துக்கொண்டாள்..
" ஆனா யார் இதுக்கு சம்மதிப்பாங்க வேலாயி..?..நமக்கு முன்ன பின்ன பரிச்சயமில்லாதவங்களை, எப்படி நம்புவது"
" ..ம்.. அதுவும் சர்தான்..ம்ம்.. சரி நீங்க அய்யாகிட்ட பேசுங்க.. மத்த விவரத்தை நான் ரஞ்சி கிட்ட கேக்குறேன்மா...கடவுள நம்புவோம்மா.."
---------------------------------------------------------------------------­-----------------------------
அன்று இரவே, சிவாவிடம் இதுபற்றி மெதுவாக கூறினாள், பயத்துடன்...பதிலே இல்லை..
" என்ன சிவா, ஏதாவது சொல்லுங்கள்.."
" உண்மையைச்சொல்லணும்னா , எனக்கு விருப்பமில்லை .உன் அளவு எனக்கு விசாலமான மனதில்லை தீபா..யாரோ ஒருவர்
நம் குழந்தையை சுமக்கணுமா?. அவர்கள் பழக்க வழக்கம் எப்படியோ?.அவர்கள் குடும்ப சூழ்நிலைகள், கோப தாபங்கள்.எல்லாவற்றையும்
யோசிக்கணுமே...?."
" ...ம்..."
" என்ன ..ம்...?.. உனக்கு வருத்தமா?.. நான் சொல்வது தவறா?.."
" இல்லை நானும் குழம்பிதானுள்ளேன்.. எதற்கும் மருத்துவரை சந்திப்போமே?.."
" சரி உன் விருப்பம்.. ஆனால் இப்போது அம்மாவிடம் எதையும் சொல்ல வேண்டாம்.. அவர்களுக்கு கண்டிப்பாக சம்மதமிருக்காது.."
---------------------------------------------------------------------------­------------------------------
மறுநாள், ஒரு முடிவோட இருந்தாள் தீபா.. சிவா சொல்வதும் சரிதான் தெரியாத யாரோ ஒருவரிடம் குழந்தைபெற்றுக்கொள்வது, நினைத்தாலே
பயமாயிருக்குது.. அதிலும் ஏதாவது தப்பு நடந்தால் மாமியாருக்கு பதில் சொல்லி முடியாது.. விபரீதமாகிவிடும்..இனி இதுபற்றி வேலாயியிடம்
எதுவும் பேசவேண்டாம் என்று சொல்லிடணும் என்று முடிவெடுத்த போது, வேலாயி,
" எம்மா, வேலை முடியட்டும் உங்ககிட்ட ஒரு முக்கியமான விசயம் சொல்லணும்.. இங்கிட்டு வேணாம்.. கோவிலுக்கு போவணும்... மாரியாத்தா நல்ல வழி தந்துட்டா.. உங்களுக்கு இன்னிக்கு லீவுதானே.. கெளம்புங்க" என்றவளை வினோதமாக ,ஆச்சரியமாகப் பார்த்தாள்..
***************************************************************************­**********************தொடரும்************************
வேலாயி- பாகம் 5 எனதுயிரே, எனதுயிரே எனக்கெனவே படைத்தானே!.. *
*===================================================================*
ஆசைப்பட்ட மனைவி அருகிருந்தும், அன்பா பேச முடியலை...விடிந்ததும் போனால் இரவுக்கு வருவதற்குள் தூங்கிப்போகிறாள்.. என்ன செய்ய.. இப்படியே ஒரு வாரமா?. தாங்குமா?. கோபமாக வருகிறது சிவாவுக்கு..இன்றைக்கு எப்படியும் தனியாக நம் தோப்புக்கு அழைத்துச்சென்றாவது பேசவேண்டும்... தனியாக இருக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கமாட்டேங்குதே...பெரியப்பாவின் மகனிடம் சொல்லிவைத்தான்..
அதேபோல் காலையிலேயே கிளம்பிவிட்டான் தீபாவுடன்..எல்லோர் மறுத்தும் தனியாக. போகும் வழியெல்லாம் தென்னைமரங்களும் , ஆலமரங்களும், அதிலுறங்கும் பறவைகளும்...அதன் கூவல்களும்...வாய்க்காலில் வீசிடும் குளிர்காற்றும் ,
ரோட்டில் கிடக்கும் பன்னீர்பூக்களும், வீடுதோறும் பூத்திருக்கும் தாள்பூக்களும்..,, ரம்மியத்தைக்கூட்டுகின்றன.
தோட்டத்தில் பம்புசெட்டில் வேகமாக பாய்ந்து செல்லும் நீரும் , அதனருகில் வளர்ந்த ரோஜா மற்றும் மல்லிச்செடிகளும்... சென்றதும் தோட்டக்காரர் இள்நீர் வெட்டித்தந்தார். பின்னர் நொங்கும்.. அடடா, என்ன ருசி..கிளிகள் பறந்து மரத்துக்கு மரம் தாவி..ரசித்துக்கொண்டே,
" அங்கே பாருங்கள், சிவா, அந்த கிளிகளையும் , அவையின் கொஞ்சும் மொழிகளையும்.."
" நீ கிளிகளை பாரு, நான் கிளியைப்பார்க்கும் கிளியை ரசிக்கிறேன்.."
முத‌ன்முத‌லாக‌ வெட்க‌ம் , சிரிப்பாக வ‌ருகிற‌து தீபாவுக்கு..
" பாருங்க‌ளேன் இந்த‌ ரோஜாவை , என்ன‌ அழ‌கு..கூட‌வே அந்த‌ ம‌ல்லியின் ம‌ண‌மும்.."
" எந்த‌ ரோஜாவை, க‌ன்ன‌ங்க‌ள் சிவந்து நிறம்மாறும் இந்த‌ ரோஜாவையா?.."
இத‌ற்குமேல் அவ‌ளால் ஒன்றும் பேச‌ இய‌ல‌வில்லை... ஆண்மையின் ஆழுமையில் பெண்மை ப‌ல‌வீன‌மாகுது
வெட்க‌த்தில்...பார்வையே கேள்விகேட்க, புன்ன‌கை ம‌ட்டுமே பதிலாக‌வும், புதிய‌ உல‌க‌ம் இருவ‌ருக்கு ம‌ட்டுமாக‌ தொட‌ங்குகின்ற‌து...
பம்புசெட்டில் தண்ணீரை தீபாவின் மேல் தெளித்துக்கொண்டே, விளையாட்டை ஆரம்பிக்கிறான்..
---------------------------------------------------------------------------­---------------------------------------------------------------------------­- பழைய ஆல்பத்தை பார்த்து நினைவுகளில் மூழ்கியவளின் மனதை மீட்டது மாமியாரின் குரல்...
" அங்கு என்ன பண்ணிகிட்டு இருக்க?. கூப்பிட்டு எத்தனை நாழியாச்சு?...
" இதோ வந்துட்டேன் அத்தை.."
மாடியிலிருந்து இறங்கி வந்தவளை காரணமில்லாமல், குழந்தையை சாக்கு வைத்து திட்டிக்கொண்டிருக்கிறாள், மாமியார்..
இதையெல்லாம் அடுப்படியிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த வேலாயிக்கு வருத்தமாக இருக்கிறது..
மாமியார் அந்த புரம் சென்றதும்,
" ஏம்மா , உங்களை கண்டபடி திட்டுறாங்க பெரியம்மா, நீங்களும் ஒண்ணும் பேசமாட்டேங்கறீங்க..?"
" அவங்க என்ன இன்னிக்கு புதுசாவா திட்டுராங்க வேலாயி, பத்து வருஷமா அப்படித்தானே...நீ ஏன் கவலைப்படுற?."
" ஏம்மா புளு பூச்சில்லைன்னு இந்தம்மா சொல்லும்போது எனக்கு நெஞ்சை அடைக்குதும்மா...அதையாச்சும் கொஞ்சம்
உங்க வீட்டுக்காரர்கிட்ட சொல்லி நிப்பாட்டச்சொல்லுங்கம்மா.....ஏம்புள்ள மேல உசிரே வெச்சுருக்கிற மகராசி, உங்களை
ஏன் ஆண்டவன் இப்படி சோதிக்கிறானோ..?." என்று சொல்லிக்கொண்டே பாத்திரம் கழுவியவள், சத்தத்தைக்காணோம் என்று
திரும்பிப்பார்த்தால் தீபா மெளனமாக அழுதுகொண்டிருந்தாள்...
" அய்யோ , எம்மவராசி, நானே கிறுக்குத்தனமா அதைபற்றி பேசுப்புட்டேனா?..அறிவில்லாத சிறுக்கிம்மா நானு.. மனசுல ஒண்ணும்
வெச்சுக்காதேம்மா.. " என்று வேலாயியும் கூட சேர்ந்து அழ ஆரம்பித்ததும்,தீபா கண்களை அழுத்தத்துடைத்துக்கொண்டு, முகத்தில்
புன்னகை வரவழைத்துக்கொண்டு,
" இல்ல வேலாயி, எனக்கு அம்மா மாதிரி நீ.. நீ பாசமா பேசினதால் கொஞ்சம் கலங்கிட்டேன்.. வருத்தமெல்லாம் ஒன்றுமில்லை.."
என்று சொல்லிவிட்டு கல்லூரி கிளம்ப சென்றுவிட்டாள்..
மாடியில் சென்றதும் இவள் கண்கள் கலங்கியிருப்பதை பார்த்து சிவா அவள் தாடையை தூக்கி மெதுவாக,
" என்னம்மா ஆச்சு, அம்மா ஏதும் பேசினாங்களா, காலங்காத்தால?..நான் மன்னிப்பு கேட்கிறேன்மா உன்னிடம்..."
" இல்லீங்க ஒண்ணுமில்லை.. நீங்க கிளம்புங்க.. " என்று புன்னகையுடன் சமாளித்தவளிடம்,
" சொல்லு , கண்கலங்கியிருக்கே.. நான் வேணுமென்றால் அம்மாவிடம் இன்று பேசுகிறேன்..."
" நீங்க சும்மா இருங்க.. அவங்க என்ன என்னை கொடுமையா படுத்துராங்க.. ஏதோ வருத்தம் வாரிசு இல்லையேன்னு...
எல்லா தாய்க்கும் உள்ளதுதான்.. எனக்கு பழக்கமாயிடுச்சு சிவா.."என்று சொல்லும்போதே இயலாமையில் மறுபடியும் அடக்கிய
கண்ணீர் மீறிக்கொண்டு எட்டிப்பார்க்க, அடக்கமுடியாமல் தோற்றுப்போய் அந்தப்பக்கம் திரும்ப,
சிவாவுக்கும் அவள் நிலைமை பார்த்து கண்ணீர் வந்து அவளை அப்படியே அணைத்துக்கொண்டான்..
"உனக்கு விருப்பமென்றால் சொல்லும்மா, நாம் ஒரு குழந்தையை தத்து எடுத்துக்கொள்ளலாம்...எப்பவோ சொன்னேனே?.." " வேண்டாம் சிவா.. அத்தைக்கும் உங்கள் குடும்பத்தார் யாருக்கும் அதில் விருப்பமில்லை... அவர்களுக்கு உங்கள் மூலம் ஒரு வாரிசு
வேண்டும்..அத்தை சொல்வதுபோல் நீங்கள் வேணுமென்றால்,..." அப்படியே அவள் வாயை தன் கையால் பொத்திவிட்டான்..
" தயவுசெய்து இன்னொருமுறை இப்படி பேசாதே தீபா.. பெரிய தியாகம் செய்வதாய் நினைத்துக்கொண்டு, என் உயிரையே எடுக்குது உன்
வார்த்தை.. எனக்கு நீ போதும்..... எத்தனை ஜென்மத்திலும்..."
" சிவா உங்களை கணவனா அடையா எவ்வளவு புண்ணியம் செஞ்சிருக்கணும் நான்... உங்களுக்காக நான் எதையும் தாங்குவேன் சிவா.."
உதட்டைக்கடித்து கண்ணீரை அடக்கியவள் மீண்டும் பொங்கி பொங்கி அழுதாள் நீண்ட நாட்களுக்குப்பிறகு..
***************************************************************************­*************தொடரும்..*********
வேலாயி..- பாகம் 4.சஹானா சாரல் தூவுதோ?. ===========================================*
" இந்த சம்பந்தத்தை மறந்துவிடு தீபா.."
" சாரி அப்பா.." எதுவுமே யோசிக்காமல்....தீபாவும்... * *************************************************************************தொ­டரும்********************** *
*மறுநாள் சந்தோஷமாக வந்த சிவாவுக்கு அதிர்ச்சியாயிருந்தது.. தீபா தன்னை தவிர்ப்பதும், வங்கிக்கு வேறொரு ஆசிரியர்*
*வருவதும்...தாங்க முடியவிலை ஒரு வாரம்... பொறுத்துப்பார்த்து நேரே கல்லூரிக்கு சென்று விருந்தினர் அறையிலிருந்து அழைப்பு விடுத்தான்*
*தீபா சாதாரணமாக வந்து ஹலொ சொன்னது எப்படியோ வலித்தது.. அன்ன ஒரு அலட்சியம்..பின் திருமணத்தில் அப்பாவுக்கு விருப்பமில்லை*
*என்று தெரிந்ததும், அதற்கு இவள் சம்மதித்ததும் இடி விழுந்ததுபோலிருந்தது...தீபாவும் தப்பாக நினைத்துக்கொண்டிருக்கிறாளே..*
*தனக்கு நடந்தது எதுவும் தெரியாது என்றும் அப்பாவிடம் பேசுவதாகவும் சொல்லிசென்றவன் நேரே ஊருக்கு சென்றான்..*
*எல்லோரையும் ஒரு பிடி பிடித்து, தனக்கு ரிஜிஸ்டர் திருமணம் பண்ணமுடியுமென்றும், மரியாதைக்காகத்தான் அவர்களை அழைத்துச்சென்றதையும்*
*சொல்லி அடுத்த முகூர்த்ததுக்கு ஏற்பாடு செய்தான்....அங்கிருந்தே தீபா அப்பாவிடம் பேசி சம்மதமும் பெற்றான்.... அடேங்கப்பா காதல்தான் *
*என்ன வேகம், சக்தி கொடுக்கிறது..*
* ---------------------------------------------------------------------------­--------------------------------------------- *
*திருமணம் உறுதியானதும் தீபாவை முதன்முதலில் அலமேலு மேடம் வீட்டில் பார்த்ததும் பேச்சே எழவில்லை... மறுபடியும் வெட்கமா, தயக்கமா*
*பயமா?.. என்ன பேச எப்படி ஆரம்பிக்க.. மேடமும் தனியா பேசட்டுமேன்னு பலகாரம் எல்லாம் வைத்துவிட்டு சென்றுவிட்டார்கள்..*
*தீபா கடிகாரத்தைதான் பார்த்துக்கொண்டேயிருந்தாள்..*
*" எப்படியிருக்கீங்க?."*
*" ம். நலம்.. நீங்க..?."*
*".."தலையாட்டல்... " ".."*
*" வேலை எப்படியிருக்கு .?."*
*" ம். நல்லாருக்கு. உங்களுக்கு?.."*
*""*
*""*
*இப்படியே ஒரு மணிநேரம் ஆனதே தவிர இருவரும் பேசுவதாயில்லை...பேச , கேட்க ஆயிரம் விஷயமும், சந்தர்ப்பமிருந்தும் விடைபெற்றார்கள்..மனதில் ஆயிரம் கனவுகளை சுமந்து மட்டும்...*
* ---------------------------------------------------------------------------­---------------------------------------------------------- *
*திருமணம் தன்னுடய கிராமத்தில் வத்து நடப்பது சந்தோஷமாயிருந்தது சிவாவுக்கு ...தீபாவுக்கு எல்லாம் புதுசு.. அந்த மாட்டு வண்டிகள், பசுமை வயல்கள்,*
*தென்னைமரங்கள், நாற்று நடும் மக்கள், வாய்க்காலில் குதித்து விளையாடும் சிறார்கள்,எல்லாம் இயற்கையா அழகாக இருப்பதை ரசிக்கிறாள்..*
*மூன்று நாள் திருமணம்...ஆனால் சிவாவுக்கு தான் தீபாவை பார்க்கவோ பேசவோ முடியவில்லை..*
*எல்லா பெண்களும் சூழ்ந்துகொண்டு மஞ்சள் பூசுவதும், அவளை கிராமத்து பாணியில் அலங்கரிப்பதும், அவளுக்கு சிரிப்பாக இருக்கிறது..*
*தன்னை தொட இதுவரைக்கும் யாரும் தைரியமில்லை.. ஆனால் இங்கு எவ்வளவு உரிமையாக தன் கைபிடிக்கிறார்கள்..முகத்தில் , கால்களில் மஞ்சள் பூசுகிறார்கள்..கூச்சமாக இருக்கிறது..*
*ஒவ்வொரு சடங்கும் சம்பிரதாயங்களும் தெரிந்துகொண்டு ஆச்சர்யப்பட்டாள்.*
*திருமணப்பெண்ணுக்கே உள்ள நாணமும் வந்து சேர்ந்துகொண்டது.. யாரையும் தலை நிமிர்ந்துகூட பார்க்க முடியவில்லை.. எத்தனை நிகழ்ச்சி கல்லூரியில்*
*அசராமல் நடத்தியிருப்பாள்.. ஆனால் இதெப்படி ஒரு வெட்கம், யாரையும் பார்க்க முடியாமல்.. அதேபோல் தான் சிவாவுக்கும்.. மாப்பிள்ளை கோலத்தில்..,ஆளாளுக்கு அட்வைஸ்..பல்லுபோன தத்தா கூட காதில் கிசுகிசுத்து சிரிக்கிறார் ,தன் அனுபவத்தை சொல்லி கிளுகிளுப்பூட்டுகிறார்..*
*நண்பர்களின் , சொந்தங்களின் கேலியும் , கிண்டலும்.. ஆனாலும் இந்த நாள் எவ்வளவு சந்தோஷமான நாள்.. வாழ்நாளில் மறக்கமுடியாத நாள்..*
*தீபாவை ஒருமுறையாவது பார்த்து கண்ணால் பேசிடலாம்னு பார்த்தா, அவள் இந்த பக்கம் திரும்புவதாகக்கூட தெரியவில்லை...*
*அக்னியை வலம் வரும்போதும், அம்மி மிதித்து அருந்ததி பார்க்கும்போதும், பரவசப்பட்டார்கள் இருவரும்...*
* *
*திருமணம் முடிந்தபோதே அசதியாகிவிட்டது தீபாவுக்கு..அனைத்து சடங்குகளும், வாழ்த்துகளும், அப்பப்பா..*
*பின் மறுவீடு என்றும், பாலும் பழமும் என்றும், ஆளாளுக்கு விளையாடினர்., இதுதான் சாக்கு என்று..*
*தலை முழுக்க ஆசீர்வாதமான விபூதி, அரிசி, இலைகளும் , பூக்களும்,நெற்றியில் குங்குமம், கைகளில் சந்தனம்..கைநிறய பணம்.*
*ஒருபுரம் ரசித்தாலும்,கொஞ்சம் கசகச என்றிருந்தது..புரோகிதர்கள் மந்திரம் சொல்ல திருமண சடங்கு நடந்தது.*
*அதன்பிறகு மதிய சாப்பாடு.. பெண்ணும் மாப்பிள்ளையும் ஒருவருக்கொருவர் மாறி மாறி ஊட்டிக்கொள்ள *
*வேண்டும்.. தீபாவுக்கு சிரிப்பாக இருந்தது.. இது என்ன விளையாட்டு என்று...பின் குடத்தில் மோதிரம் போட்டு யார் எடுக்கிறார்களோ, அவர்கள்*
*பலம் ஓங்கியிருக்கும் என்று ஒரு நம்பிக்கை.. அதில் பயிர்கள், அல்லது நெல்மணிகள் இருக்கும்... கை உள்ளே விட்டதும், முதன்முதலாக*
*தீபாவின் கைகளை பிடிக்கவும் , கொஞ்சம் வெட்கமும் வெளியில் காண்பிக்க முடியாத தயக்கமும் கொண்டாள்.. எல்லாரும் இரு *
*அணிகளாக சேர்ந்து சீக்கிரம் என்கிறார்கள்.. கையை விட்டால்தானே எடுக்க?.. *
*இப்படியாக, தேங்காய் உருட்டும் விளையாட்டு என்று ஓவ்வொன்றாக அடிக்கிக்கொண்டே இரவு வரை ஆயிற்று...*
*முழுவதுமாக அசதி தொற்றிக்கொண்டது தீபாவுக்கு... வழக்கம்போல் பாட்டுபாடி, புதுப்பெண்ணை முதலிறவுக்கு அனுப்பிவத்தார்கள்..தள்ளிவிட்டார்கள்.*
*வரும்போதே தலையை பிடித்துக்கொண்டு வந்தவள், கட்டிலில் உட்கார்ந்தே தூங்க ஆரம்பித்தாள்.. பாவமாயிருந்தது.. வசதியாக படுத்துக்கொள்*
*என்று சொல்லிவிட்டு தன் கனவில் தொந்தரவு செய்த தேவதை இப்ப அருகிலிருந்தும் பேசவோ எதுவுமே செய்ய முடியாமல் பார்த்துக்கொண்டே*
*தூங்கிப்போனான் சிவாவும்...*


*******************************************தொ­டரும்**********************
வேலாயி..- பாகம் 3..என்னமோ நடக்கிறதே..எல்லாம் பிடிக்கிறதே ============================================================= .
வெளியில் சென்று பார்த்த சிவாவுக்கு அதிர்ச்சியும் சிரிப்பும்.. எல்லோரும் சிவப்பு சீருடையில் ..ஆனாலும் கண்கள் தீபாவை தேடுது.... அதற்குள் மேனேஜர் கூப்பிட்டதால் உள்ளே சென்றான்...உட்காரவா முடியுது சீட்டில்...ஏதோ ஒரு பதில் தெரிந்தால் நலம்.. பரிட்சை மாணவனைப்போல பார்டரிலாவது பாஸாயிரணுமேன்னு ஒரு அசட்டு ஆசை..எதைப்பார்த்தாலும் தீபாவின் முகம்.. யார் வந்தாலும் தீபாவாக இருக்கக்கூடாதா என்று எட்டிப்பார்க்கிறது மனது...
சரி நம்ம தலையெழுத்து இவ்வளவுதான் என்று நினைத்துக்கொண்டு வேலையில் மூழ்கினான்...
12 மணியளவில் தீபா கல்லூரி பிரின்ஸிபாலும், அனைவரையும் விழாவுக்கு அழைக்க வந்தனர்...
பார்த்தால் தீபா நீல நிற பட்டு கட்டியிருந்தாள்..நிகழ்ச்சியை அவள் நடத்துவதால்..
ஆனால் சிவா பக்கம் திரும்பாமல், அலமேலுவிடம் மட்டும் அளவளாவிக்கொண்டிருந்துவிட்டு சென்றுவிட்டாள்..
இதை எப்படி எடுத்துக்கொள்வது?. கொல்கிறாளே?..மனம் கொஞ்சம் வாடித்தான் போனது...
மதிய உணவின் போது அலமேலு தான் சொன்னார்கள், சிவாவை பற்றி ,ஊர் பற்றி விசாரித்தாள் என்று..
*வந்த பசியும் போய்விட்டது , அப்படி ஒர் மகிழ்ச்சி...கொண்டாட்டம், அப்போதே திருமணம் முடிந்த மாதிரி..கனவுக்குள் செல்ல ஆரம்பித்தான்....*
----------------------------------------------------
தீபாவுக்கோ, முன்தினம் சிவா கொடுத்த காகித்ததை பார்த்தவளுக்கு அதிர்ச்சி கலந்த குழப்பம்...என்ன இது, இப்படி ஒரு வேண்டுதல் மாதிரி.. அதிலும் தகுதியிருக்கான்னு தெரியலை என்ற வார்த்தை அவள் மனசை அப்படியே புரட்டி போட்டது... என்ன பெரிய உத்யோகம்.. பெரிய மனிதன்.. மனதுக்குள் இப்படி ஒர் தாழ்வு மனப்பான்மையா?.
மிகவும் கஷ்டமாகிவிட்டது .. யாசிப்பதுபோல் அல்லவா?. அதுவும் நான் அவரைவிட எம்மாத்திரம் உயர்ந்தவள்?. நாள்முழுதும் வருத்தமும், எப்படி விளங்கவைப்பது என்ற யோசனையும்தான் வந்ததே தவிர, காதல் இல்லை என்று முடிவாயிற்று... இருந்தாலும் யாரையோ ஒருவரை திருமணம் செய்வதை விட தன்னை விரும்பும் சிவாவை மணக்கலாமே.. நல்லவரும் கூட...
அவர் தாழ்வு மனப்பான்மையை முதலில் போக்கணும்...பாவம் நாளை நீல கலரில் எதிர்பார்ப்பார்.. விழாவுக்காக எடுத்த புது பட்டுச்சேலை அரக்கு கலரில் இருக்க, நீலத்துக்கு எங்கே போவது.. இக்கட்டான சூழ்நிலை.. சிவாவை ஏமாற வைக்கக்கூடாது.. அம்மாவிடம் கேட்டு நீல நிற புடவையை ஒருநாளுக்கு வாங்கி உடுத்தினால் போச்சு..அழகாக அலங்காரம் செய்துகொண்டு, எப்படா வங்கி செல்லலாம் என்றிருந்தவளுக்கு பிரின்ஸிபால் அழைத்ததும் மறுக்காமல் சென்றாள்..
ஆனாலும் சிவாவை பார்க்க வெட்கம். புரிந்துகொள்ளட்டும் .இப்ப என்ன அவசரம்?.. அலமேலு மேடத்திடம் விசாரித்து அப்பாவிடம் சொல்லணும்.. முற்போக்கு எண்ணம் உள்ள அப்பாவுக்கு ஜாதியில் பிரச்சனையில்லை...நல்லவராய் கடவுள் பக்தியோடு இருக்கணும் அவ்வளவே...மெதுவாக சிவாவைப்பற்றி தெரிந்துகொண்டாள்.
---------------------------------------------------------------------------­----
அன்றே தன் தோழனை அனுப்பி தீபாவின் அப்பாவிடம் பேசச்செய்தான் சிவா...அவரும் ஒருவாராக சம்மதம் சொன்னாலும், சிவா பெரிய பண்ணையார் குடும்பம் என்ற புது விசயம் அதிர்ச்சியை தந்தது.. அவர்கள் வசதிக்கு நாம் சாதாரணமானவர்களே என்று.. தீபாவுக்கும் அப்படியே..அடுத்த வாரம் முழுவதும் நீல உடையில் வந்தாலும் சிவாவின் கவுண்டரை தவிர்த்து, அலமேலுவிடமே எல்லா வேலைகளும்..
அலமேலுவுக்கு சிரிப்பாக வந்தது, சிவாவின் பொறுமும் கோவத்தை பார்த்து.. " ஏன் மேடம் , என்ன சொக்குப்பொடி போட்டீங்க, இங்க வரவிடாம?.."
" அட, அதொண்ணுமில்லை சார்.. பெண்ணுக்கு வெட்கமாம்.. அதான் நீல நிறத்தில் வாராங்களே.. அப்புரம் என்ன?.."
பேச ஆசை.. ஆனால் எப்படி பேச, எங்கு பேச..என்ன பேச?..
" இதுக்கெல்லாமா டிரையினிங் தர முடியும்..என்ன இது பெண் மாதிரி வெட்கப்பட்டுக்கொண்டு?.."
" அய்யோ மேடம் எளிதா சொல்லீட்டீங்க.. பேச்சுவார்த்தை நடந்துகிட்டிருக்கு.. எப்படி அழைக்க தீபாவை?.."
" சரி அப்ப என் வீட்டிற்கு அழைக்கிறேன் தீபாவை..அருகில், நடக்கிறதூரம்தானே.. நிச்சயம் ஆனதும் ,பேசுங்கள்.."
" மேடம்னா, மேடம்தான்.. எங்க வீட்டில்தான் கொஞ்சம் பிரச்சனை பண்ணுவாங்க என் முறைமாமன்மார்..அதையும் சமாளிக்கணும்.. "
ஒருவாராக, பெண்பார்க்கும் படலம் ஏற்பாடு செய்யப்பட்டு, இரண்டு வேன் நிறய ஆள்கள் வந்தார்கள்.. ஆடித்தான் போய்விட்டார்கள் தீபா வீட்டில்..
சிவாவின் அம்மா குடும்பம் பெரிய பண்ணையார்..மூன்று தம்பிமாருக்கு ஒரே அக்கா சிவாவின் தாயார்.. மிகுந்த வருத்தம் தன் தம்பியின் மகளை முடிக்காமல் சிவா தீபாவை பிடிவாதமாக விரும்புகிறானே என்று...
இஷ்டமில்லாமல் வந்தாலும் பெண்ணை என்னவோ பிடித்திருந்தது...பார்த்து முடித்ததும், சிவாவின் குடும்பம் ஒரு வேனில் சென்றதும், சிவாவின் மாமாமார், தீபாவின் அப்பாவிடம், திருமணத்தை சிறப்பாக செய்யும்படியும், சீர்கள் அனைத்தும் தங்கள் தரத்துக்கு செய்யவேண்டுமென்றும் சொன்னது பெரிய அதிர்ச்சி... அப்படியே வழியனுப்பிவிட்டு உள்ளே வந்தவர்,
" *இந்த சம்பந்தத்தை மறந்துவிடு தீபா*.."
" *சரி அப்பா*.." எதுவுமே யோசிக்காமல்....தீபாவும்...


********************************************தொடரும்**********************
*வேலாயி பாகம் 2-- மயிலிறகே, மயிலிறகே..விழியெல்லாம் உன் உலா..* ===============================================================

தீபாவுக்கு நாணமாயிருக்குது தன்னிடம் மட்டும் சிவா அதிகம் பேசுவது, மற்ற அசிரியரின் கிண்டல், கேலிகள்.
*ஆனாலும் ஒன்றையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்று அவள்..*
*சிவாவுக்கு தீபாமேலுள்ள மரியாதை இப்ப வேறு மாதிரி ஆகுவது கண்டு குழப்பமாயிருக்குது..தீபா ஒருநாள் வாராவிட்டாலும் கண்கள்*
*அவளைத்தான் தேடுது.. எதோ ஒன்றினை தொலைத்தவன் போல்...அவளின் பேச்சு, நடை, புன்னகை, எல்லாம் மனதில் மீண்டும் மீண்டும்..*
*இதை அழகாக கண்டுபிடித்துவிட்டார் பக்கத்து சீட்டு அலமேலு... கலகலப்பான ஆசாமி.. பதிவாக வங்கிக்கு தாமதமாக*
*வருபவர்.. குளித்து முடித்து, அள்ளிமுடித்தாற்போல் ஒர் கூந்தலில்,கதம்பத்தை சொறுகிக்கொண்டு, 9 மணிக்கு பதில் 9.30 குதான் வருவார்.*
*யாரும் எதுவும் கேட்டால், *
*" சார் உங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா. குழந்தைகள் இருந்தால் தெரியும்.." என்றோ மற்ற பதிலோ கூறி *
*சிரித்துக்கொண்டே சமாளித்துவிடுவாள்.. மற்றபடி வேலையில் கெட்டி.. *
*" என்ன சிவா சார்?. உங்க ஆள் இன்னிக்கு வரக்காணுமே ன்னு வங்கி புத்தகத்தில் கவனத்துடன், கேள்வி தொடுக்க,*
*" சும்மா இருங்க மேடம்.. கலாட்டா பண்ணாமல் வேலையப்.......பாருங்க..." என்று சிரித்துக்கொண்டே சொன்னாலும், *
*ஏதோ ஒன்று தன்னுள் ஏற்படுவதை கண்டு அதிசயித்துதான் போகிறான் சிவா.. அதென்ன பெண் வாசனையே பிடிக்காமல் இருந்த *
*எனக்குள் இப்படி ஒரு போராட்டம்... சரி அலமேலு மேடத்திடம் பகிர்ந்து கொள்ளணும்..புரிந்துகொள்வார்கள்..*
*ஆனால் தயக்கம் , தான் தீபாவுக்கு தகுதியானவன் தானா என்று..அன்று மதிய இடைவேளியில் மேடத்திடம்*
*அவர்களே கிண்டல் பண்ணும்போது தன் விருப்பத்தையும் தயக்கத்தையும் கேட்டுவிட்டான்..*
*"அட என்ன சிவா , உங்களுக்கென்ன குறைச்சல்.. ஆணுக்கு எது அழகு..?. நல்ல உத்யோகம் புருஷ லட்சணம்.. நல்ல குடும்பம்.. எந்த கெட்ட*
*பழக்கமும் இல்லை... தீபா பற்றி மற்ற விபரங்களை சேகரித்து நான் தாரேன்..போய் பெண் கேளுங்க"*
*எல்லா விவரமும் சொன்னபடி வாங்கித்தந்தார்கள் .. அன்றிலிருந்து அலமேலுவுக்கு " அக்கா" ப்ரமோஷன்..*
*ஆனால் தீபாவுக்கு சம்மதம்னு எப்படி தெரிந்துகொள்வது.. , எப்படி கேட்பது...*
*சரி இன்னிக்கு எப்படியும் கேட்டுடணும்...இல்லாட்டி அலமேலு அக்கா சிரிப்பே எல்லாரிடமும் காட்டிக்கொடுத்துவிடும்..*
*ஒரு சின்ன காகிதத்தில்*
*" எனக்கு உங்களை திருமணம் பண்ணிக்கொள்ள விருப்பம்...எனக்கு அந்த தகுதியிருக்கா என்று தெரியவில்லை...*
*உங்களுக்கு விருப்பமிருந்தால் நாளை எனக்குப்பிடித்த நீல நிறத்தில் வாருங்கள்..பிடிக்காவிட்டால் மன்னியுங்கள்"*
*ஒரே படபடப்பு... எப்படி தருவது.. அல்மேலு அக்கா யோசனைப்படி எழுதினாலும், அவர்களிடம் காண்பிக்க கூச்சம்..*
*திட்டுவார்கள்..அது ஏன் தகுதியிருக்கான்னு கேட்கணும் சிவா?. என்று..*
*பதினோரு மணியளவில் தீபா உள்ளே நுழைந்து வரிசையில் டோக்கன் வாங்கி அமர்ந்திருக்க, *
*கண்டும் காணாததுபோல் சிவா, இருந்தாலும், வேலை ஒன்றுமே ஓடமாட்டேங்குது..பயத்தில்*
*முதல்முறையாக வேர்த்துக்கொட்டுகிறது... ஒருவேளை தன்னை எல்லார் மத்தியிலும் திட்டிவிட்டால்...*
*சே, அப்படிபட்ட பெண் இல்லையே...சொல்ல முடியாது பெண்களுக்கு எப்ப எதில் கோவம் வருமென்று..*
*எது பிடிக்கும் , பிடிக்காதென்று...*
*இருந்தாலும் நான் என்ன தவறாக எழுதியுள்ளேன்... விருப்பமிருந்தால் சரி.. இல்லாவிட்டாலும் மன்னிப்பு*
*கோரியுள்ளேனே...வெட்கமாக இருக்கிறது .. சே என்ன தாழ்வு மனப்பான்மையோ?.. இல்லை இப்படித்தான் எல்லோரும்*
*காதலிப்பார்களோ..யோசித்துக்கொண்டிருக்கும்போதே தீபா கவுண்டர் முன்..*
*" வணக்கம் மேடம்.."*
*" வணக்கம் சார்.." பணத்தை நீட்டுகிறாள்...*
*பெற்றுக்கொண்டு ரசீதுடன் அந்த சின்ன காகிதத்தையும் பதட்டமாக நீட்டுகிறான்...*
*ஒன்றும் யோசிக்காமல் வாங்கிவிட்டு கொஞ்சம் தொலைவில் சென்றுதான் பார்க்கிறாள்...*
*அவள் பார்ப்பதை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தவன் , சட்டென்று அவள் திரும்பும்போது*
*அடுத்த வாடிக்கையாளரை கவனிக்க ஆரம்பித்தான்..*
*அதன்பின் அன்று மதியம் அலமேலு அக்காவிடம் சொல்லிவிட்டு ஒரே பதட்டம் அவர்களுக்கோ ஒரே சிரிப்பு..*
*" ஆமா ., நீங்க நல்ல சிரிங்க.. எனக்கில்லா இங்க வயற்றை பொரட்டுது.."*
*" அட என்ன சார் , நீங்க.. மொதல்ல சாப்பிடுங்க..ஹிஹி.."*
*அன்று முழுவதும் தூக்கமில்லை.. புரண்டு புரண்டு படுத்தான்...எப்படா விடியும் என்று காத்திருந்தான்...*
*சே என்ன மடத்தனம், அவள் திரும்பி பார்த்தபோது பார்த்திருந்தால் தெரிந்திருக்கும், அவளுக்கு விருப்பமா, கோவமா என்று...*
*ஒரு நாள் கழிவது ஒரு யுகமாகத்தெரிவது இப்படித்தானோ?..இதுதான் காதலோ?..என்ன பாடு படுத்துகிறது?.*
*அலுவலகம் சென்றுவிட்டான் விரைவாக...*
*எப்பவும் போல் தாமதமாக வரும் அலமேலு கெக்கபிக்க னு சிரித்துக்கொண்டே வந்துரகசியமாக, *
*" ஹஹஹ வெளியே போய் பாருங்க சார்... "*
*" சொல்லுங்க , அக்கா ,பிளீஸ்.."*
*"ஹாஹா .. நீங்களே போய் பார்த்துக்கோங்க.. கிகிகிகிகீ..ஹஹஹ.."*
*வெளியே சென்று பார்த்தவனுக்கு அதிர்ச்சி, குழப்பம்....*
**************************************************************தொடரும்******­***
வேலாயி- பாகம் 1
================

" ஆத்தா பத்து ரூவா வாங்கியாரச்சொல்லிச்சு" 7 வயது முத்துமாலை

" சரி . இங்க வாயேன் கிட்ட.. அப்பதான் தருவேனாம்.." தீபா..

மூக்கை உறிந்துகொண்டு பம்பரத்தோடு அருகில் வருகிறான் வேலாயியின் மகனான முத்து என்ற முத்துமாலை...

தீபா நகரத்தில் புகழ்பெற்ற கல்லூரியொன்றில் பேராசிரியர்..கணிதப்புலி...
தலைமகளாக நடுத்தர வர்க்கத்தில் பிறந்து இரு தங்கைகளின் வழிகாட்டி, பிரியமானவளும்..


சிவாவின் அழகிய காதல் மனைவி...அவர்கள் காதலித்ததே ஒரு விபத்துபோல....

பத்து வருடம் ஆகிறது திருமணம் முடிந்து....

வேலாயி இவர்கள் குடும்பத்தில் 8 வருடமாக வேலை பார்க்கிறாள்..
திருமணம் ஆகி கணவனுடன் பட்டணம் வந்து
தீபாவின் வீட்டில் வேலைக்காரியாய் சேர்ந்தவள்.. வெகுளி..சிரிப்புதான் அவள் பாஷையோ.. திட்டினாலும் சிரிப்பாள்...


தீபாவும் , வேலாயியும் ஒரே நேரத்தில் மாசமாயிருந்தார்கள்.7 வருடம் முன்பு.. தீபாவுக்கு பிரசவ வேளையில், மருத்துவமனையின
தவறாலோ, விதியாலோ குழந்தையை காப்பாத்த முடியவில்லை...


அதற்குபின் அவளுக்கு அந்த பாக்கியமும் கிடைக்கவில்லை..
வேலாயிக்கு பிறந்த முத்துமேல் தீபா அதிக பிரியம் கொண்டாலும், மாமியாருக்கு ஏனோ அவனைக்கண்டாலே ஆகாது..


ஏற்கனவே தீபாவை காரணமின்றி திட்டி தீர்ப்பவர்...அதிலும் அவள் முத்துவை அழைத்து கொஞ்சினாலோ, அவ்வளவுதான்..

ஆனால் காதல் கணவன் சிவாவுக்கு பாவமாயிருக்கும் தீபாவிடம்.. இருந்தாலும் அன்னையின் மீதுள்ள பயத்தால் ஒன்றும் சொல்ல
முடியாத நிலை..தன்னை தீபா திருமணம் செய்ததே பெரிய பாக்கியமாக நினைப்பவன்..


அதனாலேயே அம்மாவின் ஆசையான
குழந்தைக்காக இன்னொரு திருமணத்தை மட்டும் பலமாக எதிர்ப்பவன்..அந்த காதல் நாட்கள் தான் எவ்வளவு சுகமானவை..


---------------------------------------------------------------------------­-----------------------------------
கல்லூரியில் ஆசிரியாராக தீபா வேலை பார்த்த போதுதான் அதே கல்லூரியின் வங்கிக்கு கேஷியராக வந்தான் சிவா...


விடுதி மாணவிகளின் சார்பாக வங்கியின் விஷயங்களையும் கவனிக்கும் கூடுதல் பொறுப்பும் தீபாவுக்கு...

அப்படி அடிக்கடி வரும்போதுதான் சிவாவின் அறிமுகமும்..ஆனால் சிவாவோ முகத்தை பார்த்துகூட பேசமாட்டார் யாரிடமும்...

சின்ன வயதிலேயே அம்மை போட்டதினால், அதன் தழும்புகள் சிவாவின் முகத்தில் .. அதனாலேயோ என்னவோ தயக்கம்.. தானுண்டு தன் வேலையுண்டு
என்ற குணம்... தீபாவோ அமைதியானவள்.. யாராவது பேசினால் காதுமட்டும் கொடுக்கும் பழக்கம்.. வாய் பேசாது, புன்னகைமட்டுமே..


ஆனால் கண்டிப்பான ஆசிரியை...மாணவிகள் மத்தியில்..பார்வையிலேயே பேசிவிடுவாள் ..அதனால் தீபாமேல் மரியாதை கலந்த பயம்
இப்படி இருக்கும் சமயத்தில் மொத்தமாக பணம் கட்ட சென்ற இடத்தில் சிவாவுக்கும் ஒரு மாணவிக்கும் பண விஷயத்தில் மாற்றுக்கருத்து
வந்து பிரச்சனை பெரிதாகியது....


மாணவி அழுகையோ அழுகை... சிவாவோ தான் அதற்கு பொறுப்பல்ல என்று,...
அப்போதுதான் தீபா தலையிட்டு அந்த மாணவியை சமாதானப்படுத்தி, நிதானமாக தேடும்படி மற்ற மாணவிகளையும் அழைத்து
பிரச்சனையை தீர்க்க முயன்றாள்..


சிவாவிடமும்,
" சார், மிச்சத்தொகையை நானே கட்டிவிடுகிறேன்.. கொஞ்சம் அவகாசம் மட்டும் தாருங்கள்.."
முதன்முறையாக ஆச்சர்யமுடன் பார்த்தான் சிவா...


" பரவாயில்லை மேடம், என் தவறும் அதிலுள்ளது.. ஆகையால் நானும் அதில் பங்குகொள்கிறேன்.."
இப்படியாக இவர்கள் பொறுப்பேற்ற வேளையில், மற்றொரு மாணவிமூலம் மிச்சப்பணம் வந்து சேர்ந்து
யாருக்கும் பிரச்சனையின்றி முடிந்தது...அதிலிருந்து தீபா வந்தால் மட்டும் சிவா எழுந்து அவளுக்கு வேண்டிய
உதவி செய்வதும், உபசரிப்பதும், வாடிக்கையானது..


மற்ற ஆசிரியருக்கு வேடிக்கையானது..
" என்ன தீபா, அந்த சிடுசிடு கடுகு ஆசாமி, உங்கள பாத்ததும் அப்படியே உருகுராரு..?.. எங்ககிட்டலாம்., பேசவேமாட்டாரு..?."


அவளுக்கும் சிவாவின் தாழ்வு மனப்பான்மை புரிந்ததால் அதை பற்றி இவர்களிடம் விளக்காவிடினும், மனதுக்குள்
சிவாவின் உபசரிப்பு கொஞ்சம் அதிகமாகத்தான் தோன்றியது.......................


***************************************************************************­**தொடரும்..............