Thursday, September 18, 2008

*சில்லென்ற கண்ணாமூச்சி காதல் -*

சில்லென்ற கண்ணாமூச்சி காதல் - பாகம் 4..

*போகாதே.....போகாதே....................*

வீட்டுக்கு சென்று டோனி குடுத்த பையை பிரித்துப்பார்த்தவளுக்கு அதிர்ச்சி....அதில் அவள் சின்ன வயதில் டோனியுடன் சண்டைபோட்டு விளையாடிய
கோலிக்குண்டு, சின்னச்சின்ன புகைப்படங்கள், கிறுஸ்மஸ் கார்டுகள், கதைப்புத்தகங்கள். அத்தோடுகூட அவளுக்கு எளிதாக புரியும்படிக்கு சில கணித, ஆங்கில
விளக்கங்களும், கையேடு, மற்றும் குறிப்புகளும்...


பிரபுவுக்கு கிரிக்கெட் மற்றும் நிறைய விளையாட்டுப்பொருளும்..எத்தனை பொறுப்போடு கூடிய அன்பு...

ஒருகணம் ஜெனி " டோனி நீ என் அண்ணாவாக இருந்திருக்கக்கூடாதா?.."

என்று எண்ணுகிறாள்... கடந்த 6 மாதமாக டோனியுடன் பேசாமல் , பழகாமல், வீணடித்ததை நினைத்து வருந்தினாள்...

இனி டோனி படிக்க சென்றால், பெரிய
மருத்தவரானபின் தான் அதிகமாய் ஊரில் தங்குவான்..

, எப்படி டோனி இல்லாமல்...? நினைக்கவே அழுகையாய் வருது ஜெனிக்கு.. சரி நேரமில்லை..

இத்தனைக்கும் டோனிக்கு முதலில் நன்றி செலுத்தியாகணும்.. அவன் சந்தோஷமாக புறப்பட்டு போகணும் படிப்பதற்கு... எப்படி பேசுவது, எங்கு பார்ப்பது?..

மாடியில் வெளியில் செடிக்கு தண்ணீர் ஊற்றுவதுபோல் சென்று பார்க்கலாம் என்று தண்ணீருடன் வெளியில் வருகிறாள்..

டோனி ஜெனி வந்ததை தன் ஜன்னலின் வழியே பார்த்துக்கொண்டுதானிருக்கிறான்... இருந்தாலும், நாமாகவே வலிய சென்று தொந்தரவு தர வேண்டாம்..

விருப்பமிருந்தால் அவளே கூப்பிட வேண்டியதுதானே என்று தன் நாற்காலியில் அமர்ந்து சாமான்களை அடுக்கிக்கொண்டிருக்கிறான்.., ஜன்னலை பார்த்தபடி..

ஜெனி அத்தனை செடிக்கும் தண்ணீர் ஊற்றிமுடிந்ததும், ஏமாற்றத்துடன், திரும்பி செல்லுமுன் ஒருமுறை டோனியின் அறை நோக்கி கண்கூச
பார்த்துவிட்டு உள்ளே செல்ல எத்தனிக்கிறாள்..அதை கவனித்த டோனி தன்னைத்தான் அவள் பார்க்க வந்தாள் என்பதை உறுதி செய்ததும், சட்டென்று
வெளியில் வந்து

" ஜெனீ...ஜெனீ"' என்றழைக்கவும்,

ஜெனி உடனே திரும்பி பார்த்து சந்தோஷமாக டோனி நோக்கி வருகிறாள்...

" ரொம்ப நன்றி டோனி.. எவ்வளவு பொருள்கள்.. " என்று அவள் கூறி முடிக்கவும்,

கீழேயிருந்து அம்மாவின் குரல்..

" ஜெனி யார் வந்திருக்கா பார்.. சீக்கிரம் வா இங்கு...."

" இதோ வந்துட்டேன் மா..."

" சரி நீ மேலேயே இரு.. நாங்கள் வருகிறோம்.."

" ஜெனி , நீ போய்ட்டு வா.. அப்புரம் பேசலாம்...."

" சாரி டோனி.... "

திரும்பவும், அத்தையும் , மாமாவும், கூட ஜோ அத்தானும்...ஊரிலிருந்து..

" மருமகளே எப்டிமா இருக்க..?"

" நல்லாயிருக்கேன் அத்தை..." என்று கைகூப்பி ஆசீர்வாதம் பெறுகிறாள்..மாமா அத்தை இருவரிடமும்..

" ஜெனி, ஜோ தம்பிக்கு இங்கு கல்லூரியில் இடம் கிடச்சுருக்கு , சேர்க்க வந்திருக்காங்க... இனி ஜோ இங்கதான் படிக்கப்போறான்.."

ஜோ அத்தான் ஜெனியிடம் பேசவே மாட்டான், அவளிடம் அவனுக்கு கூச்சம்..

சும்மா இருக்காமல், பாட்டி, ஜெனி பிறந்ததிலிருந்து,
அவள் ஜோவுக்குதான் என்றே சொல்லி சொல்லி இவளைப்பார்த்தாலே ஓடி ஒளிந்துகொள்ளுவான்...

மேலும் இவள் பட்டணத்தில் படித்து
ஆங்கிலத்தில் பேசுவதும் அவன் கூச்சத்துக்கு ஒரு காரணம்..ஆனால்
ஊருக்கு வந்தால் அவன்தான் பிரபுவையும் ஜெனியையும் எல்லா இடத்துக்கும் .
அழைத்துச்செல்லுவான் இதுவரையிலும்....

எல்லோரும் உணவருந்திவிட்டு கல்லூரி பார்க்க கிளம்பிவிட்டனர்... ஜெனிக்கு உள்ளூர மகிழ்ச்சிதான்.. சரி டோனிக்குப்பதிலாக, ஜோ இனி நமக்கு
நல்ல அண்ணாபோல் இருப்பான் என்று நினைத்தாள்..

ஜெனியின் அம்மாவுக்கும் ஜோவை ரொம்பப்பிடிக்கும், தன் அண்ணன் மகனென்றும், ரொம்ப நல்ல
மரியாதையான பையன் என்றும்.. தன் வீட்டிலிருந்தே கல்லூரிக்கு அனுப்பலாம் என்று நினைத்தார்... ஆனால் ஜெனியின் அப்பாவுக்கு அதில்
விருப்பமில்லை...மிக கவனமாக,
" ஜோ, அப்ப ஹாஸ்டல சேர்ந்தாலும் மாமா வீட்டை மறக்காமல், மாதம் ஒருமுறையாவது வந்து எட்டிப்பார்த்துக்கோ.. ஏதாவது உதவின்னா
தயங்காம போன் பண்ணு எனக்கு.. என் நம்பர் இருக்கில்ல...?''

" சரி மாமா... "

ஜெனிக்கும் அவள் அம்மாவுக்கும் வருத்தமாயிருந்தது... டோனிகிட்ட பேசும்போது , பாடம் படிக்கும்போது ஒண்ணுமே சொல்லாத அப்பா,
இப்ப ஜோவுக்கு தடை போடுறாப்ல பேசுறாரே?

குழம்பித்தான் போகிறாள், ஜெனி.. பெண் என்றால் எல்லா பக்கமும் பாதுகாப்பு...பயம்...இதுக்கு ஆணாகவே பிறந்திருக்கலாம்...

---------------------------------------------------------------------------­------------------------------------
டோனி, தன் நண்பர்களுக்கு மதிய விருந்து குடுத்து முடிந்ததும், மாடியில் சென்று விளையாடிக்கொண்டும் பேசிக்கொண்டும் இருக்கிறார்கள்..

டோனியின் கண்கள் மட்டும் ஜெனியின் மாடியை நோக்கியபடி...

அவன் நண்பன் விஷ்னு, டோனிக்கு அவர் அப்பா பரிசளித்த புது மொபைல் தொலைபேசியை வாங்கி பார்த்து விவரம் கேட்டுக்கொண்டிருந்தார்கள்..

" என்னடா வெல "

" "

" எங்கடா வாங்கின..?"

" "

" ப்ளூ டூத் இருக்குடா மச்சி.."

" 20,000 இருக்குமாடா"

" ஆமாடா"

" டேய் இல்ல... இது பழைய மாடல்தான் இப்பல்லாம் 15,000 க்கே கெடைக்குதுடா.."

" ஆமா "

" டேய் என்னடா இவன் , 20 கும் ஆமான்றான், 15 கும் ஆமாங்கிறான்..."

"ஆமாடா நானும் அப்பத்திலேருந்து கெவனிச்சுட்டுதானிருக்கேன்.. மாப்பிள்ளை இங்கேயே இல்லை..."

" ஹா ஹா ஆமா அவர் பார்வையெல்லாம் பக்கத்துவீட்டு ரோஜா செடிமேலதாண்டா இருக்கு..."

" ஹாஹாஹா . செடிமேல இல்லடா, ஜெனிமேல..."

" டேய் சும்மா இருங்கடா.. அவ என் தங்கை மாதிரிடா.."

" இப்ப நாங்க யாராவது இல்லன்னு சொன்னோம்?.."


" டேய்................."

டோனி சட்டென்று எழுந்து உள்ளே சென்றான்...மேற்கொண்டு தொடர விரும்பாமல்.....ஜெனிக்கும் கெட்ட பெயர் ஏற்படுத்தாமல்...

---------------------------------------------------------------------------­---------------------------------------------------------------------------
கடைசியாக வழியனுப்ப ஜெனி வீட்டுக்கு சென்ற டோனிக்கு ஆசீர்வாதம் பண்ணி ஸ்டெதஸ்கோப் செட் ஒன்றினை பரிசளிக்கிறார் ஜெனியின்
அப்பா..

எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு டோனி.. கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார்.. "

" அங்கிள் எதுக்கு இதெல்லாம் நீங்க இப்பவே வாங்கிட்டு...?"

முழங்காலிட்டு ஆசீர்வாதம் பெறுகிறான் டோனி.. சின்னதாக ஜெபம் ஒன்றை சொல்லுகிறார்...

" பரலோகத்திலிருக்கிற...எங்கள்....பிதாவே......................................­............................................." ஜெபத்தின் இடையில் கண்திறந்து பார்க்கிறாள்
ஜெனி, டோனியோ கண்கள் மூடி பக்தியுடன்...

இப்பவும் பேச முடியவில்லை அவளால்...

அவன் கிளம்பி கேட் வரை சென்றதும், ஜெனி பிரபுவின் காதில் ரகசியம் கூற, அவன் ஓடிச்சென்று, டோனியின் பின்முதுகில் அடித்துவிட, டோனி பிரபுவின்
கைகளை பற்றுகிறான்...

" ஜெனி தான் இந்த அடியை மறக்கக்கூடாதுன்னு உங்ககிட்ட குடுக்கச்சொன்னா..." பாவம்போல்...பிரபு..

டோனிக்கு பழைய நினைவுகள் மனதுள் வர, ஜெனி இன்னும் சின்னப்பிள்ளைதான் போலும் என்று சிரித்துக்கொண்டே,
பிரபுவின் இரு கைகளை எடுத்து முத்தம் கொடுத்துவிட்டு, செல்லமாய் அவன் கைகளுக்கு இரண்டு அடியும் தந்து

" இதை ஜெனியிடம் பலமா குடுத்துரு , நான் குடுத்தேன்னு சொல்லி...சரியா?..." என்று சொல்லிவிட்டுக்கிளம்புகிறான்...

****************************************தொடரும்

3 comments:

ரிதன்யா said...

எப்படித்தான் எழுதறீங்களோ?
நல்லாருக்கு அக்கா.

தேவன் மாயம் said...

அம்மா,
கதை
பின்னு
பின்னுன்னு
பின்னுரீங்களே!!
எப்படி
இவ்வளவும்
டைப்
பண்றீங்க?

தேவா..

தேவன் மாயம் said...

கதையெல்லாம்
கலக்குறீங்க!!!

தேவா...