Friday, March 21, 2008

*வேலாயி- பாகம் 12 - ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில்...*
====================================================
வேலாயியின் கடிதத்தை பார்த்து தீபாவுக்கு அதிர்ச்சி..
" அன்பும் பாசமும் உள்ள தீபாம்மா, எப்படி சொல்றதுன்னே தெரிலம்மா..
நானும் என் கணவரும், சொந்த ஊருக்கு போறோம், சொந்தங்களோட மீதி நாட்கள் வாழ...விவசாயம் மற்றும் தொழில் தொடங்க..
அம்மா, நீங்க எனக்கு குடுத்த தொகை மிக அதிகம்.. அன்புக்காகத்தானே செய்தேன்.. அது என் பாக்கியம்.. ஆனாலும் உங்கள் விருப்பத்துக்காக 4 லட்சம் எடுத்துக்கொண்டு மீதி 6 லட்சம் அய்யாவுக்கு அனுப்பியுள்ளோம்...
முத்துவை நிறைய படிக்க வைக்கணும் மா. அது கிராமத்துல முடியாதும்மா.. தயவுசெய்து இந்த ஒரு ஒதவியும் செய்யுங்கம்மா..காலமெல்லாம் மறக்கமாட்டேன்மா.. வருசத்துக்கு ஒருவாட்டி வந்து பாக்கிறேன் எல்லாரையும்..நன்றிம்மா.."
படித்துவிட்டு அதிர்ச்சியில் தீபா...தூங்கும் முத்துவை நெற்றியில் முத்தமிட்டு அழுகிறாள்..
" கரும்பு தின்ன கூலியா.. முத்துவை நான் பிரிய மாட்டேன்னு, அவனையும் எனக்கு பரிசா குடுத்துட்டு, நீ எப்படி வாழப்போற...?.. ஏன் என் வாழ்க்கையில் கடவுள் மாதிரி வந்து இப்படி பரவசப்படுத்திட்டு என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிட்டு நன்றி செலுத்தமுடியாத கடனாளியாக்கிட்டு போய்ட்ட..?.."
கண்ணைத்துடைத்துக்கொண்டு ஒரு முடிவுடன் முத்துவைத்தூக்கிக்கொண்டு வீட்டுக்குள் சென்றாள்..
மாமியாருக்கும் குற்ற உணர்ச்சி.. சிவாவுக்கு வேலாயியின் பெருந்தன்மை ஆச்சர்யம் தருகிறது...இப்படியும் மனிதர்களா?.. முதன்முறையாக முத்துவை வருடுகிறான்.. இனி இவன் என் மூத்த மகன்...
---------------------------------------------------------------------------­-----
ஊரில் திருவிழா களைகட்டுகிறது... தீபா சந்தோஷமாக அனைத்து நகைகளையும் போட்டுக்கொண்டு, பட்டுப்புடவை கட்டிக்கொண்டு, குழந்தைகளையும் அலங்கரித்து கோவிலுக்கு கூட்டிச் செல்கிறார்கள்...
பொங்கல் வைத்து சாமிக்கு அபிஷேகம் எல்லாம் முடிந்ததும், குழந்தைக்கு பேர் சூட்டும் விழா..
அர்ச்சகர் பையனை தூக்கி நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை முடிந்ததும் பையனுக்கு என்ன பேர் அம்மா என்று கேட்க
" ராஜா என்ற மணிகண்டன் " மூன்று முறை சொல்கிறார்... சிவாவின் தந்தையின் பெயர்..
அடுத்த குழந்தையை தூக்கி பெயர் கேட்க,
" *வெயிலா( veila) எனற வேலாயி* ." என்று தன்னைமீறி கத்துகிறாள் தீபா...
எல்லாரும் ஆச்சர்யத்துடன், சந்தோஷத்துடன் பார்க்கிறார்கள்...
---------------------------------------------------------------------------­----- ஊரிலிருந்து வந்ததும் மாமியார் 20 லட்சத்துக்கான காசோலையை தீபாவிடம் தருகிறார்கள்... நீ குழந்தைகளுக்காகவும் வயோதிகருக்காக ஆரம்பிக்கும் அறக்கட்டளைக்கு என் பங்கும்மா. எனக்கு சொத்து எல்லாம் இனி என் 3 பேரக்குழந்தைகளும்...
"உன்னோட அன்புக்கு வேலாயியே தன் பங்குக்கு 6 லட்சம் தந்திருக்கும் போது , என்னை வெட்கப்பட வெச்சுட்டா வேலாயி....."
*வேலாயி அறக்கட்டளை ஆரம்பமாகிறது*...
---------------------------------------------------------------------------­-----------
*13 வருடம் கழித்து,*
" மம் , பிளீஸ் கெட் ரெடி குயிக்..." முத்து..
" கொஞ்சம் பொருடா தம்பி.. வேலாயி டிரெயின் லேட்டாம், இப்ப வந்துருவா..."
" அம்மா, அவங்க வந்ததும் நம்ம டிரைவர் அழைத்து வருவார்மா.. என்னோட விருது வாங்குகிற விழாவுக்கு நானே லேட்டா போனா எப்படிம்மா."
" முத்து, அந்த விருதுக்கு காரணமானவங்களே அவங்கதானேப்பா..?..நீங்க எல்லாரும் போங்க .. நான் பின்னால் அவளுடன் வருகிறேன்..."
" மம் நீங்க இல்லாமா, நான் எப்படி.. சரி நானும் வெயிட் பண்றேன்.."
வேலாயியின் ஆசைப்படி தங்க மெடல் வாங்கும் அளவிற்கு முத்துவை வளர்த்துவிட்ட நன்றிக்கடனை சொல்லி வேலாயியை பூரிக்க வைக்க துடித்துக்கொண்டிருக்குது ஒரு அன்னையின் உள்ளம்...
****************************************மு ற் று ம்..***********************
*பி.கு..:*
இந்த கதையின் மூலம் நான் தொட முயன்ற சில விஷயங்கள்,தாழ்வு மனப்பான்மை, அன்புக்கு ஜாதி மதம் இல்லை, வாடகைத்தாய், தடங்கல் வந்தாலும் நல்ல விஷயங்களை தைரியமாக தொடரணும் போன்றவை...

2 comments:

GIRIJAMANAALAN said...

உங்களது இந்த படைப்பின் தாக்கம், படித்து ஒரு வாரகாலம் ஆகியும் என் மனதில் எழுந்துகொண்டேயிருந்தது. பாராட்டுக்கள்!

- கிரிஜா மணாளன் (தமிழ் எழுத்தாளர்)
திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு.

GIRIJAMANAALAN said...

உங்களது இந்த படைப்பின் தாக்கம், படித்து ஒரு வாரகாலம் ஆகியும் என் மனதில் எழுந்துகொண்டேயிருந்தது. பாராட்டுக்கள்!

- கிரிஜா மணாளன் (தமிழ் எழுத்தாளர்)
திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு.