Friday, September 17, 2010

இருமனம் இணைவதும் பின் பிரிவதும் ஏன் - பாகம் 2




























தவறான
வழிமுறை மூலம் அடைய நினைக்கும் நான்கு முக்கிய குறிக்கோள்.

முதல் பாகத்தில் சொன்னது போல் நான்கு முக்கிய குணங்களை பற்றி பார்ப்போம் இங்கு..

ஏன்
இந்த நான்கு குணங்களும் ஏற்படுகிறது?.. சமூகத்தில் எத்தனை நேர்மையாக இருந்தாலும் தம் கடமையை சரிவர செய்தாலும் தமக்கு கிடைக்கவேண்டிய மரியாதையோ , அரவணைப்போ ,
அங்கீகாரமோ, தகுதியுள்ள பாராட்டோ சரியான நேரத்தில் கிடைக்காவிட்டால் மனிதன் இத்தகைய குணங்களை வளர்த்துக்கொள்கிறான்.


சில நேரம் நியாயமாக, பல நேரம் நியாயமற்றும்..

நான் இப்படித்தான் .. என் குணம் , வளர்ப்பு இப்படித்தான்.. இருந்தாலும் என்னை கவனிக்கவேண்டும் ..என்ற பிடிவாதமும்..


ஆக எத்தகைய தவறான நடத்தை எந்த குறிக்கோளை அடைய நினைக்கிறது என்பதை சக மனிதர்கள் புரிந்துகொண்டு சரிபார்த்து திருத்திக்கொள்ளவேண்டும்..

இந்த குறிக்கோள்கள் அனேகமாய் சுயபுத்தியோடு வேலைசெய்வதில்லை.. நம்மை அறியாமலேயே இவை உருவாகிவிடுகின்றன.. ஆக இதன் அடிப்படைகளை அராய்ந்து எதனால் இந்த பிரதிபலிப்பு என்பதை புரிந்து அதை தவிர்க்க பழகிக்கலாம்..

நாம் இங்கே திருமண உறவினில் இவை எப்படி பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை பார்க்க போகிறோம். ஆனால் இந்த குணங்கள் மனிதர் அனைவருக்குமே ஏன் குழந்தைகளுக்குமே பொருந்தும்..முக்கியமாய் ஹார்மோன் மாற்றத்தினால் அவதியுறும் வாலிப வயதிலும்..


1. கவன ஈர்ப்பு :



தம்பதியினரில்
ஒருவருக்கு
சுய மரியாதை இல்லை எனும் பட்சத்தில் நியாயமாகவும், சுயநலத்தினால் நேர்மையற்றும் , இந்த கவன ஈர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கும்.

நேரடியாக
சொல்லாமல் பாத்திரங்களை சத்தமாக பொடுவதோ, தொலைக்காட்சியை அலற விடுவதோ , தொலைபேசியில் மணிக்கணக்காய் பேசுவதோ,( இப்ப இணையமும் சேர்த்துக்கலாம்)
ஆணாக இருந்தால் புதுசாக குடித்துவிட்டோ புகைத்துவிட்டோ வருவது..,

குழந்தைகளை
திட்டுவது அடிப்பது...
இப்படி சம்பந்தமில்லாமல் கவன ஈர்ப்புகள் இருக்கும்..

தங்களுக்கு
கிடைக்கவேண்டிய அன்பு, அனுசரணை கிடைக்காவிட்டால் இப்படி ஏதாவது ஒரு வழிமுறையை பின்பற்றி தம்மை நியாயப்படுத்த நினைப்பார்கள்..


அலுவலகத்தில்
கூட தாம் கவனிக்கப்படவில்லையென்றால் , சத்தமாக பேசிக்கொண்டோ , கூட்டத்தின் போது பென்சில் பேனாக்களை மேசையில் தட்டிக்கொண்டோ , மேலே போட்டிருக்கும் லைட்டை
வெறித்து பார்த்துக்கொண்டோ , சீரியஸான நேரத்தில் நக்கல் அடித்துக்கொண்டோ , கெட்ட வார்த்தை சொல்லி யாரையாவது திட்டிக்கொண்டோ இருப்பார்கள்...

எந்த
ஒரு நல்ல விஷயத்துக்கும் எதிர்ப்பை காண்பித்தும் அதற்கு ஒரு பிடிவாதமான காரணத்தை சொல்லி நியாயப்படுத்திக்கொண்டு அனைவரையும் எரிச்சலடைய செய்வார்கள்..


எளிதாக
சொல்ல போனால் திசை திருப்பியாவது காரியம் சாதிக்க நினைக்கும் எண்ணம்..

அது
தோல்வியில் முடிந்தாலும் அதனால் பலர் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்கு கவலையேதுமில்லை..
ஏனெனில் என்னை கவனிக்கவில்லை... எனக்குண்டான மரியாதை கிடைக்கவில்லை.. ஆக இது மட்டுமே என் வழி என்ற தவறான குறிக்கோள்..

சரி
இந்த தொல்லையிலிருந்து விடுபட எண்ணி கவனிச்சுத்தான் தொலைப்போமே னு அவர்கள் பிடிவாதத்துக்கு செவிசாய்த்தால் ,
" ஆஹா நாம் நினைத்தது சரிதான்.. இதே அடாவடியை தொடர்ந்தால் நமக்கு வெற்றி நிச்சயம் என்றெண்ணி இந்த எதிர்மறை குறிக்கோளோடே வாழ்க்கையை தொடருவதோடு அதே போல நட்புகளையும் இணைத்து கொள்வர்..

அதனால்
இது போன்ற எதிர்மறை குறிக்கோள்களுக்கு ஒருபோதும் செவிசாய்க்காமல் , ஆனால் அதே நேரம் அந்த நபர் செய்யும் நல்ல விஷயங்களை பாராட்டி ஊக்குவித்தால் ,
" நாம் என்னதான் கத்தினாலும் கதறினாலும் நம் பிடிவாதத்தை யாரும் கண்டுகொள்ளவில்லையே , ஆனா நல்ல விஷயத்தை பாராட்டினாங்களே " என்றெண்ணி மெதுவாக நியாயமான கவன ஈர்ப்புக்கான வழிமுறைகளை மட்டுமே பின்பற்ற ஆரம்பிப்பார்..

குழந்தைகளின் பிடிவாதமும் இதேதான்.. அடம்பிடித்து காரியம் சாதிக்கும் குழந்தை ஒருபோதும் வளராது மனதளவில்..

தனக்கு
வேண்டிய நகையோ புடவையோ கேட்டு பிடிவாதம் செய்யும் பெண்கள்...,
இல்லறத்தில் நினைத்த நேரம் இன்பமடைய முடியா ஆண்கள் , கட்டுப்பாடு போடும் பெண்களிடம், இத்தகைய கவன ஈர்ப்பு போராட்டம் நடக்கும்...

என்னால் விலையுயர்ந்த நகை வாங்கி தர முடியாது .. என்னிடம் போதிய வருமானமில்லை.. அல்லது நகையில் போடுவதைவிட வேறு உபயோகமான வழியில் சேமிக்க எண்ணுகிறேன்...ஆக அதற்காக நீ கோபித்துக்கொண்டு என்னை கவனிக்காவிட்டால் வேறு வழியில்லை நான் பொறுத்துத்தான் போகவேண்டும் என்ற பிரச்னையை விளைக்கி நம்மை விட்டுகொடுத்தல் ஒரு தீர்வு..


அதைவிடுத்து
சரி சரி இப்படி முகத்தை தூக்கி வைக்காதே வாங்கி தொலை னு வாங்கி கொடுத்தால் இது அடுத்த முறையும் வழக்கம்போல தொடரும்..


அதே
போல நண்பர்களோடு பார்ட்டிக்கு போக அனுமதிக்காவிட்டால் முகம் தூக்கும் கணவருக்கும் பரிதாபப்பட்டு அனுமதித்தால் அதுவே தொடரும்...
அதைவிட , " நீங்க என்னிடம் பேசாவிட்டாலும் சரி.. இந்த பழக்கம் நம் குடும்பத்துக்கும் , குழந்தைகளுக்கும் நல்லதல்ல என நான் நினைக்கிறேன்... அதனால் இந்த வலியை ஏற்றுக்கொள்கிறேன் .. இருப்பினும் எப்பவும் போல் என் கடமையை நான் தொடர்ந்து செய்வேன் " என மிக உறுதியோடு நிற்கணும் இத்தகைய கவன ஈர்ப்பு குறிக்கோளுக்கு எதிராக...

ஆரம்பத்தில்
பொறுமை இருக்காது.. நாம் செய்வது தவறோ என்ற பயம் கூட வரலாம்..
ஆனால் மிக மிக உறுதியோடு இருந்தால் , " அட , இங்க வேலைக்காகாது போலயே " னு வழிக்கு வந்தே ஆகணும் துணை என்றாலும், குழந்தை என்றாலும் வாலிபம் என்றாலும்...

இந்த குணத்தை குடும்பத்தில் திருத்துவது குடும்பத்துக்கு மட்டும் நல்லது என நினைக்காதீர்கள்... ஒட்டு மொத்த சமூகத்துக்கே நீங்கள் நல்லது செய்கின்றீர்கள்...

இதிலும் வெற்றி காண முடியாதவர்கள் என்ன செய்வார்கள்?.. அதிகாரத்தை தாமே எடுத்துக்கொள்வார்கள்.. ஆனால் தோல்வியை ஒத்துக்கொள்ளமாட்டார்கள்..


அடுத்த தொடரில் அடுத்த இரண்டாவது குணமான " அதிகாரத்தை கையிலெடுத்து ஆட்டிவிப்பது " குறித்து பார்ப்போம்...

தொடரும்...........



Thursday, September 9, 2010

இருமனம் இணைவதும் பின் பிரிவதும் ஏன்.?






































நம்மில்
எத்தனை பேர் உளவியல் ரீதியாக திருமணத்தை பற்றி அறிந்துள்ளோம்.?
திருமணம் என்ற சடங்கு தோன்றிய காலம்தொட்டே, ஆணும் பெண்ணும் தம்மை முழுதுமாய் ஆயுசுக்கும் அர்ப்பணித்து புது உயிரை உலகுக்கு கொண்டு வருவதே அதன் அர்த்தம்.. .

பின்
அக்குழந்தையும் மகிழ்வாய் வளர்ந்து சமூகத்துக்கு நம்பிக்கை, விசுவாசம், சேவை
கொண்டு வருதேயன்றி அன்புக்காக ஏக்கமடைவதல்ல..நான் நல்லபடியா வளர்ந்தேன் .. என்னை பார்த்து இல்லற வாழ்வை நம்புங்க.. நான் மகிழ்வாயிருக்கேன்.. ஆக நானும் இச்சமூகத்துக்கு திரும்ப ஏதாகிலும் செய்வேன் என்ற உயர்ந்த நோக்கத்தில் குழந்தைகள் வளர்க்கப்படவேண்டுமாயின் பெற்றோரும் மகிழ்வான இல்லறம் தரவேண்டியது கடமையாகும்..

ஆக
திருமணம் என்பதே ஒருவித சேவை மனப்பான்மை உடையவர்க்கு மட்டுமே..
அதைவிட்டு நம் உரிமையை நாம் நிலைநாட்டுமிடமல்ல..நமக்குள் இருக்கும் தனிமைக்கு தற்காலிக இடம் தேடுவதல்ல.. அப்படியான எண்ணம் கொண்டவர்கள் தயவுசெய்து திருமணத்தோடு நின்றுகொண்டு குழந்தை பெற்றுக்கொள்வதை 100% தவிர்த்திடணும்..

ஆனால்
காலம் செல்ல செல்ல , கலாச்சார மாற்றத்திலும் , திருமணம் என்பதே வெறும் பண , பதவி , அதிகார பறிமாற்றம்
கொண்ட ஒரு வியாபார ஒப்பந்தமாகிப்போனது..இச்சூழலில் வளரும் குழந்தைகளும் தமது வம்சாவழி நிரூபிக்க ஒரு வாரிசு என்ற நிலையிலே மட்டும் பெற்று வளர்க்கப்படுகிறார்கள்...இத்தகைய திருமணம் அன்புக்கோ காதலுக்கோ சிறிதும் சம்பந்தமில்லாதவை.. இலவசமாய் காமம், வசதி , மதிப்பு, அந்தஸ்து கிடைக்கும் ஒரு ஒப்பந்த திருமணம் என்றாலும் ஆழ்மனதில் அனைவரும் ஏங்குவது அன்புக்குத்தான்.

ஒரு
நிஜமான அக்கறை கொண்ட திருமணத்தில் குழந்தையின் வாழ்வு வளர்ப்பு முக்கிய பங்கு வகித்தே வந்தது காலந்தொட்டு..
இந்த அக்கறை குறையும்போது , பிரிவினால் சுதந்திரம் கிடக்கும் என நினைப்பது , வீட்டை விசாலமாய் அழகுபடுத்த எண்ணி முக்கிய தூணை/சுவற்றை நீக்குவது போலாகும்.. மெல்ல மெல்ல வீடு இடியலாம்..


ஒரு
திருமணத்தில் மிக முக்கிய முடிவுகள் குழந்தைகள் கொண்டே எடுக்கப்படணும்..
விவாகரத்தினால் அதிகம் பந்தாடப்படுவது குழந்தைகளின் எதிர்காலமும் , மனமும்.., அவர்களின் வளர்ச்சியும்தான்.. ஒரு குழந்தை தன் பெற்றோரில் ஒருவரை விவாகரத்தின் மூலம் இழக்கும் வலியானது மரணத்தில் அந்த ஒரு பெற்றோரை இழப்பதை விட கொடியதாம்.

அக்குழந்தை அச்செய்தியை எப்படி எடுக்க வைக்கப்படுகிறது.? வளர்க்கப்படுகிறது.?

" ஏய் குழந்தையே , உன்னை விட, உன் வளர்ச்சியை விட , என்னுடைய தனிப்பட்ட சுகமே முன்னுரிமை பெறுகிறது..குடும்பம் என்பது எனக்கு முக்கியமல்ல..
அதில் நீ ஒரு பொம்மை மட்டுமே ...நான் நினைத்தபடி உன்னை ஆட்டிவைத்து என் சந்தோஷங்களை அடைய முடியும்.." நம்ப முடியுதா.?... ஆனால் இதுதான் உண்மை..


குழந்தைகள் சிறு வயதிலேயே குடும்ப சண்டைகளால் பாதிப்படைகிறார்கள்..அவர்கள் குடும்ப சண்டையை வேடிக்கை பார்க்க மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.. தங்களின் இயலாமையை சொல்ல தெரிவதில்லை.. ஆனால் அந்த கோபம் வேறு வழியில் கட்டாயம் காண்பிக்கப்படுகிரது குடும்பத்தில் , சமூகத்தில் அதிக உணவுண்பது, மது , புகை, காமம் , தற்கொலை போதை மருந்து , இன்னும் பல போபியாக்களோடு வலம் வர வைக்கப்படுகிறார்கள்..


குழந்தைக்கு சமூகத்தின் மேலே உள்ள நம்பிக்கை போய்விடுகிறது.. குழந்தையின் திறமை முழுக்க மழுங்கடிக்கப்படுகிறது.. வெளியே சொல்ல முடியா வெட்கம் , வருத்தம் , ஆத்திரமாய் மாறுகிறது..அவை பொருள்களால் பணத்தால் ஈடு செய்ய முடியாது.. பெற்றோரின் பிரிவில் ஒருவராவது அதை முழுதுமாக ஈடு செய்யக்கூடியவராய் , துணிவானவராய் , மிக அன்பானவராய் இருந்துவிட்டால் பரவாயில்லை.. ஆனால் அந்த பெற்றோரும் , பிரிவினால் ஏற்பட்ட கோபத்தோடு , இயலாமையோடு அக்குழந்தையை வளர்ப்பார்களானால் அவ்வாழ்க்கை நரகமாகிடும் குழந்தைக்கு..


சரி முடியாத பட்சத்தில் என்ன செய்யலாம்.. கண்டிப்பாக பிரியலாம் ..

ஆனால் அதற்கு முன்னால் சரி செய்துகொள்ள முடியுமா என பார்க்கணும்.. உணர்ச்சி வேகத்திலோ , ஈகோவினாலோ பிரியவே கூடாது..


முக்கியமா
நான்கு வகையான பிரச்னைகள் சரி செய்ய முடியுமா என பார்க்கணும்..தவறு யாரிடம் இருந்தாலும் பரவாயில்லை, ஒத்துக்கொண்டு சரி செய்ய முயலணும்..
துணையிடம் என்றாலும் மெதுவாக சொல்லி திருந்த அவகாசம் தரலாம்..


1. விமர்சித்தல்...


துணையை
மோசமாக விமர்சிப்பது.. குற்றத்தை கூட ஆக்கபூர்வமாக சொல்லாமல் சண்டையிழுக்கும் நோக்கில் சொல்வது..
" எங்க அம்மா கடிதம் வந்ததை கொடுக்க மறந்தாய் போல " என சிறு புன்னகையோட சொல்வதற்கும் , " எப்படி நீ எங்கம்மா கடிதத்தை மறைக்கலாம்.? என கோபமாக கேட்பதற்கும் வித்யாசம் உள்ளது... அதேபோல நடை ,உடை, வேலை என எல்லா விஷயத்திலும் விமர்சனம் ஆக்கபூர்வமாக ஊக்கமாக இருக்கணும்.


2. அதிகாரம்/அடிமைப்படுத்துதல்..


மரியாதை
குறைத்து நடத்துவது துணையை.. துணையின் இயலாமையை சுட்டிக்காட்டி பேசுவது , கோபம் வரவழைப்பது..
எங்கப்பா என்னை இப்படி வளர்த்தார். எங்கண்ணா ரொம்ப அழகு.. .. எங்கம்மா சமையல் கிட்ட நீ வர முடியாது.. நீ ஏழை. படிப்பு , அழகு ,அறிவு பத்தாது என குறைகளை மட்டுமே சொல்லி தான் உன்னைவிட உசத்தி என்று சொல்லியே ஆழ்மனதில் அடிமைத்தனத்தை உருவாக்குவது..


3. தற்காத்துக்கொள்ளல்.


இது
இயல்புதான் என்றாலும் , நாளடைவில் உதவாது ..
பிரச்னையை முழுமையாக புரிந்துகொள்லாமல் தற்காத்துக்கொள்வதிலேயே ( வெற்றிபெருவதிலேயே ) குறியாய் இருக்கும்போது பிரச்னையே திசை திருப்பப்பட்டு பலமாய் பூதாகரமாய் மாறிட வாய்ப்புள்ளது.. ஒருவர் கோபமாக இருக்கும் நேரத்தில் புரிய வைக்கவே முயலாமல் அவர் நிதனத்துக்கு வந்தபின் நாமும் நிதானமாக நம் பக்க நியாயங்களையும் துணையின் தவறுகளையும் பட்டியலிடலாம்.. துணையின் தவறுக்கு உதவியாய் நிற்பதாகவும் சொல்லலாம்.. மன்னிப்பை கூட எதிர்பாராமல் தாமே ஒரு குழந்தையை மன்னிப்பதுபோல மன்னித்தும் விடலாம். இல்லை தற்காத்துக்கொண்டு தம் நியாயத்தை நிரூபிக்க போய் , பொறுப்புகளை அலட்சியப்படுத்தவும், தப்பிப்பதற்கான காரணங்களை தேடவுமே வாழ்நாள் முழுதும் விரயம் செய்வோம்..

4. முழுதுமாக ஒதுங்குதல்..ஒதுக்குதல்..


சரி
இனி வழியேயில்லை.. என் பேச்சுக்கு மரியாதை இல்லை. அதனால் நான் ஒதுங்குறேன் என முற்றிலுமாக வெறுப்போடு ஒதுங்குவது..
தம்மையே தனிமைப்படுத்துவது.. இது தற்காலிகம் என்றால் பரவாயில்லை. ஆனால் நிரந்தரம் என்றால் ஆபத்தை நாமே விளைவிப்பதாகும்..பேச்சுவார்த்தையினால் பல பிரச்னைகளை தீர்க்க முடியும் என நம்பணும்.. பேச்சுக்கே வரமாட்டேன் என்றால் நான் செய்வதே சொல்வதே சரி என நிர்ப்பந்தப்படுத்துவதாகிடும்..


மேலே
சொன்ன நான்கையும் தம்பதியினர் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் எதிர் நோக்கியிருக்கக்கூடும்தான்..
ஆனால் இதுவே அடிக்கடி நிகழுமாயின் , விவாகரத்து ஏற்பட்டே தீரும்.. இருவரில் ஒருவர் அனுசரிப்பதில்லை.. மாறப்போவதில்லை என்பதையே காண்பிக்கின்றது இது..


அடுத்ததாக
குடும்பத்தின் பிரச்சனைக்கு ஆணி வேறான நான்கு மிகத்தவறான கோல்களும் , அதற்கேற்ற தவறான நடவடிக்கைகளும் பார்க்கலாம்..


( இவை தம்பதிகளிடம் மட்டுமல்ல , வளரும் குழந்தைக்கும் பொருதும் இக்குணங்கள்..முக்கியமா , வாலிப வயதினருக்கு..)



--------
தொடரும்..

படம்
: நன்றி கூகுள்..




Monday, September 6, 2010

பெண்ணே உனக்குத்தான் எத்தனை பெயர்.?























































ப‌த்துமாத‌ம் வ‌ய‌ற்றில் சும‌ந்து
- தாலாட்டி
வ‌ள‌ர்த்த‌ பெண்ணே உன்னை
அம்மா என்று அழைக்கிறேன்!!


என் உட‌னாய் பிற‌ந்து - பாச‌ம‌ழைப்
பொழிந்த‌ பெண்ணே உன்னை
ச‌கோத‌ரி என்று அழைக்கிறேன்!!




வெள்ளைத் தோல் உன்ன‌ழ‌கில் - ம‌ய‌ங்கி
வ‌சீக‌ரித்த‌ பெண்ணே உன்னை
காத‌லி என்று அழைக்கிறேன்!!




அடிமையாய் வ‌ந்து என‌க்கு - ப‌ணிவிடை
செய்யும் பெண்ணே உன்னை
ம‌னைவி என்று அழைக்கிறேன்!!



என்னைவிட‌ அதிக‌ம் ப‌டித்து - பொதுவில்
ஆணிய‌ த‌வ‌றுக‌ளை சுட்டுவ‌தால்
புர‌ட்சி பெண்ணே உன்னை
விப‌ச்சாரி என்று அழைக்கிறேன்!!



க‌டைசியில் சொன்ன‌து நிஜ‌மாய்
போனால்,
மேலே சொன்ன‌து பொய்யாய்
போகுமோ!!!!






இழிவினால் முன்னேற்றம்....- சிறுகதை..




-----------------------------------











படம் : நன்றி கூகுள்

-----------------------------------



"இதப்பாரும்மா.. உனக்கு நல்ல முகவெட்டு.. சினிமா துறையில் நல்லதொரு எதிர்காலம் இருக்கு "

" வேண்டாம் சார். என் குடும்பத்துல பழக்கமில்ல.. விடமாட்டாங்க சார்.. தொந்தரவு பண்ணாதீங்க."

" ஏம்மா இது உன்னோட வாழ்க்கை.. நீ பிரபலமானதும் அவங்க ஏத்துக்குவாங்க.. அதுவரை நான் கவனிச்சுக்கிறேன் உன்னை.."

" யோசிக்கிறேன் சார். "

-----------------------------------------------------------------

2 வருடத்துக்கு பின்..



"இதப்பாரு இந்த படம் பயங்கர வெற்றின்னு ஏகப்பட்ட தயாரிப்பாளர்கள், இயக்குனர் உன்னை நெருங்குவாங்க.. என்கிட்ட கேட்காம கால்ஷீட் கொடுத்திடாதே.."

" சரிங்க.."

" உன்னை எந்த உசரத்தில் கொண்டு போய் சேர்க்கணும்னு எனக்கு தெரியும்.. என்கிட்ட மோதக்கூடிய பணமோ, பலமோ இண்டஸ்ட்ரில யாருக்கும்
கிடையாது .. தெரியுமுல்ல.. "

" ஆமாங்க.."


" ஆனா அதுக்கு நீ ஒண்ணு செய்யணும்...எனக்கு ----------------- இருக்கணும்.."

" அய்யோ , மன்னிச்சுடுங்க சார்.. நவீனும் நானும் உயிருக்குயிரா ......"


" சுத்த பையித்தியக்கார பொண்ணாயிருக்கியேம்மா.. அவன் ஹீரோ.. அவன் ஆயுசுக்கும் நடிச்சுட்டே இருப்பான்.. ஆனா இண்டஸ்ட்ரீல பெண்ணோட மதிப்பு அவ வயசுக்குத்தான்... அதான் சில பெரிய நடிகையெல்லம் இப்படி செட்டில் ஆயிடுறாங்க . கேள்விப்பட்டதில்லையா.? "

--------------------------------------------------------


5 வருடத்துக்கு பின்...

" ஹலோ..."

" ஏங்க நாந்தான்.. எப்ப நம்ம கல்யாணம்.?"


" நீயா.. இந்த நம்பர் புதுசா இருக்கே.. சரி ரொம்ப தொந்தரவு பண்ணாத.. நான் ஸ்விட்சர்லாந்து போய்ட்டு வர 3 மாதமாகும்..
ஏதாச்சும் சீரியல் ல அம்மா , அக்கா வேஷத்துக்கு முயற்சி பண்ணேன்... என்னை இனி அணுகாதே .. நான் ரொம்ப பிஸி.."

" என்னங்க இப்படி சொல்றீங்க.. உங்களை நம்பி எந்த படத்துக்கும் ஒத்துக்காம என் வாய்ப்புகளையெல்லாம் விட்டேனே.. நீங்க கல்யாணம் பண்ணிக்கிறேன்னு..."


" இத பாரு...இது சகஜம் இந்த இண்டஸ்ட்ரீ ல..பொலம்புரத விட்டுட்டு, பொழைக்கிற வழிய பாரு.."


" நான் சும்மா விடமாட்டேன் உங்களை.. எங்கிட்ட சாட்சி இருக்கு..."


" என்ன செய்யணுமோ செய்யும்மா.. வரட்டா.. உடம்பு பத்திரம்.."

---------------------------------------------------------------

" இன்ஸ்பெக்டர் சார் , அந்த நடிகை நம்மை ரொம்ப தொந்தரவு செய்றாப்ல..."

" சொல்லிட்டீங்கல்ல.. செஞ்சுருவோம்...நீங்க நல்லபடியா பேசுற மாதிரி அவள அந்த விடுதிக்கு மட்டும் வர சொல்லிடுங்க.."

---------------------------------------------------------------

" அட என்னம்மா இது.. கோழையாட்டம் தற்கொலை அது இதுன்னு..."

" மேனேஜர் சார்.. பார்த்தீங்கதானே?.. என்கூட 5 வருஷமா இருக்கீங்க.. நடந்ததெல்லாம் உங்களுக்கு தெரியும்தானே?."


" விடுங்கம்மா.. சில ஊடகம் இப்படித்தான் போடுவாங்க .. அதுக்கு சில காவலர்களும் ஆதரவு ..என்ன செய்ய,..பெண் னா விபச்சாரினு..நா கூசாம எழுதுவாங்க."

" எனக்கு உயிரோட இருக்க பிடிக்கல சார்.."

" அட என்னகங்கம்மா நீங்க.. உயிர விட்டா அவனுங்க சொன்னது நெசமாயிடும்.. காலையிலேயிருந்து எத்தனை அழைப்புகள் தெரியுமா.?"

" எதுக்கு சார்.. " பயத்தோடு...


" பல கட்சியில் உங்களை கூப்பிடுறாங்கம்மா.."

" நிஜமாவா.?"


" ஆமாம்மா.. அதிலும் ஆளுங்கட்சி பிரமுகர் நேரில் சந்திக்க ஆள் அனுப்புவதாய் சொல்லிருக்கார்...இனி கவலை பட ஓண்ணுமேயில்லை.."

" எனக்கென்ன அரசியல் தெரியும் சார்.."


" எல்லாம் கத்துக்குவீங்க.. இனி நீங்க அந்த தயாரிப்பாளரை ஒரு கை பார்க்கவாவது அரசியலில் சேர்ந்தே ஆகணும்மா.. "

" ஏன்
என்னை போய் கூப்பிடணும் சார்.. என்னை பற்றி இத்தனை மோசமா செய்திகள் வந்தும்.?"


" அதான் மா ரகசியம்.. இனி நீங்க இழக்க எதுவுமேயில்லை.. எதையும் தாங்கும் இதயம் உங்களைப்போன்றவர்களிடம் மட்டும்தான் இருக்கும்... விமர்சனம் என்ற சாக்கடையை அலட்சியம் செய்ய உங்களால் மட்டும் தான் முடியும்... "

" ஆமா சார்.. இகழ்ச்சியே எனக்கு இப்ப துணையா இருக்கு.. இனி என்னைப்பற்றி பேசினாலே அது விளம்பரமாயிடும் எனக்கு.... இனி என் வாழ்க்கையில் நான் செய்ய நினைத்தவற்றை துணிவா செய்யலாம்... "

" அம்மா , அப்ப மொதல்ல போன் போட்டு தகவல் சொல்லிடுறேன் கட்சிக்கு..."



" ஆமா சார். அப்படியே அந்த தயாரிப்பாளருக்கும் ஒரு நன்றி சொல்லிடுங்க...என் சார்பில்.."


Thursday, September 2, 2010

கிருஷ்ண ஜெயந்தி - சிறுகதை..



























" தோ பாரு காளி .. எல்லா பாத்திரத்தையும் அலம்பிட்டு தாழ்வாரத்தையும் கூட்டி பெருக்கி கழுவிடு."

" சரிம்மா.."

" ம்ம்மாஆஆஆ"


" யாரது.. கொழந்த சத்தம் கேட்டுது..?"


" ஆமாம்மா.. கொழந்த பாத்துக்குற ஆயவுக்கு சொரம்.. அதான்......" இழுத்தாள்..


" கொழந்த வெச்சுட்டு வேல எப்படி டீ செய்வ.?"

" அதெல்லாம் பயப்படாதம்மா .. பட்டு பட்டுன்னு செஞ்சுடுவேன்ல.."

" சரி கொழந்தய சத்தம் போடக்கூடாதுன்னு சொல்லு.. ஐயா தூங்குறாரு.."

---------------------------------------

" ம்மாஆஆஆ.."

" இருடா. ராசா.. வேல முடிச்சுட்டு பால் தாரேன்.."

" ம்ம்மாஆ..."


" இருன்னு சொன்னேன்ல..."


" ம்மாஆஆஆ.."

" சொன்னா கேக்க மாட்ட..அப்பன மாதிரியே வந்து வாச்சுருக்கு..."

" என்ன சத்தம் காளி..வேல பாக்க வந்தியா இல்ல புள்ளய சீராட்ட வந்தியா.. இன்னிக்கு கிருஷ்ண ஜெயந்தி .. தெரியுமுல்ல..ஐயாவோட வேல பாக்குறவுங்க குழந்தைகலாம் வருது.. பலகாரம் செய்யணும்.. இப்படி இருந்தா எப்படி..?"

" ஒரு நிமிசம் மா.. இத்தோ.." பால் கொடுத்துக்கொண்டிருந்தவள் சட்டென எழுந்தாள்..


" இந்தா இந்த பிஸ்கெட்ட கொடு கொழந்தைகு..."

" நன்றிம்மா.. "

" ஏய் ஏய் .. அங்க கவனி.. கொழந்தைய அதெல்லாம் தொடக்கூடதுன்னு சொல்லு.. பூஜை சாமான்..பகவானுக்கு "


" ஏண்டா இப்படி படுத்துற..?.. சும்மா இருக்க மாட்ட.?"
அம்மாவின் முக கோபத்தை பார்த்ததுமே வீரிட்டு அழுதது குழந்தை..

" ஏய் நல்ல நாள் அதுவுமா ஏன் இப்படி அழுகை சத்தம் ...மொதல்ல எங்கேயாவது போய் விட்டுட்டு வந்து வேலைய செய்யு.."

" இல்லம்மா.. அதுக்கு மருந்து வெச்சிருக்கேன்.. அத கொடுத்தா தூங்கிரும்.."


" என்ன --------- .. செய்து தொல.."



-----------------------------------

" வாங்க வாங்க .. ஏன் இத்தனை நேரம்?.. விருந்தினர் வரதுக்குள்ள வரவேண்டாமா ..?
எல்லாம் தயார்.. நம்ம குட்டி கிருஷ்ணரோட பாதம் தான் படணும் .."

" மருத்துவமனைக்கு போய்ட்டு வரோம் அத்தை.."


" என்னாச்சு ?." ஆவலோடு..

" நிப்பாட்டி வெச்சிருந்த பைக் ல ஏறி விழுந்துட்டான் மா."

" அச்சச்சோ.. "


" நல்லா அடி காலுல.. கட்டு போட்டுட்டு வந்தோம்.. "


" அடப்பாவமே..
"

"இப்ப
குழந்தை கால் தடத்துக்கு என்ன பண்ணுவது.மா.?"


" ஆதான் யோசிக்கிறேன்.. இரு காளி பின்கட்டுல இருக்காளா னு பாக்குறேன்."


" ஏய் காளி.. உன் மகன் எங்கே.. ?"

" இங்கதான இருந்தான்.. நடக்க ஆரம்பிச்சதிலேயிருந்து ஒரு எடத்துல நின்னாதானே." எல்லோரும் தேடினார்கள்..

" தொர .. தொர .." காளி சத்தமாய் அழைத்தாள்..

சத்தம் கேட்டு சாத்தியிருந்த பூஜையறையை திறந்துகொண்டு வெளியே சிரித்துக்கொண்டே வந்தான் குழந்தை..

காளியை திட்டுவதற்காக வாயெடுத்தவர், வாயடைத்து நின்றார் ,

வழியெங்கிலும் மாவு கொட்டி பின்கட்டு வரை குழந்தையின் கால்தடம்....கண்டு..


-------------------------
படம் : நன்றி கூகுள்..

Wednesday, September 1, 2010

எல்லை எதுவரை?.- சிறுகதை..

































Pictures : Thanks to Google..Images

" இன்னிக்கு வரட்டும் இருக்கு.. என்னதான் நெனச்சுட்டிருக்கார் மனசுல.?.."

" ஆரம்பிச்சுட்டியா மா.. விட்டுத்தள்ளுமா.. ஆம்புள அப்படித்தான்.. நாம தான் அட்ஜீஸ் பண்ணிட்டு போவோணும்.."

" உனக்கு தெரியாது செல்லம்மா.. உங்கள மாதிரி பெண்கள் இப்படி இளக்காரம் கொடுத்து கொடுத்தே திமிர் ஏறிப்போச்சு.."

" அதுங்காட்டி சொல்லல கண்ணு.. பொண்ணு குழந்த பெத்து வெச்சிருக்கியே..."

" பொண்ணு பெத்தா அடங்கி போகணுமா?.. பார்ட்டி அது இதுன்னு குடிச்சுட்டு வர அப்பாக்கு எங்க போச்சு பொறுப்பு.?"

" சரி சத்தம் போடாத பாப்பா முழிச்சுக்கும்.. " னு வேலையை செய்ய சென்றாள் செல்லம்மா..

--------------------------------------------------------------------------------------

" ஹேய் என்னாதிது ..?. பெட்டியை அடுக்கிட்டு இருக்க?.. "

"...."


" கேக்குறேன்ல.."

" புரியலையா ?.. நான் போறேன்.."

" எங்க உங்க அண்ணன் வீட்டுக்கா.?" அவரே கஷ்டப்பட்டுட்டிருக்கார்.. இல்ல அம்மா வீட்டுக்கா.?"

" நான் ஏன் அங்க போணும்.. எங்கே போறேன்னு போனப்புரம் தெரிஞ்சுக்கோ."

" என்ன மரியாதை குறையுது.?"

" அதுக்கேற்ற மாதிரி நீ நடந்துக்கல..சரி உன்கிட்ட பேசுவது வேஸ்ட்.. " என குழந்தையின் பெட்டியை அடுக்க ஆரம்பித்தாள்..

-----------------------------------------

" செல்லம்மா , இந்தா இந்த மாச சம்பளம்.. செடிக்கு முடிஞ்சா தண்ணி ஊத்து.. பணம் வந்து தருவேன்.."

" ஏம்மா நெசமாத்தான் சொல்லுதியா.?.. ராத்திரி சமாதானம் ஆயிருப்பன்னு நெனச்சேன்.." வருந்தினாள்..

" ,.. விடு செல்லம்மா. எங்க போயிருவா?.. அங்க சுத்தி இங்க சுத்தி திரும்ப இங்கதான வரணும்.?."பேப்பர் எடுத்துக்கொண்டு நிதானமாக உட்கார்ந்தான்..

" ...."

" குட்டிம்மா , இந்த உடுப்ப போட்டுக்க .. நாம ஊருக்கு போறோம்.."

" எங்கம்மா.?.. எனக்கு ஸ்கூல் இருக்கே.."

" அதெல்லாம் அப்புரம் பார்த்துக்கலாம்.. "

" அப்பா வரலியா மா.?"

" இல்ல.. நாம மட்டும்தான் இனி..."

" எனக்கு அப்பா வேணும் .மா..."

" சொன்னா கேட்கமாட்டியா.? "

" அவளை ஏண்டி அதட்டுற ?.. என்மேலுள்ள கோபத்துல... நீ இங்க வாடா செல்லம்.."

" ஒஹ்.. அப்ப சரி.. நீயும் இங்கேயே இரு.. ஆமா , நான் ஏன் ஒவ்வோரு வாட்டியும் உன்னையும் இழுத்துகிட்டு போகணும்..

சரிதான்.. உன் அப்பாவே உன்னை கவனிச்சாத்தான் பொறுப்பு வரும்.." னு சொல்லிட்டு பெட்டியை எடுத்துகிட்டு கிளம்பினாள்..

" ஹேய்.. நில்லு.. என்ன பையித்தியமா.. ?.போறதானா , குழந்தையையும் கூட்டிட்டு போ.. ..என்னால லீவு போட முடியாது.."

" ஒஹ்ஹொ.. அப்ப ரொம்ப வசதியா போச்சு.. அலுவலுக்கு கூட்டிட்டு போய்ட்டு அப்படியே பார்ட்டிக்கும் கூட்டிட்டு போய் பழக்கிடுங்க..குடிக்க .."

"........" உறைத்தது அவனுக்கு, ...

" சொல்லி சொல்லி திருத்தலாம்னு பொறுத்து பொறுத்து பார்த்தால் ஒண்ணும் வேலைக்காவாது..இனி பிள்ளையை சீராட்டி எழுப்புவதிலிருந்து

ஒவ்வோரு உணவா மாற்றி மாற்றி செய்து கொடுத்து , பாடம் எழுத வெச்சு , கத சொல்லி தூங்க வெச்சா , பொறுப்பு கூடுமோ என்னமோ.?.. நான் வரேன்.."

நிதானமாய் எழுந்து வாசல் வரை சென்றவளை ஓடி வந்து கரம் பிடித்து நிப்பாட்டினான்...

" சரி உள்ள வா .. பேசலாம்.."

கையை உதறினாள்...

"எல்லாத்துக்கும் எல்லையுண்டு .. இப்ப எல்லையை தாண்டியாச்சு .. கொஞ்சம்..., அட்லீஸ்ட் ஒரு வாரம் குழந்தையோடு லீவு போட்டு இருந்தால் மட்டுமே திருந்தலாம்...

பேச்சு வார்த்தை பயனளிக்கும்னு தோணலை..ஒரு வாரம் கழித்து வருகிறேன் " என சொல்லிவிட்டு தாண்டி சென்ற ஆட்டோவை கை தட்டி அழைத்தாள்..


குழந்தையை பிரிந்த வலி மனதிலிருந்தாலும், இதைவிட வேறு வழியின்றி மனசை கல்லாக்கிக்கொண்டு ஆட்டோவில் புறப்பட்டாள்...

அவன் குழந்தையை தூக்கிக்கொண்டு வேகமாய் வாசல் வருமுன்...

Monday, August 30, 2010

இன்னா செய்தாரை - குட்டிக்கதை..
































" டேய் , எப்படியாவது போட்டுத்தள்ளணும்டா." .. ரிச்சி


" ஆமாண்டா. சாதாரண வக்கீல் பொட்டச்சிக்கு என்ன இம்புட்டு திமிரு.?" பீட்டர்

" நாம யாருன்னு காட்டணும்டா.." சாம்..

" பெரிய நீதிபதின்னு இவளுக்கு நெனப்பு.. ஒழுங்க புள்ள குட்டிய பார்த்துட்டு இருக்க முடியாதோ?..
எல்லார் தப்பையும் தட்டி கேட்பாளாம்.. தட்டி வெச்சா அடங்குவா.."

" இப்படி நம்மள ஒட்டு மொத்தமா நஷ்ட ஈடு வழங்க வெச்சுட்டாளே டா.."


" அவளுகளுக்கு ஆதரவு கொடுக்கிறானுங்க பாரு ************** அவனுங்கள சொல்லணும்.."

" என்ன புரளி சொன்னாலும் அசர மாட்டேங்காளடா.. "

" கெழவி டா.. அவள போய்.. சீ தூ... "
கேவலமாய் பேசி தங்களுக்குள்ளே சிரித்து ஆற்றாமையை தீர்த்துக்கொண்டனர்..

--------------------------------------------------------------


" டேய் தெரியுமா சேதி.. இன்னிக்கு நாம படிச்ச பள்ளிக்கு வராளாம்.. என்னமோ விருதெல்லாம் கொடுக்க போறாளாம்... "

" நம்ம பள்ளி யில் இவளுக்கென்ன வேலை..? .. படுபாவி.. சும்மா விடக்கூடாது டா.. பிளான் சொல்லு.."

" கெளம்புடா நாமளும் போவோம்.. போகும்போது சொல்றேன் என் பிளானை.."


------------------------------------------------------------

பல்வேறு
சிறப்பு நிகழ்ச்சிகள் , விளையாட்டுக்கு பின் பரிசளிப்பும் விருதும் ..

" நல்லொழுக்க விருது " ரிச்சி " என்ற முன்னாள் மாணவர் பெயரால் வழங்கப்படுகிறது.. "

கைதட்டல்.


சிறந்த சமூக சேவை விருது " பீட்டர் " என்ற முன்னாள் மாணவர் பெயரால் வழங்கப்படுகிறது..
"

கைதட்டல்.


சிறந்த
மாணவன் விருது " சாம்" என்ற முன்னாள் மாணவர் பெயரால் வழங்கப்படுகிறது..



பலத்த கைதட்டல்.



பின்
அந்த பெண் வக்கீல் பேசுகையில் ,

அந்த 3 மாணவரையும் வாழ்நாள் முழுதும் எல்லோரும் நினைவு கூறும் வகையில் தான்
இவ்விருதுகளை அறிவித்ததாக சொன்னார்..

கையிலுள்ள கத்திகளை அங்கேயே போட்டுவிட்டு வெட்கி தலைகுனிந்து மன்னிப்பு கேட்க கூட தகுதியின்றி வெளியேறினார்கள் , ரிச்சி, பீட்டர் , மற்றும் சாம்...

ஆனால் அடுத்த விருதுக்கு தம்மால் இயன்ற உதவியை செய்யணும் என்ற தீர்மானத்தோடு...

-------------------------------------------------------------------------------
நன்றி படம்: கூகுள்



( சமீபத்திய பிரச்னையில் பின்னூட்டம் இட்டவர்களும், தனிமடல் அனுப்பியவர்களுக்கும் நன்றி சொல்ல மறந்திருந்தால் என் மன்னிப்புகள்..

அறிமுகமில்லாத நட்புகளின் ஆறுதல் அளவிடமுடியாதது.. தங்கள் அன்புக்கு மிக்க நன்றி
..)