Showing posts with label அம்மா. Show all posts
Showing posts with label அம்மா. Show all posts

Monday, August 22, 2011

வலிமையை கற்பது?



மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை பெற்றவர் எனக்குத்தெரிந்து இரு குடும்பம் உண்டு.. ஒருவர் மிகப்பெரும் பணக்காரர். மற்றொருவர் நடுத்தர வர்க்கம்.

பணக்காரர் வீட்டில் அக்குழந்தையை கவனிக்க பல ஆட்கள் உண்டு.. இருந்தாலும், அந்த தாய்தான் விரும்பி எல்லா வேலையும் அக்குழந்தைக்கு செய்வார்.. அந்த குழந்தையைத்தான் அதிகம் நேசிக்கவும் செய்வார். உலக சுற்றுலா செல்லும்போதெல்லாம் அக்குழந்தையையும் கூடவே கூட்டிச்செல்வார்கள்.. அப்போது அந்த தாய்தான் முழு கவனிப்பும்..அந்த தாய் முன்னாள் Miss. **** College . ஆனால் வாழ்க்கை இந்த குழந்தை வந்தபின் முற்றிலுமாக மாறிப்போனது அவருக்கு..

அடுத்த குடும்பத்தில் முதல் பெண் குழந்தை பிறக்கும்போது நல்லபடியாக பிறந்து ஒரு சிகிச்சை மூலம் மனவளர்ச்சி குன்றியது.. தாய் பார்த்துக்கொண்டிருந்த ஆசிரியர் வேலையை விட்டுவிட்டு முழு நேரமும் குழந்தையோடு. செய்யதா செலவில்லை.. எல்லோரும் அக்குழந்தையை மனவளர்ச்சி குன்றியோர் இல்லத்தில் விட சொன்னார்கள்.. அவரோ கோபப்பட்டார்.. நான் உயிரோடு இருக்கும்வரை அப்படி செய்யவேமாட்டேன் என அருமையாக வளர்த்தார்.. ஒரு தம்பியும் பிறந்து அவனும் இன்று அப்பெண்ணுக்கு மிக உதவியாக..

இது ஏன் திடீரென?.. நேற்று மார்க்கெட்டுக்கு சென்ற போது ஒரு பெண் தன் 12 வயது குழந்தையை Pram ( குழந்தைகளை எடுத்து செல்லும் வண்டி ) லிருந்து எடுத்து மடியில் வைத்துக்கொண்டே வியாபாரத்தையும் கவனித்தார்.. அந்த குழந்தை உயரம்தான் இவரும்.. மெலிந்த உடல்.. அவர் உடல்வாகுக்கு அக்குழந்தையை தூக்கவே முடியாது.. ஆனால் அப்படியே அள்ளி எடுத்து மடியில் உட்காரவைத்ததை பார்த்து அசந்து போனேன்..எங்கிருந்து கிடைத்தது அந்த சக்தி?.. வெறித்தனமான பாசம் இருந்தால் மட்டுமே இப்படியெல்லாம் செய்ய முடியும்.. தான் ஏழ்மை நிலையிலிருந்தாலும் , தன் குழந்தையை தன்னோடு வைத்துக்கொண்டு கவனிப்பது?..என்ன ஒரு வலிமை இருக்கணும் ?..

சில நேரம் நாம் நினைப்போம் , எனக்கு வந்தால் தாங்க முடியாது என.. ஆனால் வரும்போது வேறு வழி இருப்பதில்லை.. தாங்கித்தான் ஆகிறோம்..தாங்க முடியா சிலர் மட்டுமே மரித்துப்போவதும்.. வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் எல்லாமே ஒரு புதிர்போலத்தான்.. எல்லாவற்றுக்கும் விடை தயாராக இருப்பதில்லை..அவரவர் சிலுவைகளை அவரவரே சுமக்கணும் இங்கே.. ஆனால் இதில் முக்கியமான விஷயம், நல்ல மனிதர்கள் , ஊக்குவிப்போர் அமைவது , அல்லது அமைத்துக்கொள்வது.. எந்த ஒரு பிரமாண்டமான பிரச்னையென்றாலும், ஆறுதலுக்கு ஒரேயொரு துணிவான நல்ல மனம் கிடைத்தால்கூட போதும், உலகை ஜெயித்திடலாம்.. வலிமை பெற்றிடலாம்..

நான் சொன்ன மேற்கூறிய பெண்களுக்கும் இதே போல யாராவது இருக்கக்கூடும்.. அந்த நல்லவர்கள் வாழ்க.. அப்படியான ஒரு மனிதராக எவருக்காவது நாம் இருக்கிறோமா, இருந்தோமா, என நம்மை சுயபரிசோதனை செய்துகொள்வோம்.. அப்படி நாம் இருந்திருந்தால் அது தரும் மன திருப்திக்கு ஈடு எதுவுமே இல்லை..அப்படியான ஒரு வாய்ப்பு கிடைத்தாலும் விட்டுவிடாதீர்கள்..

இப்படியான மனிதர்களை சந்திக்கும் சம்பவங்கள் நம்மை , நம் வாழ்வை ஆன்மீக பாதைக்கு திருப்பிவிடும்..நம்மைச்சுற்றி நடப்பவைகளை பார்த்து சிந்திப்பதும், கேள்வி கேட்பதும், என்ன செய்யலாம் என யோசிப்பதும்தான் என்னைப்பொறுத்தவரை ஆன்மீகம்.. அதுதான் திருப்தியும்.. நிஜமான ஆன்மீகவாதிகள் என நீங்கள் கருதுபவர்களை கொஞ்சம் மனக்கண் முன் கொண்டு வாருங்கள்.. அவர் எளிமையானவராய் , அங்கீகாரம் விரும்பாதவராய் , சக மனிதனுக்கு என்ன செய்யலாம் என்ற சிந்தனையுள்ளவராய் இருக்கக்கூடும்..

குழந்தை வயற்றில் இருக்கும்போது ஒரு தாய்க்கு என்னென்ன கற்பனைகள் இருக்கும்.?.. நாள் நெருங்க நெருங்க , குழந்தை எவ்வித ஊனமுமின்றி நல்லபடியாக பிறந்தால் போதும் என நினைக்காத தாயே இருக்க முடியாது..ஆனால் நாம் நல்லபடியாக பிறந்து வந்தாலும் , மனிதர்களை , எத்தனை விதமாக பிரித்துப்பார்த்து பழகுறோம்?.. சாதி , மதம் , ஆணா, பெண்ணா, என்ன இனம், மொழி, கருப்பா , சிவப்பா, ஏழையா பணக்காரனா என..

இப்படி செய்வதால் நிஜமாகவே மனம் மகிழ்வாக இருக்கிறதா என்றால் நிச்சயமாக இருக்க முடியாது.. ஆனாலும் ஆட்டு மந்தைக்கூட்டமாக ஏன் எதுக்கு என கேள்வி கேட்காமல் பின்பற்றித்தொலைக்கிறோம்.. சிந்தியுங்கள்.. எது உங்கள் ஆழ்மனதுக்கு சரி எனப்படுகிறதோ அதை கேள்வி கேளுங்கள்.. தனித்திருப்பதைப்பற்றி கவலைப்படவேண்டியதில்லை.. அப்படியானவர்களே மாற்றம் கொண்டுவந்தார்கள்.. மனிதநேயம் வளர்த்தார்கள்..

சாதி , மதம் , இனம் , எல்லாவற்றையும் கடந்து ஒரு குழந்தையின் மனநிலைக்கு வர முயலுவோம். வலிமை பெறுவோம்..இப்படியானவர்களை சந்திக்கும்போதெல்லாம் அவர்கள் வலிமை எனக்கும் தொற்றிக்கொள்கிறதுதான்..இப்படி விசேஷ குழந்தைகளை கவனித்துக்கொள்ளும் ஒவ்வொருவரையும் வணங்குகிறேன் . ஆதரித்து ஊக்குவிக்கும் ,பல ஆசிரியர்கள் , பல தொண்டு நிறுவனங்கள் , முக்கியமாக பெற்றோர், உடன்பிறந்தோர்க்கு , சொந்தங்களுக்கு எம் வணக்கங்கள்..





( என் இரண்டாவது குழந்தைக்கு Down syndrome பரிசோதனை செய்யணும் என மருத்துவர் சொன்னபோது மறுத்துவிட்டேன்..கருப்பையில் இருக்கும் குழந்தைக்கு ஊசி செலுத்தி சாம்பிள் எடுப்பார்களாம்.. அது தவறி வேறெங்கோ படக்கூடிய வாய்ப்புண்டாம். அதை கற்பனை செய்துகூட பார்க்கமுடியாமல் மறுத்தேன்.. அப்படி ஒரு குழந்தை பிறக்கணும்னா பிறக்கட்டும் என பிடிவாதமாக இருந்தேன்.. இது என் கருத்து மட்டுமே.. வளர்க்க முடியாதவர்கள் செய்வது நல்லதே )


டவுன் சின்ட்றோம் பற்றிய தகவலுக்கு கிளிக் செய்யவும்.


( அலுவல் நேரம் பின்னூட்டம் தவிர்க்கவும்..நன்றி. )

படங்கள் நன்றி கூகுள்




Tuesday, January 25, 2011

குழந்தைகளும் கற்பனைகளும்..:






கதை சொல்லி தூங்க வைப்பது எப்போதும் தொடர்ந்து நடைபெறும் விஷயமென்றாலும் எப்போதாவது சுவையான சம்பவமாகிடுவதுமுண்டு..

எத்தனை கோபம் பிடிவாதம் என்றாலும் கதை வைத்தே லஞ்சமாக பேசி காரியம் சாதிக்கவும் முடிகிறது குழந்தையிடம்..முக்கியமா வீட்டுப்பாடம் சடசடவென முடியும்.. உணவு உள்ளே தள்ளப்படும்...ஜெபமும்...

ஏன் கதைகள் அத்தனை சுவாரஸ்யமாகிப்போனது ?..

ஏனெனில் நிஜத்தைவிட கற்பனை உலகம் மிக மகிழ்ச்சிகரமானதாகவே இருக்கிறது குழந்தைக்கு...

குழந்தைக்கு மட்டுமா ?... நமக்கும்தான்,..

டாம் & ஜெர்ரி விரும்பி ரசித்து அதில் மயங்கி நேரம் செலவாகுவது கூட தெரியாமல் இருப்போருண்டே நம்மில்..


நேற்றும் விளக்கை எல்லாம் அணைத்துவிட்டு என்னை அணைத்துக்கொண்டே கதை கேட்க தயாரானார்...

ரொம்ப ஒண்ணும் கஷ்டமில்லை என்றாலும் அப்போதுதான் கதையும் தயாரிக்கணும் என் மூளை... பாத்திரங்கள் அவரே சொல்லிடுவார்.. யார் இருக்காங்களோ இல்லையோ அவர் இருக்கணும்.. அதாங்க அவர்தான் ஜெர்ரி மவுஸ் .( எலி )

நான் , அல்லது அவன் அண்ணாதான் டாம்..

கூட துணை நடிகர்களாக காட்டிலுள்ள விலங்குகள் ..

இதில் வேறு பல நேரம் ஜெரி மவுஸ் பைக் ரேஸ் வேற போகும்.. அதுதான் ஜெயிக்கும்.. இப்படி கதைக்கான கருவும் அவரே இடையிடையே சொருகிடுவார்.. சில நேரம் என் கற்பனை தடை செய்யப்படுவதாக நான் குற்றம் சுமத்த, அவர் கோவித்துக்கொண்டு சண்டையிடுவார்...

எப்போதும் ஜெரி வெற்றி பெருவதில் எனக்கு உடன்பாடில்லை.. ( அப்புரம் வாழ்வை எப்படி சமாளிப்பதாம் என அம்மாவான எனக்கு கவலை... நியாயம்தானே?... )

ஆனால் அவருக்கோ, ஜெர்ரி எப்படி அடி வாங்கினாலும் , போராடினாலும், ஜெர்ரிதான் வெற்றி பெறணும்...


பெரியவருக்கு கதை சொல்ல இத்தனை சிரமப்படவில்லை.. சீனு உதவினான்.. அதாங்க சீனு நம்ம கழுதையார்.. அவர்தான் பெரியவரோடு பள்ளிக்கு போவதும் , ஆசிரியருக்கு தெரியாமல் சீனுவை சக நண்பர்கள் ஒளித்து வைப்பதும் , உதவுவதும், விமானத்தில் செல்வதுமாய் ஏகத்துக்கும் கதை விடுவேன்.. சிரித்துக்கொண்டே தூங்கிடுவார்.. சில நாள், நான் சொல்லும்போதே தூங்கிடுவேன்.. எழுப்பி வைத்து கேட்பார்.. ( என்ன கதை சொன்னோம்னே மறன்னு போயி..இடையில் கனவு வேற டிஸ்டர்ப் செஞ்ஞல்லே ).


நேர்று கதை ஆரம்பித்ததுமே, ஒரு ஊர்ல , ......................................ஒரு ஊர்.....................................ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல னு இழுத்தேன்...



அவரே ஆரம்பித்து வைத்தார்.. " ஒரு ஜெர்ரி மவுஸ் இருந்தது.. அப்புரம் சீக்கிரம் சொல்லுங்கம்மா... " னு இன்னும் ஆசையோடு கட்டிப்பிடித்துக்கொண்டார்.. அதிலேயே அவர் ஆவல் புரியும்.. கற்பனை விண்டோ ஓப்பன் பண்ணிட்டார்னு அர்த்தம்...

அந்த ஜெர்ரி மவுஸ் பாலத்தில் செல்லும்போது டான்ஸ் ஆடிக்கொண்டே சென்றதால் பாலத்திலிருந்து தண்ணீருக்குள் விழுந்தது......................

........ஹெல்ப் என கத்தியது.. நண்பர்கள் ஓடி வந்து காப்பாற்ற முடியாமல் யானையை அழைத்து வந்தது.... இத்யாதி...


இதுக்குள் டென்ஷனாயிடுவார்... என்னாச்சு மா.. என்னாச்சுமா.. இப்படி காப்பாத்தி இருக்கலாமே அப்படி செய்திருக்கலாமே னு அடுக்குவார் ஐடியாக்களை...

" யானை வந்து தன்னோட நீண்ட தும்பிக்கையால் அந்த மவுஸ் ஏற செய்தது... அது உன்னை மாதிரி சேட்டைக்கார மவுஸ் ஆச்சே, யானை மூக்குக்குள் போய்விட்டது எலி.......................................வெளியே வரமாட்டேன் னு அங்கேயே உட்கார்ந்து கொண்டது..."


கை அசைவோடு சொல்லணும்.. என் கைதான் தும்பிக்கை.. அவர் விரல்கள் மவுஸ்.. பிடித்துக்கொண்டார்..

சொன்னதும் விழுந்து விழுந்து சிரிப்பு...


யானை மூக்கை சீந்தினாலும் வரமேட்டேன் னு பிடிவாதம்...

உடனே நண்பர்கள் ஒரு ஐடியா சொன்னார்கள் , நிறைய உறைப்பு சாப்பிடு... கண்ணீரும் தண்னீரும் வரும்.. அப்ப மவுஸ் வழுக்கி விழும்...

யானையும் உறைப்பு சாப்பிட்டு தண்ணீர் வந்ததும் , ஆவலோடு எல்லா விலங்குகளும் பள்ளிக்கு செல்லாமல் பாறைகள் மேலேறி உட்கார்ந்து காத்திருந்தன...

ஆனா மவுஸ் ஜாலியா , " ஐ வாட்டர் ஃபால்ஸ் ( நீர்வீழ்ச்சி ) னு குளித்து பாட ஆரம்பித்தது... ( ஏன்னா சின்னவருக்கு தண்ணீர்னா போதும் ஒரு நாளைக்கு 10 முறை கூட குளிப்பார்.. காய்ச்சல் என்றாலும் ) ..


சிரிப்பு தாங்க முடியலை...


சரி போதும் இன்னிக்கு.. தூங்கு னு சொன்னதும் கெஞ்ச கொஞ்ச ஆரம்பித்துட்டார்..

பிளீஸ் , ஒரு ஆயிரம் முறை...

சரி இன்னும் ஒரு சில வரிகள் என சத்தியம் வாங்கிக்கொண்டு , தொடர்ந்தேன்..

சின்ன சின்ன இலைகளை பூக்களை எடுத்து வந்து மூக்குக்குள் செலுத்தினால் மவுஸ் வெளியே வரும் என நட்புகள் சொல்ல ,

அதையும் செய்ய , அவற்றையெல்லாம் உள்ளேயிருந்து வாங்கிவைத்துக்கொண்டு , " ஆஹா நான் நல்ல மலர்படுக்கை செய்துவிட்டேன் .. நல்லா தூங்க போறேன் ' னு சொல்லி குட்நைட் சொல்லிச்சாம்...


சரி குட் நைட் சொல்லிடுச்சு போய் தூங்கு...


--------------------

தூக்கத்திலேயும் சிரித்தார்.. எந்த கதைக்குன்னு தெரியலை...

காலையில் எழுந்ததிலேருந்து சிரிப்பு.. பள்ளி விட்டு வந்ததுமே கதை தயாரா இருக்கணுமாம்...பள்ளி நட்புகளிடமும் ஆசிரியரிடமும் சொல்வாராம்....

குழந்தைகளின் கற்பனை உலகத்தை விரிவாக்கிடலாம் கதை மூலம்...அதில் நாமும் நுழைந்து ரசிக்கலாம் இலவசமாக.. உபயோகமாக...


கதையின் கரு ஒரு வரியாகக்கூட இருக்கலாம்.. ஆனால் சொல்லும் விதமும், குழந்தைகளை அந்த கற்பனை உலகில் சஞ்சீகரிக்க , அழைத்து செல்லும் மந்திர வித்தையும் வருவதற்கு முதலில் நாமே குழந்தையாகி அக்கதையை ரசிக்க பழகணும்... ( சொன்னா நம்பமாட்டீங்க.. இன்னும் என் கதையின் சீனு என்ற கழுதையார் ( 6 வருட பழக்கம் ) மற்றும் , தொடர்கதையின் நாயக நாயக்ர்கள் உயிரோடு வாழ்கிறார்கள் என்னில் )


அதே போல நிறைய கேள்விகள் கேட்க வைக்கலாம் குழந்தைகளை...


குழந்தைக்காக படம் வரைய கற்றுக்கொண்டிருக்கிறேன்....

http://www.ehow.com/how_5581915_draw-computer.ஹ்த்ம்ல்








படம் : நன்றி கூகுள்..

Wednesday, December 15, 2010

அம்மா புராணம் - 3 -போதையிலிருந்து மீட்ட மணமகன்..




அம்மாவோட தோழிகளை பார்த்தாலே புரியும் அம்மாவோட ரசனை..எல்லாரிடத்திலும் சமமாக பழகினாலும் , துணிச்சலான பெண்மணிகளே அம்மாவின் தோழிகள்..
இப்படி பலர் இருந்தாலும் இன்று நான் சொல்லப்போவது டெல்லியம்மா பற்றி.டெல்லி அம்மா என்ற பெயர் எப்படி வந்தது?.. புரிந்திருக்கும்..ஆம். டெல்லியில் கிட்டத்தட்ட 40 வருடம் வாழ்க்கை நடத்திவிட்டு ஊர்பக்கம் வந்தவர்கள்..

மிக அழகானவர்.. வட நாட்டு பெண்மணியை போல தோற்றம்..அவர் கணவர் ராணுவத்தில் மிக உயர்ந்த பதவியில்..அதன்மூலம் இவர்களுக்கு அன்னை இந்திராகாந்தியின் பழக்கம் கிடைத்தது.. பல வருடம் அவருக்கு உதவியாளராகவும் இருந்துள்ளார்.. தனிப்பட்ட முறையில்.. எங்களிடம் அந்த புகைப்படங்களை காண்பிப்பார்.. சஞ்சய் காந்தி, ராஜீவ் காந்தியோடும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்..இப்படி மிகப்பெரிய ஆட்களோடு பழகி , தம் குழந்தைகளையும் மிகப்பெரிய பள்ளியில் சேர்த்து கல்வி கொடுத்தார்.. அதில் கடைசி மகன் கல்வியோடு போதைக்கும் அடிமையானார்..அதிலிருந்து மீட்டு பின் பிடிவாதமாய் சொந்த ஊருக்கு அழைத்து வந்தார்..

அந்த பையன் கணினியில் அப்பவே கெட்டிக்காரர்.. ( 17 வருடம் முன்பு ) .என் அண்ணனும் கணினி என்பதால் இருவரும் நட்பாயினர்.. ( கணினியையே கட்டிகிட்டு அழுவார்கள் எந்நேரமும் ).இப்ப அந்தம்மா தன் மகனுக்கு பெண் பார்க்கிறார் தன் சாதியில்.. ( என்கே போய் வாழ்ந்தாலும் இந்த சாதி விடமாட்டேங்குது பாருங்க..).

நல்ல விஷயங்கள் உடனே பரவுதோ இல்லையோ கெட்ட விஷயங்கள் தீ மாதிரி பரவிடுமே.. அந்த பையனின் போதை பழக்கம் ஊர் முழுக்க தெரிந்தது..யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை.. இத்தனைக்கும் ஏகப்பட்ட சொத்துக்கள்.. அந்தம்மாவும் தனக்கு சம்பந்தம் கொஞ்சம் பெரிய இடமாக இருக்கணும் என தேடினார்கள்.. மகனுக்கும் அவன் பேசும் நுனிநாக்கு ஆங்கிலத்துக்கும் ஏற்ற பெண் இருக்கணும் என்ற ஆசையும்..மிக நல்ல மரியாதையான பையன் தான் அவர்.. எங்க வீட்டுக்கு வரும்போது அமைதியாக அண்ணணுக்காக காத்திருப்பார்.. வசதியானவர் என்ற எந்த பந்தாவும் இல்லாமல்...ஆனா அவர் அம்மா நல்லாவே பந்தா காட்டுவார்.. இரண்டு தெரு தள்ளியிருந்து எங்க வீட்டுக்கு அம்மாவிடம் பேச வரணும் என்றாலும் காரில்தான் வருவார்.. டிரைவார் காத்திருந்து கூட்டிசெல்வார்..

இப்ப இன்னொரு தோழியின் மகளை பேசி முடிக்க எங்க வீட்டில் வைத்து பேச்சு நடக்கும்.. அந்த தோழி மலைக்காரம்மா.. ( மூணாறில் எஸ்டேட் இருப்பதால் இப்பெயர் .)
அவர்கள் வீட்டு பெண்களும் மிக அழகும் கலரும்.. வசதியும்.. படிப்புதான் குறைவு...இப்ப என்ன பிரச்னைன்னா, சீர் , பணம் ஏதும் தரமாட்டேன் என பெண் வீட்டார் சொல்கிறார்கள்.. ( வலிய வந்தமையால் )..இப்படி இழுபறி நடந்துகொண்டிருந்தபோது அந்த பெண்ணுக்கு வேறொரு பண்ணையார் வீட்டில் அழகுக்காக விரும்பி நிச்சயம் செய்துவிட்டார்கள்..

அப்பதான் அம்மா சொன்னார்கள் , " பையன் போதை பழக்கம் எல்லாரும் அறிந்தமையால் பயப்படுவார்கள்.. ஏன் ஒரு ஏழை பெண்ணுக்கு வாழ்வளிக்க கூடாது ?." .அந்தம்மா முதலில் ஒத்துக்கொள்ளவில்லை.. அவர் மகனிடம் என் அம்மா பேசியபோது அவர் மிக தயாராய் இருந்தார்.. தன் அம்மாவையும் சம்மதிக்க வைப்பதாகவும் , " நீங்க சொல்ற எந்த பெண்ணையும் நான் கட்டிக்கிறேன் மா. " என்றார்.. கடைசியில் அந்தம்மாவும் சம்மதித்தார்கள்.. இப்பதான் அம்மாவுக்கு பிரச்னை.. வேலியில் போற ஓணானை -----------//

அக்கம்பக்கம் இருந்த ஏழைப்பெண்கள் லிஸ்ட் எடுத்து அழைத்து மெதுவா கேட்டுப்பார்த்தார்கள்.. டெல்லி என்றதுமே பலர் வேண்டாமென சொல்லிவிட்டார்கள்..இப்ப கடைசியில் இருப்பது சில வீடுகள் தள்ளியிருக்கும் ஒரு குடும்பம்.. வசதியிருந்து நொடித்தவர்கள்.. 8 பெண்கள் ஒரே பையன்.. ஒவ்வொரு பெண்ணையும் கறையேத்த மிக கஷ்டப்பட்டது அக்குடும்பம்..அவர்கள் சண்டையிட்ட குடும்பம் எங்களோடு மிக நெருக்கம் என்பதால் எங்களிடமும் பேசமாட்டார்கள்..ஆனாலும் அம்மாவுக்கு அந்த குடும்பம் மீதும் , பெண் குழந்தைகள் மீதும் ஒருவித பாசம் /மரியாதை உண்டு...என்னிடம் சொல்லி அனுப்பினார்கள் அந்தம்மாவை எங்க வீட்டுக்கு வர சொல்லி.. நான் போய் சொன்னதும் வேண்டா வெறுப்பாக வந்தார்கள்.. அம்மா விபரமாக எல்லாவற்றையும் எடுத்து சொல்லி , " நான் கட்டாயப்படுத்தவில்லை.. நீங்க யோசிச்சு சொல்லுங்க .. " னு சொன்னார்கள்..


அவர்கள் முதலில் வேண்டாம்னு சொல்ல , பின் அவர்கள் மூத்த மகள் வந்து மேலும் பேசி விப்ரம் கேட்டு அறைகுறையாக சம்மதித்தார்கள் பெண் பார்க்க..உடனே எங்க அண்ணியோட நகையை எடுத்து சென்று அப்பெண்ணுக்கு போட்டு அலங்கரித்தோம்.. மாப்பிள்ளையும் அவர் அம்மாவும் வந்து பார்த்து பிடித்துவிட்டது..பெண் அதிகம் படிக்கவில்லை.. 10ம் வகுப்பு மட்டுமே..சுமாரான அழகுதான்..( இதை சொல்வது ஊர் உலக பார்வைக்காக மட்டுமே . என் பார்வை அல்ல.. திட்டிராதீங்க.. :)) )

சம்மதம் தெரிவிக்கும் வகையில் மாப்பிள்ளை வீட்டார் ஒரு நகை , சில புடவைகள் பரிசாக பெண்ணுக்கு தந்தார்கள்.. பெரிய ஹோட்டலில் அந்த வாரமே திருமணமும் நடந்தது... பலர் விமர்சித்தார்கள் எதிர்மறையாக.. எங்கம்மா அந்த பையனிடம் சத்தியம் வாங்கினார்கள்.. என் பெண்ணை கொடுத்தது போல கொடுத்துள்ளேன்.. நீ ந்ல்லா வாழ்க்கை நடத்தி காண்பிக்கணும் என.. அந்த பையன் கண்ணீரோடு சத்தியம் செய்தார்..

திருமணம் முடிந்த சில தினங்களில் டெல்லிக்கு விமானத்தில் சென்றார்கள்.. அடுத்த வருடத்தில் மாமியார் போன்ற மிக அழகான பெண் குழந்தை பெற்று மாமியார் மனதிலும் நீங்க இடம் பிடித்தார் அப்பெண்.. இப்பல்லாம் வருடந்தோறும் விமானத்தில் தனியே குழந்தையோடு வருவார்..( இன்று ஒரு நடிகையைப்போன்ற மிக அழகிய வாலிப பெண் . அதே நுனிநாக்கு ஆங்கிலமும் அப்பாவைப்போல ) . எங்கேயோ போய் விட்டாள் அந்த கிராமத்து பெண்... இப்பவும் எந்த அவசரம் என்றாலும் அம்மாவை வந்து பார்த்து " அம்மா இது நீங்க கொடுத்த வாழ்வு " என வணங்கிவிட்டு செல்வாராம்....


ஊரே பழியை போட்டது அம்மா மேல்.. இது எப்படி நல்லா வாழ முடியும் என சவால் விட்டது.. அதுவும் வேறு ஜாதியினர்.. அன்று பழியெல்லாம் தனி ஆளாக அம்மா ஏற்றுக்கொண்டார்.. இன்று அக்குடும்பமே மகிழ்ச்சியில்...அம்மா எங்களுக்கு எப்பவும் இப்படி செய் , அப்படி நட என சொன்னதில்லை.. சொல்ல நேரமிருந்ததில்லை எனலாம். ஆனால் அவர் வாழ்க்கையை பார்த்தே கற்கலாம்..அவர் துணிவை, அடுத்தவருக்காக பழி ஏற்றுக்கொண்டும் செய்யும் நற்செயல்களை...நிஜமான அக்கறை இருந்தால் மட்டுமே முடியும்.. பெண் குழந்தைகளுக்கு முக்கிய தேவை கல்வியும் துணிவும் என நினைப்பவர்..




(புராணத்துக்கு தேவையில்லாதது : ஜனாதிபதி திரு.வெங்கட்ராமன் அவர்கள் தூத்துக்குடி வந்தபோது டெல்லியம்மாவுடன் எங்க அம்மாவும் சென்று சந்தித்தது அப்போதுதான்... அப்பதான் டெல்லியம்மாவின் மரியாதையை முழுதாக கண்டார் அம்மா..டெல்லியம்மா கெஸ்ட் ஹவுஸ் குள் நுழைந்ததுமே காவலர்கள் சல்யூட் அடிக்குமளவுக்கு பிரசித்தி...அவர் கணவர் பற்றி எனக்கு தெரியவில்லை.. அரசியல் பிரமுகர்கள் பலரும் பரிச்சயமுண்டு..)

இப்படி கம்பீரமான பெண்"மணிகளை" எமக்கு அறிமுகப்படுத்த தவறியதில்லை அம்மா... )

-

அடுத்து ஒரு எமோஷனல் காதல் பிளாக்மெயில் பற்றி நேரமிருப்பின் எழுதுவேன்.. அல்லது அடுத்த வருடம் வந்து தொடருவேன்.. விடுமுறைக்குப்பின்...

பதிவுலகினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்..



அம்மா புராணம் - 2 படிக்க
அம்மா புராணம் - 1 படிக்க



படம் : நன்றி கூகுள்..





.

Wednesday, November 24, 2010

அம்மா புராணம் - 2. ( முதம் மனைவி இருக்கும்போதே இரண்டாம் கல்யாணம் )



































" அக்கா நான் இந்த வாரம் கிளம்பி வருகிறேன்..திருமணம் நடக்குமா?..." பயத்தோடு கேட்டார் மாமா..

என் அம்மாவின் சொந்தக்கார தம்பி அவர்..பொறியாளர்.. கை நிறைய சம்பாத்யம்.. வசதியும்..

திருமணம் முடிந்து 10 வருடம் குழந்தையில்லை.. மனைவியிடம் கோளாறு..

அதுமட்டுமல்ல அந்த காலத்தில் பாருங்க பெண்ணுக்கு அதிக வயதிருந்தாலும் , தன் மத/ஜாதியில் மாப்பிள்ளை கிடைக்காவிட்டால் , மாப்பிள்ளை வயது குறைந்திருந்தாலும்

மணமுடித்துள்ளனர்.. இப்படி பல பேரை பார்த்துள்ளேன்..

அதே தான் இந்த மாமாவின் கதையும்..

அத்தையை பார்த்தால் மாமாவுக்கு அம்மா/அக்கா போல் வயதானவராய் தோன்றுவார்..வியாதியஸ்தரும் கூட..

ஆனால் இருவருமே அன்பான தம்பதிதான்.. சண்டை சச்சரவேதுமில்லை..

ஆனால் மாமாவுக்கு இல்வாழ்க்கை திருப்தியோ இல்லை , குழந்தையின்மை வருத்தமோ , ஏதோ ஒன்று இருந்துள்ளது பல வருடம்..

மனைவியை விவாகரத்து செய்ய பல காரணமிருந்தும் செய்ய மனமில்லை..

ஆனால் மறுமணம் செய்ய மட்டும் அனுமதி பெற்றார் ...

அம்மாவிடம் தன் குறையை சொல்ல , அம்மாவுக்கு தன் சொந்தத்தில் திருமணமாகாமல் இருக்கும் பெண் நியாபகத்துக்கு வந்தது..

அதை மாமாவிடம் சொல்ல , மாமா சம்மதிக்க , அம்மா அப்பெண்ணிடம் பேச , அவரும் விருப்பம் சொல்ல ...

ஆனால் அம்மாவின் சொந்தங்கள் அனைவருமே இதுக்கு எதிர்ப்பு...

மாமா வெளியூரிலிருந்து நெல்லைக்கு வருவதற்குள் அம்மா மற்ற விஷயங்களை ரகசியமாக கவனிக்கணும்...

என்ன அது.?..

அம்மாவின் அந்த அத்தை பெண் ஜாதக பலனால் திருமணம் ஆகாமலேயே இருந்தார் பல வருடம்..

அதற்கான முயற்சி எடுக்க பெற்றோரும் இல்லை..

சகோதர சகோதரிகளுக்கும் முடியவில்லை.. தட்டிக்கொண்டே போனது..

அந்நேரம் அம்மா இந்த மாமாவுக்கு அந்த பெண்ணை முடிக்க பேசியதும் பலத்த எதிர்ப்பு..

( உடனே என்ன சொல்வார்கள் தெரியுமா , அம்மாவிடம் . ? . உன்கிட்ட 4 பெண் இருக்கே.. அதை கட்டிக்கொடு.. )

10 வருட வித்யாசம்.. இரண்டாவது திருமணம் வேறு..ஆனால் அந்த அத்தைக்கு ( பெண்ணுக்கு ) மாமாவை கட்டிக்கொள்ள சம்மதம்..

மாமாவின் குணம் அப்படி. யாருக்குமே பிடிக்கும் ..பார்க்க கருப்பு சரத்குமார் போல இருப்பார்..

இப்ப அம்மாவை அந்த பெண்ணை பார்க்கவே அனுமதிக்க மாட்டேனென்கிறார்கள்..

அம்மாவோ அவ்வூரிலுள்ள இன்னோரு மாமா வீட்டுக்கு சென்று ரகசியமாக அப்பெண்ணை வரவழைத்து பேசுகிறார்..அவர்கள் வீட்டிலுள்ளவர் பாதி பேருக்கு கூடதெரியாமல் ரகசியமாக பேசணும்.. அங்கேயும் எதிர்ப்பு..

மாமா வந்தார்கள்.. நெல்லைக்கு..

அப்பெண்ணை ரகசியமாக சொந்தக்கார பெண்ணோடு எப்போதும் செல்லும் கோவிலுக்கு வர வழைத்தார்கள்..அம்மா...

நம்பிக்கைக்குறிய சிலரோடு சென்று கோவிலில் வைத்தே மாமா அத்தை திருமணம் நடந்தது..

திருமண செய்தி பரவியதும் அவ்வளவுதான்...

அம்மா மேல் காவல்துறையில் புகார் செய்துவிட்டனர்..அத்தையின் சகோதரர்..

கூடவே அம்மாவை பிடிக்காத சிலரும் கூட்டாளிகளாக.. :)

காவலர்கள் எங்கள் வீடு தேடி வந்தனர்.." உங்கம்மா பெண்ணை கடத்திக்கொண்டு போனதாக தகவல் வந்துள்ளது . விசாரிக்கணும் " என..

நாங்க பயந்துதான் போனோம்.. :)

ஆனால் சொந்தக்காரர் ஒருவர் இன்ஸ்பெக்டராக இருந்தார் அப்போது.. நெல்லையிலேயே

அம்மா தொலைபேசினார்.. தாங்கள் எல்லாரும் மிக பத்திரமாக காவல் நிலையத்துக்கு சென்று விளக்கமளித்துவிட்டு வந்தாச்சு

பயப்பட வேண்டாம் என..அப்புரம்தான் நிம்மதியானோம்..( முதல் அத்தையின் சம்மத கடிதம் இருந்தது.. அவரிடமும் தொலைபேசினர் காவலர் )

பின் மாமாவும் அத்தையும் எந்த உறவினர் வீட்டிலும் தங்காமல் விடுதியில் தங்கிவிட்டு அக்கம் பக்கம் ஊர்களுக்கு சென்றுவிட்டு

மாமா தான் வேலை பார்க்கும் இடத்துக்கு அழைத்து சென்றார்.

முதல் அத்தையும் இரண்டாவது அத்தையும் நட்பாக சில காலம் பிடித்தது..

ஆனால் இரண்டாவது அத்தை மிக நன்றாக சமைப்பதோடு வீட்டையும் நோயாளி அத்தையையும் பார்த்துக்கொண்டதும் குடும்பத்துக்கு திருப்பம் வந்தது..

அதோடு அத்தைக்கு இரண்டு குழந்தை பிறந்தது குடும்பமே மகிழ்ச்சியானது...குழந்தைகள் முதல் அத்தையை "மம்மி" என்றும் இரண்டாவது அத்தையை "அம்மா
" என்றும் அழைப்பார்கள்..

நெல்லைக்கு வந்தால் எங்க வீட்டுக்கு வருவதோடு சரி.. தன் சகோதரர் வீட்டுக்கு கூட அத்தை செல்லாமல் இருந்தார் சில காலம்..

முதல் அத்தை ஆசிரியராக இருந்ததால் படிப்பெல்லாம் அவர் கவனிப்பார்... பெருமையாக...

இரண்டாவது அத்தை கூட இப்ப ஸ்டைலா உடுத்த , மாற ஆரம்பித்தார்கள்..மாமாவின் பதவிக்கு பொருத்தமாக..

இன்று குழந்தை இருவரும் நன்று படித்து வேலையிலும்... பெற்றோர் மூவரையும் அருமையாக கவனித்துக்கொண்டு..

ஆனால் இன்று அந்த அத்தை மாமா நெல்லைக்கு வந்தால் அம்மாவை சந்திப்பதில்லை.. இடையில் பலரின் குசும்பு வேலைகளை சொல்லவும் வேண்டுமா என்ன?

இதுதானே உலகம்..?.. ஆனால் அம்மாவுக்கு அந்த மன திருப்தி போதுமே.. அவர்கள் இன்று மகிழ்ச்சியாக இருப்பதே இவரின் வெற்றி..

அதுதானே முக்கியமேயொழிய அவர்கள் கஷ்டப்பட்டுக்கொண்டு இருந்து தம்மோடு அவர்கள் நட்பாயிருப்பதை விட?..

அம்மாவுக்கு எத்தனை எத்தனை நல்ல நட்புகள் உண்டோ அத்தனைக்கு அத்தனை எதிராளிகளும்...உருவாகினர் ..:)

( சராசரி மனிதர் நட்பில்லாவிட்டாலும் , எதிரிகள் இருக்ககூடாது என்ற கவனத்திலேதானே நல்லது செய்யாமலும், தீமையை கண்டிக்காமலும் செல்கிறார்.? நமக்கெதுக்கு வம்பு என ?.. ) .

ஆக நட்புகள் எதிரியாவதும், எதிரிகள் நட்பாவதும் மாறி மாறி வந்தது அம்மாவுக்கு..

ஆக அவரது ஒவ்வொரு செயலும் ஒரு போராட்டமாகவே அமையும்..

அதே போல நன்மை செய்தவரெல்லாம் கூட பழி போட்ட காலமும்..

இது இயற்கையின் விதி என எடுத்துக்கொள்வாரேயொழிய அதனால் அவர் காரியம் எதுவும் தடை பட்டு நின்றதேயில்லை...

மிக மிக என்னை ஆச்சர்யப்படுத்தும் விஷயம் என்னவென்றால் , எதிரி எனப்படுபவர், சண்டையிட்டிருப்பார், அம்மாவை மோசமாக பேசியிருப்பார், ஆனால் அவர் பிள்ளைகளுக்கோ , அவருக்கோ ஒரு பிரச்னை என்றால் எவ்வித மனக்கச்சப்புமின்றி இவர் வலிய சென்று உதவுவார்...அவர்கள் வெட்கப்பட்டுக்கொண்டு தயங்கினாலும் கூட..

மனதில் வஞ்சம் வைத்து பார்த்ததில்லை.. ஏனெனில் அதை பற்றி நினைக்ககூட அவர் நேரம் செலவழித்திருக்க மாட்டார் என நினைக்கிறேன்..

She was always on the run to help someone .. She kept moving , occupied, busy always & a very active personality .... Never remained stagnant.. Never worried about comments or complaints..

அவர் எதைக்கண்டும் தன் ஓட்டத்தை உதவியை நிப்பாட்டியதில்லை.. உதவி செய்ய ஒரு சந்தர்ப்பம் மட்டுமே வேணும் அவருக்கு..

அம்மாவை யார் திட்டினாலும் எமக்கு கோபம் வரும்.. ஆனா அவர் கண்டுக்கிட்டதேயில்லை..

அதையே தன் வாழ்வின் வெற்றியாக , லட்சியமாக நினைத்திருக்கக்கூடுமோ?..


சொந்தமோ, நட்போ எப்போதும் ஒருபோதும் இருப்பதில்லை. அவரவர் சூழல் மாற , வட்டங்கள் மாற மனிதனும் மாறுவார்கள் என்பதை தெரிந்து வைத்து எமக்கும் கற்றுதந்தார்.. அதை ஏற்க பழக்கினார்...

படம் : நன்றி கூகுள்..

அம்மா புராணம் - 1 துணிவு படிக்க

அம்மா செய்துவைத்த மறுமணம் படிக்க





.

Tuesday, November 23, 2010

அம்மா புராணம் - 1. ( துணிவு )














































புரட்சி திருமணம் : 1


" நான் குடும்பத்தோடதான் தற்கொலை செய்யணும்." அழுதுகொண்டே வந்தார் எங்க சொந்தக்கார பெண்.. அம்மாவுக்கு அக்கா முறை..

கணவனை இழந்தவர்.. சொத்துக்கள் உண்டு.. ஆனால் கிராமம்...பொறுப்பில்லாத மூத்த மகன்..

வந்தவரை சாப்பிட வைத்து சாவகாசமாய் சமையல் வேலையெல்லாம் முடித்துக்கொண்டே பேசுகிறார் அம்மா..

எங்க வீடு முன்னறையிலேதான் அம்மா காய்கறி நறுக்குவார். அங்கேதான் தொலைபேசுவார்.. எல்லாமே அங்கேதான்..

ஆக மிக அலங்காரமெல்லாம் காண முடியாது..

என் தோழிகளின் வீடெல்லாம் மிக நேர்த்தியாக இருப்பதுபோல் ஏன் நம்ம வீடும் அப்படி இருக்கலாமே னு நினைப்பேன்..

ஆனா அதுக்கெல்லாம் முக்கியத்துவமே கிடையாது..

யார் வேணுமானால் எளிதாக அம்மாவை அணுகி பேசும்படியான வசதிகளை மட்டுமே கொண்டது..


அம்மாவோட அப்பா பெரிய காம்பவுண்ட் வீட்டில் 12 வீடுகள் கட்டும்போதும் அம்மாதான் கணக்குப்பிள்ளையாம்..

சில நேரம் செங்கல்கள் கூட வேலையாளோட சுமந்ததுண்டாம், ஆள் குறைவாய் இருந்தபோது..

பாட்டிக்கு பிள்ளை பெறுவதே வேலை.. அம்மாவுக்கு கீழ் 5 குழந்தைகள் .. ( இறந்தது தனி கணக்கு ) .

ஆக அம்மாதான் ஆண்பிள்ளை மாதிரி தாத்தாவுக்கு...அதோடு மாடுகள், கோழி , நாய் வளர்ப்பு, தோட்டம், வயல் வேலை, மாட்டுவண்டி,

என வீடு நிறைய ஆட்கள் விலங்குகளோடு வளர்ந்தவர்..எப்பவும் தானியங்கள் நெல், உளுந்து என காயும் மாடியில் முற்றத்தில்..


அதிலும் எங்க வீட்டு முற்றத்தின் வாசப்படிகளில்தான் அதிகம் அம்மா உட்கார்ந்திருப்பார்.... எதிர் வீட்டு மிகப்பெரிய வேப்பமரமும் அதன் சுகமான குளிர்ந்த காற்றும் ,

எங்க வீட்டு மாமரம் , அசோக மரம் , முருங்கை நிழலுக்கடியில்...

மிக சுகம் தரும்..

" என்ன பிரச்னை " என விசாரித்தார் அம்மா..

" திரும்பவும் அந்த பெண்கிட்ட பேசியிருக்கான் என் மகன்.. அவனை வெட்டுவேன் னு அலையுறாங்க அந்த சாதிக்காரங்க.."

" வேலை வெட்டி இல்லன்னா இப்படித்தான்.. சரி எங்க இருக்கான் உன் மகன்.?"

" தெரிஞ்சவங்க வீட்டில்..."

"என்ன முடிவு செய்திருக்க .?"

" அந்த தாழையூத்து பெண்ணை பேசி முடிச்சு வெச்சிருக்கேன்..அவங்க இவனுக்கு வேலையும் வாங்கி தருவாங்க.. பெண்ணுக்கு ஜாதகத்தில் ஏதோ தோஷமாம்.. அதனால வரன் அமையல... இவன் சம்மதிக்க மாட்டேங்கிறான்.. காதலிச்ச அந்த பெண்ணைதான் கட்டுவேன் னு சொல்றான்..

அந்த சாதிக்காரங்க இவனை கொலையே செய்திருவாங்க..எத்தனை நாள் இப்படி திரிவான்?.."

" சரி கிளம்பு.. "

" எங்க.?"

" தாழையூத்துக்கு முதல்ல போறோம்.. சம்பந்தம் பேசிட்டு.. அவனை கூட்டிட்டு நாளைக்கு கல்யாணத்த முடிச்சிரலாம்.. "

" நெசமாத்தான் சொல்றியா .?"

சென்றார்கள் . அண்ணாவோடு இரவு வந்தார்கள்..கூடி கூடி பேசினார்கள்..

விடிந்ததும்தான் தெரிந்தது அன்று எங்க வீட்டில் வைத்தே கல்யாணம் என்று..

அக்கா ,சின்ன அண்னாவிடமும் என்னிடமும் , அம்மா, அந்த அண்ணனை காண்பித்து ,

" இவன் வெளியே எங்காவது போகணும்னு சொன்னா போக விடக்கூடாது.. இந்த ரூம் விட்டு வெளியே அனுப்ப கூடாது , பாத்ரூம் தவிர.."

" எப்படீம்மா .?"

" நாங்க போய் தாலி வாங்கிட்டு சீக்கிரம் வந்திருவோம்.. .."

நானும் அக்காவும் , சின்ன அண்ணாவும் காவல்...

பெரிய அண்ணா, அப்பா எல்லாரும் சாப்பாடுக்கு சொல்ல போனார்கள்...

அண்ணி மாடியை தயார் செய்தார்.. தம்பதிகளுக்கு..

ஒரு பதினோரு மணியளவில் , அந்த அண்ணன் மெதுவா முன்னறைக்கு வந்தார்கள்..

அப்படியே முற்றம் வந்தார்கள்.. நாங்கள் மூவரும் ஒருவரையொருவர் பார்த்துகொண்டோம்..

" அண்ணே உள்ள வாங்க.." சின்ன அண்ணா.

" இருல.. வாரேன்.. மாங்கா நல்லா காய்ச்சிருக்கே.. "

சொல்லிக்கொண்டே இருந்தவர் தப்பி ஓடினார் பின் தெரு வழியாக..

அண்ணா துரத்திக்கொண்டு பின்னால் ஓட ,

அவரை தொடர்ந்து அக்காவும் ஓட ,

சிலர் வேடிக்கை பார்த்ததும் ,

அக்கா சம்யோசிதமாக , திருடன் , திருடன் , " என கத்த ,

மூன்றாம் தெருவிலுள்ளவர்கள் கூட ஓடி சென்று அண்ணாவை பிடித்தார்கள்..

அடி விழுமுன் , சின்ன அண்ணா விபரம் சொல்லி வீட்டுக்கு அழைத்துவந்தார்..

இப்ப எல்லா கதவையும் பூட்டி வைத்தோம்..பூட்டு போட்டு..:)

அம்மா வந்ததும் , கேள்விப்பட்டதும் , அந்த அண்ணாவை திட்டோ திட்டுன்னு அப்படி திட்டினார்கள் .

" ஒன்ணு செய். இப்பவே இங்கேயே உங்கம்மாவுக்கு விஷம் வாங்கி கொடுத்துவிட்டு நீயும் செத்துப்போ.. உன்னால தான் அவளுக்கு எத்தனை நாள் பிரச்னை..

கணவனும் இல்லை.. நீயும் தறுதலை..உனக்கு காதல் ஒரு கேடு..அம்மாவை காப்பாத்த வழியில்லை.. இதுல..%&*^&%^(%^(&**% " அப்படி இப்படின்னு..

அந்தம்மா அழ, அந்த அண்ணன் வெட்கி தலை குனிய....கொஞ்சம் நேரம் சோகமானது அந்த சீன்...

மதியம் எல்லாரும் சாப்பிட்டுவிட்டு தாழையூத்துக்கு சென்று பெண் அழைத்து வந்தார்கள்...

கூடவே சொந்தங்களும்.. எல்லாருக்கும் மாடியில் சாப்பாடு..

எங்களுக்கு தெரிந்த ஒரு பாதிரியார் அழைத்து ஆசீர்வதித்து , குத்துவிளக்கேற்றி திருமணம் நடந்தது வீட்டிலேயே சாமி படம் முன்பு..

சில பெரிய மனிதர்கள் சாட்சியோடு..

அப்புறம் அன்று எங்க வீட்டிலேயே மணமக்கள் தங்கினர் மாடியில்..

3 ஆண் குழந்தைகள் பெற்று , நல்ல நிலைமையில் வாழ்கிறார்கள்...இன்று..

இப்ப நினைத்து பார்த்தாலும் என்னால் நம்பவே முடியாது..

எப்படி ஒரே இரவுக்குள் அம்மாவால் அத்தனை காரியத்தையும் , அலைச்சலையும் அலுப்பின்றி செய்ய முடிந்தது..?

அதிலும் ரொம்ப ஆச்சாரமான இந்துக்களுக்கு , கோவிலில் சென்று கூட திருமணம் செய்யாமல் , அப்பவே , பெரியவர்கள் அழைத்து ,

புரட்சி திருமணம் செய்தார்கள் என்று.. ?.

உணவோ, உறக்கமோ எப்போதும் பெரிதாகவே தோன்றாது அவருக்கு..

எந்த நேரத்திலும் கூட சென்று உதவ தயாராயிருப்பார்.. எம்மையும் சில நேரம் , கிராமத்திலிருந்து வருபவர்கள் கூட பள்ளிகளுக்கு அனுப்புவார் அட்மிஷன் விஷயமென்றால்.. .எரிச்சலா இருக்கும்.. ஆனால் ஒருபோதும் மறுக்கவே முடியாது அம்மாவின் கட்டளைக்கு..

அதே போல மருத்துவமனைக்கும்.. எனக்கு அந்த வாடையே மயக்கம் தரும்.. ஆனா மாமாவிடம் அறிமுகப்படுத்த நான் கூட போவேன்.. விருப்பமேயில்லாமல்..

அம்மாவை திட்டிக்கொண்டே.. :).. அதிலும் கடைசியா பிறந்து தொலைச்சா அவ்வளவுதான்.. எல்லாருக்கும் எடுபிடி நாமதான்..:)

இதுல எனக்கும் சின்ன அக்காவுக்கும் அக்ரிமெண்ட் உண்டு..

அவளுக்கு வேண்டிய வெளி வேலைகள் நான் செய்து தரணும் வாங்கிக்கொடுக்கணும்.. அவள் எனக்கு இஸ்தரி போடுவது , படம் வரைந்து தருவது னு ஒப்பந்தம்..

இதில் வேற எங்க வீட்டில்தான் அந்த காலத்தில் தொலைபேசி இருந்தது..( இன்னும் சிலர் வீட்டில் ஆனா அனுமதி கிடையாது மற்றவருக்கு ) .. ஊர் முழுக்க எண் கொடுத்து வெச்சிருப்பாங்க.. யாருக்காவது தொலைபேசி அழைப்பு வந்தால் நாந்தான் ஓடி போய் சொல்லணும்..சில டிப்ஸ் மாதிரி பரிசும் கிடைக்கும்தான்.. :)

அதே போல செய்தித்தாள் பரிமாறலும்.. " ஏய் பொடிசு " னு எதிர் வீட்டு அங்கிள் கூப்பிட்டா " பேப்பர் வந்தாச்சா " னு அர்த்தம்,...

அவர்களுக்கு பெண் குழந்தை இல்லையென்பதால் என் மீது பிரியமும்.. விசேஷ கவனிப்பு உண்டு எனக்கு... அதனாலேயே அவங்க மகனுக்கும் எனக்கும் சண்டை வரும்..

அதனால எனக்கு உடம்பு சரியில்லாட்டி தெருவில் பலர் வந்து விசாரிப்பார்கள்.( எடுபிடியாச்சே ) . பெருமையாயிருக்கும்..:)

அதுவும் சரியா முழுப்பரிட்சையோடு ஏதாச்சும் ஒண்ணு வரும்.. அம்மை , டைபாய்டு , கை உடைத்தது.. என தொடர்ந்து 3 வருடம் தேர்வுக்கு போகவில்லை..

ஒருமுறை இப்படித்தான் எடுபிடி வேலையில் தவறு நடந்தது....ரொம்ப காமெடியா போச்சு... அது என்னன்னு கேட்கிறீங்களா?.. அடுத்த பதிவில்.....அதோடு இன்னொரு புரட்சி திருமணமும்...

முக்கியமா போலித்தனமற்றவராய் தன் சொந்தங்களை அக்கம் பக்கமுள்ளவர்களை அவர்கள் கஷ்டங்களை புரிந்து நேசித்தார்..

அதனால் அவருக்கு அலங்காரம் தேவையற்றதாய் இருந்திருக்கும் எதிலும்..

ஏற்கனவே அவர் செய்துவைத்த விதவை மறுமணம் பற்றி படிக்க

விதவை மறுமணம்





படம் : நன்றி கூகுள்..